அளசிங்கப் பெருமாள்: Difference between revisions

From Tamil Wiki
Line 8: Line 8:


====== மூதாதையர் ======
====== மூதாதையர் ======
நரசிம்மாச்சார் கர்நாடகத்தில் மாண்ட்யா (மண்டயம்) ஊரை பூர்விகமாகக் கொண்டவர். தென்கலை வைணவ மரபைச் சேர்ந்த நரசிம்மாச்சாரியார் சிக்மகளூரில் நகராட்சி ஊழியராகப் பணியாற்றினார். 1870ல் நரசிம்மாச்சாரியார் சென்னைக்கு இடம்பெயர்ந்தார். சென்னையில் நரசிம்மாச்சாரியார் சுங்கவரித்துறை ஊழியராக பணியாற்றினார்.  
நரசிம்மாச்சார் கர்நாடகத்தில் மாண்ட்யா (மண்டயம்) ஊரை பூர்விகமாகக் கொண்டவர். மண்டயம் என்பது தென்கலை வைணவப் பிரிவினரில் ஓர் பெருங்குடும்பம் (Clan) ராமானுஜர் தலைக்கோட்டையில் உருவாக்கிய வைணவ இயக்கத்தின் கிளையாக உருவானவர்கள். அக்குடும்பத்தைச் சேர்ந்த ஏராளமான அறிஞர்களும், புகழ்பெற்ற ஆளுமைகளும் தமிழகத்தில் உண்டு.
 
மண்டயம் நரசிம்மாச்சாரியார் சிக்மகளூரில் நகராட்சி ஊழியராகப் பணியாற்றினார். 1870ல் நரசிம்மாச்சாரியார் சென்னைக்கு இடம்பெயர்ந்தார். சென்னையில் நரசிம்மாச்சாரியார் சுங்கவரித்துறை ஊழியராக பணியாற்றினார்.  


பெருந்தேவியின் தாத்தா பிரதான் திருமலா ராவ் பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் கோவை மாவட்டத்தின் ஆட்சியர் பொறுப்பில் இருந்தார். மைசூர் அரசர் உடையார் பிரிட்டிஷாரிடமிருந்து அரசை திரும்பப்பெற காரணமாக இருந்தவர் அவர். பெருந்தேவியின் தந்தை கிருஷ்ணமாச்சாரியார் கன்னட மொழிக்கு நவீன இலக்கணநூலை எழுதியவர். பெருந்தேவியின் தாய்மாமன் எம்.பி.திருமலாச்சாரியார் இந்தியக் கம்யூனிச இயக்கத்தின் தொடக்ககாலத் தலைவர்களில் ஒருவர். பெருந்தேவியின் அண்ணா [[யோகி பார்த்தசாரதி ஐயங்கார்]].   
பெருந்தேவியின் தாத்தா பிரதான் திருமலா ராவ் பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் கோவை மாவட்டத்தின் ஆட்சியர் பொறுப்பில் இருந்தார். மைசூர் அரசர் உடையார் பிரிட்டிஷாரிடமிருந்து அரசை திரும்பப்பெற காரணமாக இருந்தவர் அவர். பெருந்தேவியின் தந்தை கிருஷ்ணமாச்சாரியார் கன்னட மொழிக்கு நவீன இலக்கணநூலை எழுதியவர். பெருந்தேவியின் தாய்மாமன் எம்.பி.திருமலாச்சாரியார் இந்தியக் கம்யூனிச இயக்கத்தின் தொடக்ககாலத் தலைவர்களில் ஒருவர். பெருந்தேவியின் அண்ணா [[யோகி பார்த்தசாரதி ஐயங்கார்]].   

Revision as of 10:04, 16 November 2023

அளசிங்கப்பெருமாள்
அளசிங்கப்பெருமாள்
அளசிங்கா விவேகானந்தருடன்

அளசிங்கப் பெருமாள் ( 1865 – 11 மே 1909 ) (அளசிங்கா, அச்சிங்கா) (M.C.ALASINGA PERUMAL) சுவாமி விவேகானந்தரின் மாணவரான வேதாந்த அறிஞர். விவேகானந்தர் முன்வைத்த நவ வேதாந்த கருத்துக்களை பரப்பும்பொருட்டு நஞ்சுண்டராவுடன் இணைந்து பிரம்மவாதினி என்னும் இதழை தொடங்கி முன்னின்று நடத்தியவர். பி.ஆர்.ராஜம் ஐயருடன் இணைந்து பிரபுத்த பாரத இதழ் உருவாகவும் காரணமாக அமைந்தார்.

