ரா.ராகவையங்கார்: Difference between revisions
(Moved Category Stage markers to bottom and added References) |
|||
Line 224: | Line 224: | ||
{{ready for review}} | {{ready for review}} | ||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] |
Revision as of 18:17, 17 April 2022
ரா.ராகவையங்கார் (20 செப்டம்பர் 1870 - 11 ஜூலை 1946)தமிழறிஞர், ஆய்வாளர், பதிப்பாளர் மற்றும் இதழாளர். சேது சமஸ்தான மகாவித்துவான் என அழைக்கப்பட்டார். செந்தமிழ் இதழின் ஆசிரியராகச் செயல்பட்டார்.
பிறப்பு, கல்வி
தமிழ்நாட்டில் சிவகங்கை நகருக்கு அருகில் உள்ள தென்னவராயன் புதுக்கோட்டையில் 1870 – செப்டம்பர் -20 - ல் ரா. இராகவையங்கார் ராமாநுஜையங்கார்- பத்மாசனி அம்மையார் இணையருக்கு பிறந்ந்தார். ரா. ராராகவையங்காரின் ஐந்தாம் வயதில் தந்தை இறந்தார். தாய்மாமாவும் சேதுசமஸ்தான அரசவைப் புலவராக இருந்தவருமான சதாவதானம் முத்துசாமி ஐயங்கார் ஆதரவில் இராமநாதபுரத்தில் வளர்ந்தார். முத்துசாமி ஐயங்காரின் மகன் தமிழறிஞர் மு. இராகவையங்கார். இராமநாதபுரத்தில் பள்ளியிறுதி வரை பயின்றபின் தன் மாமாவிடமிருந்தும் சேதுசமஸ்தான புலவர்களிடத்தும் தமிழும் சம்ஸ்கிருதமும் பயின்றார்.
தனிவாழ்க்கை
ராகவையங்கார் 1888-ஆம் ஆண்டில் தன்னுடைய 18 வயதில் மதுரையில் ராமநாதபுரம் அரசர் உருவாக்கிய சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றத் தொடங்கினார். அவ்வாண்டே ஜானகி அம்மாளை மணந்தார். அவர்களுக்கு மூன்று பெண் குழந்தைகளும் இராமானுஜ ஐயங்கார் என்னும் மகனும் பிறந்தனர்.திருச்சிராப்பள்ளியில் உள்ள, பின்னாளில் தேசிய உயர்நிலைப் பள்ளி என அழைக்கப்பட்ட, சேஷையங்கார் பள்ளியில் சிலகாலம் இவர் தமிழாசிரியராக இருந்தார்.
இராமநாதபுர சேதுசமஸ்தானத்தான அரசராக இருந்த பாஸ்கரசேதுபதி தன்னுடைய அரசவையின் தலைமைப் புலவராக ரா. இராகவையங்காரை நியமித்தார்.சமஸ்தான அறக்கொடையில் இருந்து ஆண்டுதோறும் 635 ரூபாய் ரா. ராகவைங்காரின் வாழ்நாள் முழுக்க வழங்கும்படி உரிமைப் பத்திரம் ஒன்றைப் பதிவுசெய்து கொடுத்தார். இதன்படி பாஸ்கரசேதுபதி, முத்துராமலிங்க ராஜராஜேஸ்வர சேதுபதி, சண்முக ராஜேஸ்வர சேதுபதி என்னும் தாத்தா, தந்தை, பெயரன் ஆகிய மூவரின் அரசவையிலும் புலவராகத் திகழ்ந்தார். இவர் அரசவைப்புலவராக இருந்த காலத்தில் அந்த அரசவைக்கு வருகைவந்த விவேகானந்தர் உள்ளிட்ட பல்வேறு சமய விற்பன்னர்களுடன் கலந்துரையாடினார். விவேகானந்தர் சிக்காகோ மாநாட்டுக்கு சென்று திரும்பிய போது அவருக்கு பாண்டித்துரைத் தேவர் அவையில் வரவேற்புரையும் வாழ்த்துரையும் வாசித்தார்.
