ஜான் சுந்தர்: Difference between revisions
(Corrected typo errors;) |
(Added: Category:கவிஞர்) |
||
| Line 69: | Line 69: | ||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
[[Category:சிறுகதையாசிரியர்]] | [[Category:சிறுகதையாசிரியர்]] | ||
[[Category:கவிஞர்]] | |||
Revision as of 00:34, 21 December 2025
- ஜான் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: ஜான் (பெயர் பட்டியல்)
ஜான் சுந்தர் (பிறப்பு: டிசம்பர் 3, 1973) எழுத்தாளர், மேடைப்பாடகர், இசைக் கலைஞர், கவிஞர். கவிதைகள், சிறுகதைகள் எழுதி வருகிறார்.
பிறப்பு,கல்வி
இயற்பெயர் வே. ஜான் டிக்ரூஸ். ஜான் சுந்தர் கோயம்புத்தூரில் பே.வேலுச்சாமி, மரியம் அம்மாள் இணையருக்கு டிசம்பர் 3,1973-ல் பிறந்தார். பள்ளிப் படிப்பு பத்தாம் வகுப்பு வரை பயின்றார். பின்னர் தானியங்கி வாகன மின்னியலில் பட்டயப்படிப்பை முடித்தார். லண்டன் டிரினிட்டி இசைக்கல்லூரியின் ROCK & POP VOCALS பிரிவில் கிரேட் 8-ல் மெரிட் நிலையில் தேர்ச்சி பெற்றார்.
தனி வாழ்க்கை
ஜான் சுந்தர் 2000-த்தில் அவிலா கிறிஸ்டினாவை மணந்தார். மகன் ரோஷன், மகள் ரோஜா.
இசை
ஜான் சுந்தர் கோவையில் 'இளையநிலா மெல்லிசைக் குழு'வையும், 'பாட்டுப் பட்டறை' என்னும் இசைப்பள்ளியையும் நடத்தி வருகிறார். 'டமருகம் கற்றல் மையம்' வாயிலாக குழந்தைகளுக்கான நுண்கலை பயிற்சிப் பட்டறைகளை ஒழுங்கு செய்கிறார்.
முன்னாள் இந்தியக் குடியரசுத்தலைவர் அப்துல் கலாம், எம் எஸ் விஸ்வநாதன், கவிஞர் வைரமுத்து, நடிகர் சிவக்குமார் ஆகியோருக்காக தனிப்பாடல்கள் நிகழ்ச்சி நடத்தியுள்ளார். பி. சுசீலா, எல்.ஆர். ஈஸ்வரி, ஜிக்கி, கங்கை அமரன், சீர்காழி சிவசிதம்பரம் உள்ளிட்ட மூத்த தலைமுறைப் பெருங்கலைஞர்களோடும் மஹதி, ஹரீஷ் ராகவேந்தர், அனுராதா ஸ்ரீராம், தேவன், முகேஷ் உள்ளிட்ட கலைஞர்களோடும் இணைந்து நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார்.
ஜான் சுந்தர் கோவை பாரதி பாசறையின் ஆதரவில் பாரதியின் 'புதிய ஆத்திசூடி' வரிகளில் சிலவற்றை பாடலாக்கியிருக்கிறார். இப்பாடல்களை கோவை பாரதியார் பல்கலைக்கழக வளாகம் முழுவதும் மணிக்கொருதரம் ஒலிக்கும்படி செய்யப்பட்டுள்ளது.
மத்தகம் என்ற இணையத்தொடரில் 'ஜெயில் குயில்' பாத்திரத்தில் நடித்துள்ளார். அந்தக் கதாபாத்திரத்தின் பாடல்கள் அனைத்தும் ஜான் சுந்தர் எழுதி மெட்டுக்கட்டிப் பாடியவை.
