கோவை. இளஞ்சேரன்: Difference between revisions
m (Madhusaml moved page கோ.வை. மெய்கண்டசிவன் (கோவை. இளஞ்சேரன்) to கோ.வை. மெய்கண்டசிவன்) |
m (Madhusaml moved page கோ.வை. மெய்கண்டசிவன் to கோவை. இளஞ்சேரன் without leaving a redirect) |
(No difference)
|
Revision as of 12:09, 23 June 2023
கோ.வை. மெய்கண்டசிவன் (கோவை. இளஞ்சேரன்; சேரமான்; ஜனவரி 4, 1923) ஒரு தமிழக எழுத்தாளர். கவிஞர், சொற்பொழிவாளர், பதிப்பாளர். தமிழாசிரியராகவும், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் பதிப்புத்துறை துணை இயக்குநராகவும் பணியாற்றினார். தனது இலக்கியப் பணிகளுக்காகப் பல்வேறு விருதுகள் பெற்றார்.
பிறப்பு, கல்வி
கோ.வை மெய்கண்டசிவன் என்னும் இயற்பெயரை உடைய கோவை. இளஞ்சேரன், அன்றைய ராமநாதபுரம் மாவட்டம் (இன்றைய சிவகங்கை மாவட்டம்) கல்லலில், ஜனவரி 4, 1923 அன்று, கோ. வைத்தியலிங்கனார்-மீனாட்சி அம்மாள் இணையருக்குப் பிறந்தார். காரைக்குடி சரஸ்வதி வித்தியாசாலையில் ஆரம்பக் கல்வி பயின்றார். இடைநிலைக் கல்வியை நீடாமங்கலம் நடுநிலைப்பள்ளியில் படித்தார். உயர்நிலைக் கல்வியை மன்னார்குடி நாட்டுயர்நிலைப் பள்ளியில் பயின்றார். தமிழ் புதுமுக வகுப்பை தனித் தேர்வராக எழுதித் தேர்ச்சி பெற்றார். திருவையாறு அரசர் கல்லூரியில் பயின்று தமிழில் ’வித்துவான்’ பட்டம் பெற்றார். சென்னை, சைதாப்பேட்டை ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் ஆசிரியர் பயிற்சியை நிறைவு செய்தார்.
தனி வாழ்க்கை
கோவை. இளஞ்சேரன் தனிப் பயிற்சி ஆசிரியராகச் சில காலம் பணியாற்றினார். மன்னார்குடி பாரதி அச்சகத்தில் அச்சுத் தொழிலாளியாகப் பணியாற்றினார். புதுக்கோட்டை சி.எஸ்.எம். உயர்நிலைப் பள்ளியிலும், நாகப்பட்டினம் தென்னிந்தியத் திருச்சபை மேல்நிலைப்பள்ளியிலும் தலைமைத் தமிழாசிரியராகப் பணிபுரிந்தார். தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் பதிப்புத்துறையில் கண்காணிப்பளராகவும், துணை இயக்குநராகவும் பணியாற்றினார்.
மனைவி: ஜானகி. பிள்ளைகள்: நிலவுவல்லி, நித்திலவல்லி, நீலவானன், சேரவானன்.
இலக்கிய வாழ்க்கை
கோவை. இளஞ்சேரன், கவிதையில் ஈடுபாடு கொண்டிருந்தார். ’ நல்ல குத்தகை’ எனும் தலைப்பிலான முதல் கவிதை, ஜனசக்தி இதழில், 1946-ல் வெளியானது. ‘கோவை. இளஞ்சேரன்' என்ற புனை பெயரில் எழுதினார். 1947-ல், பாரதிதாசன் பரம்பரைக் கவிஞராக ‘பொன்னி’ இதழில் அறிமுகம் செய்யப்பட்டார். ‘சேரமான்’ என்ற பெயரிலும் கவிதை, கட்டுரைகளை எழுதினார். ’தமிழரசு’, ‘சீரணி’, ‘தமிழ்ப் பொழில்’, குறளியம்’, ‘சுதந்திரன்’, ‘தமிழ்நேசன்’ உள்ளிட்ட இதழ்களில் இவரது படைப்புகள் வெளியாகின. பள்ளி மாணவர்களுக்கான இலக்கண விளக்க உரை நூல்களை எழுதினார்.
அமைப்புப்பணிகள்
கோவை. இளஞ்சேரன், நாகப்பட்டினத்தில் தமிழ்ச்சங்கத்தை நிறுவினார். சங்கத்தில் இலவச மாணவர் இல்லத்தைத் தோற்றுவித்தார். நாகப்பட்டினத்தில் தமிழ்க் கல்லூரி அமைய உழைத்தார். பூம்புகார் சிலப்பதிகாரச் சிற்பக் கலைக்கூடத்தின் மேற்பார்வையாளராகச் செயல்பட்டார். மறைமலையடிகளுக்குச் சிலை அமைத்ததுடன், அவர் பெயரில் பூங்கா அமையவும் காரணமானார். ஐந்தாவது உலகத் தமிழ் மாநாட்டில் கலந்துகொண்டு கட்டுரை வாசித்தார்.
