under review

கால்டுவெல்: Difference between revisions

From Tamil Wiki
Line 70: Line 70:


== தனிவாழ்க்கை ==
== தனிவாழ்க்கை ==
கால்டுவெல் 1844-ல் நாகர்கோயில் லண்டன் மிஷன் அமைப்பைச் சேர்ந்த சார்ல்ஸ் மால்ட் என்பவரின் மகள் எலிசா மால்ட் (1822-1899) என்பவரை மணந்தார். அவர்களுக்கு சார்லஸ் கால்டுவெல், வில்லியம் ஆல்ஃப்ரட், அடிங்டன், ஆர்தர் லூயி, என்னும் நான்கு மகன்களும் இசபெல்லா, மார்த்தா லூயிசா, மேரி எமிலி ஆகிய மூன்று மகள்களும் பிறந்தனர். கால்டுவெல்லின் மனைவி, எலிசா தமிழ்மொழியிலும், ஆங்கிலத்திலும் புலமை பெற்றிருந்தார்.
கால்டுவெல் 20 மார்ச் 1844-ல் தன் 29 ஆம் வயதில் நாகர்கோயில் லண்டன் மிஷன் அமைப்பைச் சேர்ந்த சார்ல்ஸ் மால்ட் என்பவரின் மகள் எலிசா மால்ட் (1822-1899) என்பவரை மணந்தார். இந்த திருமணம் நாகர்கோயில் கஸ்பா ஆலயத்தில் (ஹோம் சர்ச்) நடைபெற்றது.  மெய்ஞானபுரத்தில் இறைப்பணியாற்றி வந்த ஜான் தாமஸ் இத்திருமணத்தை நடத்திவைத்தார்
 
கால்டுவெல் எலிசா இணையருக்கு இராபர்ட் சார்ல்ஸ் (1845) வில்லியம் ஆல்பிரட் (1852) அடிங்டன் (1857) ஆர்தர் லூயில் (1862) ஆகிய நான்கு மகன்களும் இசபெல்லா (1847) மார்த்தா லூயிசா(1849)  மேரி எமிலி (1854) ஆகிய மூன்று மகள்களும் பிறந்தனர். கால்டுவெல்லின் மனைவி, எலிசா தமிழ்மொழியிலும், ஆங்கிலத்திலும் புலமை பெற்றிருந்தார்.
== கல்விப் பணி ==
== கல்விப் பணி ==



Revision as of 22:15, 30 October 2024

To read the article in English: Robert Caldwell. ‎

இராபர்ட் கால்டுவெல்
இராபர்ட் கால்டுவெல்

கால்டுவெல் (இராபர்ட் கால்டுவெல்) (மே 7, 1814 – ஆகஸ்ட் 28, 1891) தமிழ்ப் பணியாற்றிய கிறிஸ்தவ மதபோதகர். தமிழாய்வாளர், சமூகப்பணியாளர், கல்விப்பணியாளர். தமிழில் திராவிடம் என்னும் கோட்பாட்டு அடித்தளத்தை உருவாக்கியவர்களில் முதன்மையானவர்.

திராவிட மொழிக் குடும்பம் என்ற கருத்து, பிராந்திய வரலாற்றாய்வுக்கான முன்வரைவு, தேசியக்கல்விக்கான வரைபடச் சித்திரம், இனவரைவியல் ஆய்வுகளுக்கான முன்வடிவம் எனப் பல தளங்களில் அடிப்படை கருத்துருவங்களை உருவாக்கிய முன்னோடி.’திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்’, 'திருநெல்வேலி வரலாறு' இவருடைய முக்கியமான படைப்புகள்.

பிறப்பு, கல்வி

முன்னோர்

கால்டுவெல்லின் தந்தை ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்தவரான வில்லியம் கால்டுவெல். தாய் இசபெல்லா ஹாமில்டன். கால்டுவெல்லுக்கு இசபெல்லா என்னும் தமக்கையும் ஜேம்ஸ் கால்டுவெல் என்னும் தமையனும் உண்டு. கால்டுவெல் மூன்றாவது மைந்தர். வில்லியம் கால்டுவெல் கிளாடிஸ் ஊரில் இருந்து ஐந்து மைல் தொலைவில் இருந்த பெல்பாஸ்ட் என்னும் துறைமுகத்தில் ஊழியராகப் பணியாற்றினார்.

பிறப்பு

கால்டுவெல் அயர்லாந்தில் கிளாடிஸ் என்னும் ஆற்றங்கரையில் அன்டிரிம் என்னும் சிற்றூரில் மே 7, 1814 அன்று பிறந்தார். அன்டிரிம் ஊரின் அருகே உள்ள ஷெப்பர்ட்யார்ட் என்னும் ஊரில் பிறந்தார் என்றும் சொல்லப்படுகிறது.

கல்வி

தொடக்கக் கல்வியை அயர்லாந்தில் பயின்ற கால்டுவெல் பத்தாவது வயதில் பெற்றோருடன் தாய்நாடாகிய ஸ்காட்லாந்துக்கு சென்றார். அங்கே கிளாஸ்கோ ஊரில் உள்ள கிளைட் ஆற்றின் தென்பகுதியில் வசித்தார். பதினாறு வயது வரை ஆங்கில இலக்கிய இலக்கணங்களைத் தானாகவே பயின்று தேர்ச்சி பெற்றார்.