அளசிங்கப்பெருமாள் நூல்

பிறப்பு, கல்வி

அளசிங்கப்பெருமாள் விவேகானந்தர் உட்பட நெருக்கமானவர்களால் அச்சிங்கா என அழைக்கப்பட்டார். கர்நாடக மாநிலத்தில், சிக்கமகளூரில் 1865ல் வைணவ அறிஞரான மண்டயம் நரசிம்மாச்சாரியாருக்கும் பெருந்தேவிக்கும் முதல் மகனாகப் பிறந்தார். முழுப்பெயர் மண்டயம் சக்ரவர்த்தி அளசிங்கப்பெருமாள் ஆச்சாரியார். நரசிம்மரின் பெயரான அழகியசிங்கப் பெருமாள் என்பதே மருவி அளசிங்கப்பெருமாள் ஆகியது. அழகியசிங்கப்பெருமாள் சென்னைக்கு அடுத்து ஒரு குன்றில் கோயில்கொண்டவர்.

மூதாதையர்

நரசிம்மாச்சார் கர்நாடகத்தில் மாண்ட்யா (மண்டயம்) ஊரை பூர்விகமாகக் கொண்டவர். மண்டயம் என்பது தென்கலை வைணவப் பிரிவினரில் ஓர் பெருங்குடும்பம் (Clan) ராமானுஜர் தலைக்கோட்டையில் உருவாக்கிய வைணவ இயக்கத்தின் கிளையாக உருவானவர்கள். அக்குடும்பத்தைச் சேர்ந்த ஏராளமான அறிஞர்களும், புகழ்பெற்ற ஆளுமைகளும் தமிழகத்தில் உண்டு.

மண்டயம் நரசிம்மாச்சாரியார் சிக்மகளூரில் நகராட்சி ஊழியராகப் பணியாற்றினார். 1870ல் நரசிம்மாச்சாரியார் சென்னைக்கு இடம்பெயர்ந்தார். சென்னையில் நரசிம்மாச்சாரியார் சுங்கவரித்துறை ஊழியராக பணியாற்றினார்.

பெருந்தேவியின் தாத்தா பிரதான் திருமலா ராவ் பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் கோவை மாவட்டத்தின் ஆட்சியர் பொறுப்பில் இருந்தார். மைசூர் அரசர் உடையார் பிரிட்டிஷாரிடமிருந்து அரசை திரும்பப்பெற காரணமாக இருந்தவர் அவர். பெருந்தேவியின் தந்தை கிருஷ்ணமாச்சாரியார் கன்னட மொழிக்கு நவீன இலக்கணநூலை எழுதியவர். பெருந்தேவியின் தாய்மாமன் எம்.பி.திருமலாச்சாரியார் இந்தியக் கம்யூனிச இயக்கத்தின் தொடக்ககாலத் தலைவர்களில் ஒருவர். பெருந்தேவியின் அண்ணா யோகி பார்த்தசாரதி ஐயங்கார்.

இக்குடும்பத்தைச் சேர்ந்த மண்டயம் சீனிவாசாச்சாரியார் சுப்ரமணிய பாரதிக்கு அணுக்கமானவராக இருந்தவர், இந்தியா இதழின் வெளியீட்டாளர்.

உடன்பிறந்தார்

அளசிங்கப்பெருமாளுக்கு மண்டயம் சக்ரவர்த்தி கிருஷ்ணமாச்சாரியார் என்னும் தம்பியும் சிங்கம்மாள் என்னும் தங்கையும் உண்டு. அவர்கள் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி ஆலயத்தின் அருகே வசித்தனர்.

கல்வி

அளசிங்கப்பெருமாள் சென்னை திருவல்லிக்கேணி ஹிந்து உயர்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வியை முடித்து சென்னை மாகாணக் கல்லூரியில் (பிரசிடென்ஸி காலேஜ்) புகுமுகக் கல்வியை முடித்தார்.சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் சேர்ந்து 1884ல் அறிவியலில் இளங்கலைப்பட்டம்பெற்றார். வில்லியம் மில்லர் அவர்களின் விருப்பத்துக்குரிய மாணவராக இருந்த அளசிங்கப்பெருமாள் மில்லரிடமிருந்து உதவித்தொகை பெற்று கல்வியை முடித்தார். இளங்கலைக்குப்பின் சட்டம் படிக்க சென்னை சட்டக்கல்லூரியில் சேர்ந்தாலும் நிதிச்சுமையால் படிப்பை முடிக்க முடியவில்லை.

