பிரதாப சந்திர விலாசம்: Difference between revisions
No edit summary |
No edit summary |
||
Line 35: | Line 35: | ||
<references /> | <references /> | ||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
{{ | {{Standardised}} |
Revision as of 23:11, 21 August 2022
’பிரதாப சந்திர விலாசம்’ 1877-ல் வெளியான சமூக நாடகம். காசி விஸ்வநாத முதலியார் எழுதிய ‘டம்பாச்சாரி விலாசம்’ என்ற நாடகத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அதே வகையில் சமூக சீர்த்திருத்தக் கருத்துக்களுடன் கூடிய பல நாடகங்கள் வெளியாகின. அவற்றுள் ஒன்று பிரதாப சந்திர விலாசம். இதனை இயற்றியவர் ப.வ. இராமசாமி ராஜு. இவர் லண்டனில் ‘பாரிஸ்டர்’ பட்டம் பெற்றவர்.
நாடகத்தின் நோக்கம்
இந்த நாடகம் எழுதப்பட்டதன் நோக்கமாக இராமசாமி ராஜு, நூலின் முகவுரையில், "நம்முடைய நாட்டில் அநேகர் இயற்கையாக நல்லறிவு படைத்துக் கல்வி கற்றுத் தேர்ந்து, அவரவர் அதிர்ஷ்டத்துக்கும் முயற்சிக்கும் தக்கபடி மதிப்புள்ள ஸ்திதிக்கு வந்தும், அற்ப வயதிலேயே தங்காலத்தை முடித்து, மனைவி மக்களை வருத்தத்தில் மூழ்த்தி, பந்து மித்திரர்களுக்கெல்லாம் தீராத கிலேசத்தை உண்டாக்கி விட்டுப் போகின்றனர். இந்த விபரீதத்துக்கு பெரும்பாலும் காரணமேதோவென்று ஆராயப் புகின், இந்நூலில் வெளியிட்டு மறுத்திருக்கும் துன்பங்களேயோம். அந்தோ! வேசையர் முதலிய மாதர்களோடும், ஒயின், பிராந்தி முதலிய சாராய வர்க்கங்களோடும் தம் வாழ்நாளை நமனார்க்குக் கொள்ளை கொடுக்கும் துரதிர்ஷ்டப் பிராணிகளின் தொகை எண்ணி முடியுமோ! ஆகையால் என் சக்தி புத்திகளுக்குத் தக்கபடி யான் லோகோபகாரமாக நினைத்து இயற்றிய இந்த நூலை நடுவுநிலைமையுற்ற மேலோர் நன்கு மதிக்கின், அது யான் இதை இயற்றும் விஷயத்தில் செய்த முயற்சிக்கு ஓர் பயனாகும். கெடுதி விலக்கைக் கருத்தாய்க் கொண்டு. அக்கெடுதியைப் பற்பலவிதமாய் விளக்கிக் காட்டுதல் மூத்தோர் வழக்கம். அப்படியே கீர்வாணம், தமிழ், இங்க்லீஷ் முதலிய பாஷைகளில் அனேக மகாகவிகள் செய்திருக்கின்றனர். அவ்வழியே யானும், யானையுலாவுங் காட்டில் பூனை சென்றாற்போல், தொடர்ந்தனன்." என்று குறிப்பிட்டுள்ளார்.
நாடகத்தின் அமைப்பு
காட்சி, அங்கம் என்ற பகுப்புடன் நாடகம் எழுதப்பட்டுள்ளது. முதல் காட்சியில் கட்டியங்காரன் வந்து நாடகத் தலைவரை அறிமுகப்படுத்தி நாடகத்தை ஆரம்பித்து வைக்கிறான். பாடலும் வசனமும் கலந்து இந்நாடகத்தில் இடம் பெற்றுள்ளது. இதில் நாடகப் பாத்திரங்கள், அவரவர் படிப்பு, ஜாதி, சமூகப் படிநிலை இவற்றிற்கேற்ப செந்தமிழிலும், கொச்சை மொழியிலும், ஆங்கிலத்திலும், தெலுங்கிலும், உருதுவிலும், கன்னடத்திலும் வேறுபட்ட பாணிகளில் பேசும் வகையில் வசனம் அமைக்கப்பட்டுள்ளது.
பாவாடை ஜித்தர், இடிமுழங்கி, ஸண்டே மாஸ்டர், குசும்பா மாஸ்டர், ஷோக் சுந்தரம், மத்தாப்பு சுந்தரம், சட்பட், படீல், திருவேங்கடத்தானு எனப் பல பாத்திரங்கள் பல்வேறு வகையில் உரையாடுகின்றனர். நகைச்சுவை ததும்ப நாடக வசனங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
நாடகத்தின் கதை
மாயோ கவர்னர் ஜெனரல் ஆட்சி செய்த காலத்தில் நிகழ்ந்ததாக இந்தக் கதை அமைக்கப்பட்டுள்ளது. லக்ஷ்மிவிலாசர் என்னும் ஜமீன்தாரின் மகனான பிரதாப சந்திரன், சென்னையில் உயர்கல்வி கற்று, மதிப்பும், மரியாதையும் கொண்டவராக இருக்கிறார். தன்னைப் போன்ற நண்பர்களை இணைத்துக் கொண்டு பல்வேறு பொது நலப் பணிகளைச் செய்து வருகிறார். அப்போது சில தீய நண்பர்களின் தொடர்பால் அவரது வாழ்க்கை தடம் மாறுகிறது. பல்வேறு துன்பங்களைச் சந்திக்கிறார். அவமானம் அடைகிறார். பல்வேறு இன்னல்களுக்குப் பின் மனம் திருந்துகிறார். தன் தந்தையுடன் மாயோ பிரபுவின் தர்பாருக்குச் செல்கிறார். அங்கிருந்து வேட்டைக்குச் சென்றபோது மனோன்மணி என்னும் பெண்ணைச் சந்திக்கிறார். அவளை மணம் செய்து கொண்டு ஒழுக்க சீலராக இனிது வாழ்கிறார்.