கால்டுவெல் 1830 ஆம் ஆண்டு, தன் பதினாறாவது வயதில் தன் மூத்த சகோதனுடன் அயர்லாந்தில் டப்ளின் ஓவியக் கல்லூரியில் ஓவியத்துறையில் சேர்ந்து 1833ல் பட்டம் பெற்றார். சிறந்த ஓவியருக்கான பரிசுகள் பெற்றார்,

சமயம்

சபையாளுகை சபை

கால்டுவெல்லின் தந்தை மூப்பராளுகை (presbyterian) சபையைச் சேர்ந்த கிறிஸ்தவ நம்பிக்கை கொண்டவர். கால்டுவெல் சிறியவயதி வெஸ்ட்மினிஸ்டர் சிறிய ஞானோபதேசம் (The west minister shorter catechism) என்னும் நூல் வழியாக கிறிஸ்தவ அறிமுகம் பெற்ற்றார். டப்ளினில் வாழ்ந்த காலகட்டத்தில் அருள்திரு அர்விக் (Rev. Urwick) என்னும் கிறிஸ்தவ அருளுரையாளரின் தொடர்பால் கிறிஸ்தவ இறையியலில் ஈடுபாடு கொண்டவரானார்

மதநம்பிக்கையில் ஊசலாட்டம் கொண்டிருந்த தன்னிடம் கிறிஸ்துவே ஆணையிட்டதாக உணர்ந்ததாகவும் அந்நாள் தன் வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது என்றும் கால்டுவெல் தன் நினைவுக்குறிப்புகள் நூலில் குறிப்பிடுகிறார். கால்டுவெல் கிளாஸ்கோ திரும்பி அருள்திரு கிரிவைல் இவிங் (Greville Ewing) தலைமையிலான சபையாளுகை (congregational ) சபையின் உறுப்பினராக ஆனார். அருள்திரு சால்மர்ஸ் (Dr.Chalmers) அவர்களின் மாணவராக ஆகி கிறிஸ்தவப் பணிகளில் ஈடுபட்டார். விசிட்டர்ஸ் என்னும் கிறிஸ்தவப் போதனைத் தன்னார்வக்குழு ஒன்றின் உறுப்பினராகப் பணியாற்றினார்.

லண்டன் கிறித்தவ சமயத்தொண்டர் சங்கம்

தென்தமிழகத்தில் மதப்பணியாற்றிக் கொண்டிருந்த லண்டன் கிறித்தவ சமயத்தொண்டர் சங்கம் (லண்டன் மிஷனரி) தன்னார்வலர்களை தேடிக்கொண்டிருந்தது. 1834 ஆம் ஆண்டு கால்டுவெல்லும் அவர் நண்பர் டபிள்யூ. பி. லியோனும் அதில் உறுப்பினராகச் சேர்ந்தார்கள். பெட்போர்ட்ஷயர் என்னும் இடத்தில் இருர்ந்த டர்வி என்னும் ஊரில் திரு.செசில் அவர்கள் நடத்திய இறையியல் பள்ளியில் சேர்ந்து கல்விகற்றனர்.

லண்டன் சமயத்தொண்டர் சங்கத்தின் சார்பில் கால்டுவெல் கிளாஸ்கோ பல்கலைக் கழகத்தில் சேர்ந்து, ஆங்கிலம், லத்தீன், கிரேக்கம் ஆகிய மொழிகளைக் கற்றார். அப்பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சர். டேனியல் சேண்ட்போர்ட் கிரேக்க மொழியின் சிறப்புகளைப் பிற மொழிகளுடன் ஒப்புமைப்படுத்தி விளக்கிய திறனால் ஈர்க்கப்பட்டார். சமயநூல்களின் ஒப்பியல், மொழி ஒப்பியல் ஆகியவற்றில் கால்டுவெல்லுக்கு அப்போதே ஆர்வமிருந்தது. டேனியல் கீட் சாண்ட்போர்ட் (Daniel Keyte Sandfoard) என்னும் அறிஞர் மொழியியலில் கால்டுவெல்லின் தொடக்ககால ஆசிரியராக திகழ்ந்தார்.கால்டுவெல் கிளாஸ்கோ பல்கலையில் 1837 ல் முதல்மாணவராக வெற்றிபெற்று சர் ராபர்ட் பீல் நினைவுப் பரிசை பெற்றார்.

ஆங்கிலிகன் திருச்சபை

கால்டுவெல் பேராசிரியர் வார்ட்லா (Dr. Wartlaw) கிரிவைல் இவிங் ஆகியோரின் தூண்டுதலால் ஆங்கிலிகன் திருச்சபையில் நாட்டம் கொண்டார். ஆங்கிலிகன் சபையைச் சேர்ந்த ஹூக்கர் என்னும் கிறிஸ்தவ இறையியலாளரின் எழுத்துக்களால் ஈர்க்கப்பட்டார். வாட்டர்லேன்ட் என்னும் ஆங்கிலிகன் சபை அறிஞருடன் அணுக்கமாகப் பழகும் வாய்ப்பும் அமைந்தது.

குருப்பட்டம்

1834 ஆம் ஆண்டு கால்டுவெல்லுக்கு நுரையீரல் பாதிப்பு உருவானது. அவர் கடற்பயணம் செய்யலாகாது என மருத்துவர்கள் சொன்னாலும் அவர் இந்தியாசெல்வதில் உறுதியாக இருந்தார். ஆகவே அவருக்கு லண்டன் மிஷனரி சங்கம் குருப்பட்டம் வழங்கியது. ஆனால் அவர் அப்போது ஆங்கிலிகன் சபையில் தீவிர ஈடுபாடு கொண்டவராகவே இருந்தார். கால்டுவெல் 1838ல் லண்டன்மிஷனரி அமைப்பின் சார்பில் இந்தியாவுக்கு கிளம்பினார்.

இந்தியப் பயணம்
எலிசா கால்டுவெல்
எலிசா கால்டுவெல்

லண்டன் திருச்சபை சார்பாக ஜனவரி 8, 1838 அன்று கால்டுவெல், மேரி ஆன் என்னும் கப்பல் மூலம் சென்னை வந்தார். அவருடன் லியோன், ரஸ்ஸல் என்னும் இரண்டு இறைப்பணியாளர்களும் வந்தனர். ஐரோப்பாவில் இருந்து இந்தியாவுக்கு கடலில் பயணம் செய்தபோது ஹவ்ரே என்னும் துறைமுகத்துக்குச் சென்றுகொண்டிருந்த பிரெஞ்சுக் கப்பல் மேரி ஆன் கப்பல் மீது மோதி மூழ்கியது. அதில் பலர் இறந்து அறுவர் மட்டுமே உயிர் பிழைத்தனர். கப்பலை 'பிளிமத்' துறைமுகத்தில் பழுது பார்த்து பின்னர் கிளம்பியது. அந்தக் காலத்தில் ஐரோப்பாவில் இருந்து இந்தியா வரும் கப்பல்கள் தென்னாப்பிரிக்கா வழியாக வரவேண்டி இருந்ததால், நான்கு மாதப் பயணம் செய்ய வேண்டியிருந்தது. அவ்வாறு வரும்போது சி.பி. பிரெளன் என்னும் குடிமைப்பணி அதிகாரியுடன் நட்பு ஏற்பட்டது. அவர் ஆந்திராவில் பணி புரிந்தவர் என்பதால் தெலுங்கு, வடமொழி அறிந்து இருந்தார். அவர் வழியாகக் கால்டுவெல் அம்மொழிகளை அறிமுகம் செய்து கொண்டார்[1].

