பவணந்தி: Difference between revisions
(Corrected Category:சமணம் to Category:மதம்:சமணம்) Tag: Reverted |
(Corrected Category:மதம்:சமணம் to Category:சமணம்) Tag: Manual revert |
||
| Line 36: | Line 36: | ||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
[[Category:வரலாற்றாய்வாளர்கள்]] | [[Category:வரலாற்றாய்வாளர்கள்]] | ||
[[Category | [[Category:சமணம்]] | ||
Revision as of 11:23, 15 October 2024
பவணந்தி அல்லது பவணந்தி முனிவர் தமிழ் இலக்கண நூலான நன்னூலை எழுதியவர். இன்றுவரை செந்தமிழுக்கான இலக்கணமுறை நன்னூலைப் பின்பற்றி உள்ளது. பவணந்தி 12-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்ததாகக் கருதப்படுகிறது. மூன்றாம் குலோத்துங்க சோழன் காலத்தவர் என்று வரலாற்று ஆய்வாளர் கருதுகின்றனர்.பெயர் மற்றும் நன்னூலில் உள்ள சில கருத்துகளையும் சான்றாகக் கொண்டு பவணந்தி சமண சமயத் துறவி என அறியப்படுகிறது.
பிறப்பு, காலம்
பவணந்தி முனிவர் பிறந்த ஊர் பொன்மதிற்சனகை என்று சிறப்புப் பாயிரம் பொதுவாகக் குறிப்பிடுகிறது. சனகை என்பதற்குச் சனநாதபுரம் என்று மயிலைநாதரும் சனகாபுரம் என்று சங்கரநமச்சிவாயரும் விளக்கம் கூறியுள்ளனர். பவணந்தி முனிவர் பிறந்த சனகாபுரம் சோழசிங்கபுரத்தைச் சேர்ந்த ஊர் என்று தொண்டை மண்டல சதகமும்[1], ஈரோடு் வட்டத்தில் உள்ள ஊர் என்று கொங்கு மண்டல சதகமும்[2], மைசூர் மாநிலத்தில் உள்ள நசரபுரம் அருகிலுள்ள ஊர் என டாக்டர் உ.வே. சாமிநாதையரும் கருதினர். பவணந்தி முனிவர் மூன்றாம் குலோத்துங்க சோழனின் ஆட்சிக் காலத்தில் சிற்றரசனாக விளங்கிய சீயகங்கனால் புரக்கப்பட்டு, அவர் வேண்டுகோளுக்கு இணங்க நன்னூல் எழுதினார். மூன்றாம் குலோத்துங்க சோழனின் காலம் கி.பி. 1178 - 1218 ஆகும். எனவே சீயகங்கன் ஆட்சி செய்த காலத்தையே பவணந்தியார் வாழ்ந்த காலமாகக் கொள்ளலாம். நன்னூலுக்கு பவணந்தி எழுதிய சிறப்புப் பாயிரம் மூலம் இச்செய்தி அறியவருகிறது.
திருந்திய செங்கோற் சீய கங்கன்
அருங்கலை விநோதன் அமரா பரணன்
மொழிந்தன னாக முன்னோர் நூலின்
வழியே நன்னூற் பெயரின் வகுத்தனன்
பொன்மதிற் சனகைச் சன்மதி முனியருள்
பன்னருஞ் சிறப்பிற் பவணந்தி
என்னு நாமத் திருந்தவத் தோனே.
ஆதிநாத குரு விளங்கும் சனகாபுரி என்ற வரிகளால் பவணந்தி ஜைன மதத்தைச் சேர்ந்தவர் என்றும் அறியப்படுகிறது. ஜைன மதத்துத் துறவியருக்கு நந்தி என்ற நாமம் சூட்டப்படுவது வழக்கத்தில் இருந்தது.
நன்னூல்
பவணந்தி முனிவர் காலத்தில் தொல்காப்பியத்தின் சில பகுதிகள் வழக்கொழிந்தன. சில பகுதிகளுக்கு விளக்கம் தேவைப்பட்டது. ஓர் இலக்கண நூலுக்கான தேவை ஏற்பட்டது. தொல்காப்பியத்தில் வழக்கொழிந்த பயன்பாடுகளுக்கு பொருத்தமான சமகாலப் பயன்பாடுகளை வகுத்தும் ஏற்கனவே வகுக்கப் பெற்ற பயன்பாடுகளை மேலும் விளக்கியும் பவணந்தி நன்னூலை எழுதினார். தொல்காப்பியம் கண்ட இலக்கணத்தைப் பின்பற்றி சமகாலத்தில்இருந்த மொழியையும் நினைவில் கொண்டு சுமார் 17 நூற்றாண்டுகால இடைவெளியை நிரப்பிய நூல். தற்காலம்வரை, செந்தமிழுக்கான இலக்கணமுறை நன்னூலைப் பின்பற்றியே உள்ளது. பார்க்க நன்னூல்
நன்னூலில் 462 நூற்பாக்கள் இடம்பெற்றுள்ளன. அவற்றில் 7 நூற்பாக்கள் தொல்காப்பியத்தில் இருந்து எடுத்தாளப்பட்டவை. பாயிரம் நீங்கலாக 5 அதிகாரங்கள் இருந்தன என்றும் 3 அதிகாரங்கள் தொலைந்து போனதாகவும் கருதப்படுகிறது.
அடிக்குறிப்புகள்
- ↑
தன்னூர்ச் சனகையிற் சன்மதி மாமுனி தந்தமைந்த
னன்னூ லுரைத்த பவணந்தி மாமுனி நற்பதியுஞ்
சின்னூ லுரைத்த குணவீர பண்டிதன் சேர்பதியு
மன்னூ புரத்திரு வன்னமின் னேதொண்டை மண்டலமே - ↑
கங்கக் குரிசில் உவக்க நன்னூலைக் கனிந்து புகல்
துங்கப் புலமைப் பவணந்தி மாமுனி தோன்றி வளர்
கொங்கில் குறும்புதனில் ஆதிநாதகுரு விளங்கும்
மங்குற் பொழிற் சனகாபுரமும் கொங்கு மண்டலமே
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
12-Jan-2023, 06:33:04 IST