கழார்க் கீரன் எயிற்றியார்: Difference between revisions
Tamizhkalai (talk | contribs) |
Logamadevi (talk | contribs) No edit summary |
||
Line 150: | Line 150: | ||
*மகடூ முன்னிலை, பெண்பாற் புலவர் களஞ்சியம், டாக்டர் தாயம்மாள் அறவாணன், பச்சை பசேல் பதிப்பகம் | *மகடூ முன்னிலை, பெண்பாற் புலவர் களஞ்சியம், டாக்டர் தாயம்மாள் அறவாணன், பச்சை பசேல் பதிப்பகம் | ||
*[https://www.tamilvu.org/ta/library-libcontnt-273141 எட்டுத்தொகை, தமிழ் இணையக் கல்விக்கழகம்] | *[https://www.tamilvu.org/ta/library-libcontnt-273141 எட்டுத்தொகை, தமிழ் இணையக் கல்விக்கழகம்] | ||
{{ | {{Finalised}} | ||
[[Category:புலவர்கள்]] | [[Category:புலவர்கள்]] | ||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] |
Latest revision as of 10:26, 4 November 2023
கழார்க் கீரன் எயிற்றியார், சங்ககாலப் பெண்பாற் புலவர்களில் ஒருவர். இவரது 8 பாடல்கள் சங்கத்தொகை நூல்களில் இடம் பெற்றுள்ளன.
பெயர்க் காரணம்
கழார் என்பது காவிரிக் கரையில் இருந்த சங்ககால ஊர். கழார்க் கீரன் எயிற்றியார் அந்த ஊரை சேர்ந்தவராக இருக்கலாம். கழாரில் வாழ்ந்த மற்றொரு புலவர் கழார்க் கீரன் எயிற்றியனார்.
இலக்கிய வாழ்க்கை
கழார்க் கீரன் எயிற்றியார் இயற்றிய எட்டு பாடல்கள் இடம் பெற்றுள்ள சங்கத் தொகை நூல்கள்:
- அகநானூறு- 163, 217, 235, 294
- குறுந்தொகை- 35, 261
- நற்றிணை- 281, 312
பாடல்கள் மூலம் அறியவரும் செய்திகள்
- தலைவி தன்னை வருத்தும் வாடைக் காற்றுக்கு தன் மேல் இரங்கும்படியும், தலைவன் இருக்குமிடம் சென்று வீசும்படியும் அறிவுறை கூறுகிறாள் (அகம் 163)
- அற்சிரப் பருவம் (பனி பருவம்) ஏற்படுத்தும் மாற்றங்கள்: பூளைப் பூ போல, கரும்புப் பூ வெள்ளை நிறத்தில் பூத்து, வயலில் வலிமையான காம்பில் வாடைக்காற்றில் அசைந்தாடுகிறது. பகன்றை பச்சை இலைகளுடன் தோலில் பதித்த வட்டக் கண்ணாடி போல் வெள்ளை நிறத்தில் மலர்திருக்கிறது. அவரைப்பூ கோழிக்கால் போன்ற கொழுத்த இலைகளோடு மொட்டு விட்டுப் பூத்திருக்கிறது. உதிரும் பூவாகிய தோன்றிப்பூ மலர்கிறது. குருகுப் பறவைகள் குளிரில் குரல் எழுப்புகின்றன. கணவனைப் பிரிந்து வாழும் மகளிர் தம் அணிகலன்களைக் கழற்றி வைத்துவிட்டுக் குளிரில் நடுங்குகின்றனர் அகம் (217).