மறுபதிப்பும் கருத்துக்களும்
இந்த நாடகத்தை 2007-ல் ‘எனி இந்தியன்’ பதிப்பகம் மறுபதிப்புச் செய்தது.
’நாடக மேடை நினைவுகள்' நூலில் பம்மல் சம்பந்த முதலியார், தான் எழும்பூரில் உள்ள பெகன்ஸ் பீல்ட் (Beaconsfield) என்னும் நாடார் பங்களாவில் ’பிரதாப சந்திர விலாசம்’ நாடகம் பார்த்த அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார்.
‘நாடகக் கலை’ நூலில், அவ்வை டி.கே. ஷண்முகம் அவர்கள், “பிரதாப சந்திரன் நாடகத்தை நாங்கள் எங்கள் குழுவில் 1926-ல் பல முறை நடித்திருக்கிறோம். நானே பிரதாப சந்திரனாகவும், சில நாடகங்களில் விசுவாச காதகன் என்ற தீயோனாகவும் நடித்திருக்கிறேன்.” என்று குறிப்பிட்டிருக்கிறார்
இந்த நாடகம் குறித்து எழுத்தாளர் சுஜாதா, ஆனந்த விகடனின் கற்றதும் பெற்றதும் பகுதியில், “ தமிழின் முதல் இசை நாடகம் 1877-ல் வெளியான ‘பிரதாப சந்திர விலாசம்’. இதை ‘எனி இந்தியன்’ பதிப்பகத்தார் தேடிப் பிடித்து அழகாக மறுபதிப்பு செய்திருக்கிறார்கள். ரசித்துப் படித்தேன். இதை எழுதிய ராமசாமி ராஜு, (பி.ஏ. பாரிஸ்டர் அட் லா, எச்.ஆர்எச்.எஸ் (லண்டன்) எம்.ஆர்.ஏ.எஸ் (லண்டன்) (whatever that means) இந்த நாடகத்தின் குறிக்கோளைச் சொல்லும்போது அவரது விநோத மொழி நடையையும் கவனிக்க முடிகிறது. காப்புச் செய்யுள், கட்டியங்காரர் உரை, ராகம், தாளம் பல்லவி, அனுபல்லவி என எடுத்ததற்கெல்லாம் ஆங்கில வார்த்தைகள், கொச்சை வார்த்தைகள் விரவிய பாடல்களுடன் ஷோக் சுந்தரம், மத்தாப்பு சுந்தரம், பாவாடை ஜித்தர், பட்பட் படீல் முதலிய ஜனங்கள் தத்தம் இயல்புக்கிசைய வார்த்தையாடுகின்றனர். [1] ” என்று குறிப்பிட்டுள்ளார்.
ஆவணம்
தமிழ் இணைய நூலகத்தில் ‘பிரதாப சந்திர விலாசம்’ நூல் சேகரிக்கப்பட்டுள்ளது.
வரலாற்று இடம்
அக்காலத்தில் படிப்பதற்கும் மேடையில் நடிப்பதற்கும் ஏற்ற வகையில் இந்த நாடக நுால் எழுதப்பட்டிருக்கிறது. இது போன்ற நாடகங்கள் சமூகச் சீர்த்திருத்தக் கருத்துக்கள் கொண்ட நாடகங்கள் உருவாக முன்னோடியாய் அமைந்தன.
இந்நாடகம் பற்றி வெளி ரங்கராஜன், “ராமசாமி ராஜூ தமிழ்க் கவிதை நடையையும், பேச்சு மொழி இயல்புகளையும் தன்னுடைய காலகட்டத்தின் குறிப்பிட்ட சிந்தனைத் தேவைகளுக்காக ஒரு நாடக பாணியில் வடிவமைத்ததை ஒரு முக்கியமான படைப்புச் செயல் என்றே கருத வேண்டும். முக்கியமாக அச்சமயங்களில் அதிகம் புழக்கத்தில் இருந்த மணிப்பிரவாள நடையை விலக்கி, கம்பரின் பாதிப்பில் உருவான தமிழ்க் கவிதை ஒட்டத்தையும் இசைத்தன்மையையும் உள்வாங்கி, தமிழ், தெலுங்கு மற்றம் ஆங்கில வார்த்தைகள் கொண்ட ஒரு பேச்சுமொழியை உரையாடலுக்குப் பயன்படுத்தியதை ஒரு வித்தியாசமான முயற்சி என்றே கொள்ள வேண்டும்.” என்று மதிப்பிட்டுள்ளார்.
இந்திரா பார்த்தசாரதி, “அக்காலத்திய சமூக மாற்றங்களை அறிவதற்கான ஓர் அற்புத வழிகாட்டி, பிரதாபசந்திர விலாசம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
உசாத்துணை
- பிரதாப சந்திர விலாசம்:தமிழ் இணைய நூலகம்
- பிரதாப சந்திர விலாசம்:மதிப்புரை-வெளிரங்கராஜன்
- தமிழ் இணையப் பல்கலைக்கழகப் பாடம்
- தமிழ் நாடகக் குறிப்புகள்
இணைப்புக் குறிப்புகள்
⨮ Standardised
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.