இலக்கிய வாழ்க்கை
ஜான் சுந்தரின் முதல் கவிதைத்தொகுப்பு 'சொந்த ரயில்காரி' 2013-ல் வெளியானது. இவரது கவிதைகளும் கட்டுரைகளும், கதைகளும் ஆனந்தவிகடன், கல்கி, இனிய வரம் உள்ளிட்ட பத்திரிக்கைகளிலும் காலச்சுவடு, உயிர்மை, கதைசொல்லி, கணையாழி, ரசனை, மணல்வீடு, 361டிகிரி, கொம்பு, மலைகள், கனலி உள்ளிட்ட இலக்கிய இதழ்களிலும் வெளிவந்துள்ளன. இவரது கவிதைகள் கோவை PSG கலை அறிவியல் கல்லூரியின் பாடத்திட்டத்திலும், தற்போதைய மகாராஷ்டிரா மாநில அரசின் தமிழ்ப் பாடப்புத்தகத்திலும் இடம்பெற்றுள்ளன.
நகலிசைக் கலைஞன் என்னும் தலைப்பில் ஜான் சுந்தர் தன் மேடைப்பாடல் அனுபவங்களை எழுதிய கட்டுரைத்தொகுப்பு புகழ்பெற்றது.
இலக்கிய இடம்
"கதைகளை வாசிக்கும்போது புலப்படும் முதன்மையான அம்சம் இவற்றில் உள்ளோடும் வெகுளித்தன்மை. தன்னைச் சுற்றி நடப்பவற்றை களங்கமற்ற விழிகளால் காணும் 'அப்புராணி'ப் பார்வை. இந்த வெகுளித்தனம் கலைகிற நொடியில், அப்பாவிப் பார்வை கூர்ந்தகவனமாக மாறுகிற இடத்தில் நடப்புகள் கதைகளாக உருவம் கொள்கின்றன. இந்த இயல்பு காரணமாகவே கதைகள் புத்துணர்வளிப்பவை ஆகின்றன.
எளிய மனிதர்கள், எளிய உலகம், எளிய சம்பவங்கள் ஆகியவற்றுக்குப் பின்னால் மறைந்திருக்கும் எதிர்பாராத நிகழ்ச்சிகளை, அதிர்ச்சியடைய வைக்கும் நிஜங்களை இந்தக் கதைகள் துலங்கச்செய்கின்றன. மற்றும் பலராக இருப்பவர் வாழ்வில் வெளித்தெரியாத மற்ற பலதையும் பகிரங்கமாக்குகின்றன.
சங்கடத் தருணங்களை நகை ஒளிரும் இழையில் கோர்க்கும் திறனை ஜான் சுந்தர் இந்தக் கதைகளில் இயல்பாக, எளிமையாக, புத்துணர்ச்சியுடன் வெளிப்படுத்துகிறார். புன்னகைக்கும் கண்ணீருடன் காலணியைத் திண்பண்டமாகச் சித்திரித்துக் காட்டும் 'காரியக் கோமாளி'யின் கலைச் சாயல் ஜான் சுந்தரின் கைவரிசையில் மிளிர்கிறது" என்று 'பறப்பன திரிவன சிரிப்பன' சிறுகதைத் தொகுப்பின் பின்னட்டைக் குறிப்பில் கவிஞர் சுகுமாரன் குறிப்பிடுகிறார்.