மலேசியா, பினாங்கு, கோலாலம்பூர், சயாம், சிங்கப்பூர், இலங்கை போன்ற நாடுகளுக்குப் பயணம் செய்து, தமிழ்ச் சங்கக் கூட்டங்களிலும், கருத்தரங்குகளிலும் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். கவிதை வாசிப்பு, சொற்பொழிவு என்று வானொலி மூலமும் பல இலக்கிய நிகழ்வுகளை முன்னெடுத்தார்.
பொறுப்புகள்
- மன்னார்குடி பாரதியார் வாசக சாலையின் துணைச் செயலாளர்.
- திருவையாறு புத்துலகச் சிற்பகத்தின் துணைத் தலைவர்.
- தமிழகப் புலவர் குழுச் செயலாளர்.
- தஞ்சாவூர் தமிழ்ச் சங்கத் துணைத் தலைவர்.
- பாரதிதாசன் பல்கலைக்கழக பாடத் தமிழ் நூலாக்க நுண்ணாய்வினர்.
பதிப்பு
கோவை. இளஞ்சேரன், 1963-ல், ‘கலைக்குடில் வெளியீட்டகம்’ என்பதைத் தொடங்கி, அதன் மூலம் தனது நூல்களை வெளியிட்டார். 1983-ல், ‘சேரனார் அச்சகம்’ என்பதைத் தோற்றுவித்தார். ‘சூடாமணி நிகண்டு’ நூலைப் பதிப்பித்தார்.
விருதுகள்
- கவிஞர் கோ பட்டம்
- சிலம்புச் சேரனார் பட்டம்
- தமிழக அரசின் பாவேந்தர் விருது
- தமிழக அரசின் நல்லாசிரியர் விருது
- நாகைத் தமிழ்ச் சங்க விருது
மறைவு
வயது மூப்பால் 2000த்தை ஒட்டி இளஞ்சேரன் காலமானார்.
நாட்டுடைமை
தமிழக அரசால் கோவை. இளஞ்சேரனின் நூல்கள் 2008-ல், நாட்டுடைமை ஆக்கப்பட்டன.
ஆவணம்
இளஞ்சேரனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு புலவர் மதி, ‘மாணவர் ஆற்றுப்படை’ என்ற நூலை எழுதினார். மா. கவிதா, ‘கவிஞா்கோ கோவை இளஞ்சேரன்’ என்ற தலைப்பில் இளஞ்சேரனின் வாழ்க்கையை எழுதினார். நாகப்பட்டினத்தில் உள்ள புறநகர்ப் பகுதி ஒன்றுக்கு கோவை. இளஞ்சேரனின் நினைவாக ‘இளஞ்சேரன் நகர்’ என்ற பெயர் சூட்டப்பட்டது. தமிழ் இணையக் கல்விக்கழகத்தில் நாட்டுடைமை ஆக்கப்பட்ட இளஞ்சேரனின் நூல்கள் சில ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.
இலக்கிய இடம்
கோவை. இளஞ்சேரன் அடிப்படையில் கவிஞர். திராவிட இயக்க ஆதரவாளர். அவ்வியக்கத்தின் கொள்கைகளும் லட்சியங்களும் அழகியல் சார்ந்து இவரது படைப்புகளில் வெளிப்பட்டன. கலைஞர் மு. கருணாநிதியால் தனது கவிதைகளுக்காகப் பாராட்டப்பட்டார்.
நூல்கள்
- இளைஞா கேள்
- அண்ணாவின் வாழ்த்து
- வள்ளுவர் வாழ்த்து
- இமயம் இலக்கணம்
- இமயம் தமிழ்ப் பொழில்
- கோவை. இளஞ்சேரன் கவிதைகள் (இரண்டு தொகுதிகள்)
- நகைச்சுவை நாடகங்கள்
- மறைமலையடிகளார் நினைவு மலர்
- அறிவியல் திருவள்ளுவம்
- ஆராய்ச்சிக் கட்டுரைகள்
- இலக்கியம் ஒரு பூக்காடு
- குறள் நானூறு (தெளிவுரையுடன்)
- சிறியா நங்கை (வரலாற்று நாடகக் காப்பியம்)
- சூடாமணி நிகண்டு (பதிப்பாசிரியர்)
- தமிழ்மாலை
- திருவள்ளுவத்தில் பகுத்தறிவு
- நாகப்பட்டிணம் (நகரின் தொன்மை முதல் வரலாற்று ஆய்வு)
- பட்டி மண்டப வரலாறு (கிமு 1500 முதல் 1995 வரையிலான திறனாய்வு)
- பாரதியின் இலக்கியப் பார்வை (திறனாய்வு)
- புதையலும் பேழையும் (ஆய்வுக் கட்டுரைகள்)
- முல்லை மணக்கிறது (இலக்கியத் திறனாய்வு)
- தடம்புரண்ட தமிழ் மரபுகள்
- முத்துக்கோவை
- மணியான பேச்சு
- அக்கரை வானொலியில் இக்கரை இலக்கியம்
- புதையலும் பேழையும்
- தவத்திரு குன்றக்குடி அடிகளார் பொன்விழா மலர்
- இலந்தை முதல் இன்று வரை
உசாத்துணை
✅Finalised Page