under review

திருநீலகண்ட நாயனார்: Difference between revisions

From Tamil Wiki
(Corrected typo errors;)
(Removed Category:Spc)
 
Line 49: Line 49:


[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:Spc]]

Latest revision as of 21:46, 8 January 2026

திருநீலகண்டர் சிற்பம்
திருநீலகண்டர் சிற்பம்

திருநீலகண்ட நாயனார் சைவ சமய அடியார்களாகிய 63 நாயன்மார்களில் ஒருவர். திருநீலகண்ட நாயனார் புராணம் பெரிய புராணத்தில் தில்லைவாழ் அந்தணர் சருக்கத்தில் இடம்பெறுகிறது.

வாழ்க்கைக் குறிப்பு

தில்லை எனப்படும் சிதம்பரத்தில் மண்பாண்டங்கள் செய்யும் குயவர் குலத்தில் பிறந்தவர் திருநீலகண்டர். திருநீலகண்டர் பற்றிய குறிப்புகள் 8-ம் நூற்றாண்டில் வாழ்ந்ததாகக் கருதப்படும் சுந்தரமூர்த்தி நாயனார் எழுதிய திருத்தொண்டத் தொகை என்னும் நூலிலும், 12-ஆவது நூற்றாண்டில் வாழ்ந்த சேக்கிழார் எழுதிய பெரியபுராணத்திலும் உள்ளன. இவர் சிதம்பரத்தில் குயவர் குலத்தில் பிறந்தவர் என்பது மேலுள்ள நூல்களில் உள்ள செய்தி.

திருநீலகண்டர் சிதம்பரத்துச் சிற்சபையில் கூத்தாடும் நடராஜர் மீது பக்தி மிக்கவர். சிவனடியாருக்குப் பணி செய்வதையும் தாம் உருவாக்கும் ஓடுகளில் சிறந்தவற்றை அடியவர் உணவு உண்பதற்காக இலவசமாக அளிப்பதையும் வழக்கமாகக் கொண்டிருந்தார். 'திருநீலகண்டம்' என்னும் சிவநாமத்தையே தன் மந்திரமாகக் கொண்டு வாழ்ந்து வந்தார்.

திருநீலகண்டர் இளமையில் சிற்றின்ப நாட்டம் அதிகம் கொண்டிருந்தார். மனைவியைத் தவிர பரத்தையரிடம் செல்லும் வழக்கமும் கொண்டிருந்தார். அதனால் மனவருத்தம் கொண்ட திருநீலகண்டரின் மனைவி அவருடன் உறவு கொள்வதைத் தவிர்த்தார். ஊடலைக் கைவிடும்படி திருநீலகண்டர் கேட்டுக்கொண்டும் அவர் மனைவி மனம் இளகாது போகவே வலிய அவரைத் தழுவ முயன்றார். அந்த அம்மையார் சீற்றம் கொண்டு 'நீர் எம்மைத் தீண்டலாகாது' என திருநீலகண்டத்தின் மீது ஆணையிட்டு சொன்னார். திருநீலகண்டம் மீது இடப்பட்ட ஆணை என்பதால் அச்சொல்லை திருநீலகண்ட நாயனாரும் மீறவில்லை. அந்நிலையிலும் இருவரும் கொண்டிருந்த அன்பு குறையாது, ஊராருக்கு ஏதும் இப்பிணக்கு வெளித்தெரியாது வாழ்ந்து வந்தனர். ஆண்டுகள் பல கடந்து இருவரும் முதுமை அடைந்தனர். அவர்கள் கொண்ட அந்த ஊடலும் ஆணையும் அவ்வண்ணமே தொடர்ந்தது.

திருநீலகண்டர் தன் சிவனடியார் சேவையையும் தீவிரமாகத் தொடர்ந்து செய்து வந்தார்.

தொன்மம்/ சிவனின் ஆடல்

தன் அடியவரின் பெருமையை உலகறியச் செய்ய சிவபெருமான் சிவயோகி வடிவில் ஒருநாள் திருநீலகண்டர் இல்லத்துக்கு வந்தார். தனது திருவோட்டைத் திருநீலகண்டரிடம் கொடுத்து அது ஈடிணையற்ற திருவோடு என்பதால் பாதுகாத்து வைத்திருக்குமாறும் தான் கேட்கும் காலத்தில் திருப்பித் தரவேண்டுமென வேண்டிக்கொண்டார். திருநீலகண்டரும் அத்திருவோட்டைப் பாதுகாத்து வந்தார்.

