ராணி திலக்: Difference between revisions
No edit summary |
|||
Line 1: | Line 1: | ||
[[File:Ranithilak2.jpeg|thumb|ராணி திலக்]] | |||
{{Read English|Name of target article=Rani Thilak|Title of target article=Rani Thilak}} | {{Read English|Name of target article=Rani Thilak|Title of target article=Rani Thilak}} | ||
[[File:Rani.jpg|thumb|ராணி திலக் (நன்றி: இந்து தமிழ்திசை)]] | [[File:Rani.jpg|thumb|ராணி திலக் (நன்றி: இந்து தமிழ்திசை)]] |
Revision as of 11:46, 28 May 2025
To read the article in English: Rani Thilak.
ராணி திலக் (ஆர்.தாமோதரன்; பிறப்பு : ஜனவரி 15,1972) தமிழ்க் கவிஞர், கவிதை விமர்சகர், சிறுகதை எழுத்தாளர். 1997 முதல் தமிழ் சிறுபத்திரிகை சூழலில் இயங்கி வருபவர்.
பிறப்பு, கல்வி
ராணி திலக்கின் இயற்பெயர் ஆர். தாமோதரன். ஜனவரி 15,1971-ல் பிறந்தார். தமிழிலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார்.
தனி வாழ்க்கை
ராணி திலக் கும்பகோணம் அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றுகிறார்.
இதழியல்
ராணி திலக் பாலி சிற்றிதழின் ஆசிரியராக இருந்தார். 2006-ல் முதல் இதழும், 2007-ல் இரண்டாவது இதழும் வெளியானது.
இலக்கிய வாழ்க்கை
படைப்புகள்
ராணி திலக் 1997-ல் தொடங்கி 2005 வரை எட்டுவருட காலத்தில் எழுதிய கவிதைகளின் தொகுப்பான 'நாகதிசை' 2005-ல் வெளியாகியது. அச்சுமொழிக் கவிதைகளில் தொடங்கி உரைநடைக் கவிதைகளில் தனக்கான கவிதை நடையைக் கண்டுகொண்டார்.
இதுவரை ஆறு கவிதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன. அவரது கவிதை விமரிசனக் கட்டுரைகளின் தொகுப்பு 'சப்தரேகை' என்னும் நூலாக வெளிவந்துள்ளது. 'ஸங்கரகாந்த்', 'தனுஷ்' ஆகிய புனைபெயர்களில் சில சிறுகதைகளும் எழுதியுள்ளார்.
இலக்கியத் தொகுப்புகள்
மணிக்கொடி கால எழுத்தாளர்களான கரிச்சான் குஞ்சு மற்றும் 'கொனஷ்டை' ஆகியோரின் சிறுகதைகளை தொகுத்துள்ளார். தற்போது மேலும் சில மணிக்கொடிகால எழுத்தாளர்களின் படைப்புகளை தொகுக்கும் பணியில் உள்ளார்.
ராணி திலக் தஞ்சையின் சில மறக்கப்பட்ட நிகழ்த்துகலைவாணர்களைத் தேடிச்சென்ற அனுபவங்களை ஜெயமோகனின் கோரிக்கையின் பேரில் கட்டுரைகளாக எழுதினார். [1]
மாணவர்களின் வாசிப்புப் பழக்கத்தை வளர்க்கவும், அவர்களின் படைப்பாற்றலைக் கண்டறிந்து வெளிப்படுத்தவும், ‘இளம் வாசகர் வட்டம்’ என்ற செயல்பாட்டை 2021ம் ஆண்டு டிசம்பரில் தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை கொண்டுவந்தது. கும்பகோணம் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் அதற்கான முன்னோடிய முயற்சியாக ராணி திலக் முன்னெடுத்த இளம் வாசகர் வட்டம், ‘25 கதைகள்’ என்ற தலைப்பில் மாணவர்கள் எழுதிய கதைகள் அடங்கிய மின்னூலை வெளியிட்டிருக்கிறது[2].
