under review

மண்ணியல் சிறுதேர்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
(Changed incorrect text: **ஆம் ஆண்டு, **இல்)
Line 56: Line 56:


==பதிப்பு==
==பதிப்பு==
மண்ணியல் சிறுதேர் நூலை சிவபுரி சன்மார்க்க சபை 1933-ஆம் ஆண்டு முதலில் பதிப்பித்தது.
மண்ணியல் சிறுதேர் நூலை சிவபுரி சன்மார்க்க சபை 1933-ம் ஆண்டு முதலில் பதிப்பித்தது.
==தொடர்பு நூல்==
==தொடர்பு நூல்==
மண்ணியல் சிறுதேர் ஒரு மதிப்பீடு என்னும் நூலை கவிஞர் [[மீரா]] இயற்றியுள்ளார். இந்நூலை அன்னம் பதிப்பகம் 2004-ஆம் ஆண்டு வெளியிட்டுள்ளது.
மண்ணியல் சிறுதேர் ஒரு மதிப்பீடு என்னும் நூலை கவிஞர் [[மீரா]] இயற்றியுள்ளார். இந்நூலை அன்னம் பதிப்பகம் 2004-ம் ஆண்டு வெளியிட்டுள்ளது.
==உசாத்துணை==
==உசாத்துணை==
*மண்ணில் சிறுதேர் (மிருச்ச கடிகம்), பண்டிதமணி மு. கதிரேசச் செட்டியார் மொழிபெயர்த்தியற்றியது, ஆனந்த நிலையம் வெளியீடு
*மண்ணில் சிறுதேர் (மிருச்ச கடிகம்), பண்டிதமணி மு. கதிரேசச் செட்டியார் மொழிபெயர்த்தியற்றியது, ஆனந்த நிலையம் வெளியீடு

Revision as of 10:14, 24 February 2024

மண்ணியல் சிறுதேர் பண்டிதமணி மு. கதிரேசன் செட்டியார் இயற்றிய நாடக நூல். சூத்ரகர் என்ற வடமொழிக்கவிஞர் இயற்றிய மிருச்சகடிகம் என்னும் நாடக நூலின் தமிழ் மொழியாக்கம்.

ஆசிரியர் குறிப்பு

மண்ணியல் சிறுதேர் நூலின் ஆசிரியர் பண்டிதமணி மு. கதிரேசன் செட்டியார். சமஸ்கிருதத்திலிருந்து தமிழிற்கு மொழிபெயர்த்த நூல்கள் மூலமும் தமிழில் வடசொற்களின் ஆய்விற்காகவும், சைவ சமய இலக்கியத்திற்காகவும், பழந்தமிழ் நூல்களின் உரைக்காகவும் பண்டிதமணி தமிழிலக்கியத்தில் அறியப்படுகிறார். (பார்க்க மு. கதிரேசன் செட்டியார்)

மூல நூல்

மண்ணியல் சிறுதேரின் மூல நூல் 382 சுலோகங்கள் கொண்ட மிருச்சகடிகம் என்னும் சமஸ்கிருத நூல். மிருச்சகடிகத்தை இயற்றியவர் சூத்ரகர் என்னும் வட இந்திய அரசர்.

மிருச்சகடிகத்தை ஆர்தர். டபிள்யூ. ரைடர் என்பவர் 1905-ல் The Little Clay Cart எனும் பெயரில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். சங்கரதாஸ் சுவாமிகள் மிருச்சகடிகத்தை தமிழில் நாடகமாக அரங்கேற்றியுள்ளார்.

நூல் அமைப்பு

மண்ணியல் சிறுதேர்371 ஆசிரியப்பாக்களால் ஆனது. மூல நூல் 382 பாக்களால் ஆனதாக இருந்தாலும் தமிழில் மொழி பெயர்த்தபோது இரண்டு மூன்று சமஸ்கிருத பாக்களை ஒரே ஆசிரியப்பாவில் அமையச் செய்தமையால் இந்த எண்ணிக்கை குறைந்துள்ளது என நூலின் முன்னுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நாடகம் மிக விரிந்த அளவினதாக உள்ளதால் இதைப் படிப்பவர்களுக்கு பயன்படும் வண்ணம் கதைச் சுருக்கமும் நாடகப் பாத்திரங்களின் பெயர்விளக்கமும் இந்நூலில் உள்ளது. மேலும் ஒவ்வொரு பக்கத்திலும் பாடலுக்கான அடிக்குறிப்புகளும் இடம் பெற்றுள்ளன.

