under review

ஏ.வி. மெய்யப்ப செட்டியார்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
Line 64: Line 64:
*[https://www.youtube.com/watch?v=z8mCxHCMsAs ஏவிஎம் | ஆவிச்சி மெய்யப்பன் வரலாறு | பாகம் - 1 | AVM | AVICHI MEIYAPPA CHETTIAR HISTORY | PART - 1]
*[https://www.youtube.com/watch?v=z8mCxHCMsAs ஏவிஎம் | ஆவிச்சி மெய்யப்பன் வரலாறு | பாகம் - 1 | AVM | AVICHI MEIYAPPA CHETTIAR HISTORY | PART - 1]
*[https://www.youtube.com/watch?v=Ru9EslQRhfI ஏவிஎம் | ஆவிச்சி மெய்யப்பன் வரலாறு | பாகம் - 2 | AVM | AVICHI MEIYAPPA CHETTIAR HISTORY | PART - 2]
*[https://www.youtube.com/watch?v=Ru9EslQRhfI ஏவிஎம் | ஆவிச்சி மெய்யப்பன் வரலாறு | பாகம் - 2 | AVM | AVICHI MEIYAPPA CHETTIAR HISTORY | PART - 2]
{{Second review completed}}
{{Finalised}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 19:27, 6 August 2025

ஏ.வி. மெய்யப்ப செட்டியார்
ஏ.வி. மெய்யப்ப செட்டியார்
ஏ.வி.எம்.

ஏ.வி. மெய்யப்ப செட்டியார் (ஆவிச்சி மெய்யப்பன்) (ஏ.வி.எம்) (அப்பச்சி) (ஜூலை 28, 1907 - ஆகஸ்ட் 12, 1979) இந்திய திரைப்படத் தயாரிப்பாளர், இயக்குனர். ஏ.வி.எம் புரொடக்ஷன்ஸின் நிறுவனர். தமிழ் திரைப்படத்துறையின் முன்னோடி. ஏவி.எம் அறக்கட்டளை, கல்விக்குழுமத்தின் நிறுவனர்.

வாழ்க்கைக் குறிப்பு

ஏ.வி. மெய்யப்ப செட்டியார் தமிழ்நாட்டின் காரைக்குடியில் ஆவிச்சி செட்டியார், இலக்குமி ஆச்சி இணையருக்கு ஜூலை 28, 1907-ல் பிறந்தார். ஆவிச்சி செட்டியார் திரைத்துறை தொடர்பான பொருட்களை (கிராமபோன் இசைத்தட்டுக்கள்) விற்பனை செய்தார். இவரது குடும்பத்தினர் வாணிபம் செய்தனர். மெய்யப்பன் எட்டாவது படிக்கும்போதே தந்தையுடன் வியாபாரத்தில் ஈடுபட்டார். புதுமையாக செய்ய வேண்டும் என்ற முனைப்புடன் மெய்யப்பன் இருந்தார்.

முன்னோர்

ஏ.வி. மெய்யப்ப செட்டியார் நாட்டுக்கோட்டை நகரத்தார் சமூகத்தைச் சேர்ந்தவர். அந்தக் காலத்தில் நகரத்தாரின் தொழில் பெரும்பாலும் வட்டிக்குக் கடன் தரும் லேவாதேவி தான். இவர்கள் மலேயா, பர்மா, இலங்கை ஆகிய கிழக்காசிய நாடுகளில் பரந்து வாழ்ந்தவர்கள். இதனால் வெளிநாட்டுப் பணம் அதிகமாகப் புழங்கியது. காரைக்குடியில் செல்வந்தர்களாக வாழ்ந்தனர். கையில் பணம், கலைகளில் ஈடுபாடு, வேலையாட்கள் ஆகியவை இவர்களுக்கு இன்றியமையாதவை.

நகரத்தாரின் பல வழக்கங்களைத் தந்தை ஆவிச்சி செட்டியார் உடைத்தார். வட்டித்தொழில் செய்யவில்லை. அக்ரகார வீடுகள் பணத்தேவையின் பொருட்டு விற்பனைக்கு வந்தாலும் வாங்கக் கூடாது என்பதை நகரத்தார் வழக்கமாகக் கொண்டிருந்தனர். அதை ஆவிச்சி செட்டியார் மீறினார். அதை வாங்கி ஏ.வி அண்ட் சன்ஸ் என்ற கடையைத் தொடங்கினார். ராஜாஜி கெஸ்ட் ஹவுஸ், லட்சுமி பஜார் ஆகியவற்றை உருவாக்கினார்.