விவேகானந்தரும் மாணவர்களும் 1897 (நின்றிருப்பதில் முதலாவதாக அளசிங்கப்பெருமாள்)

தனிவாழ்க்கை

அளசிங்கா விவேகானந்தரைச் சந்தித்த இல்லம்

அளசிங்கப்பெருமாள் கர்நாடகத்தில் மைசூரைச் சேர்ந்த ரங்கம்மாவை மாணவப்பருவத்தில் 1880ல் புகுமுக வகுப்பில் பயிலும்போதே மணந்தார். ரங்கம்மா 1905ல் மறைந்தார். அளசிங்கப்பெருமாள் - ரங்கம்மாவுக்கு நான்கு குழந்தைகள்.

அளசிங்கப்பெருமாள் விவேகானந்தரின் நவவேதாந்தக் கருத்துக்களில் ஈடுபாடு கொண்டவர். விவேகானந்தரின் சமூகசீர்திருத்தக் கருத்துக்களையும் ஏற்றுக்கொண்டவர். ஆனால் அவர் இறுதிவரை நெற்றியில் நாமம் தரித்துக்கொள்ளும் மரபான தென்கலை வைணவராகவே நீடித்தார். தன் சாதி மற்றும் சம்பிரதாயத்துக்குரிய ஆசாரங்களை அவர் கடைப்பிடித்தார். விவேகானந்தர் தன் கடிதமொன்றில் அன்புகொண்ட கிண்டலுடன் இவ்வாறு குறிப்பிடுகிறார்.

"அளசிங்கா அவசரமாக பயணசீட்டு வாங்கிவிட்டு வெறுங்காலுடன் கப்பலில் ஏறினார். அவர் அவ்வப்போது காலணிகள் அணிவதாக கூறுகிறார். ராமானுஜப் பிரிவைச் சேர்ந்த மைசூர் பிராமணரான பிரம்மவாதியின் ஆசிரியர் அளசிங்கா ரசத்தில் நாட்டம் கொண்டவர். மொட்டையடித்த தலை மற்றும் நெற்றியில் தென்கலை பிரிவின் ஜாதி முத்திரையுடன், மிகுந்த கவனத்துடன் வந்தார் வந்தார். பயணத்திற்கான ஏற்பாடு, இரண்டு சிறிய மூட்டைகள்.அதில் ஒன்றில் வறுத்த அரிசி, மற்றொன்றில் அரிசிப்பொரி மற்றும் வறுத்த பட்டாணி.இலங்கைக்கான கடற்பயணத்தின் போது இவற்றை நம்பி வாழ வேண்டும் என்பது அவரது எண்ணம்.அதனால் தனது சாதி அப்படியே இருக்க வேண்டும் என நினைத்தார்.. எவ்வாறாயினும், நம் அளசிங்கர் போன்ற மனிதர்களை இந்த உலகில் ஒருவர் காண்பது அரிது. தன்னலமற்ற, மிகவும் கடின உழைப்பாளி. தனது குருவுக்கு அர்ப்பணிப்புடன் இருப்பவர், அத்தகைய கீழ்ப்படிதலுள்ள சீடர் பூமியில் மிகவும் அரிது..." (விவேகானந்தர் கடிதங்கள், வாழ்க்கை, தொகுதி I. பக். 333 -34)

அளசிங்கரின் தம்பி எம்.சி.கிருஷ்ணமாச்சாரும் விவேகானந்தரின் மாணவர். அவரை விவேகானந்தர் சிங்கா என அழைத்தார்.

