சீறாப்புராணம்: Difference between revisions
(Corrected Category:இஸ்லாம் to Category:மதம்:இஸ்லாம்) Tag: Reverted |
(Corrected Category:மதம்:இஸ்லாம் to Category:இஸ்லாம்) Tag: Manual revert |
||
| Line 28: | Line 28: | ||
[[Category:புலவர்கள்]] | [[Category:புலவர்கள்]] | ||
[[Category | [[Category:இஸ்லாம்]] | ||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
Revision as of 11:23, 15 October 2024
சீறாப்புராணம் தமிழில் எழுதப்பட்ட முதன்மையான இஸ்லாமிய காவிய நூல். இக்காவியத்தை பதினேழாம் நூற்றாண்டை சேர்ந்த உமறுப்புலவர் எழுதினார்.
எழுத்து,பிரசுரம்
இந்நூல் பதினேழாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் எழுதப்பட்டது. தமிழில் இஸ்லாமியக் காவியம் ஒன்று எழுதப்பட வேண்டும் என்ற வள்ளல் சீதக்காதியின் வேண்டுகோளின்படி உமறுப்புலவர் இதை இயற்றினார். தமிழ் இஸ்லாமிய மரபை உருவாக்கிய மார்க்கமேதையும் அரபிக்கவிஞரும் ஆகிய செய்கு சதக்கத்துல்லா அப்பா அவர்கள் காப்பியத்திற்கான கருப்பொருளை உமறுப்புலவருக்கு அருளினார்.
நூல் அமைப்பு
முகம்மது நபியின் வரலாற்றை பாடும் சீறாப்புராணம் இரண்டு பாகங்களில் 5027 செய்யுள்கள் கொண்டது. முதற்பாகத்தில் 44படலங்களும், இரண்டாவது பாகத்தில் 47படலங்களுமாக எழுதப்பட்டது. முதல் பாகத்தில் விலாதத்துக் காண்டத்தில் 23 படலங்களும், நுபுவ்வத்துக் காண்டத்தில் 21 படலங்களும் அமைந்துள்ளது. இரண்டாம் பாகம் ஹிஜிறத்துக் காண்டம் என்னும் ஒற்றைக் காண்டத்தில் 47 படலங்கள் கொண்டது.
உமறுப்புலவர் தமிழ் காப்பிய மரபின்படி நாட்டுப்படலமும் நகரப்படலமும் அமைத்து இயற்றினார். நபியின் நாடாகிய அரபு தேசத்தை வர்ணிக்கும் பகுதிகளில் தமிழ் இலக்கியத்தின் ஐந்தினை மரபின் படி நால்வகை நிலங்களை விவரித்து, தமிழ்நிலத்தின் மரம், செடி கொடிகள் விலங்குகளுக்கு ஏற்ப எழுதியுள்ளார். தமிழ்நாட்டு மலைகளில் வாழும் குறவர், குறத்தியர், தினைப்புனம், காவல் பரண்கள், யாழ், பறை போன்ற இசைக் கருவிகள், மா, பலா, வாழை எனும் முக்கனிகள் என்றே அரபு நிலத்துக் காட்சிகள் வர்ணிக்கப்படுகின்றன. அரபு மொழிச் சொற்கள் கலந்த நடையில் எழுதப்பட்டிருக்கிறது.
நபிகள் நாயகத்தின் வாழ்க்கை வரலாற்றின் பிற்பகுதி உமறுப்புலவரின் சீறாப்புராணத்தில் இடம் பெறவில்லை. சில ஆண்டுகளுக்குப் பிறகு பனீ அஹம்மது மரைக்காயர் எஞ்சிய பகுதியைப் பாடி, சீறாப்புராணம் - உறிஜ்ரத்துக் காண்டம் என்று பெயரிட்டார். பின்னர் இது "சின்னச் சீறா " என வழங்கப்படுகிறது. பின்பு முன்னா முகம்மது காதிரி என்பவர் இரு பகுதியையும் இணைத்து தானும் சில பகுதிகளை சேர்த்து முழுமைப் படுத்தியிருக்கிறார்.
நூல் முற்றுப்பெறுவதன் முன்னரே சீதக்காதி இறந்துவிட்டார். அதன் பிறகு அபுல்காசீம் என்னும் செல்வந்தர் ஒருவர் சீறாப்புராணம் இயற்றப்படுவதற்கு பொருளுதவி செய்தார். கம்பராமாயணத்தில் ஆயிரம் பாடல்களுக்கு ஒரு முறை கம்பர் சடையப்ப வள்ளலைப் புகழ்ந்து ஒரு பாடல் பாடியது போல, உமறுப்புலவர் நூறு பாடல்களுக்கு ஒரு முறை இவரைப் பாடியுள்ளார்.
இலக்கிய இடம்
தமிழிலக்கியத்தில் செவ்வியல் பண்பு கொண்ட இஸ்லாமிய இலக்கியங்கள் எண்ணிக்கையில் குறைவானவையே. அவற்றுள் சீறாப்புராணம் காவியச் சுவையில் முதன்மையான படைப்பு. தமிழ்க் காவியங்களில் இலக்கியச் சுவையில் சிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை, கம்பராமாயணம், பெரியபுராணம் ஆகியவற்றுக்கு நிகராக வைக்கத் தக்க பெருங்காப்பியம் சீறாப்புராணம்.[1]
உசாத்துணை
- தமிழ் இலக்கிய வரலாறு – மு. வரதராசன்
- சீறாப்புராணம் (மூலமும் பொழிப்புரையும்), உரையாசிரியர்:மகாமதி சதாவதானி செய்குத் தம்பிப் பாவலர்
அடிக்குறிப்புகள்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
17-Mar-2023, 20:00:32 IST
