மகா வைத்தியநாதையர்

From Tamil Wiki
Revision as of 00:01, 24 February 2022 by Subhasrees (talk | contribs) (மகா வைத்தியநாதையர் - முதல் வரைவு)

மகா வைத்தியநாதையர்(வைத்தியநாத சிவன்) (மே 26, 1844 – ஜனவரி 27, 1893) பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த புகழ்பெற்ற கர்னாடக இசைக்கலைஞர். 72 மேளகர்த்தா ராகங்களில் மிகநீண்ட ராகமாலிகை கீர்த்தனம் அமைத்தவர்.

இளமை, கல்வி

வைத்தியநாத சிவன் தஞ்சைக்கும், கும்பகோணத்திற்கும் நடுவில் இருக்கும் அய்யம்பேட்டை அருகே உள்ள வையச்சேரி என்கிற கிராமத்தில் துரைசாமி ஐயர் என்கிற பஞ்சநாத சர்மா - அருந்ததி ஆகியோருக்கு மூன்றாவது மகனாக மே 26, 1844 அன்று ஆயில்ய நட்சத்திரத்தில் பிறந்தார். இவர் இசைக்கலைஞர்கள் ஆனை ஐயா வழியில் வந்தவர். இவருடைய தமையனார் ராமசாமி ஐயரும் இசைப்பாடல் இயற்றுவதிலும் பாடுவதிலும் புலமை கொண்டவர்.

வைத்தியநாத சிவன் தமிழிலும் வடமொழியிலும் கீர்த்தனம் இயற்றும் திறன் கொண்டவர். இளமையில் தந்தையிடம் இசை கற்றார். பின்னர் தியாகராஜரின் நேரடி சீடரான தஞ்சை மகாநோன்புச் சாவடி வேங்கட சுப்பிரமணிய ஐயரிடம் வைத்தியநாத சிவனும் அவரது அண்ணா ராமசாமி ஐயரும் இசைப் பயிற்சி பெற்றனர். வைத்தியநாத சிவன் ஏழு வயதில் பல்லவி பாடும் தேர்ச்சி பெற்றார். ஒன்பது வயதுக்குள் சங்கிரக சூடாமணி, சங்கீத ரத்னாகரம் போன்ற சங்கீத லட்சண சாஸ்திரங்களைக் கற்றுத் தேர்ந்தார். மெலட்டூர், திருவையாறு பகுதியில் வாழ்ந்த பல இசை வித்வான்களிடம் கற்று தேர்ச்சி பெற்றவர்.

இசையுடன் தமிழ், சமஸ்க்ருதம் கற்றார். தன் தந்தையிடம் பஞ்சாட்சர உபதேசமும் பெற்றுக் கொண்டார். கோடக நல்லூர் சுந்தர சுவாமிகளிடம் அதர்வர்ணசரமம், சூதசம்ஹிதை, சதுர்வேத்தாத்பர்ய சங்கிரகம், சிவதத்வ விவேகம் பயின்றார். பழமாநகரி சுந்தர சாஸ்திரிகள், திருவையாறு பாலகிருஷ்ண சாஸ்திரிகள் ஆகியவரிடம் சைவநூல்களைப் பாடம் கேட்டார்.

இவர் மேல்சட்டை அணிந்ததில்லை. எந்நேரமும் திருநீறணிந்த சைவக் கோலத்தில்தான் இருந்தார். தினமும் தேவாரம் ஓதும் நியமம் கொண்டிருந்தார்.

இசைப்பணி

இளம் வயதிலேயே இவருடைய பாடல் திறத்தால் பல வள்ளல்களின் ஆதரவையும் பாராட்டையும் அடைந்தார். திருவாவடுதுறை ஆதினத்தலைவர் மேலகரம் சுப்பிரமணிய தேசிகர் தலைமையில் பல சங்கீத மேதைகள் முன்னிலையில் பாடி ”மகா” வைத்தியநாதர் என்ற சிறப்புப் பட்டம் பெற்றார். இவரது பக்தி உணர்வால் வைத்தியநாத “சிவன்” என்ற சிறப்புப் பெயரால் அழைத்தனர்.