கால்டுவெல்லுக்கு சென்னையில் வில்லியம் ஹென்றி ட்ரூ, மிரன் வின்ஸ்லோ, ஹென்றி பவர், ஜான் ஆண்டர்சன் ஆகிய ஆங்கிலேய தமிழறிஞர்களின் நட்பு கிடைத்தது. ட்ரூ அவர்களின் இல்லத்தில் தங்கி தமிழ் கற்றுக்கொண்டார்.

சென்னையில்

கால்டுவெல் சென்னையில் 1838 ஜூன் முதல் ஐந்து மாதம் ஆங்கிலேயச் சிற்றாலயத்தில் போதகராகப் பணிபுரிந்தார். சென்னை வேப்பேரியிலுள்ள லண்டன்மிஷன் சபையிலும் போதகராகப் பணிபுரிந்தார். சென்னை வாழ்க்கையில் ஜி.யு. போப் , ஜான் ஸ்கட்டர், ஜான் டக்கர் போன்றவர்களுடன் அணுக்கமாக இருந்தார்.

எஸ்.பி.ஜி சபை

கால்டுவெல் ஆங்கிலிகன் சபையில் இருந்த சி.எம்.எஸ் மற்றும் எஸ்.பி.ஜி என்னும் இரு சபைகளில் எஸ்.பி.ஜி சபையில் சேர்ந்தார். அதற்கு அச்சபையின் பேராயர் ஸ்பென்ஸர் காரணமாக அமைந்தார். 1841 பிப்ரவரி 28 ஆம் தேதி எழுதப்பட்ட கடிதத்தில் தன் சகோதரியிடம் தான் லண்டன்மிஷன் அமைப்பை விட்டு விலகுவதாக தெரிவித்திருந்தார். 1841 ஜூன் மாதம் எல்லா உறவுகளையும் முறித்துக்கொண்டார்.

கால்டுவெல் 19 செப்டெம்பர் 1841 ஆம் நாள் சென்னை பேராயர் ஜார்ஜ் டிரிவர் ஸ்பென்ஸர் அவர்களால் உதகமண்டஒலத்தில் உள்ள புனித ஸ்டீபன் ஆலயத்தில் வைத்து ஆங்கிலிகன் திருச்சபை போதகராக திருப்பொழிவு செய்யப்பட்டார்.

இடையன்குடி சேவைகள்

இடையன்குடி

தென் தமிழகத்தின் கடற்கரைப் பகுதிகளில் ராபர்டோ டி நொபிலி மற்றும் வீரமாமுனிவர் காலம் முதலாகவே கிறிஸ்தவம் வேரூன்றத் தொடங்கியிருந்தது. ஸ்வார்ட்ஸ் ஐயர் (சுவார்த்தர்) என்னும் போதகர் திருநெல்வேலி பகுதியில் இறைப்பணியில் புகழ் பெற்றிருந்தார். அந்தக் காலகட்டத்தில் நாடார் இனத்தவர் பலரும் கிறிஸ்தவ மதத்தைத் தழுவியிருந்தனர். அவ்விதம் புதிதாக கிறிஸ்தவ மதத்திற்கு மாறியிருந்த பலரும் முதலூர் என ஒரு ஊர் அமைத்துக் குடியேறினர். பின்னர் அவ்விதம் திருநெல்வேலி மாவட்டத்தில் பல ஊர்கள் கிறிஸ்தவக் குடியிருப்புகளாகத் தோன்றின.

திருநெல்வேலி மாவட்டத்தில் ராதாபுரம் வட்டத்தில் உள்ள இடையான்குடியின் இயற்பெயர் வலிடையன் குடியிருப்பு. அது மருவி இடையன்குடி ஆகியது. இடையன்குடிக்கு 1798ல் ஸ்வார்ட்ஸ் போதகரின் தூதரான சத்தியநாதன் கிறிஸ்தவத்தை அறிமுகம் செய்தார். தொடர்ந்து தாவீது சுந்தரானந்தம் போதகராகச் செயல்பட்டார். தொபியாஸ் ரிங்கல்தௌபே 1806 முதல் 1809 வரை அங்கே மதபோதனை செய்தார்.1811 ஆம் ஆண்டு பெருமழையும் தொற்றுநோயும் உருவாகி பலர் மடிந்தனர். 1812 ஆண்டில் கொடிய பஞ்சம் உருவாகியது. அது மதம் மாறியதால் ஏற்பட்ட தெய்வ சாபமென பல மக்கள் அஞ்சினர். இக்காலகட்டத்தில் தொடர்ச்சியாக கிறித்தவர்கள் தங்கள் பழைய மதத்திற்கு திரும்பிச் சென்றனர். 1829 ஆம் ஆண்டு அங்கே எஸ்.பி.ஜி போதகராக டேவிட் ரோசன் நியமனம் செய்யப்பட்டிருந்தார். ரோசன் அங்கே ஒரு சிறிய ஆலயத்தைக் கட்டி மதப்பணி புரிந்தார்.