இந்நூலுக்கு சுவாமி விபுலானந்த அடிகள் அணிந்துரை வழங்கியுள்ளார்.

பத்து அங்கங்கள்

மண்ணியல் சிறுதேர் பத்து அங்கங்களாக ஆக்கப்பட்டுள்ளது.

  1. அணிகலன் அடைக்கலம்
  2. சூதர் நிலை
  3. கன்னமிடல்
  4. சருவிலகன் பேறு
  5. புயன் மறைப்பு
  6. வண்டி மாற்றம்
  7. ஆரியகனைக் கோடல்
  8. வசந்தசேனை துன்பநிலை
  9. வழக்காராய்ச்சி
  10. தொகுத்துரைத்தல்

நாடகப் பாத்திரங்கள்

மண்ணியல் சிறுதேர் நாடகத்தில் இடம்பெற்றுள்ள கதாபாத்திரங்கள்;

  • சாருதத்தன் - அந்தணன், வணிகன், கதைத் தலைவன்
  • தூதை- சாருதத்தன் மனைவி
  • உரோகசேனன்- சாருதத்தன் மகன், சிறுவன்
  • வசந்தசேனை- கணிகையர் குலப்பெண், கதைத் தலைவி
  • இரதனிகை- வசந்தசேனையின் பணிப்பெண்
  • மதனிகை- வசந்தசேனையின் தோழி
  • மைத்திரேயன்- சாருதத்தனின் நண்பன்
  • பாலகன்- அரசன்
  • சாகரன்- அரசனின் மைத்துனன், சூழ்ச்சிக்காரன்
  • சம்வாகன்- சூதாடி, புத்த துறவியாக மாறியவன்
  • சதவிலகன்- மதனிகையின் காதலன், ஆரியகனின் நண்பன்
  • ஆரியகன்- இடைக்குல இளைஞன், பாலகனைக் கொன்று அரசாட்சி எய்தியவன்
  • வீரகன், சந்தனகன்- அரசனின் காவலர்கள்
  • விடன்- சகாரனின் வேலையாள்
  • சேடன்- சாருதத்தனின் வண்டிக்காரன்
  • நீதிபதி
  • மாதுரன், சூதன்- சூதாடிகள்

கதைச் சுருக்கம்

மண்ணியல் சிறுதேர் நாடகத்தின் கதை உஜ்ஜயினி நகரத்தில் நடக்கிறது. வறுமையில் வாடும் வணிகனான சாருதத்தனிடம் கணிகை வசந்தசேனை காதல் கொண்டிருக்கிறாள். அரசனின் மைத்துனன் சாகரன் ஒருநாள் வசந்தசேனையை தீய நோக்கத்துடன் பின் தொடர்கிறான். அவனுக்கு அஞ்சிய வசந்தசேனை சாருதத்தனின் இல்லத்துள் நுழைகிறாள். தன்னிடம் இருந்த பொன்முடிப்பை சாருதத்தனிடம் அளித்துவிட்டுச் செல்கிறாள்.

சாருதத்தன் இல்லத்திலிருந்து சருவிலகன் எனும் கள்வன் பொன்முடிப்பை திருடிச் செல்கிறான். பொன்முடிப்பு களவு நிகழ்ந்ததையறிந்து சாருதத்தன் வருந்துகிறான். தன் மனைவி தூதை தந்த இரத்தினமாலையை மைத்திரேயன் மூலம் வசந்தசேனைக்குக் கொடுத்தனுப்புகிறான்.

இதற்கிடையில், தன் சேடியான மதனிகையை அடிமையினின்றும் மீட்கும் ஆசையால் தன் பொன்முடிப்பை சாருத்தன் இல்லத்தினின்றும் சருவலகன் திருடி வந்துள்ளான் என்று வசந்தமாலை அறிகிறாள். வசந்தசேனையிடம் பொற்பையை அளித்து, மதனிகையை அழைத்துச் செல்கிறான் சருவிலகன்.