இசையில் மேதமை கொண்டு விளங்கிய மகா வைத்தியநாதையர் எங்கும் தெலுங்குப் பாடல்கள் பாடியதாக குறிப்பேதும் இல்லை. தெலுங்கு கீர்த்தனைகள் பாடுவதே இசைக்கச்சேரி மேடைகளில் பிரபலமாக இருந்த காலத்தில், தமிழ் கீர்த்தனைகளும், தேவார, திருவாசகமும் பாடியே தன் இசை வாழ்வை மேற்கொண்டவர். இவர் தெலுங்கு, கன்னடம், மராட்டி, சமஸ்கிருதக் கீர்த்தனைகளும் கற்றிருந்தாலும் கூட இவரது இசை நிகழ்வில் தமிழ் பாடல்களே முக்கியமாக இருக்கும். சமஸ்கிருதக் கீர்த்தனைகள் பாடியிருக்கிறார்.

இவர் இசைக்கச்சேரிகளுக்கு பெரும் கூட்டம் திரளும். தொலைதூரம் வரை குழுமியிருக்கும் அனைவருக்கும் கேட்கும் வண்ணம் குரல் வளம் கொண்டிருந்தார்.

இசையில் உணர்வும் அதிலும் பக்தியே முதன்மையானதென இவர் கருதியதால், பக்கவாத்திய இசைக் கருவிகள் இல்லையென்றாலும், தமையன் தம்புரா மீட்ட பல இடங்களில் பாடி இருக்கிறார்.

மிருதங்கம் நாராயணசாமி அப்பா எனப்படும் தலைசிறந்த மிருதங்க வித்வான், தன் ஆத்மானுபவத்துக்காக மிருதங்கம் வாசிப்பவர், யாருக்கும் பக்கவாத்தியம் வாசிப்பதில்லை என்றிருந்தவர் வைத்தியநாதையருக்கும் மட்டும் அவரது உணர்வுபூர்வமான பாடலுக்காக வாசித்திருக்கிறார். வீணை பொதுவாக வாய்ப்பாட்டுக்கு துணைக்கருவியாய் வாசிக்கப்படுவதல்ல. ஆனால் திருவனந்தபுரம் ஆஸ்தான வித்வான் வீணை கல்யாண கிருஷ்ண பாகவதர், மைசூர் வீணை சுப்பண்ணா முதலியோர் இவருக்காக துணைவாத்தியமாக வீணை இசைத்திருக்கிறார்கள்.

மேளகர்த்தா ராகமாலிகை

இவர் இயற்றிய 72 ராக மேளகர்த்தா ராகமாலிகை மிக முக்கியமான படைப்பு.

பாடிய அவைகள்

  • புதுக்கோட்டை இராமச்சந்திர தொண்டைமான் தர்பார்
  • ராமநாதபுர முத்துராமலிங்க சேதுபதி மன்னர் தர்பார்
  • மதுரை மீனாட்சியம்மன் ஆலயம்
  • எட்டையபுரம் அரண்மனை
  • திருநெல்வேலி சிதம்பரபிள்ளை பஜனைமடம்
  • ஆழ்வார்குறிச்சி தளவாய் குமாரசாமி அரண்மனை
  • கல்லிடைக்குறிச்சி தர்பார்
  • திருவாவடுதுறை ஆதினம்
  • மாயூரம் வேதநாயகர் சபை
  • திருவாங்கூர் சமஸ்தானம் ஆயில்யம், விசாகத்திருநாள் மகராஜா சபை
  • மைசூர் மகாராஜா சபை
  • தஞ்சாவூர் ஸகாராம் ஸாகேப் தர்பார்
  • சிருங்கேரி மடம்
  • திருவையாறு சபை,
  • சென்னை

ஆகிய இடங்களில் தன் திறமையை வெளிப்படுத்தி பரிசுகளைப் பெற்றார்.

மறைவு

நந்தன ஆண்டு தை மாதம் பதினோறாந்தேதி வெள்ளிக்கிழமை, ஜனவரி 27, 1893 பகல் ஒன்றரை மணிக்கு மகா வைத்தியநாதையர், நாற்பத்தொன்பதாம் வயதில் திருவையாற்றில் காலமானார்.

வாழ்க்கைப் பதிவுகள்

இவரது மாணவர் சுப்பையா பாகவதரின் மகன் கோமதி சங்கரையர் 500 பக்கங்களுக்கு மேலாக இவரது வரலாற்றை இரு பாகங்களில் எழுதி வெளியிட்டிருகிறார்.

உசாத்துணை

அடிக்குறிப்புகள்