பீர்முகம்மது அப்பா: Difference between revisions
No edit summary |
|||
Line 9: | Line 9: | ||
== தொன்மம் == | == தொன்மம் == | ||
பீர்முகம்மது அப்பா சப்பாத்திக்கள்ளி சதையை கறியாக்கி சமைத்து சதக்கத்துல்லா | பீர்முகம்மது அப்பா சப்பாத்திக்கள்ளி சதையை கறியாக்கி சமைத்து [[சதக்கத்துல்லா அப்பா]]விற்கு பரிமாறினார். இவர் நிகழ்த்தியதாக சொல்லப்படும் பல்வேறு அற்புதங்கள் செவிவழி கதைகளாக இப்பகுதியில் வலம் வருகின்றன. | ||
== இலக்கிய வாழ்க்கை == | == இலக்கிய வாழ்க்கை == |
Revision as of 09:01, 14 January 2024
பீர்முகம்மது அப்பா (ரலி) (தக்கலை பீர் முகம்மது அப்பா) (பொ.யு 10 அல்லது 13-ஆம் நூற்றாண்டு) தமிழக சூஃபி கவிஞர், சூஃபி ஞானி. 108 சித்தர்களின் வரிசையில் ஒருவர். சமஸ்கிருத மருத்துவ நூல்கள் இவரை சித்த நாகார்ஜுனர் என்று குறிப்பிடுகின்றன. மெய்ஞானப்பாடல்கள் பல பாடினார்.
பிறப்பு, கல்வி
பீர்முகம்மது அப்பா தென்காசியில் கணிகபுரத்தில் சிறுமலுக்கர், ஆமீனா இணையருக்குப் பிறந்தார். பொ.யு 10 அல்லது 13-ம் நூற்றாண்டில் வாழ்ந்திருக்கலாம் என அறிஞர்கள் கருதினர். அவரின் படைப்புக்களை வைத்து அவர் பொ.யு. 17-ம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் எனவும் கருதுகின்றனர். பீர் என்றால் இஸ்லாமிய சூஃபி தத்துவத்தில் ஆன்மிக குரு. நெசவுத்தொழில் செய்து வாழ்ந்து வந்தார். தென்காசி விஸ்வநாதர் கோயில் தர்மகர்த்தவான பெஸ்கட் ராமசாஸ்திரியுடன் பீர்முகம்மது அப்பாவின் தந்தை நட்புடன் இருந்தார். விஸ்வநாதர் கோயில் குளத்தில் சைவர்கள் மட்டுமே குளிக்க அனுமதி இருந்த அந்த காலகட்டத்தில் இஸ்லாமியச்சிறுவன் குளித்ததால் இருவருக்கும் மனக்கசப்பு ஏற்பட்டது. அதனால் குடும்பத்துடன் நெசவாளர்கள் அதிகம் கொண்ட தக்கலை சென்று அங்கு முஹைதீன் பிள்ளை என்பவருடைய வீட்டில் தங்கினர். பீர்முகம்மது தக்கலையில் நெசவுத் தொழில் செய்தார்.
ஆன்மிகம்
பீர்முகம்மது அப்பா தன் வாழ்நாளில் பெரும் பகுதியைக் கேரள மாநிலத்தின் கொச்சிப் பகுதியைச் சார்ந்த மலைப் பகுதிகளில்தான் வாழ்ந்தார். யானை மலைக் காட்டுப் பகுதிகளில் தவம் இருந்தார். அப்போது சூபி கருத்துக்களைக் கொண்ட பல நூல்களை எழுதினார். தென்காசியில் இருந்ததால், அவரிடம் சைவ சமய தாக்கம் இருந்தது. சித்தர்களின் தியானக் கலை/ மூச்சுக்கலை போன்றவற்றை பயின்றார். தமிழ் சித்தர்களின் மூச்சுக் கலையை அடிப்படையாக கொண்ட பல்வேறு வித புலன் செயல்பாடுகள் இவரிடத்திலும் இருந்ததாகக் கருதப்பட்டது. 108 சித்தர்களில் ஒருவராக கருதப்பட்டார்.
தொன்மம்
பீர்முகம்மது அப்பா சப்பாத்திக்கள்ளி சதையை கறியாக்கி சமைத்து சதக்கத்துல்லா அப்பாவிற்கு பரிமாறினார். இவர் நிகழ்த்தியதாக சொல்லப்படும் பல்வேறு அற்புதங்கள் செவிவழி கதைகளாக இப்பகுதியில் வலம் வருகின்றன.
இலக்கிய வாழ்க்கை
பீர்முகம்மது அப்பா திருக்குர் ஆனின் புகழைத் தன் மெய்ஞானக் கவிதைகளில் வெளிப்படுத்தினார். இவருடைய பாடல்கள் எளிமையானவை. அவருடைய பாடல்கள் பலவற்றில் சைவ சமய கூறுகள் உள்ளன. தக்கலையில் வாழ்ந்த நாட்களில் தன் புகழ்பெற்ற நூலான ஞானப் புகழ்ச்சியை இயற்றினார். பீர்முகமது 'ஒலியுல்லா பதினெட்டாயிரம் ஞானப்புகழ்ச்சி' பாடல்களை எழுதினார்.
