பிச்சினிக்காடு இளங்கோ: Difference between revisions
Tamizhkalai (talk | contribs) No edit summary |
m (Tamilwiki Bot 1 moved page மாரிமுத்து ஆறுமுகம் இளங்கோ (பிச்சினிக்காடு இளங்கோ) to பிச்சினிக்காடு இளங்கோ without leaving a redirect: Title changed by ASN) |
(No difference)
|
Revision as of 10:00, 23 June 2023
மாரிமுத்து ஆறுமுகம் இளங்கோ (பிச்சினிக்காடு இளங்கோ; பிறப்பு: 1952) கவிஞர், எழுத்தாளர், பட்டிமன்றப் பேச்சாளர், இதழாளர். தமிழ்நாட்டிலும் சிங்கப்பூரிலும் பணியாற்றினார். பல நாடகங்களை எழுதி அரங்கேற்றினார். தனது இலக்கிய முயற்சிகளுக்காக தமிழகத்திலும் சிங்கப்பூரிலும் பல்வேறு விருதுகள் பெற்றார்.
பிறப்பு, கல்வி
மாரிமுத்து ஆறுமுகம் இளங்கோ என்னும் பிச்சினிக்காடு இளங்கோ, தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், அத்திவெட்டி கிராமத்தைச் சேர்ந்த பிச்சினிக்காட்டில், 1952-ல், மா. ஆறுமுகம் - லட்சுமி அம்மாள் இணையருக்குப் பிறந்தார். பட்டுக்கோட்டை ஆண்கள் உயர்நிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வி கற்றார். கோவையிலுள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் வேளாண்மையில் இளம் அறிவியல் (B. Sc. (Hons.) Agriculture) பட்டம் பெற்றார்.
தனி வாழ்க்கை
பிச்சினிக்காடு இளங்கோ, தமிழக அரசின் வேளாண்துறையில் அதிகாரியாகப் பணியாற்றினார். தமிழகத்திலும் சிங்கப்பூரிலும் வானொலியில் பணியாற்றினார். இதழாளராகச் செயல்பட்டார். சிங்கப்பூர் MDIS (Management Development Institute of Singapore) கல்வி நிறுவனத்தில் மேலாளராகப் பணிபுரிந்தார்.
இலக்கிய வாழ்க்கை
பிச்சினிக்காடு இளங்கோ பள்ளிப் பருவத்திலேயே கவிதைகள் எழுதினார். அண்ணா மறைவின் போது இரங்கல் கவிதை எழுதினார். பகல்தாசன் (பட்டுக்கோட்டை கல்யாணசுந்தர தாசன்), சோழநாடன், கோடியூர் கண்ணதாசன், மாயி, சுதா இளங்கோ, கலை இளங்கோ என்று பல புனைபெயர்களில் எழுதினார். அமுதசுரபி, தாமரை, புதிய பார்வை, குமுதம், யுகமாயினி, கல்கி, மங்கையர் மலர், தீராநதி, தினமணி கதிர், கவிதை உறவு, புதுகைத் தென்றல், கிழக்கு வாசல் உதயம் போன்ற தமிழக இதழ்களில் எழுதினார். சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் இருந்து வெளியாகும் தமிழ் முரசு, தமிழ் நேசன், தமிழ் மலர், தமிழ் ஓசை போன்ற இதழ்களில் கவிதை, கட்டுரைகள் எழுதினார். இணைய தளங்களிலும், இணைய இதழ்களிலும் எழுதினார்.
பல கவியரங்குகளில் கலந்துகொண்டு கவிதைகள் படைத்தார். பட்டிமன்றப் பேச்சாளராகச் செயல்பட்டார். கவிதை, கட்டுரை, நாடகம் என இருபதுக்கும் மேற்பட்ட நூல்களைப் படைத்தார். இவரது படைப்புகளை முனைவர் பட்டத்திற்காக மாணவர்கள் சிலர் ஆய்வு செய்தனர். இவரது கவிதைகள் கன்னடத்தில் மொழிபெயர்க்கப்பட்டு நூலாக வெளிவந்தது.