சென்னை இடையன்குடி பயணம்

இந்தக் காலகட்டத்தில்தான் சென்னை மாநகரில் மூன்று ஆண்டுகள் தங்கியிருந்த கால்டுவெல் ஏறத்தாழ நானூறு மைல் தொலைவில் உள்ள திருநெல்வேலி பகுதிக்கு நடைப்பயணமாக செல்ல முடிவெடுத்தார். செல்லும் வழியில் அங்குள்ள மக்களின் வாழ்க்கை முறைகளையும் மொழியையும் நன்கு அறிந்து கொள்ள முடியுமென எண்ணினார். சிதம்பரம், மாயவரம் வழியாகச் சென்று தரங்கம்பாடியில் சில காலம் தங்கி டேனிஷ் மிஷன் செய்யும் பணிகளை அறிந்தார். பின்பு கும்பகோணம் வழியாகத் தஞ்சாவூர் சென்று, அங்கு வாழ்ந்த வேதநாயகரைக் கண்டு உரையாடினார். திருச்சிராப்பள்ளி வழியாக நீலமலை (ஊட்டி) சென்றார். அங்கு ஸ்பென்சர் எனும் மதபோதகரின் விருந்தினராக ஒரு மாதம் தங்கினார். கோவை வழியாக மதுரை வந்தார். வரும் வழியில் தங்குமிடம் மறுக்கப்பட்டு துன்புற்றார். மதுரையில் திருமங்கலத்தில் சமயத்தொண்டு புரிந்த திரேசியரைக் (Tracy) கண்டு உரையாடினார். பின்பு நவம்பர் 1841-ல் நெல்லை வழியே பாளையங்கோட்டை சென்றடைந்தார். நவம்பர் 28, 1841-ல் நாசரேத்தில் தங்கி இறைவழிபாடு நிகழ்த்தி ஒரு விரிவுரையும் செய்தார். அடுத்த ஞாயிற்றுக்கிழமை முதலூரில் விரிவுரையை நிகழ்த்தினார். பாதை தெரியாமல் அருகில் இருந்த இடையன்குடியைப் நெடுந்தூரம் சுற்றி அடைந்தார்.[2] 1841 டிசம்பர் மாதம் 7 ஆம் தேதி கால்டுவெல் இடையான் குடியை வந்தடைந்திருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

இடையான்குடி மீட்டெடுப்பு

இடையான்குடி கைவிடப்பட்ட நிலையில் இருந்தது. கால்டுவெல் அதை மீட்டமைத்தார். அந்த ஊர் அவருடைய செயல்மையமாக அமைந்தது, கடைசிக் காலத்தில் அவர் நிலைகொள்ளும் இடமாகவும் அமைந்தது.1841 டிசம்பர் மாதம் 11 ஆம் நாள் ஞாயிறன்று கால்டுவெல் இடையன்குடியில் ரோசன் அமைத்த சிறிய ஆலயத்தில் முதன்முதலாக இறைவழிபாட்டை நிகழ்த்தினார்.

கால்டுவெல் 1842 இடையான்குடி கிராமத்தை 40 பவுண்ட் விலைகொடுத்து வாங்கினார். அங்கே சீராக நிலப்பகுப்பு செய்து ஓர் ஊரை உருவாக்கி கிறிஸ்தவ மக்களைக் குடியேற்றினார். கால்டுவெல் எழுதிய திருநெல்வேலி சரித்திரம் நூலில் இடம்பெற்றுள்ள இடையான்குடி பற்றிய சித்தரிப்பில் அவர் உருவாக்கிய நகரை மேற்பார்வையிட மரத்தில் மேல் ஏறி உட்கார்ந்திருக்கிறார் கால்டுவெல். அப்பகுதியை பொட்டலாக விற்ற நில உரிமையாளரான நாடார் கால்டுவெல் தன் நிலத்தை பாத்திபோட்டு சீரழித்துவிட்டார் என்று புலம்புகிறார். சீரான தெருக்கள் அந்த அளவுக்கு அவரது கண்களுக்கு வித்தியாசமாக தெரிகின்றன.[3]

தேவாலயப் பணிகள்

கால்டுவெல் இடையன்குடியில் 1829ல் ரோசன் கட்டிய சிறிய ஆலயத்தை 1842 ஆம் ஆண்டு விரிவாக்கிக் கட்டினார்.1845 ஆம் ஆண்டு புயலால் இந்த ஆலயம் அழிந்தது. பின்னர் மீட்டுக் கட்டப்பட்டது. ஐந்து முறை விரிவாக்கம் செய்யப்பட்ட இந்த ஆலயம் TDTA தொடக்கப்பள்ளியாகச் செயல்பட்டுவருகிறது. கால்டுவெல்லின் 200 ஆவது பிறந்தநாளை ஒட்டி இவ்வாலயம் புதுப்பிக்கப்பட்டது.

1880-ல் இடையன்குடியில் கால்டுவெல் தூய திரித்துவ ஆலயம் என்னும் புதிய தேவாலயத்தை கட்டினார். ஆலயத்தின் நீளம் 85 அடி. அகலம் 52 அடி. ஆலயத்தின் உயரம் 66 அடி. ஆலயத்தில் 16 கல்தூண்கள் உள்ளன. இந்த ஆலயத்தின் ஆல்டர் கோதிக் கட்டிடக்கலையை அடியொற்றி அமைந்தது. இந்த ஆலயத்தின் சன்னல்கள் உட்பட அனைத்து மரப்பணிகளும், கற்பணிகளும் கால்டுவெல்லால் வடிவமைக்கப்பட்டவை. அந்த தேவாலயத்திற்காக லண்டனில் இருந்து மணிகள் கொண்டு வரப்பட்டன. (தூய திரித்துவ ஆலயம், இடையான்குடி)

தூத்துக்குடி கால்டுவெல் கல்லூரியின் முகப்பில் 1 நவம்பர் 1886 ல் கால்டுவெல் ஒரு சிறு ஆலயத்தைக் கட்டினார்.