- கார் காலத்தில் உயர்ந்த அழகிய இதழினையுடைய செங்காந்தள், சுடரினைக் கொண்ட அகல்போலச் சுருங்கிய அரும்பு விரிய, சுரிந்த அரும்பினையுடைய முசுண்டையின் கட்டவிழ்ந்த பெரிய பூ, வானை அழகுறுத்தும் மீன்களைப்போலப் பசிய புதர்களை அழகுபடுத்துகிரது. நண்டு தனது மண் வளையுள் சென்றுவிடுகிறது. அகன்ற வயலில் கிளைத்து விரிந்த கரும்பினது திரண்ட காம்பினையுடைய பெரிய பூ, மழையில் நனைந்த நாரையைப்போல ஈரம் கொண்டு வளைந்திருக்கிறது. பனியுடன்கூடிய வாடைக் காற்றும், மாலைபொழுதும் தலைவியை வருத்துகின்றன, நெற்றியில் பசலை படர்கிறது.(அகம் 234)
- முன் பனிக்காலத்தின் நள்ளிரவில் மழை நின்றபின் பனித் துளிகள், பூக்களின் உள்ளே நிறைவது காதலரைப் பிரிந்துள்ள மகளிரது நீர் ஒழுகும் கண்களைப்போல உள்ளது. புதர்களில் படரும், பஞ்சு போன்ற தலையினையுடைய ஈங்கைப்பூவின் இதழ்கள் நெய்யில் தோய்த்தெடுத்தாற்போல் நீரால் நனைந்தன. அவரையின் அழகிய பூக்கள் பூத்தன, வண்டுகள் கிளைகளில் அசையாமல் நிற்கின்றன (அகம் 294)
- நாழிகைக் கணக்கர் இரவில் காலக் கணக்கை ஆராய்வதைப்போல கார் காலத்தின் இரவில் எருமை ஐயென்று ஒலிக்கும் அச்சம் உண்டாகின்ற காலத்திலும் தலைவியின் கண்கள் தூங்காமலாயின (குறு 261)
- சோழர்களின் கழாஅர் என்னும் இடத்தில் பலியுணவை உண்ணும் காக்கைகள் புதிய ஊனொடு பலிச்சோறு கிடைக்கும் என எண்ணி உண்டுகொண்டிருந்த சோற்றைக் கீழே போடுகின்றன. (நற்றிணை 281)
- பார்வை வேட்டுவன் பழக்கி வைத்திருக்கும் தன் குருகின் கால்கட்டை அவிழ்த்துவிட்டதும் அது பறந்து சென்று பனி பொழியும் காலை வேளையில் முள் இருக்கும் இண்டம்புதரில் அதன் அழகிய இலைகள் தன் சிறகுகளை வருடிக்கொடுக்க அமரும் காலைக்குளிரிலும் தலைவி நடுங்குபவள். நீயோ பொருளீட்ட உன்னோடு வரவில்லை என்று அவளை நொந்துகொள்கிறாய் என தலைவன் தன் நெஞ்சிடம் கூறுகிறான். (நற்றிணை 312)
பாடல் நடை
அகநானூறு 163
விண் அதிர்பு தலைஇய, விரவு மலர் குழைய,
தண் மழை பொழிந்த தாழ்பெயற் கடை நாள்,
எமியம் ஆக, துனி உளம் கூர,
சென்றோர் உள்ளிச் சில் வளை நெகிழ,
பெரு நசை உள்ளமொடு வருநசை நோக்கி
விளியும் எவ்வமொடு, 'அளியள்' என்னாது
களிறு உயிர்த்தன்ன கண் அழி துவலை
முளரி கரியும் முன்பனிப் பானாள்,
குன்று நெகிழ்ப்பு அன்ன குளிர் கொள் வாடை!
எனக்கே வந்தனை போறி! புனற் கால்
அயிர் இடு குப்பையின் நெஞ்சு நெகிழ்ந்து அவிழ,
கொடியோர் சென்ற தேஎத்து, மடியாது
இனையை ஆகிச் செல்மதி;
வினை விதுப்புறுநர் உள்ளலும் உண்டே!
எளிய பொருள்;
அகநானூறு 217
பெய்து புறந்தந்த பொங்கல் வெண் மழை,
எஃகு உறு பஞ்சித் துய்ப் பட்டன்ன,
துவலை தூவல் கழிய, அகல் வயல்
நீடு கழைக் கரும்பின் கணைக் கால் வான் பூக்
கோடைப் பூளையின் வாடையொடு துயல்வர,
பாசிலை பொதுளிய புதல்தொறும் பகன்றை
நீல் உண் பச்சை நிறம் மறைத்து அடைச்சிய
தோல் எறி பாண்டிலின் வாலிய மலர,
கோழிலை அவரைக் கொழு முகை அவிழ,
ஊழ் உறு தோன்றி ஒண் பூத் தளை விட,
புலம்தொறும் குருகினம் நரல, கல்லென
அகன்று உறை மகளிர் அணி துறந்து நடுங்க,
அற்சிரம் வந்தன்று; அமைந்தன்று இது என,
எப் பொருள் பெறினும், பிரியன்மினோ' எனச்
செப்புவல் வாழியோ, துணையுடையீர்க்கே;
நல்காக் காதலர் நலன் உண்டு துறந்த
பாழ் படு மேனி நோக்கி, நோய் பொர,
இணர் இறுபு உடையும் நெஞ்சமொடு, புணர்வு வேட்டு,
எயிறு தீப் பிறப்பத் திருகி,
நடுங்குதும் பிரியின் யாம் கடு பனி உழந்தே.
அகநானூறு 235
அம்ம வாழி, தோழி! பொருள் புரிந்து
உள்ளார்கொல்லோ, காதலர்? உள்ளியும்,
சிறந்த செய்தியின் மறந்தனர்கொல்லோ?
