பெருந்தேவபாணி
பெருந்தேவபாணி பன்னிரு திருமுறைகளில் பதினோராம் திருமுறையில் இடம்பெறும் நூல். நக்கீரதேவ நாயனார் இயற்றியது.
ஆசிரியர்
பெருந்தேவபாணியை இயற்றியவர் நக்கீரதேவ நாயனார். திருமுருகாற்றுப்படை இயற்றிய நக்கீரரும் இவரும் ஒருவர் அல்லர் என்பதும், சொல் வழக்கு முதலியவற்றாலும் பொருள் அமைதியாலும், தேவார திருவாசகக் கருத்துக்களும் சொற்றொடர்களும் இடம் பெற்றிருப்பதாலும் சமயக் குரவர்க்குப் பின் பொ.யு. 9-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த நக்கீரர் என்ற ஒருவரால் இயற்றப்பட்டிருக்க வேண்டும் என்பதும் ஆய்வாளர்களின் கருத்து.
நூல் அமைப்பு
தேவ பாணி’ இசைப்பாவின் வகைகளுள் ஒன்று. தெய்வத்தை முன்னிலையில் வைத்துப் பாடியதால் இப்பெயர் பெற்றது.
ஏனையொன்றே தேவர்ப் பராஅய முன்னிலைக் கண்ணே'
என்று தொல்காப்பியத்தில் இதற்கான இலக்கணம் கூறப்படுகிறது. அடிகளின் எண்ணிக்கை கொண்டு 'பெருந்தேவபாணி', 'சிறுதேவபாணி' என இரு வகைகள் உள்ளதாக அடியார்க்கு நல்லார் குறிப்பிடுகிறார்.
நக்கீரதேவர் திருவாலவாயிறைவனை ‘சிவபெருமானே பெருந்தேவன்’ எனக்கொண்டு முன்னிலைப்படுத்திப் பாடியதால் பெருந்தேவபாணி என்று பெயர் பெற்றது. ஆறுபத்தேழு அடிகளாலான ஆசிரியப்பாவாக ஆமைந்துள்ளது. சிவனின் புகழை 56 அடிகளில் பாடுகிறது.ஒவ்வொரு அடியிலும் ஒவ்வொரு சிறப்பு சொல்லப்படுகிறது.
இறைவனுடைய திருப்பெயர்களையும் மன்னுயிர்களை உய்வித்தல் வேண்டி அவ்விறைவன் செய்தருளிய அருட் செயல்களையும் உலகெலாமாகி வேறாய் உடனுமாய் யாண்டும் நீக்கமற நிறைந்துள்ள இறைவனது மெய்ம்மைத் தன்மையையும் நக்கீரதேவர் இப்பெருந்தேவபாணியில் எடுத்துரைத்துப் போற்றியுள்ளார். நக்கர தேவர் திருவாலவாயிறைவனை நோக்கி, “இறுதியில் 'கூடலாலவாய்க் குழகன் ஆவது அறியாது அருந்தமிழ் பழித்தனன் அடியேன். அருளல் வேண்டும்' என மன்னிப்புக் கேட்டுப் பாடல் முடிகிறது.
இத்தேவபாணியில் வரும் 'நீலகண்டன்', 'நெற்றியோர் கண்ணன்', 'பால் வெண்ணீற்றன்', 'நூலணிமார்பன்' முதலிய அன்னீற்று ஆண்பாற் படர்க்கைப் பெயர்களைக் கூறும் வழக்கு சங்கத்தொகை நூல்களில் காணப்படாமையும், அவ்வழக்கு பிற்காலத்தில் வந்தமையும் நக்கீரதேவ நாயனார் சங்ககால நக்கீரர் அல்லர் என்னும் அறிஞர்களின் முடிவுக்குக் காரணமாகின்றன.
பாடல் நடை
சிவனின் பெருமை
நீடிய நிமலனை
நிறைமறைப் பொருளினை
ஈசனை இறைவனை
ஈறில் பெருமையை
நேசனை நினைப்பவர்
நெஞ்சத் துள்ளனை
தாதணி மலரனை
தருமனை பிரமனை
காதணி குழையனை
களிற்றின் உரியனை
மன்னிப்பு வேண்டுதல்
விரைந்தேன்மற் றெம்பெருமான் வேண்டியது வேண்டா(து)
இகழ்ந்தேன் பிழைத்தேன் அடியேன் - விரைந்தென்மேல்
சீற்றத்தைத் தீர்த்தருளும் தேவாதி தேவனே
ஆற்றவும் செய்யும் அருள்.
உசாத்துணை
பெருந்தேவபாணி, தமிழ் இணைய கல்விக் கழகம்
Ready for review
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.