தனிவாழ்க்கை

கால்டுவெல் 20 மார்ச் 1844-ல் தன் 29 ஆம் வயதில் நாகர்கோயில் லண்டன் மிஷன் அமைப்பைச் சேர்ந்த சார்ல்ஸ் மால்ட் என்பவரின் மகள் எலிசா மால்ட் (1822-1899) என்பவரை மணந்தார். இந்த திருமணம் நாகர்கோயில் கஸ்பா ஆலயத்தில் (ஹோம் சர்ச்) நடைபெற்றது. மெய்ஞானபுரத்தில் இறைப்பணியாற்றி வந்த ஜான் தாமஸ் இத்திருமணத்தை நடத்திவைத்தார்

கால்டுவெல் எலிசா இணையருக்கு இராபர்ட் சார்ல்ஸ் (1845) வில்லியம் ஆல்பிரட் (1852) அடிங்டன் (1857) ஆர்தர் லூயில் (1862) ஆகிய நான்கு மகன்களும் இசபெல்லா (1847) மார்த்தா லூயிசா(1849) மேரி எமிலி (1854) ஆகிய மூன்று மகள்களும் பிறந்தனர். கால்டுவெல்லின் மனைவி, எலிசா தமிழ்மொழியிலும், ஆங்கிலத்திலும் புலமை பெற்றிருந்தார்.

கல்விப் பணி

பள்ளிகள்

கால்டுவெல் இடையன்குடியை மையமாக்கி முதன்மையாக கல்விப்பணியை முன்னெடுத்தார்.அருள்திரு ரேனியஸ் 1821 ஆம் ஆண்டு இடையன்குடியில் ஒரு சிறு பள்ளியை தொடங்கி நடத்திவந்தார். கால்டுவெல் இடையான்குடிக்கு வரும்போது இடையன்குடி, தருவை, கீரைக்காரந்தட்டு ஆகிய மூன்று ஊர்களில் மட்டுமே பள்ளிகள் இருந்தன. இடையன்குடி பள்ளியில் 40 மாணவர்கள் பயின்றனர். கால்டுவெல் 1841 ல் இடையன்குடியில் ஆண்களுக்கு உண்டு உறைவிடப்பள்ளியை தொடங்கினார். 1842ல் பெண்களுக்கான பள்ளியை தொடங்கினார். 1844 மே மாதம் கால்டுவெல்லின் மனைவி எலிசா அம்மையார் பெண்களுக்கான உண்டு உறைவிடப்பள்ளியை இடையன்குடியில் தொடங்கினார்.

கால்டுவெல்லுக்கு பள்ளிகளை நடத்துவதில் அருள்திரு பிலிப் பிளெச்சர் உதவியாக இருந்தார். 1845ல் பேராயர் ஸ்பென்ஸர் இடையன்குடிக்கு வந்தபோது கால்டுவெல்லின் நிர்வாகத்தில் 14 பள்ளிகள் செயல்பட்டு வந்தன.

1858 ல் சென்னை மாகாண அரசு தாலுகா தலைமையிடங்களில் தாலுகா பள்ளிக்கூடங்களை நிறுவ ஆணையிட்டது.1859 ஏப்ரலில் கால்டுவெல் அந்த ஆணையை அடிப்படையாகக்கொண்டு தருவை, ராதாபுரம், சமூகரெங்கபுரம், குலசேகரன்பட்டினம், ஆழ்வார் திருநகரி, தூத்துக்குடி, ஆறுமுகமங்கலம்,தென் திருப்பேரை, தட்டான் மடம் என்னும் ஒன்பது ஊர்களில் பள்ளிகளை நிறுவினார்.

1876ல் கால்டுவெல் இடையன்குடியில் பாலர்பள்ளி ஒன்றை தொடங்கினார்.1884ல் தன் துணைவி எலிசாவுடன் தூத்துக்குடிக்கு இடம்பெயர்ந்த கால்டுவெல் அங்கே மேலூரிலும் கீழூரிலும் இரண்டு பள்ளிகளைத் தொடங்கினார். 1884ல் தூத்துக்குடி வடக்கூரில் ஒரு பெண்கள் பள்ளியைத் தொடங்கினார். 1887 நவம்பர் மாதத்தில் தூத்துக்குடியில் விக்டோரியா பெண்கள் ஆசிரியர் பயிற்சிப்பள்ளியை தொடங்கினார்.

ஆசிரியர்பயிற்சிப் பள்ளி

கால்டுவெல்லின் புதல்விகளான இசபெல்லாவும் லூயிஸாவும் 1864 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் கல்விகற்று திரும்பி வந்தார்கள். அவர்கள் பள்ளிகளின் பொறுப்பை ஏற்று நடத்தினார்கள். ஆசிரியர்கள் கூடுதலாகத் தேவைப்பட்டமையால் கால்டுவெல் 1865 ஆம் ஆண்டு உண்டு உறைவிடப்பள்ளி மாணவர்களுக்கு ஆசிரியர்பயிற்சி அளிக்க தொடங்கினார். அது ஆசிரியப்பள்ளியாக ஆகியது. முதற்கட்டமாக ஏழு மாணவர்களும் நான்கு மாணவிகளும் ஆசிரியர்களாக பணியாற்றலாயினர்.

இறையியல்பள்ளி

கால்டுவெல்1842ல் இடையன்குடியில் ஓர் இறையியல்பள்ளியை தொடங்கினார்.

சாயர்புரம் கல்லூரி

சாயர்புரத்தில் ஜி.யு.போப் 1844 ல் சாயர்புரம் செமினரி என்னும் பெயரில் ஒரு இறையியல்பள்ளி தொடங்கப்பட்டது. அது பின்னர் அப்பகுதி மாணவர்களுக்கான உயர்நிலைப்பள்ளியாக ஆகியது. கால்டுவெலின் முயற்சியால் சாயர்புரம் தலைவராக இருந்த அருள்திரு ஆதம்சன், அருள்திரு ஜே.ஏ.ஷாராக் ஆகியோரின் ஆதரவுடன் சாயர்புரம் உயர்நிலைப் பள்ளி 1880 சாயர்புரம் கல்லூரியாக ஆகியது. ஆதம்சன் அக்கல்லூரியின் முதல்வராக ஆனார்.