தனிவாழ்க்கை

மனைவிகள் அலமேலு மெய்யப்பன், ராஜேஸ்வரி மெய்யப்பன். குழந்தைகள் ஏ.வி.எம்.பழனியப்பன், லக்ஷ்மி, வள்ளி, சரஸ்வதி, முத்து, ருக்மணி, ஏ.வி.எம்.முருகன், ஏ.வி.எம்.குமரன், ஏ.வி.எம்.சரவணன், ஏ.வி.எம்.பாலசுப்ரமணியன், மீனா வீரப்பன்.

ஒலிப்பதிவு தயாரிப்பு

கிராம போன் ரிக்கார்ட் கம்பெனிகளான எச்.எம்.வி, கொலம்பியா ஆகியவற்றின் இசைத்தட்டு விநியோக உரிமையை ஏற்கனவே ஏ.வி அண்ட் சன்ஸ் நிறுவனம் வைத்திருந்தது. ஒலிப்பதிவுகளை விற்பதைவிட தயாரிப்பதில் அதிக லாபம் கிடைக்கும் என்றறிந்தார் மெய்யப்பன். கே.எஸ். நாராயண ஐயங்கார், சிவன் செட்டியார் ஆகியோரை பங்குதாரராக சேர்த்துக் கொண்டார். ஓடியன் ரிக்கார்டிங் கம்பெனி என்ற நிறுவனத்துடன் தொழில் கூட்டு ஒப்பந்தம் செய்து கொண்டார். சென்னை வந்து சரஸ்வதி ஸ்டோர்ஸ் என்ற நிறுவனத்தை செப்டம்பர் 9, 1932-இல் தொடங்கினார். ஒலிப்பதிவுகளை விற்பதோடல்லாமல் தயாரிக்கவும் செய்தார். தொடக்கக் காலத்தில் இவர்கள் விற்ற பதிவுகள் புராணக்கதைகளைக் கொண்டிருந்தன. மக்களின் ரசனையை கணிப்பதில் தேர்ந்தவராக மெய்யப்பன் இருந்தார்,

திரை வாழ்க்கை

ஏ.வி.எம் படப்பிடிப்பில்

மெய்யப்ப செட்டியார் 167 திரைப்படங்களைத் தன் வாழ்நாளில் தயாரித்தார். தமிழ்த் திரையுலகின் முதல் பின்னணிப் பாடகர்களை அறிமுகப்படுத்திவர், இந்தியாவின் முதல் மொழிமாற்றத் திரைப்படத்தைத் தயாரித்தவர்.

1934-ல் ஏ.வி.எம் சரஸ்வதி சவுண்ட் புரொடக்ஷன்ஸ் என்ற படத்தயாரிப்பு கம்பெனியைத் தொடங்கினார். இதன்வழியாக ஏ.வி. மெய்யப்ப செட்டியார் தயாரித்த முதல் திரைப்படம் 'அல்லி அர்ச்சுனா' 1935-இல் வெளியானது. சென்னையில் ஸ்டூடியோ வசதி இல்லாததால் கல்கத்தா சென்று இப்படத்தைத் தயாரித்தார். இது வெற்றியடையவில்லை. 1936-ல் எடுத்த 'ரத்னாவளி' திரைப்படமும் ஓடவில்லை.