கல்விப்பணி

அளசிங்கப்பெருமாள் கல்லூரிப்படிப்புக்கு பின் 1885ல் கும்பகோணம் டவுன் உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணிக்குச் சேர்ந்தார். 1887ல் சிதம்பரம் பச்சையப்பா உயர்நிலைப்பள்ளியில் அறிவியல் ஆசிரியராகப் பணிக்குச் சேர்ந்தார். 1889ல் நரசிம்மாச்சாரியார் மறைந்தார். அளசிங்கப்பெருமாள் சென்னைக்குத் திரும்பவேண்டியிருந்தது. பச்சையப்பா நிர்வாகம் அவரை சென்னை பச்சையப்பா உயர்நிலைப்பள்ளிக்கு அவரை இடமாற்றம் செய்து உதவினர். 1892ல் அளசிங்கப்பெருமாள் பச்சையப்பா உயர்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியராக பணியேற்றார். 1909 ல் அளசிங்கப்பெருமாள் சென்னை பச்சையப்பா கல்லூரியின் இயற்பியல் பேராசிரியராக பணியேற்றார். ஓராண்டு அப்பணியில் இருந்தபோது மறைந்தார்.

ஆன்மிகம்

அளசிங்கப்பெருமாள் சென்னையில் பிரம்மஞானசங்கம் நடத்திய ஆன்மிக நிகழ்வுகளில் ஈடுபாடு கொண்டிருந்தார்.

விவேகானந்தருடன்

வில்லியம் மில்லரிடமிருந்து ஜான் ஹென்றி பரோஸ் ஒருங்கிணைப்பில் அமெரிக்காவில் சிகாகோ நகரில் கூடவிருந்த அனைத்துமத மாநாடு பற்றி அளசிங்கப்பெருமாள் அறிந்தார். அதில் பிரம்மசமாஜம், ஆரியசமாஜம் சார்பில் பலர் கலந்துகொண்டாலும் இந்துமதம் சார்பில் எவரும் கலந்துகொள்ளவில்லை என்று கண்ட அளசிங்கர் தன் தாய்மாமன் யோகி பார்த்தசாரதி ஐயங்கார் உட்பட பலரை அதற்கு அனுப்ப முயன்றார்

1892 டிசம்பர் இறுதியில் தன் இந்தியப்பயணத்தின் இறுதியாக கன்யாகுமரி சென்றுவிட்டு சுவாமி விவேகானந்தர் சென்னைக்கு வந்தார். அளசிங்கப்பெருமாளின் சகோதரர் கிருஷ்ணமாச்சாரியார் விவேகானந்தர் சென்னைக்கு வந்து மன்மதநாத பட்டாச்சாரியா என்பவரின் இல்லத்தில் தங்கியிருக்கும் செய்தியை அளசிங்கப்பெருமாளுக்குச் சொன்னார். சென்னை சாந்தோம் சாலையில் ரஹமத் பாக் என்னும் பங்களாவில் அளசிங்கப்பெருமாள் விவேகானந்தரைச் சந்தித்தார். விவேகானந்தரின் மாணவராக ஆனார். விவேகானந்தர் அமெரிக்காவில் நிகழவிருந்த அனைத்துமத மாநாட்டுக்குச் செல்லவேண்டும் என அவரை வலியுறுத்தினார். விவேகானந்தர் அமெரிக்கா செல்ல ஒப்புக்கொண்டார்.

அளசிங்கா, மனைவி மற்றும் முதல்குழந்தையுடன்

விவேகானந்தரை அமெரிக்கா அனுப்புவதற்கான நிதி மற்றும் ஏற்பாடுகளைச் செய்வதற்காக ஒரு குழு அளசிங்கப்பெருமாளால் உருவாக்கப்பட்டது. அவர் அதன் தலைமைப்பொறுப்பை வகித்தார். அளசிங்கப்பெருமாள் வீடுவீடாகச் சென்று நிதி திரட்டி ரூ 500 சேமித்தார். விவேகானந்தருக்கு அமெரிக்கா செல்ல நிதியுதவி செய்வதாகச் சொல்லியிருந்த ராமநாதபுரம் சேதுபதி பின்வாங்கவே விவேகானந்தர் அமெரிக்கா செல்லமுடியாத நிலை உருவானது. திரட்டப்பட்ட நிதி திரும்ப அளிக்கப்பட்டது. விவேகானந்தர் ஹைதராபாத் சென்றார், அங்கே அவருக்கு ஆதரவு கிடைத்தது. ஹைதராபாத் நைஜாம் ரூ 1000 அளிப்பதாக ஒப்புக்கொண்டார். விவேகானந்தர் அமெரிக்கா செல்லும் திட்டம் மீண்டும் உயிர்பெற்றது. அளசிங்கப்பெருமாளும் தோழர்களும் மீண்டும் நிதிதிரட்டி ரூ 4000 சேமித்தனர். அந்த தொகையுடன் விவேகானந்தர் மும்பையில் இருந்து அமெரிக்காவுக்குக் கப்பலில் பயணமானார். அவரை வழியனுப்பி வைக்கும்பொருட்டு அளசிங்கப்பெருமாள் விவேகானந்தரின் மாணவர் ஜக்மோகனுடன் மும்பை சென்றார்.