இலக்கிய இடம்
நகுலன், சுகுமாரன், மோகனரங்கன் போன்ற கவிஞர்களின் தொடர்ச்சியாக வடிவநேர்த்தி கொண்ட கவிதைகளை எழுதுபவர் ராணி திலக். அவருடைய கவிதைகளில் தமிழ் மரபின் தொடர்ச்சி வெளிப்படுகிறது. "ராணிதிலக் தன் கவிதைகளின் சோதனை முயற்சிகளின் வழியாக ஒரு தெளிந்த நிலத்தின் பால் வந்து சேர்ந்திருக்கிறார். இந்த நிதானம் மிக்க ஒரு மொழிக்கு அவர் வந்துள்ளதை ”பிளக் பிளக் பிளக்”, கராதே, 27 கவிதைத் தொகுப்புகளை வாசிக்கும் போது தெரிகிறது. சலிப்பில்லாமல் திரும்பத் திரும்ப வாசிக்கக்கோரும் கவிதைகளாக அவை உள்ளன. அவ்வாறான மறுவாசிப்பிலும் சோர்வைத் தராத கவிதைகளாகவும் நிற்கின்றன. குருவிடமிருந்து விலகி நடந்த ஒரு சீடன் தன்னளவில் அடைந்த பெரும்பாதையைப் போல, அடைந்த ஞானத்தை போன்ற தெளிவான கவிதைகள் இவை." என்று கண்டராதித்தன் குறிப்பிடுகிறார்.
"புனைவம்சத்தையே முதன்மை விருப்பமாகக் கொண்டு படைக்கப்படும் படைப்புகளுக்கே உரிய வெற்றிதோல்விகள் ராணிதிலக்கின் கவிதைகளிலும் காணப்படுகின்றன. புனைவம்சம் புகையின் கோடுகளாகப் பிரிந்து பிறகு ஏதோ ஒரு தற்செயலின் விளைவாக ஒருங்கிணைந்து ஒரு சித்திரமாக மாறும்போது மட்டுமே கவிதைகள் உவகை தருவதாக உள்ளன. ஒன்றிணையாத தருணங்களில் அவை வெற்றியடையாத முயற்சிகளாக நின்றுவிடுகின்றன" என்று பாவண்ணன் குறிப்பிடுகிறார்.
நூல்கள் பட்டியல்
கவிதைத் தொகுப்பு
- நாகதிசை (உயிர்மை, 2004)
- காகத்தின் சொற்கள் (வம்சி, 2006)
- விதி என்பது இலைதான் (அனன்யா, 2009)
- நான் ஆத்மாநாம் பேசுகிறேன் (காலச்சுவடு, 2012)
- கராதே - அடவி (2016)
- பிளக் பிளக் பிளக் - (காலச்சுவடு, 2020)
- 27 கவிதைகள் (பாலி பதிப்பகம், 2021)
கட்டுரைத் தொகுப்பு
- சப்த ரேகை (அனன்யா, 2004)
- கவிஞன் - இடைத்தரகன் - விற்பனைப் பிரதிநிதி (எழுத்து பிரசுரம், 2021)
- சின்னஞ்சிறு சப்தங்கள் (எழுத்துப் பிரசுரம், 2023)
கதைத் தொகுதி
- ஒரு குட்டி ஆந்தை முதலிய கதைகள் (பாலி பதிப்பகம், 2024)
தொகுப்பாசிரியர்
- கொனஷ்டைப் படைப்புகள் (எழுத்துப் பிரசுரம், 2021)
- எம்.வி. வெங்கட்ராம் ஒரு வாசகப்பார்வை (தமிழ்வெளி, 2021)
- கரிச்சான்குஞ்சு கதைகள் (காலச்சுவடு, 2021)
- விசிறி - க.நா.சு புதிய கதைகள் (அழிசி, 2021)
- ஒரு நாள் வேலை - ந. சிதம்பரசுப்ரம்ணியன் (எழுத்துப் பிரசுரம், 2022)
- பொல்லாத பாசம் - பராங்குசம் (எழுத்துப் பிரசுரம், 2022)
- கஞ்சா மடம் - ந. பிச்சமூர்த்தி புதிய கதைகள் (அழிசி, 2023)
- கு. அழகிரிசாமி படைப்புகள் (தன்னறம், 2023)
- விண்ணும் மண்ணும் - ந. சிதம்பரசுப்ரம்ணியன் கட்டுரைகள் (எழுத்துப் பிரசுரம், 2024)
- ஒரு நாள் வேலை - ந. சிதம்பரசுப்ரம்ணியன் சிறுகதைகள் (2022)
உசாத்துணை
- கைலாஷ் சிவன் -ராணி திலக் கவிதைகள்
- ராணி திலக்கின் நாகதிசை: ஒரு பார்வை
- தனியன் மொழி – ராணிதிலக் கவிதைகள் குறித்து
- புனைவின் கோடுகள் – ராணி திலக்கின் “காகத்தின் சொற்கள்” – பாவண்ணன் திண்ணை இதழ்
- கவிஞன், தரகன் ,விற்பனைப் பிரதிநிதி ராணி திலக் ரசமட்டம்
- அரும் பெறல் மரபின் கரும்பு இவண் - ராணி திலக் கவிஞர் விக்ரமாதித்தன்
அடிக்குறிப்புகள்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
10-Sep-2022, 13:18:13 IST