பிரகதி பிக்சர்ஸ் என்ற நிறுவனத்தை ஜெயந்திலால் என்பவருடன் இணைந்து தொடங்கினார். 1938-ல் 'நந்தகுமார்' என்ற திரைப்படத்தை தயாரித்தார். இதில் கண்ணனின் இளம்பருவம் திரையாக்கப்பட்டது. இதில் டி.ஆர். மகாலிங்கம் நடித்தார். பின்னனிப்பாடல்கள் இடம்பெற்ற முதல் திரைப்படம் இது. 1940-ல் சொந்தமாக பிரகதி ஸ்டூடியோஸ் நிறுவனத்தை ஆரம்பித்தார். 1943-ல் அரிச்சந்திரன் பற்றிய கன்னடத் திரைப்படத்தையும் அடுத்த ஆண்டில் அதன் தமிழ்ப் பதிப்பையும் வெளியிட்டார். இந்தத் திரைப்படம் தான் இந்தியாவிலேயே பிற மொழியிலிருந்து மொழிமாற்றம் செய்யப்பட்ட முதல் திரைப்படம். 1945-ல் 'ஸ்ரீவள்ளி' திரைப்படத்தைத் தயாரித்தார். ஏற்கனவே பாடி முடித்து படப்பிடிப்பு நடந்த நிலையில் அந்த நடிகையின் வாயசைவுக்கு ஏற்ப வேறு ஒருவரை குரல் பதிவு செய்து கோர்க்கும் (post synchronisation) தொழில்நுட்பத்தை முதன்முதலாக சோதனை செய்தார்.

ஏ.வி.எம். நிறூவனம்

தேவக்கோட்டையில் சொந்த ஸ்டூடியோ உருவாக்கினார். இதன் வழியாக ’நாம் இருவர்’ என்ற திரைப்படம் 1947-ல் வெளியானது. இது எஸ்.வி.சகஸ்ரநாமத்தின் நாடகத்தைத் தழுவி எடுக்கப்பட்டது. இப்படத்திற்காக பாரதி பாடல்களின் உரிமையை பத்தாயிரம் ரூபாய் கொடுத்து வாங்கினார். நவம்பர் 14, 1945-ல் தன் திரைப்படங்களின் வெற்றியைத் தொடந்து மெய்யப்பர் தன் புதிய நிறுவனமான ஏ.வி.எம் புரொடெக்ஷன்ஸ்-ஐ சென்னையின் சாந்தோமில் நிறுவினார். சென்னையில் நிறுவப்பட்ட இந்த நிறுவனத்தின் முதல் திரைப்படம் 'வேதாள உலகம்' 1947-இல் வெளியானது.

'சபாபதி', 'போலி பாஞ்சாலி', 'என் மனைவி' ஆகிய நகைச்சுவைத் திரைப்படங்கள் பெருவெற்றியடைந்தன. வைஜெயந்தி மாலாவின் முதல் திரைப்படமான 'வாழ்க்கை'-ன் வெற்றியைத் தொடர்ந்து தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், வங்காளம், சிங்களத்திலும் திரைப்படங்களைத் தயாரிக்க ஆரம்பித்தார். இந்திய விடுதலைக்குப் பின் ஏவிஎம் நிறுவனம் கோடம்பாக்கத்திற்கு மாற்றப்பட்டது. 'ஓர் இரவு', 'பராசக்தி', 'பெண்', 'அந்த நாள்', 'குலதெய்வம்', 'சர்வர் சுந்தரம்', 'களத்தூர் கண்ணம்மா', 'அன்னை', 'நானும் ஒரு பெண்', 'உயர்ந்த மனிதன்', 'அன்பே வா' உள்ளிட்ட படங்கள் ஏ.வி.எம் தயாரிப்பில் பெருவெற்றி அடைந்த படங்களில் சில.

மதிப்பீடு

தமிழ் சினிமாவின் ஆரம்ப கால தயாரிப்பு நிறுவனங்களில் நீண்டகாலமாக செயல்பட்ட நிறுவனமாக ஏ.வி.எம் உள்ளது. இதே காலகட்டத்தில் ஆரம்பிக்கப்பட்ட புகழ்பெற்ற ஜெமினி (எஸ்.எஸ்.வாசன்), மாடர்ன் தியேட்டர்ஸ் (சுந்தரம்), பட்சிராஜா ஸ்டூடியோ (ஸ்ரீராமுலு), ஜூப்பிட்டர் பிக்சர்ஸ் (சோமு, மொகைதீன்) ஆகிய நிறுவனங்கள் தொடர்ந்து இயங்க முடியவில்லை.