அமெரிக்கா சென்ற விவேகானந்தர் அனைத்துமத மாநாடு ஒத்திப்போடப்பட்டிருப்பதாகவும், 1893 செப்டெம்பரில்தான் அம்மாநாடு கூடும் என்றும் அறிந்தார். அவர் அங்கே தங்க கடும் நிதிநெருக்கடி உருவானது. அங்கு தங்குவதற்குரிய நிதி கோரி விவேகானந்தர் அளசிங்கப்பெருமாளுக்கு எழுதினார். அளசிங்கப்பெருமாள் சென்னையில் விவேகானந்தருக்காக நிதி திரட்டினார். ரூ 1000 கடனாகப் பெற்றார். தன் மனைவியின் நகைகளையும் விற்றார். விவேகானந்தருக்கு தந்தி வழியாக நிதி அனுப்பி வைத்தார்.

விவேகானந்தரின் அனைத்துமத மாநாட்டு உரை அமெரிக்காவில் புகழ்பெற்ற போதிலும் இந்திய ஊடகங்கள் அச்செய்தியை பொருட்படுத்தவில்லை. ஆகவே அளசிங்கப்பெருமாள் சென்னை பச்சையப்பா கூடத்தில் 28 ஏப்ரல் 1894ல் ஒரு மாநாட்டை கூட்டினார். அதில் ராஜா சர் சவலை ராமசாமி முதலியார், எஸ்.சுப்ரமணிய ஐயர், திவான் பகதூர் ரகுநாத ராவ் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்து மதத்தின் பெருமையை உலகறியச் செய்தமைக்காக விவேகானந்தருக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அவருக்கு அனுப்பப்பட்டது. அதன் பின் உள்ளூர் இதழ்கள் அச்செய்தியை பெரியதாக வெளியிட்டன. அதன்பின் கும்பகோணம், பெங்களூர், மைசூர் ஆகிய ஊர்களில் விவேகானந்தருக்கு நன்றி தெரிவிக்கும் மாநாடுகளை அளசிங்கப்பெருமாள் நடத்தினார்.

விவேகானந்தர் 1897ல் இந்தியா திரும்பியபோது துறைமுகத்தில் அவருக்கு மிகச்சிறப்பான ஒரு வரவேற்பை அளசிங்கப்பெருமாள் ஒருங்கமைத்தார். விவேகானந்தருடன் ஆலம்பஜாருக்கும் பின் டார்ஜிலிங்க்கும் சென்றார். அங்கே விவேகானந்தர் மடங்கள் அமைக்க உதவி செய்தார்.

விவேகானந்தரின் இரண்டாவது அமெரிக்கப் பயணத்தின் முடிவில் அவர் திரும்பிவந்தபோது சென்னை துறைமுகத்தில் கப்பலில் ஏறி விவேகானந்தருடன் கொழும்பு சென்றார். செல்லும் வழியில் மயிலாப்பூர் ராமகிருஷ்ணமடம் அமைப்பது உட்பட திட்டங்களைப் பற்றி விவாதித்தார். 1897 ல் மயிலாப்பூரில் 'ராமகிருஷ்ண மடம் மெட்றாஸ்' என்ற பேரில் மடம் நிறுவப்பட்டது.

விவேகானந்தர் 4 ஜூலை1902 ல் மறைந்தார். அளசிங்கப்பெருமாள் சென்னையில் அவருக்கு ஒரு அஞ்சலிக்கூட்டத்தை ஏற்பாடு செய்தார். ஆனால் விவேகானந்தரின் இறப்பு அளசிங்கப்பெருமாளையும் உளச்சோர்வடையச் செய்தது. விரைவிலேயே அவரும் நோயுற்றார்.