அவன் சென்றதும், மைத்திரேயன் வசந்தசேனையைச் சந்திக்கிறான். சாருதத்தன் சூதில் பொற்பணியை இழந்ததாகக் கூறி அதற்கு மாற்றுப்பொருளாக இரத்தின மாலையைக் கொடுத்துத் திரும்புகிறான் . சாருதத்தன் பெருந்தன்மையை வசந்தசேனை போற்றுகிறாள். காதல் பெருகி, கார்கால இரவில் அவனைக் காணப் புறப்படுகிறாள். சாருதத்தன் இல்லம் அடைந்து பொற்பணியை அவனிடம் காட்டி அங்கேயே தங்கிவிடுகிறாள். அன்றைய இரவு அவர்களுக்கு அமுதாகிறது .

பொழுது விடிகிறது , " யான் விளையாடுதற்கு இம்மண் வண்டி வேண்டாம். பொன் வண்டி வேண்டும்" என்று அழுது கொண்டிருக்கும் சாருதத்தனின் மைந்தன் உரோக சேனனிடம் தன் பொற்பணிகளைக் கழற்றிக் கொடுத்து விட்டுச் சாருதத்தன் தன்னை வரச்சொல்லிக் குறித்திருந்த புட்பகரண்டகம் என்னும் பூஞ்சோலைக்குப் புறப்படச் சித்தமாகிறாள் வசந்தசேனை. சாருதத்தன் வண்டி என்று எண்ணி அப்போது தெருவில் நின்று கொண்டிருந்த சகாரன் வண்டியில் ஏறிவிடுகிறாள். ( சாருதத்தன் வண்டியில் அரசனால் சிறை வைக்கப்பட்டுத் தப்பிய ஆரியகன் யாருக்கும் தெரியாமல் ஏறிச்செல்கிறான் ) சகாரன் தோட்டத்திற்கு வண்டி வந்ததும் வசந்தசேனை பிழை நேர்ந்ததை உணர்கிறாள். வேதனைப்படுகிறாள். சிறிது நேரத்தில் சகாரன் பார்வையில் படுகிறாள். சகாரன் வசந்தசேனையின் காதலை இரக்கிறான். அவளோ மறுக்கிறாள். உடனே, சகாரன் வசந்தசேனையின் கழுத்தை நெரிக்கிறான். அவள் மயங்கி நிலத்தில் வீழ்கிறாள் . சகாரன், அவள் உடலைச் சருகுகளால் மூடி மறைத்துவிட்டு நீதிமன்றம் சென்று சாருதத்தன் மீது கொலைக்குற்றத்தைச் சுமத்துகிறான். வழக்கு நடக்கிறது. சூழ்நிலை சாருதத்தனைக் குற்றவாளியாக்குகிறது. நீதிபதி அரசன் ஆணைக்கிணங்கிச் சாருதத்தனைக் கழுவேற்றும்படிக் கட்டளையிடுகிறான்.

தண்டனை நிறைவேறும் முன் மூர்ச்சையுற்றுக் கிடந்த வசந்தசேனை (அவளால் சூதர்களிடமிருந்து முன்பு காப்பாற்றப்பட்ட) பௌத்தத் துறவி சம்வாகனால் காப்பாற்றப்பட்டு அழைத்து வரப்படுகிறாள். இதற்கிடையில் சாருதத்தன் வண்டியில் ஏறி அவனிடம் அடைக்கலமாகி ஆதரவு பெற்ற ஆரியகன் பாலகனைக் கொன்று அரசன் ஆகிறான். அவன் செங்கோல் முதன்முதலாகச் சாருதத்தனுக்கு அருள் பாலிக்கிறது. சாருதத்தன் காப்பாற்றப்படுகிறான் . வசந்தசேனையிடம் காதற் பிச்சை கேட்ட சகாரன் சாருதத்தனிடம் உயிர்ப்பிச்சை கேட்கிறான், பெறுகிறான். இறுதியில் வசந்தசேனையும் சாருதத்தனும் ஒன்றாகிறார்கள்.

பதிப்பு

மண்ணியல் சிறுதேர் நூலை சிவபுரி சன்மார்க்க சபை 1933-ம் ஆண்டு முதலில் பதிப்பித்தது.

தொடர்பு நூல்

மண்ணியல் சிறுதேர் ஒரு மதிப்பீடு என்னும் நூலை கவிஞர் மீரா இயற்றியுள்ளார். இந்நூலை அன்னம் பதிப்பகம் 2004-ம் ஆண்டு வெளியிட்டுள்ளது.

உசாத்துணை


✅Finalised Page