இலக்கியவாழ்க்கை
ரா. ராகவையங்காரின் முதன்மைப் பங்களிப்பு அகநானூறு (1901, 1920), தொல்காப்பியம்-செய்யுளியல், முத்தொள்ளாயிரம், இனியவை நாற்பது, நான்மணிக் கடிகை ஆகியவற்றைப் புத்தகமாகப் பதித்தது என்று தெரிகிறது. குறுந்தொகை, பட்டினப்பாலை, பெரும்பாணாற்றுப்படை ஆகியவற்றிற்கு உரை எழுதியது.
ரா.ராகவையங்காரின் இலக்கிய வாழ்க்கை ராமநாதபுரம் சேதுபதியுடனும் பின்னர் பாண்டித்துரை தேவருடனும் பிணைந்தது.
நான்காம் தமிழ்ச்சங்கம் மதுரை
1901 – செப்டம்பர் – 14ஆம் நாள், பாலவநத்தம் நிலக்கிழார் பாண்டித்துரைத் தேவர் முயற்சியால் பாஸ்கர சேதுபதியின் ஆதரவோடு, மதுரைத் தமிழ்ச் சங்கம் நிறுவப்பட்டது. அதன் நூற்பதிப்பு, ஆராய்ச்சி ஆகிய துறைகளின் தலைவராக ரா.ராகவையங்கார் பொறுப்பேற்றார். அப்பொழுது பல இடங்களுக்கும் சென்று பழஞ்சுவடிகளைத் திரட்டினார். அவற்றை மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் பாண்டியன் நூலகத்தில் தொகுத்து வைத்தார்.
செந்தமிழ் இதழ்
தமிழ்ச்சங்கத்தின் சார்பில் 1902 – டிசம்பர் 7-ஆம் நாள் செந்தமிழ் இதழ் தொடங்கப்பட்டது. அந்த இதழின் முதலாவது ஆசிரியராக ரா. ராகவையங்கார் பொறுப்பேற்றார். அவ்விதழில் ஆராய்ச்சி என்னும் தலைப்பில் தமிழிலக்கண, இலக்கிய ஆய்வுரைகளை எழுதி வந்தார்.
பிறபணிகள்
1906-ஆம் ஆண்டு, ரா. ராகவையங்கார் தான் வகித்து வந்த செந்தமிழ் இதழின் ஆசிரியப் பொறுப்பை தன் மாமா மகனான மு. இராகவையங்காரிடம் ஒப்படைத்தார். அங்கிருந்து தேவகோட்டைக்குச் சென்று, மெ. அரு. இராமநாதன் செட்டியார் என்பவரின் ஆதரவில் சிலகாலம் தங்கியிருந்தார். 1910-ஆம் ஆண்டில் மீண்டும் இராமநாதபுரத்திற்குத் திரும்பி, இராஜராஜேஸ்வர சேதுபதியின் அவையில் அரசவைப் புலவராக இருந்தார்.
1935-ஆம் ஆண்டில் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தமிழாராய்ச்சித் துறை உருவாக்கப்பட்டது. அத்துறையின் முதன்மை ஆராய்ச்சியாளராக 1935-ஆம் ஆண்டு முதல் 1941-ஆம் ஆண்டுவரை பதவி வகித்தார். அப்பொழுது தமிழிலக்கிய, இலக்கண ஆய்வில் ஈடுபட்டதோடு முதுகலை மாணவர்களுக்குத் தமிழிலக்கியத்தைக் கற்பித்தார்.
விருதுகள்
- மேலைச்சிவபுரி சன்மார்க்கச் சங்கத்தின் ஆண்டு விழாவிற்குத் தலைமையேற்ற உ. வே. சாமிநாதய்யர், மகாவித்துவான் என்னும் பட்டத்தை இரா. இராகவையங்காருக்கு வழங்கினார்.
- வடமொழியில் இவருக்கு உள்ள புலமையைப் பாராட்ட விரும்பிய சமஸ்கிருத சமிதி இவருக்கு பாசாகவிசேகரர் என்னும் பட்டத்தை வழங்கியது.
மறைவு
1941-ஆம் ஆண்டில் அண்ணாமலை பல்கலைக் கழகத்திலிருந்து ஓய்வு பெற்ற பின்னர், இராமநாதபுரத்தில் உள்ள தன்னுடைய மாளிகையில் தன்னுடைய இறுதிக் காலத்தைக் கழித்தா 1946 – சூலை – 11-ஆம் நாள் மரணமடைந்தார்.