அமைப்புப்பணிகள்

1893ல் சென்னை கிறிஸ்தவக் கல்லூரி மாணவரான ராமானுஜம் செட்டியார் என்பவர் கிறிஸ்தவராக மதம் மாற்றம் செய்யப்பட்டார். இது அக்காலத்தில் பெரிய விவாதத்தை கிளப்பியது. மதமாற்றம் நிகழ ஒய்.எம்.சி.ஏ ( Young Men's Christian Association) என்னும் அமைப்பு பணியாற்றியது. அதற்கு எதிராக அளசிங்கப்பெருமாள் Young Men's Hindu Association என்னும் அமைப்பை 5 அக்டோபர் 1894ல் தொடங்கினார். ராமானுஜம் செட்டியார் பின்னர் திரும்ப இந்துவாக மாறினார். ராமகிருஷ்ணானந்தா உட்பட பல இந்து துறவிகள் இவ்வமைப்பில் உரையாற்றினர். அளசிங்கப்பெருமாளின் இறப்புக்குப் பின் இந்த அமைப்பு செயலிழந்தது.

இதழியல்

அளசிங்கப்பெருமாள் சென்னையில் திருவல்லிக்கேணி இலக்கியக் கழகம் (Triplicane Literary Association) நடத்திய நிகழ்வுகளில் பங்குகொண்டார்.

அளசிங்கப்பெருமாள் சுவாமி விவேகானந்தரின் நவ வேதாந்தத்தை பரப்பும்பொருட்டு டாக்டர் எம்.சி.நஞ்சுண்ட ராவ், வெங்கரங்க ராவ் ஆகியோருடன் இணைந்து பிரம்மவாதின் என்னும் இதழை தொடங்கினார். முதல் இலக்கம் 14 செப்டெம்பர் 1895ல் வெளிவந்தது. பிரம்மவாதின் அச்சகத்தில் இதழ் அச்சாகியது. அளசிங்கப்பெருமாளின் மரணத்துக்குப்பின் அவ்வப்போதாக வெளிவந்த அவ்விதழ் மே- ஜூன் 1914 இலக்கத்துடன் நின்றுவிட்டது. அவ்விதழுக்குப்பின் வேதாந்த கேசரி என்னும் இதழ் தொடங்கப்பட்டு அவ்விதழின் நீட்சியாக வெளிவந்தது. சுவாமி விவேகானந்தர் பிரம்மவாதின் இதழில் எழுதியுள்ளார். அதன் முதல் இதழில் விவேகானந்தர் எழுதிய The Song of the Sanyasin வெளியாகியது.

பிரம்மவாதின் இதழ் வெளிவந்துகொண்டிருந்தபோது இளைஞர்களுக்கான ஓர் இதழ் தொடங்கப்படவேண்டும் என்று விவேகானந்தர் விரும்பியமையால் பிரபுத்தபாரதம் என்னும் இதழ் பி.ஆர். ராஜம் ஐயர் முதலியோரால் தொடங்கப்பட்டது. அளசிங்கப்பெருமாள் அவர்களுக்கு உதவிசெய்தார்.

மறைவு

அளசிங்கப்பெருமாள் தாடையில் புற்றுநோயால் அவதிப்பட்டார். 1மே 1909 ல் சென்னையில் மறைந்தார்.

வாழ்க்கை வரலாறுகள்

  • Alasingha Perumal: A Rare Disciple of Swami Vivekananda -Swami Tathagatananda
  • அளசிங்கப் பெருமாள் சுவாமி விவேகானந்தரின் அருமைச் சீடர்; ஸ்ரீராமகிருஷ்ண மடம், சென்னை

மதிப்பீடு

சுவாமி விவேகானந்தரின் தொடக்ககால இல்லறச்சீடர்களில் முதன்மையானவராக அளசிங்கப்பெருமாள் மதிப்பிடப்படுகிறார். விவேகானந்தர் அமெரிக்கா செல்லவும், உலகப்புகழ்பெறவும் காரணமாக அமைந்தவர். தமிழகத்தில் விவேகானந்தரின் பணிகள் வேரூன்ற களம் அமைத்தவர். நவவேதாந்தக் கருத்துக்கள் தமிழகத்தில் பரவ வழியமைத்த பிரம்மவாதின் இதழின் ஆசிரியர். தமிழகத்தில் மதச்சீர்திருத்தம், சமூகசீர்திருத்தம் ஆகியவை நிகழ்வதற்கான காரணிகளில் ஒருவர்.

உசாத்துணை