விவாதம்

பாரதியாரின் பாடல் வெளியீட்டு உரிமையும், பாரதி படைப்புகளின் பதிப்புரிமையும் முதலில் பாரதியின் தந்தையின் இரண்டாம் மனைவியின் புதல்வரான விஸ்வநாத ஐயரிடம் இருந்தது. சுராஜ்மல் என்ற சேட்டிடம் விஸ்வநாதய்யரால் அறுநூறு ரூபாய்க்கு விற்கப்பட்ட பாரதி பாடல்களை பதிவு செய்யும் உரிமையை பத்தாயிரம் ரூபாய்க்கு மெய்யப்ப செட்டியார் தன் திரைப்படங்களுக்கு பயன்படுத்தும் பொருட்டு வாங்கினார். இதனால் திரைப்படங்களிலும், வானொலியிலும் பாரதியாரின் பாடல்களை அவரின் அனுமதியில்லாமல் பாட இயலாத சூழல் நிலவியது. இதன் பொருட்டு பாரதி விடுதலைக்கழகம் என்ற அமைப்பின் வழியாக பெரிய கிளர்ச்சி நடந்தது. ப. ஜீவானந்தம், டி.கே. சண்முகம் ஆகியோர் இந்தப் போராட்டத்தில் முன்னணி வகித்தனர்.

தி.க.சண்முகம் தன்னுடைய ‘பில்ஹணன்’ நாடகத்தை திரைப்படமாக்கும் போது துணிந்து பாரதியின் ‘தூண்டிற் புழுவினைப் போல்’ பாடலைப் பதிவு செய்தார். பிப்ரவரி 2, 1948 அன்று மெய்யப்பசெட்டியாரிடமிருந்து நோட்டீஸ் வந்தது. செட்டியார் இடைக்காலத் தடையுத்தரவு கோரி வழக்கு போட்டார். டி.கே. சண்முகம் எதிர்வழக்காடினார். இது இப்பிரச்சனையின் மேல் பெரிய கவனத்தைக் குவித்தது.

முதலமைச்சர் மெய்யப்ப செட்டியாரை நேரில் அழைத்து பாரதி பாடல்களைக் கோரியதும் செட்டியார் அதற்கு உடனே சம்மதித்தார். மார்ச் 12, 1949 அன்று பாரதியார் பாடல்களை தேசவுடைமையாக்கி முதலமைச்சர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் ஆணை பிறப்பித்தார்.

பார்க்க: பாரதி படைப்புகள் உரிமை மீட்பு

மறைவு

ஏ.வி. மெய்யப்ப செட்டியார் ஆகஸ்ட் 12, 1979-ல் காலமானார்.

ஏ.வி.எம் அஞ்சல்தலை

நினைவு

  • 2006-ல் இந்திய அரசு ஏ.வி. மெய்யப்ப செட்டியாரின் நூற்றாண்டு நினைவாக அஞ்சல்தலை வெளியிட்டது.
  • 2006-இல் மெய்யப்பரின் நூற்றாண்டு நிறைவைக் கொண்டாடும் விதமாக தென்னிந்தியத் திரைத்துறை வளாகத்தில் அன்றைய முதல்வர் மு. கருணாநிதி மெய்யப்பரின் சிலையைத் திறந்துவைத்தார்.
  • ஏ.வி. மெய்யப்ப செட்டியாரின் 24-ம் ஆண்டு நினைவு விழாவில் அவரது இளமைக்காலத்தில் தொடங்கி, திரைத்துறை வரலாறு முழுமையும் குறுவட்டில் பதிவு செய்யப்பட்டது வெளியிடப்பட்டது.
  • 1984 முதல் ஒவ்வோராண்டும் மெய்யப்பர் பிறந்த நாளை ஒட்டி சென்னை கம்பன் கழகத்தின் சார்பில் கம்பராமாயண ஆராய்ச்சிச் சொற்பொழிவு ஏ.வி.எம். அறக்கட்டளை நினைவுச் சொற்பொழிவு என்ற பெயரில் நடத்தப்பட்டு வருகிறது. கம்பராமாயணத்தை ஆராய்ந்து வல்லுநர் ஒருவர் இந்நாளில் சொற்பொழிவாற்றுவார். அச்சொற்பொழிவு வானதி பதிப்பகத்தால் நூலாக்கப்பட்டு சென்னை கம்பன் கழக விழாவில் வெளியிடப்படும்.

நூல் பட்டியல்

  • எனது வாழ்க்கை அனுபவங்கள் - தன்வரலாறு - அ. மெய்யப்பச் செட்டியார்

உசாத்துணை

இணைப்புகள்


✅Finalised Page