இன்னா நாற்பது: Difference between revisions
No edit summary |
|||
| Line 48: | Line 48: | ||
== உசாத்துணை == | == உசாத்துணை == | ||
* | * [http://www.tamilsurangam.in/literatures/pathinen_keezhkanakku/innanarpadhu.html இன்னா நாற்பது - பதினெண் கீழ்க்கணக்கு, tamilsurangam.com] | ||
* [https://www.chennailibrary.com/pathinenkeelkanakku/innanarpadhu.html இன்னா நாற்பது - Inna Narpadhu - பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் - Pathinen Keelkanaku Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com] | * [https://www.chennailibrary.com/pathinenkeelkanakku/innanarpadhu.html இன்னா நாற்பது - Inna Narpadhu - பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் - Pathinen Keelkanaku Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com] | ||
* | * [https://www.tamilvu.org/library/l2400/html/l2400ind.htm பதினெங்கீழ்க்கணக்கு, தமிழ் இணையக் கல்விக்கழகம்] | ||
== அடிக்குறிப்புகள் == | == அடிக்குறிப்புகள் == | ||
Revision as of 06:38, 18 April 2022
இன்னா நாற்பது சங்கம் மருவிய காலத்தை சேர்ந்த தொகுதியான பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று[1]. இந்நூல் கபிலரால் இயற்றப்பட்டது. ஒவ்வொரு பாடலிலும் நான்கு கருத்துக்களைக் கொண்டு, ஒவ்வொன்றையும் 'இன்னா' என எடுத்துக் கூறுவதால் 'இன்னா நாற்பது' என்று பெயர். கடவுள் வாழ்த்தும் நாற்பது பாடல்களும் கொண்ட இந்நூல் இன்னிசை வெண்பாக்களால் ஆனது. பொ.யு. நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்நூலில் நூற்று அறுபத்து நான்கு கூடாச் செயல்கள் கூறப்பட்டுள்ளன. சிற்றிலக்கியங்களில் நானாற்பது (நாற்பது) என்னும் வகையை சேர்ந்தது.
பதிப்பு
- இன்னா நாற்பது கபிலர் 1944, சக்தி காரியாலயம், தமிழ்ப் பதிப்பக வெளியீடு-2
- கபிலர் இயற்றிய இன்னா நாற்பது மூலமும் சென்னை பச்சையப்பன் காலேஜ் தமிழ்ப்பண்டிதர் கா.ர. கோவிந்தராஜ முதலியாரவர்கள் இயற்றிய உரையும் - 1918
பேராசிரியர் எஸ். வையாபுரிப் பிள்ளை பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் சிறுபஞ்ச மூலம், திரிகடுகம், (1944) நான்மணிக்கடிகை(1944), இன்னா நாற்பது (1944), இனியவை நாற்பது (1949) ஆகிய ஐந்து நூல்களைப் பதிப்பித்திருக்கிறார்.
வையாபுரிப்பிள்ளை ‘பதினெண் கீழ்க்கணக்கு நூல்களின் பதிப்பு முயற்சிகள்’ என்னும் கட்டுரை ஒன்றை 1938-ல் எழுதியுள்ளார்.அக்கட்டுரையில் "தமிழுலகு வெகுகாலமாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த குறுந்தொகைப் பதிப்பு டாக்டர் சாமிநாதையரவர்களால் சில நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. ஆகவே எட்டுத்தொகை என வழங்குவனவற்றுள் அனைத்து நூல்களும் ஒருவாறு பரிசோதிக்கப்பெற்று பெரும்பாலும் நல்ல பதிப்புகளாக வெளிவந்துவிட்டன.... தொகை நூல்களின் நிலை இவ்வாறிருக்க அவற்றோடு உடனெண்ணப்படும் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் பலவற்றிற்கு இதுவரை திருந்திய பதிப்புகள் வெளிவரவில்லையென்றே சொல்ல வேண்டும்” என்கிறார்.
பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் அனைத்தையும் திருத்தமான பாடங்களுடன் நல்ல பதிப்பாகக் கொண்டுவர வேண்டும் என அவர் திட்டமிடுகிறார். பதினெண் கீழ்க்கணக்கு முழுவதையும் பதிப்பிக்கத் திட்டமிட்ட அவர் ஐந்து நூல்களை மட்டுமே வெளியிட்டார். அவரது திட்டம் நிறைவேறாமல் போன காரணம் தெரியவில்லை.[2]
நூல் அமைப்பு
நாற்பது என்னும் எண் தொகையால் குறிக்கப்பெறும் நான்கு கீழ்க்கணக்கு நூல்களில் கார் நாற்பதும், களவழி நாற்பதும் முறையே அகம், புறம் பற்றியவை. இன்னா நாற்பதும், இனியவை நாற்பதும் அறம் உரைப்பவை. நாநூறு,நாற்பது என நூல்களை தொகுப்பது சமணர்களின் வழிமுறை. அவ்வகையில் அவர்களால் பொதுவான பேசுமுறை, பொதுவான கருத்துநிலை ஆகியவற்றுடன் நிலையான எண்ணிக்கையில் உருவாக்கப்பட்ட நூல்கள் இவை.
இன்னா நாற்பது துன்பம் தரும் நிகழ்ச்சிகளையும் இனியவை நாற்பது இன்பம் தரும் செயல்களையும் தொகுத்து உரைப்பவை. நூலுக்கு முதலில் வரும் கடவுள் வாழ்த்திலும் கூட 'இன்னா', இனிதே என்னும் சொற்கள் அமைந்துள்ளன. இன்னா நாற்பதில் கடவுள் வாழ்த்து நீங்கலாக நாற்பது பாடல்கள் உள்ளன. ஆசிரியர் கபிலர் கடவுள் வாழ்த்தில் சிவபெருமான், பலராமன், திருமால், முருகன் ஆகியோரைக் குறித்துள்ளார்.
எடுத்துக்காட்டு
அறிவிற் சிறந்தவர்கள் இருக்கிற சபையில் அறிவில்லாத ஒருவன் நுழைவது துன்பத்தைத் தரும். இருட்டிய பின்னர் தனிவழியில் செல்வது துன்பம் விளைவிக்கும். விளையக் கூடிய துன்பங்களைத் தாங்கக் கூடிய ஆற்றல் இல்லாதவர்களுக்குத் தவம் துன்பம் தரும். தன்னைப் பெற்ற அன்னையைப் பேணிக் காப்பாற்றாமல் விடுவது துன்பம்.
ஆன்றவித்த சான்றோருட் பேதை புகலின்னா
மான்றிருண்ட போழ்தின் வழங்கல் பெரிதின்னா
நோன்றவிந்து வாழாதார் நோன்பின்னா வாங்கின்னா
ஈன்றாளை யோம்பா விடல்.
காவலற்ற ஊரில் வாழ்தல் மிகவும் துன்பமாகும். தீய செய்கையுடையவரது அருகில் இருத்தல் மிகவும் துன்பம். காமநோய் முற்றினால் உயிருக்குத் துன்பம். ’நான்’, ’எனது’ என என்பவரோடு தங்கியிருத்தல் துன்பம்.
ஏமல் இல் மூதூர் இருத்தல் மிக இன்னா;
தீமை உடையார் அயல் இருத்தல் நற்கு இன்னா;
காமம் முதிரின் உயிர்க்கு இன்னா; ஆங்கு இன்னா,
யாம் என்பவரோடு நட்பு.
இதர இணைப்புகள்
உசாத்துணை
- இன்னா நாற்பது - பதினெண் கீழ்க்கணக்கு, tamilsurangam.com
- இன்னா நாற்பது - Inna Narpadhu - பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் - Pathinen Keelkanaku Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com
- பதினெங்கீழ்க்கணக்கு, தமிழ் இணையக் கல்விக்கழகம்
அடிக்குறிப்புகள்
- ↑
நாலடி நான்மணி நானாற்ப தைந்திணைமுப்
பால்கடுகம் கோவை பழமொழி மாமூலம்
இன்னிலைய காஞ்சியோ டேலாதி என்பவே
கைந்நிலைய வாம்கீழ்க் கணக்கு - ↑ கீழ்க்கணக்கு நூல்கள் - ச.வையாபுரிப்பிள்ளை பதிப்புகள்
✅Finalised Page