under review

எஸ். அர்ஷியா

From Tamil Wiki
Revision as of 20:56, 28 May 2023 by ASN (talk | contribs)
எஸ். அர்ஷியா (படம் நன்றி: விகடன் தளம்)

சையத் உசேன் பாஷா (எஸ். அர்ஷியா) (ஏப்ரல் 14, 1959 - ஏப்ரல் 7, 2018) எழுத்தாளர், இதழாளர், மொழிபெயர்ப்பாளர். பத்திரிகையாளராகப் பணியாற்றினார். இஸ்லாமிய சமூக மக்களின் வாழ்வைத் தன் படைப்புகளில் காட்சிப்படுத்தினார். மதுரை வட்டார வழக்கில் பல படைப்புகளைத் தந்தார். தன் படைப்புகளுக்காக தமிழக அரசு விருது உள்பட பல்வேறு விருதுகள் பெற்றார்.

பிறப்பு, கல்வி

சையத் உசேன் பாஷா என்னும் இயற்பெயர் கொண்ட எஸ். அர்ஷியா, ஏப்ரல் 14, 1959 அன்று, மதுரை இஸ்மாயில்புரத்தில், செய்யது தாவூத்-ஆபில்பீ இணையருக்குப் பிறந்தார். தியாகராஜர் மேல்நிலைப் பள்ளியில் படித்தார். மதுரை தியாகராஜர் கல்லூரியில் இளங்கலை பொருளாதாரம் கற்றார். மதுரை காமராஜர் பல்கலைகழகத்தில் எம்.ஏ. பொருளாதாரம் பயின்று பட்டம் பெற்றார். ஆங்கிலம், உருது, ர்ஷ்ய மொழிகள் அறிந்தவர்.

அர்ஷியா

தனி வாழ்க்கை

எஸ். அர்ஷியா, தோட்டக்கலை தொடர்பான நிறுவனம் ஒன்றை நடத்தினார். விவசாயப் பணியில் ஈடுபட்டார். மனைவி அமீர்பேகம் அரசுப் பள்ளி ஆசிரியை. மகள் எஸ். அர்ஷியா. சையத் உசேன் பாஷா என்னும் அர்ஷியா, மகளின் பெயரையே தனது புனைபெயராகச் சூட்டிக் கொண்டு எழுத்துலகில் செயல்பட்டார்.

ஸ்டோரீஸ் - எஸ். அர்ஷியா

இலக்கிய வாழ்க்கை

அர்ஷியா கல்லூரியில் படிக்கும்போது சிறுகதைகள் எழுதத் தொடங்கினார். முதல் சிறுகதை, ஆனந்தவிகடனில் வெளியானது. தொடர்ந்து பல சிறுகதைகளை எழுதினார். அவை கணையாழி, செம்மலர், தாமரை, குமுதம், குங்குமம், கல்கி, அமுதசுரபி போன்ற இதழ்களில் பிரசுரமாகின. தொடர்ந்து பல நாவல்களை எழுதினார். ‘ஏழரைப் பங்காளி வகையரா’, ‘பொய்கைகரைப்பட்டி’, ‘அப்பாஸ்பாய் தோப்பு’, ‘சொட்டாங்கல்’ போன்றவை அவரது குறிப்பிடத்தகுந்த நாவல்கள்.

இதழியல்

எஸ். அர்ஷியா ‘தராசு‘ இதழில் பயிற்சி நிருபராகச் சேர்ந்தார். பின்னர்  தென் மாவட்டங்களுக்கான நிருபராக உயர்வு பெற்றார். ‘மதுமலரன்பன்‘ எனும்பெயரில் பல கட்டுரைகளை எழுதினார். ‘கழுகு’ அரசியல் வார இதழில் பணிபுரிந்தார். ‘கழுகு தர்பார்’ வார இதழை நண்பர்களுடன் இணைந்து நடத்தினார். அதன் இணை ஆசிரியராகப் பணியாற்றினார். புதிய காற்று எனும் இலக்கிய இதழுக்குப் பொறுப்பாசிரியராகப் பணிபுரிந்தார்.

தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை விருது
தமிழ் வளர்ச்சித் துறை விருது - 2009

விருதுகள்/பரிசுகள்

  • தமிழ் வளர்ச்சித்துறையின் 2009 ஆம் ஆண்டுக்கான சிறந்த புதினத்துக்கான பரிசு - ஏழரைப் பங்காளி வகையரா நாவலுக்கு.
  • அழகியநாயகி அம்மாள் விருது - ஏழரைப் பங்காளி வகையரா நாவல்.
  • தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றப் பரிசு - ஏழரைப் பங்காளி வகையரா நாவல்.
  • சிறுகதைப் போட்டிப் பரிசு - ஆனந்தவிகடன்.
  • சிறுகதைப் போட்டிப் பரிசு - கல்கி.
  • சிறுகதைப் போட்டிப் பரிசு - குமுதம்.
  • சிறுகதைப் போட்டிப் பரிசு - அமுதசுரபி.

மறைவு

எஸ். அர்ஷியா, ஏப்ரல் 7, 2018-ல், திடீர் மாரடைப்பால் காலமானார்.

வரலாற்று இடம்

எஸ். அர்ஷியா காத்திரமான மொழியாடலுன், இலக்கிய உலகில் இயங்கியவர். இலக்கியப் பிரக்ஞையுடன் கூடிய பல சிறுகதைகளை எழுதினார். மதுரைக்கே உரிய வட்டார வழக்கையும் அந்த நிலத்துக்குரிய காட்சிப் பின்புலங்களையும் கொண்டவையாக அர்ஷியாவின் எழுத்துக்கள் அமைந்தன. இஸ்லாமிய இன மக்களின் வாழ்க்கைச் சிடுக்குகளை உள்ளது உள்ளபடி அவரது படைப்புகள் முன்வைத்தன.  காதலுக்கு எல்லாக் காலங்களிலும்  இருக்கும் எதிர்ப்பையும் அதன் பின்னிருக்கும் சமய, சாதி முரண்களையும் தன் படைப்புகளில் இயல்பான மொழியில் காட்சிப்படுத்தினார். மதுரையின் வட்டார வரலாற்றை நிலவியல் முரண்பாடுகளோடு தன் படைப்புகளில் முன் வைத்தவராக எஸ். அர்ஷியா மதிப்பிடப்படுகிறார்.  

எஸ். அர்ஷியா நூல்கள்

நூல்கள்

சிறுகதைத் தொகுப்புகள்
  • கபரஸ்தான் கதவு
  • மரணத்தில் மிதக்கும் சொற்கள்
நாவல்கள்
  • ஏழரைப்பங்காளி வகையறா
  • பொய்கைக்கரைப்பட்டி
  • அப்பாஸ்பாய் தோப்பு
  • கரும்பலகை
  • அதிகாரம்
  • சொட்டாங்கல்
  • நவம்பர் 8, 2016.
கட்டுரைத் தொகுப்புகள்
  • சரித்திரப் பிழைகள்
  • ஸ்டோரீஸ்
மொழிபெயர்ப்புகள்
  • நிழலற்ற பெருவெளி
  • திப்புசுல்தான்
  • பட்ஜ் பட்ஜ் படுகொலைகள்
  • பாலஸ்தீன்
  • பாலைவனப் பூ
  • மதுரை நாயக்கர்கள் வரலாறு
  • கோமகட்டுமாரு

உசாத்துணை

இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.