பல நாட்களுக்குப் பிறகு அந்த சிவனடியார் மீண்டு வந்து திருவோட்டைக் கேட்டார். அத்திருவோடு வைத்த இடத்தில் அதைக் காணாது திருநீலகண்டர் திகைத்தார். மனைவியும் அவரும் வீட்டின் எல்லாப் பகுதிகளிலும் தேடியும் அத்திருவோடு கிடைக்கவில்லை. தன் பிழையை பொறுக்குமாறு வேண்டி அதற்கு பதிலாக புது ஓடு செய்து தருவதாக சொன்ன திருநீலகண்டர் மீது சிவனடியார் கடும் சினம் கொண்டார். மாற்றுத் திருவோடு எதையும் வாங்கிக் கொள்ள மறுத்தார். பிறரது பொருளைக் கவர்பவர் என திருநீலகண்டர் மீது சிவனடியார் குற்றம் சாட்டினார்.

தான் பிறர் பொருளுக்கு ஆசைப்படவில்லை என வருந்திக் கூறினார் திருநீலகண்டர். அவரை நோக்கி சிவனடியார் திருக்குளத்துக்கு வந்து மனைவி கரம் பற்றி நீரில் மூழ்கி ஆணையிடும்படி கூறினார். தான் மனைவியைத் தீண்டுவதில்லை என்று சபதம் மேற்கொண்டிருப்பதாக சொன்னார். சிவனடியார் அந்தணர் அவையில் சென்று முறையிட்டார். அந்தணர் அவை மூத்தோர் சிவனடியாரின் திருவோடு திருநீலகண்டரிடம் இல்லையென்றால் சிவனடியார் கூறியவாறு மனைவி கையைப் பற்றி நீரில் மூழ்கி எழுந்து ஆணையிடுமாறு கூறினர்.

மனைவிக்கும் தனக்குமான நிலையை விளக்கமுடியாத திருநீலகண்டர் ஒரு மூங்கில் துண்டின் ஒரு முனையைத் தானும் மறுமுனையை மனைவியும் பற்றிக் கொண்டு நீரில் மூழ்க முடிவெடுத்தார். திருநீலகண்டர் தன் மனைவியின் கரத்தைப் பற்றிக் கொண்டுதான் நீரில் மூழ்க வேண்டுமென சிவனடியார் மீண்டும் வலியுறுத்தினார். ஊரறிய தங்கள் சபதத்தை திருநீலகண்டர் விளக்கினார்.

அவர்கள் அக்குளத்தில் மூழ்கி எழுந்த போது முதுமை நீங்கி இளமை பெற்றிருந்தனர்.

பாடல்கள்

குளத்தில் மூழ்கி இளமை பெற்ற கட்சிஅக்காட்சியை திருத்தொண்டர் புராணம் இவ்விதம் விளக்குகிறது:

தில்லைநகர் வேட்கோவர் தூர்த்த ராகித்,
"தீண்டி லெமைத் திருநீல கண்ட"மென்று
சொல்லுமனை யாடனையே யன்றி மற்றுந்
துடியிடையாரிடை இன்பம் துறந்து, மூத்தங்
கெல்லையிலோ டிறைவைத்து மாற்றி" "நாங்கள்
எடுத்திலம்' என்றியம்பும்"என, விழிந்து
பொய்கை மெல்லியலாளுடன்மூழ்கி, இளமை எய்தி,
விளங்குபுலீச் சரத்தரனை மேவி னாரே.

தில்லைவாழ் அந்தணர்கள் அந்த அரிய காட்சியைக் கண்டு வியந்து நிற்க, சிவனடியார் உருவில் வந்த சிவபெருமான் உமையுடன் காட்சி தந்தார்.

குருபூஜை

திருநீலகண்ட நாயனாருக்கு ஒவ்வோர் ஆண்டும், தை மாதம் விசாக நட்சத்திரத்தில், சிவாலயங்களில் குருபூஜை கொண்டாடப்படுகிறது.

உசாத்துணை

  • நாயன்மார் வரலாறு - தமிழ்வளர்ச்சித்துறை - திரு.வி. கலியாணசுந்தரனார் - 2016
  • சைவம் வளர்த்த அறுபத்து மூவர் - விஜயா பதிப்பகம் - சி.எஸ். தேவநாதன் - நான்காம் பதிப்பு - 2016
  • திருநீலகண்ட நாயனார்

இதர இணைப்புகள்



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 18-Jun-2023, 07:05:55 IST