நினைவுநூல்கள், வாழ்க்கை வரலாறுகள்
ரா.ராகவையங்கார் பற்றிப் எழுதப்பட்ட கட்டுரைகளையும் கவிதைகளையும் தொகுத்து 1946ஆம் ஆண்டு ஆனிமாத செந்தமிழ் இதழை ரா. ராகவையங்கார் நினைவு மலராக மதுரைத் தமிழ்ச் சங்கம் வெளியிட்டது.
நூல்கள்
வ.எண் | மு.பதிப்பு ஆண்டு | நூல் | குறிப்பு |
1 | 1917 | வஞ்சிமாநகர் | ஆய்வுரை |
2 | 1924 | சேதுநாடும் தமிழும் | மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் 13 ஆண்டுக் கூட்டத்தில் படிக்கப்பட்டது |
3 | 1927 | புவி எழுபது | செய்யுள் நூல் |
4 | 1932 | தொழிற்சிறப்பு | செய்யுள் நூல் |
5 | 1933 | திருவடிமாலை | செய்யுள் நூல் |
6 | 1933 | நல்லிசைப் புலமை மெல்லியர்கள் | ஆய்வு நூல் |
7 | 1934 | அண்டகோள மெய்ப்பொருள் | ஆய்வு நூல் |
8 | நன்றியில் திரு | செய்யுள் நூல் | |
9 | 1937 | பாரிகாதை | செய்யுள் நூல் |
10 | 1938 | அபிசஞான சாகுந்தலம் | வடமொழியிலிருந்து பெயர்க்கப்பட்ட நூல் |
11 | 1941 | தமிழ் வரலாறு | |
12 | 1949 | தித்தன் | ஆய்வு நூல் |
13 | 1951 | கோசர் | ஆய்வு நூல் |
14 | 1983 | இராசராசேசுவரசேதுபதி ஒருதுறைக் கோவை | செய்யுள் நூல் |
15 | 1985 | ஆத்திசூடி உரை | |
16 | 1987 | ஆராய்ச்சிக் கட்டுரைகள் | |
17 | 1992 | இனிய இலக்கியம் | |
18 | 1994 | கம்பர் | |
19 | 1994 | செந்தமிழ் இன்பம் | |
20 | 1994 | தமிழக குறுநில வேந்தர்கள் |
பதிப்பித்த நூல்கள்[தொகு]
வ.எண் | மு.பதிப்பு ஆண்டு | நூல் |
1 | 1901 | அகநானூறு |
2 | 1902 | ஐந்திணை ஐம்பது உரை |
3 | 1902 | கனாநூல் |
4 | 1903 | வளையாபதிச் செய்யுட்கள் |
5 | 1903 | மதுரைத் தமிழ்ச் சங்கத்து புலவராற்றுப்படை |
6 | 1903 | இனியவை நாற்பது மூலமும் உரையும் |
7 | 1903 | நேமிநாதம் மூலமும் உரையும் |
8 | 1904 | திருநூற்றந்தாதி மூலமும் உரையும் |
9 | 1904 | திணைமாலை நூற்றைம்பது மூலமும் உரையும் |
10 | 1904 | பன்னிருபாட்டியல் |
11 | 1904 | நான்மணிக்கடிகை |
12 | 1905 | முத்தொள்ளாயிரச் செய்யுட்கள் மூலம் |
13 | 1917 | தொல்காப்பியச் செய்யுளியல் நச்சினார்க்கினியர் உரை |
14 | 1946 | குறுந்தொகை விளக்கம் |
15 | 1949 | பெரும்பாணாற்றுப்படை |
16 | 1951 | பட்டினப்பாலை |
உசாத்துணை
- ரா.ராகவையங்காரின் நாட்டுடைமை ஆக்கப்பட்ட நூல்கள்
- பாரிகாதை - ரா.ராகைவையங்கார்
- நல்லிசைப்புலமை மெல்லியலார்கள்
- சிலிக்கான் ஷெல்ஃப்
இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்
Ready for review
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.