கால்டுவெல் கல்லூரி

சாயர்புரம் கல்லூரி 1883ல் தூத்துக்குடிக்கு இடமாற்றம் செய்யப்பட்டது. புதியதாக இடம் வாங்கி விரிவாக்கம் செய்யப்பட்ட அக்கல்லூரி கால்டுவெல் கல்லூரி என அழைக்கப்பட்டது. சாயர்புரம் உயர்நிலைப் பள்ளி போப் நினைவு பள்ளியாக நீடித்தது.

மொழியியல் ஆய்வுகள்

திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்
திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்

கால்டுவெல் இடையன்குடியில் இருந்த காலத்தில் திருக்குறளையும், சீவக சிந்தாமணியையும், நன்னூலையும் கற்றார். இடையான்குடியில் 50 ஆண்டுகள் மதப்பணியுடன் சேர்த்து தமிழ்ப்பணியும் செய்தார். இவர் ஆங்கில மொழியில் எழுதிய திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் (1856) என்னும் நூல் மிக முக்கியமான படைப்பு.

கால்டுவெல் இந்த ஒப்பிலக்கண ஆய்வை அவருடைய இந்தியவியல் ஆய்வின் ஒரு பகுதியாக நிகழ்த்தினார். தென்னிந்திய மொழிகளான தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், துளு ஆகிய மொழிகளை ஆராய்ந்த கால்டுவெல்அவற்றுக்கு ஒரு பொதுவான இலக்கண அமைப்பு இருப்பதை உணர்ந்தார். அவை சம்ஸ்கிருதச் சொற்களஞ்சியம், சம்ஸ்கிருத இலக்கணம் ஆகியவற்றின் துணையின்றி தனித்தியங்கும் இயல்பு கொண்டவையாக இருப்பதால் இவை முற்றிலும் வேறு மொழிக்குடும்பம் என்பது அவருடைய கருத்து. இந்தமொழிகளை அவர் திராவிட மொழிகள் என்றார்.

1856-ம் ஆண்டு Comparative Grammar of the Dravidian of South Indian Family Language என்ற ஆங்கில நூலை எழுதினார். இந்நூல் உலக அளவில் மொழியியல் ஆய்வுக்குப் பெரிதும் துணை செய்யும் நூலாக இருக்கிறது. இந்நூலுக்காக அவர் படித்த கிளாஸ்கோ பல்கலைக் கழகம் அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கியது. திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்று அழைக்கப்படும் இந்நூலின் தமிழ் வடிவப் பெயர் "திராவிட அல்லது தென்னிந்திய மொழிக் குடும்பங்களின் ஒப்பிலக்கணம்". அந்த நூலின் மூலம் இந்திய மொழிகளில் திராவிட மொழிக்குடும்பம் தனித்து இயங்கும் ஓர் அமைப்பு என்ற கருத்தை ஆய்வுலகில் நிறுவினார்.[4]

திராவிட என்னும் சொல்லை சிற்ப - தாந்த்ரீக மரபில் இருந்து எடுத்துக்கொண்டார். திராவிட என்பது ஒரு இனமாக இருக்கலாம் என்ற ஊகத்தை அவர் முன்வைத்தார். அந்த ஊகத்தை உடனடியாக ஒரு கோட்பாடாக ஆக்கிக் கொண்டு திராவிட இயக்கம் உருவானது.[5] அவரிடமிருந்தே திராவிடவியல் ஆய்வுகள் தொடங்குகின்றன.

கால்டுவெல் முன்வைத்த திராவிடமொழிகொள்கை பின்னர் பெரிதாகப் பேசப்பட்டது. தமிழ் மொழிக் குடும்பம் இருப்பது பற்றிக் கண்டு பிடித்தது இவரல்ல என்றாலும், அதற்கான சான்றுகளை ஒருங்கிணைத்து அக்கருதுகோளை முதன்மைப்படுத்தியவர் கால்டுவெல். இவரது மொழி ஆராய்ச்சியின் விளைவாக திராவிட இனவாதம் தமிழகத்தில் வலுவாக உருவானது. எல்லிஸ், கால்டுவெல் போன்றோரால் முன்வைக்கப்பட்டு மனோன்மணியம் சுந்தரம்பிள்ளை, ஞானியார் அடிகள் போன்ற சைவர்களால் வளர்த்தெடுக்கப்பட்டது.[6]

"குமரி முனைக்குத் தென்பால் உள்ள பெருநாட்டில் முதன் முதல் தோன்றி வாழ்ந்த நன்மக்களே ஒரு காலத்தில் இந்திய நாடெங்கும் பரவிய தமிழர் ஆவர். தமிழரை வடமொழியாளர் திராவிடர் என்று அழைத்தனர். குமரிக் கண்டத்தைக் கடல் கொண்ட பொழுது இவருள் சில பகுதியினர் கடல் வழியாகவும், நில வழியாகவும் பெலுசித்தான், மெசபடோமியா முதலிய வடமேற்கு ஆசிய நாடுகளில் சென்று வாழ்ந்தனர்." என்பது கால்டுவெல்லின் கருத்து.

வரலாற்று ஆய்வுகள்

திருநெல்வேலி சரித்திரம்
திருநெல்வேலி சரித்திரம்

திருநெல்வேலியைக் குறித்து அறிவதற்கான முதல் வரலாற்று நூலாக இருப்பது கால்டுவெல் எழுதிய திருநெல்வேலி சரித்திரம்.

திருநெல்வேலியில் பணியாற்றிய காலத்தில் அதன் வரலாறு பற்றி கால்டுவெல் ஆய்வுகள் செய்துள்ளார். தகவல் சேகரிப்புக்காகச் சங்க இலக்கியங்களின் ஏட்டுப் பிரதிகளைப் படித்தது மட்டுமன்றி, அகழ்வாய்வுகளில் ஆர்வம் காட்டி பல பண்டைய கட்டிடங்களின் அடிப்படைகளையும், ஈமத்தாழிகள், நாணயங்கள் முதலானவற்றையும் ஆராய்ந்து வெளியிட்டார். மீன் சின்னம் பொறிக்கப்பட்ட பாண்டிய நாட்டுக் காசுகள் பல இவ்வாய்வுகளில் கிடைத்துள்ளன. இந்த ஆய்வுகளின் இறுதியில் "திருநெல்வேலி மாவட்டத்தின் அரசியல் மற்றும் பொது வரலாறு (A Political and General History of the District of Tinnevely) என்னும் நூலை எழுதினார். இது 1881-ம் ஆண்டில் மதராஸ் அரசினால் வெளியிடப்பட்டது.