பாடல் நடை
- ஞானரத்தினக் குறவஞ்சி
ஆதிக்கு முன்னம நாதியு மென்னடி சிங்கி?
அந்தக் கருக்குழி முந்த இருளறை சிங்கா
ஆதியாய் வந்த அரும்பொருளேதடி சிங்கி?
சோதியிலாதி சொரூபா யெழுந்தது சிங்கா
சிறப்பு
ஞானப் புகழ்ச்சி
"தென்காசி நாடு சிறுமலுக்க ரென்னுமவர்
தன்பால னிக்கதையைச் சாற்றினான்"
ஞானக் குறம்
"சிறுமலுக்க ரீன்ற தவச் சிறப்புடைய பீர்முகம்மது"
விவாதம்
பீர் முகம்மது அப்பாவின் பாடல்களை முஸ்லிம்களிடையே உள்ள சில வஹாபியர்கள் தீவிரமாக நிராகரிக்கின்றனர். இப்பாடல்களில் இஸ்லாமிய மரபுக்கு எதிரான சொல்லாடல்கள் இருப்பதாக அவர்கள் கருதினர்.
மறைவு
பீர் முகம்மது அப்பா இறுதி காலத்தில் கன்னியாகுமரி மாவட்டம் தக்கலைப் பகுதிக்கு வந்து சிலகாலம் இருந்து ஞான உபதேசம் செய்து காலமானார்.
நினைவு
பீர் முகம்மது அப்பாவின் சமாதி 'பீர் முகம்மது ஒலியுல்லா தர்கா' தக்கலையில் உள்ளது. நீண்ட காலம் இவர் தங்கியிருந்த கேரளத்தின் ஒரு இடம் பீர்மேடு (இடுக்கி மாவட்டம்) என்று அழைக்கப்பட்டது. பீர் முகம்மது அப்பாவின் ஆண்டு விழா தக்கலை பீர் முகம்மது ஒலியுல்லா தர்காவில் அஞ்சுவண்ணம் பீர்முகமதியா முஸ்லிம் அசோசியேஷன் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும். தர்காவில் நானூறு ஆண்டுகளுக்கும் மேலாக அப்பாவின் ஞானப் புகழ்ச்சிப் பாடல்களின் முற்றோதுதல் நிகழ்வு நடைபெற்றுவருகிறது. அப்பாவின் 686 பாடல்களைப் பலரும் விடிய விடிய ஓதுவர்.
நூல்கள் பட்டியல்
- திருமெய்ஞானச் சர நூல்
- ஞான மலை வளம்
- ஞான ரத்தினக் குறவஞ்சி
- ஞான மணி மாலை
- ஞானப் புகழ்ச்சி
- ஞானப்பால்
- ஞானப்பூட்டு
- ஞானக்குறம்
- ஞான ஆனந்தகளிப்பு
- ஞான நடனம்
- ஞான மூச்சுடர் பதிகங்கள்
- ஞான விகட சமர்த்து
- ஞானத் திறவு கோல்
- ஞான தித்தி
- மஃரிபத்து மாலை
- மெய்ஞான அமிர்தக்கலை
- மிகுராசு வளம்
- பிசுமில்குறம்
- ஈடேற்ற மாலை
- திருநெறி நீதம்
பாடல் இடம்பெற்ற நூல்கள்
- ஞானத்திறவுகோல்
- ஞானசித்தி
- ஞான உலக உருளை
- ஞானக்கண்
- ஞானவிகட சமர்த்து
- ஞான மலைவளம்
- மெய்ஞான களஞ்சியம்
- ரோசு மீசாக்குமாலை
உசாத்துணை
- தமிழில் இஸ்லாமிய மெய்ஞான இலக்கியங்கள்: தொகுப்பாசிரியர்-மணவை முஸ்தபா - மீரா ஃபவுண்டேஷன்
- மத ஒருமைப்பாட்டுக்கு வழிவகுத்த பீர்முஹம்மது அப்பா!: இந்து தமிழ்திசை
- தக்கலை தவஞானி பீர் முகம்மது அப்பா: nilapriyan
இணைப்புகள்
- ஞானக் கடல் தக்கலை அப்பா பீர் முகம்மது - குறவஞ்சிப் பாடல்
- Thannai pilintha thavam - 01: பாடல்
- ஞானரத்தினக் குறவஞ்சி: பீர் முகம்மது அப்பா
- பீர்முகம்மது அப்பா ஆய்வுக்கோவை: முகம்மது பாரூக்: tamildigitallibrary
🖒 First review completed
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.