பயன் நிலம் குழைய வீசி, பெயல் முனிந்து,
விண்டு முன்னிய கொண்டல் மா மழை
மங்குல் அற்கமொடு பொங்குபு துளிப்ப,
வாடையொடு நிவந்த ஆய் இதழ்த் தோன்றி
சுடர் கொள் அகலின் சுருங்கு பிணி அவிழ,
சுரி முகிழ் முசுண்டைப் பொதி அவிழ் வான் பூ
விசும்பு அணி மீனின் பசும் புதல் அணிய,
களவன் மண் அளைச் செறிய, அகல் வயல்
கிளை விரி கரும்பின் கணைக்கால் வான் பூ
மாரி அம் குருகின் ஈரிய குரங்க,
நனி கடுஞ் சிவப்பொடு நாமம் தோற்றி,
பனி கடி கொண்ட பண்பு இல் வாடை
மருளின் மாலையொடு அருள் இன்றி நலிய,
நுதல் இறைகொண்ட அயல் அறி பசலையொடு
தொல் நலம் சிதையச் சாஅய்,
என்னள்கொல் அளியள்?' என்னாதோரே.
அகநானூறு 294
மங்குல் மா மழை விண் அதிர்பு முழங்கி,
துள்ளுப் பெயல் கழிந்த பின்றை, புகைஉறப்
புள்ளி நுண் துவலை பூவகம் நிறைய,
காதலர்ப் பிரிந்த கையறு மகளிர்
நீர் வார் கண்ணின் கருவிளை மலர,
துய்த் தலைப் பூவின் புதல் இவர் ஈங்கை
நெய்த் தோய்த்தன்ன நீர் நனை அம் தளிர்
இரு வகிர் ஈருளின் ஈரிய துயல்வர,
அவரைப் பைம் பூப் பயில, அகல் வயல்
கதிர் வார் காய் நெல் கட்கு இனிது இறைஞ்ச,
சிதர் சினை தூங்கும் அற்சிர அரை நாள்,
காய் சின வேந்தன் பாசறை நீடி,
நம் நோய் அறியா அறனிலாளர்
இந் நிலை களைய வருகுவர்கொல்?' என
ஆனாது எறிதரும் வாடையொடு
நோனேன் தோழி! என் தனிமையானே.
குறந்தொகை 35
நாணில மன்றவெங் கண்ணே நாணேர்பு
சினைப்பசும் பாம்பின் சூன்முதிர்ப் பன்ன
கனைத்த கரும்பின் கூம்புபொதி யவிழ
நுண்ணுறை யழிதுளி தலைஇய
தண்வரல் வாடையும் பிரிந்திசினோர்க் கழலே.
குறுந்தொகை 261
பழமழை பொழிந்தெனப் பதனழிந் துருகிய
சிதட்டுக்கா யெண்ணின் சில்பெயற் கடைநாள்
சேற்றுநிலை முனைஇய செங்கட் காரான்
நள்ளென் யாமத் தையெனக் கரையும்
அஞ்சுவரு பொழுதி னானு மென்கண்
துஞ்சா வாழி தோழி காவலர்
கணக்காய் வகையின் வருந்தியென்
நெஞ்சுபுண் ணுற்ற விழுமத் தானே.
நற்றிணை 281
மாசு இல் மரத்த பலி உண் காக்கை
வளி பொரு நெடுஞ் சினை தளியொடு தூங்கி,
வெல் போர்ச் சோழர் கழாஅர்க் கொள்ளும்
நல் வகை மிகு பலிக் கொடையோடு உகுக்கும்
அடங்காச் சொன்றி, அம் பல் யாணர்
விடக்குடைப் பெருஞ் சோறு, உள்ளுவன இருப்ப,
மழை அமைந்து உற்ற மால் இருள் நடு நாள்,
தாம் நம் உழையராகவும், நாம் நம்
பனிக் கடுமையின், நனி பெரிது அழுங்கி,
துஞ்சாம் ஆகலும் அறிவோர்1
அன்பிலர்- தோழி!- நம் காதலோரே.
நற்றிணை 312
நோகோ யானே, நோம் என் நெஞ்சே-
பனிப் புதல் ஈங்கை அம் குழை வருட,
சிறை குவிந்திருந்த பைதல் வெண் குருகு,
பார்வை வேட்டுவன், காழ் களைந்தருள,
மாரி நின்ற, மையல் அற்சிரம்-
யாம் தன் உழையம் ஆகவும், தானே,
எதிர்த்த தித்தி முற்றா முலையள்,
கோடைத் திங்களும் பனிப்போள்-
வாடைப் பெரும் பனிக்கு என்னள்கொல்?
உசாத்துணை
- மகடூ முன்னிலை, பெண்பாற் புலவர் களஞ்சியம், டாக்டர் தாயம்மாள் அறவாணன், பச்சை பசேல் பதிப்பகம்
- எட்டுத்தொகை, தமிழ் இணையக் கல்விக்கழகம்
✅Finalised Page