முறைப்படி தரவுகளைச் சேகரிப்பது, அவற்றை ஒழுங்குபடுத்தி முடிவுகளை அடைவது, அவற்றை ஆர்வமூட்டும் முறையில் முன்வைப்பது ஆகியவற்றில் ஐரோப்பிய- கிறித்தவ முறைமையை அறிமுகம் செய்தார். புராணங்கள் தொன்மங்கள் நம்பிக்கைகள் ஆகியவற்றை தவிர்த்து வரலாற்றைத் தரவுகளின் அடிப்படையில் எழுதக் கற்பித்த முன்னோடிகளில் ஒருவர். தமிழக வரலாற்றெழுத்தைத் தொடங்கிவைத்தவர் என்ற முறையில் முக்கியமானவர்[7].

திருநெல்வேலி சரித்திரம் மூலம் பிராந்திய வரலாற்றாய்வுக்கான முன்வடிவை உருவாக்கினார்.

அவர் நிறுவிய கல்வி நிறுவனங்கள் மூலம் இந்தியத் தேவையையும் மேலைநாட்டு ஞானத்தையும் இணைத்து தேசியக்கல்விக்கான வரைபடச்சித்திரத்தை தொடங்கி வைத்தார்.

'திருநெல்வேலிச் சாணார் வரலாறு [1849]’ என்ற நூல் வழியாக இனவரைவியல் ஆய்வுகளுக்கான முன்வடிவத்தை உருவாக்கினார். ஆனால் அந்த நூல் கடுமையான எதிர்ப்பை உருவாக்கியது, நெடுங்காலமாக அச்சிலும் இல்லை. வாழ்நாள் முழுக்க நாடார்கள் நடுவே பணியாற்றியவராயிருப்பினும் அந்த நூலில் நாடார்களை கிட்டத்தட்ட 'வரலாறு அற்றவர்களாக’ ’பண்படாக் குடிகளாக’ சித்தரித்திருக்கிறார். அவர்களின் குமுக நெறிகள், வழிபாட்டு முறைகள் அவருக்குப் பிடிகிடைக்கவில்லை.

மறைவு

77-ம் வயதில், ஆகஸ்ட் 28, 1891 அன்று, கொடைக்கானலில் கால்டுவெல் மரணமடைந்தார். இடையான்குடி தேவாலயத்தில் அடக்கம் செய்யப்பட்டார்.

கால்டுவெல் நினைவு அஞ்சல் தலை
கால்டுவெல் நினைவு அஞ்சல் தலை
கால்டுவெல் நினைவு இல்லம்
கால்டுவெல் நினைவு இல்லம்

மே 7, 2010 அன்று கால்டுவெல் நினைவு அஞ்சல் தலை வெளியிடப்பட்டது. 2011 பிப்ரவரியில் இடையான்குடியில் அவர் வாழ்ந்த இல்லம் நினைவுச்சின்னமாக அறிவிக்கப்பட்டது. அதில் அவருடைய படமும் திறக்கப்பட்டது. அதற்கு முன்னரே 1968-ல் உலகத் தமிழ் மாநாட்டின்போது சென்னைக் கடற்கரையில் அவருக்குச் சிலை திறக்கப்பட்டது.

வாழ்க்கை வரலாறு

  • ’அருட்பணியாளர் இராபர்ட் கால்டுவெல்’ - யோ.ஞானசந்திர ஜான்சன் - கால்டுவெல்லின் வாழ்க்கையை, அருட்பணியை, சேவையை விரிவான குறிப்புகளாக முன்வைக்கும் ஆய்வுநூல்.
  • கால்டுவெல்லின் பன்முகப் பணிகள் - ப.ச.ஏசுதாசன்
  • கால்டுவெல்லின் நினைவலைகள் - பி.கனகராஜ் மொழியாக்கம்

பிற பதிவுகள்

சமகாலத்தில் கால்டுவெல் பற்றிய தனிக்கவனத்தை உருவாக்கியவர் ஆய்வாளர் எம்.வேதசகாயகுமார். கால்டுவெல்லைப்பற்றிய இருவாசிப்புகள் உள்ளன, ஒன்று ஆதிக்கச்சாதிகளின் கோணத்தில் நிகழ்த்தப்பட்ட் திராவிட இயக்கப் பார்வை என்றும் இன்னொன்று அடித்தள மக்களின் விடுதலைக்கு உதவியவர் என்ற கோணத்திலான பார்வை என்றும் இரண்டாம் பார்வையில் கால்டுவெல்லையும் அவர் சார்ந்த பிற ஆய்வுகளையும் மறுவாசிப்பு செய்ய வேண்டும் என்பதையும் வேதசகாயகுமாரின் தரப்பு என்று சுருக்கமாகச் சொல்லலாம் என்கிறார் எழுத்தாளர் ஜெயமோகன்[4].

சென்னைப்பல்கலை முனைவர் பட்ட ஆய்வு மாணவர்களின் முயற்சியால் நவம்பர் 1, 2008முதல் மாற்றுவெளி என்ற ஒரு ஆய்விதழ் தொடங்கப்பட்டது. அதில் முதல் ஆய்விதழ் கால்டுவெல் சிறப்பிதழாக வெளிவந்தது. அதில் 'கால்டுவெல் என்னும் சிக்கல்’ [எம் வேதசகாயகுமார்] 'கால்டுவெல்லின் திராவிடம்-ஒரு வாசிப்பு’ [வ கீதா] 'கால்டுவெல் பின்காலனிய வாசிப்பு’ [ அ.மங்கை] 'திராவிடஇயல் சிலகுறிப்புகள்’ [வீ அரசு] 'கால்டுவெல் என்ற மனிதர்’ [தொ.பரமசிவன்] போன்ற குறிப்பிடத்தக்க கட்டுரைகள் வெளியாகின.

எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய லாசர்[8] சிறுகதை வழியாக தமிழிலக்கியத்தில் ராபர்ட் கால்டுவெல் பதிவாகி இருக்கிறார்.

விவாதங்கள்

திருநெல்வேலி சாணார்
திருநெல்வேலி சாணார்

திருநெல்வேலி சாணார் வரலாறு வெளிவந்தபோது கடுமையான எதிர்ப்பை உருவாக்கியது. ஏனென்றால் அன்றிருந்த உண்மை நிலையையும், பண்பாட்டுசூழலையும் அந்நூல் பிரதிபலிக்கவில்லை. அது கால்டுவெல்லின் மதிப்பீடு மட்டுமாக இருந்தது.

எனவே நாசரேத் ஞானமுத்து என்ற கிறித்தவர் கால்டுவெல் மேல் வழக்கு தொடர்ந்தார். கால்டுவெலின் நூலுக்கு மறுப்பாக ஜி.யூ.போப்பின் மாணவரும் கிறித்தவப் பேரறிஞருமான அருமைநாயகம் சட்டாம்பிள்ளை ஒரு நூலை எழுதினார். அதை பிரசுரிக்க நிதிவசூல் செய்தார். அதை குற்றம் என்று கண்ட சீர்திருத்தக் கிறித்தவசபை புகார் கொடுக்க அருமைநாயகம் கைதுசெய்யப்பட்டார். பின்னர் விடுதலை ஆனபிறகு நாசரேத் அருகிலுள்ள பிரகாசபுரத்தில் தனி கிறித்தவ சபை ஒன்றை நிறுவினார். ஏசுரட்சகர் சபை என்று இது அழைக்கப்பட்டது

இந்து நாடார்களிடையே கொதிப்பு உருவானது. ஆனால் கால்டுவெல் 'இப்போது நாடார்கள் மேம்பட்டுவிட்டனர், காரணம் கிறித்தவர்களின் சேவை. இன்று அவர்கள் முந்தைய வரலாற்றை நினைத்து நாணி,அதை மறைக்க விரும்புகிறார்கள் .ஆகவே கோபம் கொள்கிறார்கள்’ என்றுதான் பதிலளித்தார். தன் பிழைகளை உணரவேயில்லை.

படைப்புகள்

கால்டுவெல் இயற்றிய தமிழ் நூல்கள்

  • நற்கருணை தியான மாலை (1853)
  • தாமரைத் தடாகம் (1871)
  • ஞான ஸ்நானம் (கட்டுரை)
  • நற்கருணை (கட்டுரை)
  • பரதகண்ட புராதனம்
திருநெல்வேலி சரித்திரம்
திருநெல்வேலி சரித்திரம்

கால்டுவெல் இயற்றிய ஆங்கில நூல்கள்

  • திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் (A Comparative Grammar of the Dravidian or South Indian Family Languages, 1856)
  • திருநெல்வேலியின் அரசியல் பொது வரலாறு (A Political and General History of Tinnevely, 1881)
  • தின்னவேலி (திருநெல்வேலி) சாணர்கள்: அவர்களின் மதம், மற்றும் ஒரு சாதியாக அவர்களது நெறிகள் மற்றும் குணங்கள்; அவர்களிடையே கிறிஸ்தவம் பரவுவதற்கு உள்ள வசதிகள் மற்றும் தடைகள் பற்றிய சிறப்புக் குறிப்புகளுடன் - ஒரு வரைவு (The Tinnevelly Shanars: A Sketch of - Their Religion, and Their Moral Condition and Characteristics, as a Cast; with Special Reference to the Facilities and Hindrances to the Progress of Christianity Amongst Them, 1849)
  • திருநெல்வேலி உயர் வகுப்பு மற்றும் உயர் சாதியினரிடையே கிறிஸ்தவ மதமற்றத்திற்கு செய்யப்பட்ட பணிகள் (Evangelistic Work amongst the Higher Classes and Castes in Tinnevelly. Rev. Dr. Caldwell’s Third Journal,1876)
  • மதத்தின் உள்ளிருக்கும் கோட்டை (The Inner Citadel of Religion. S.P.C.K.: London, 1879)
  • காப்பாற்றப் படாதவர்களின் அணிவகுப்பு [மதத்தின் வழியில்.] (The March of the Unsaved. [A religious tract.] G. Stoneman: London, 1896)
  • திருநெல்வேலியில் வேல்ஸ் இளவரசர் மற்றும் "டெலாகே சாலையிலிருந்து இடையான்குடி வரை" (The Prince of Wales in Tinnevelly, and "From Delahay Street to Edeyengoody.". London: S.P.C.K., 1876)
  • குடுமியின் மீதான அவதானிப்புகள் (Observations on the Kudumi. J. J. Craen: [Madras?] 1867)
  • இந்தியாவில் மிசனரிப் பள்ளிகளில் கிறிஸ்தவரல்லாத மாணவர்களுக்கு மதக்கட்டளைகளை தெரிவிப்பதை நிறுத்திவைத்தல் தொடர்பாக- மதறாஸ் பங்குத்தந்தைக்கு ஒரு கடிதம் (On reserve in communicating religious instruction to non- Christians in mission schools in India: a letter to the Right Reverend the Lord Bishop of Madras. Madras: S.P.C.K. Press, 1879)
  • கிறிஸ்தவத்துக்கு இந்து மத்ததுடன் உள்ள தொடர்பு (The Relation of Christianity to Hinduism. R. Clay, Sons, & Taylor: London, 1885)
  • திருநெல்வேலி கிறிஸ்தவ மிசனின் ஆரம்ப கால வரலாற்றுப் பதிவுகள் (Records of the Early History of the Tinnevelly Mission, etc. Higginbotham & Co.: Madras, 1881)
  • மூன்று பாதை வழிகாட்டிகள் (The Three Way-marks. Christian Vernacular Education Society: Madras, 1860)

அடிக்குறிப்புகள்



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 15-Nov-2022, 13:32:08 IST