"ஒவ்வொருவருக்குள்ளும் சற்றும் வண்ணமிழக்காத சிறார் பருவத்தின் வெவ்வேறு காட்சிகளை இக் கதைகள் மீட்டுத் தருகின்றன. குதூகலமும் கொண்டாட்டமுமான தூய அந்த நாட்களின் பரவசத்தை கூடுதல் குறைவின்றி சொல்லிச் செல்கின்றன" என்று எம்.கோபாலகிருஷ்ணன் குறிப்பிடுகிறார்.[1]
"நகலிசைக்கலைஞன் கட்டுரை நூல் மெல்லிசைக் கச்சேரிக் கலைஞர்களின் வலிமிகுந்த அனுபவத் தொகுப்பு இந்தப் புத்தகம். அதைப் பற்றிய ரசிக மனப்பான்மையோடு அணுகிய எழுத்து என்கிற வகையில் இந்தக் கட்டுரைகள் தமிழுக்குப் புது வாழ்க்கையைக் காட்டுகின்றன. நகலிசைக் கலைஞர்களைப் பற்றிய எழுத்து என்பதால் ஜான் சுந்தரின் எழுத்தில் ஓர் இசைமை கூடிவந்திருக்கிறது. அதில் சம்பவங்களின் சுவாரஸ்யமும் வார்த்தைகளின் துல்லியத்தன்மையும் ஒரு சிறுகதையை வாசிக்கிற அனுபவத்தைத் தருகின்றன. அதற்கு ஒரு உதாரணமாக 'பூக்கமழ் தேறல்' தலைப்பில் வரும் பாணன் வீழ்ந்த காதையைச் சொல்லலாம்" என பத்திரிக்கையாளர் வெ.நீலகண்டன் குறிப்பிடுகிறார்.
"ஜான்சுந்தர் அடிப்படையில் ஓர் இசைக்கலைஞர். இசை துய்க்க மொழி அவசியமில்லையென்று சொல்லப்பட்டாலும், பாட்டில் புழங்கும் ஒருவர் சொற்களின் ரம்யத்தில் மயங்குவது இயல்பானதே. ஜான்சுந்தர் இந்த மயக்கத்தோடே எழுதவும் வந்திருக்கிறார்.சொந்த ரயில்காரி தொகுப்பின் அநேக கவிதைகள் குழந்தைகளின் உலகில் நிகழ்பவை. ஜான்சுந்தர் தன் ஒவ்வொரு சொல்லையும் குழந்தைகளாக்கி அதன் பரிசுத்த அறியாமைகளோடு விளையாட விட்டுவிட விரும்புகிறார்" என கவிஞர் இசை குறிப்பிடுகின்றார்.
நூல்கள்
கவிதைத் தொகுப்பு
- சொந்த ரயில்காரி (2013 அகநாழிகை பதிப்பகம்)
- பிஸ்கட்நிலாக்கள் (2018, தன்னறம் பதிப்பகம்)
- ரவிக்கைச்சுகந்தம் (2019, காலச்சுவடு பதிப்பகம்)
சிறுகதைத் தொகுப்பு
- பறப்பன திரிவன சிரிப்பன (2021, காலச்சுவடு பதிப்பகம்)
கட்டுரை
- நகலிசைக்கலைஞன் (2016 காலச்சுவடு பதிப்பகம்)
விருதுகள்
- சொந்தரயில்காரி கவிதை நூலுக்கு மணப்பாறை செந்தமிழ் அறக்கட்டளை'ஜெயந்தன் படைப்பிலக்கிய விருது - 2014' வழங்கி சிறப்பித்தது.
உசாத்துணை
- நெஞ்சூறும் இசை அனுபவம்! நகலிசைக் கலைஞன் நூல் விமர்சனம்: ஆனந்தவிகடன்
- சொந்த ரயில்காரியின் தகப்பன்: வேணுவனம்
- இளையநிலா ஜான் சுந்தர்: பாடல்கள்: soundcloud
- அரச விரலும் குழந்தைக் குரலும்: ஜான்சுந்தர்
வெளி இணைப்புகள்
- இளையநிலா ஜான் சுந்தர், யுடியுப் பக்கம்
- இளையநிலா இசைக்குழு - ஜான் சுந்தர் இணையதளம்
- நேத்ரா - சிறுகதை, கனலி.இன்
- ஔஷதக் கூடம் - கவிதை, கனலி.இன்
- கன்னி மரியாளின் கிருபை, கவிதை, நீலம் இணையதளம்
அடிக்குறிப்புகள்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
14-Sep-2022, 09:44:36 IST