இதழியல் வாழ்க்கை
பிச்சினிக்காடு இளங்கோ, தமிழ்நாட்டில் இருந்து வெளிவந்த ‘உழவர் செல்வம்’ என்ற இதழின் ஆசிரியராகப் பணியாற்றினார். சிங்கப்பூரிலிருந்து வெளிவந்த ‘சிங்கைச் சுடர்’ மாத இதழின் ஆசிரியாகப் பணிபுரிந்தார். ‘புதிய நிலா’ இதழின் பொறுப்பாசிரியராகப் பணியாற்றினார். ‘மக்கள் மனம்’ எனும் மாத இதழின் ஆசிரியராகப் பணிபுரிந்தார்.
வானொலி வாழ்க்கை
பிச்சினிக்காடு இளங்கோ, திருச்சி வானொலி நிலையத்தில் பணியாற்றினார். வானம்பாடி கிராமிய இசைப்பாடல்களை வாரந்தோறும் எழுதி ஒலிபரப்பினார். ‘கொட்டும் முரசு’ நிகழ்ச்சியை எழுதிப் படைத்தார். ‘கிராமம் போவோமே’, ‘ஊர்க்கூட்டம்’, ‘ஊர்மணம்’, ‘நாடகம்’ எனப் பல கிராமம் சார்ந்த நிகழ்ச்சிகளைப் படைத்தார்.
சிங்கப்பூர் என்டியுசி வானொலியில் நிகழ்ச்சித் தயாரிப்பாளராகவும், ஒலிபரப்பாளராகவும் பணியாற்றினார். சிங்கப்பூர் ஒலிபரப்புக் கழகம், ஒலி 96.8-ல் பல தொடர் நிகழ்ச்சிகளை நடத்தினார். வானொலி நாடகங்கள், இசைச் சித்திரங்கள், உரைச் சித்திரங்கள் எனப் பலவற்றைப் படைத்தார்.
இசை வாழ்க்கை
சிங்கப்பூர் செண்பக விநாயகர் ஆலயத்திற்காக இசைப்பாடல் எழுதி குறுந்தகடாக வெளியிட்டார்.
நாடக வாழ்க்கை
‘பதிவதி ஒரு காதல்’, ‘புதுமைப்பெண்’, ‘ஸ்திரீ’ போன்ற நாடகங்களை எழுதி அரங்கேற்றினார். ‘விலங்குப்பண்ணை' என்பது இவர் மொழிபெயர்த்த நாடகம்.
அமைப்புச் செயல்பாடுகள்
பிச்சினிக்காடு இளங்கோ, சிங்கப்பூரில் ‘கவிமாலை’ என்ற கவிதை இலக்கிய அமைப்பைத் தொடங்கினார். அதன் மூலம் பல புதிய இளந்தலைமுறைக் கவிஞர்களை உருவாக்கினார். கவிதை ஆர்வமுடையோரை ஊக்குவித்தார். கவிமாலை மூலம் புரவலர்கள் உதவியுடன் ‘கணையாழி இலக்கிய விருது' என்பதை ஏற்படுத்தினார். 2003 முதல் சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியத்திற்கும் மொழி வளர்ச்சிக்கும் தொடர்ந்து தொண்டாற்றிய சிறந்த இலக்கியப் படைப்பாளிகளுக்கு இவ்விருது வழங்கப்படுகிறது.
பொறுப்புகள்
- சிங்கப்பூர் எழுத்தாளர்கழகத்தின் செயலவை உறுப்பினராகப் பணியாற்றினார் .
- கடற்கரைச் சாலை கவிமாலை அமைப்பை நிறுவினார். அதன் தலைவராகச் செயல்பட்டார்.
- தமிழர் பேரவையின் மேனாள் உதவிச் செயலாளர்.
விருதுகள்
- தமிழ்மொழிப் பண்பாட்டுக் கழகம் வழங்கிய இலக்கிய விருது
- பட்டுக்கோட்டை த.வீ.சி அறக்கட்டளை விருது
- சேலம் தாரைப்புள்ளி அறக்கட்டளையும் எழுத்துகளம் இலக்கிய அமைப்பும் வழங்கிய சிறந்த கவிதை நூலுக்கான பரிசு
- மதுக்கூர் ரோடரி சங்கத்தின் ‘மண்ணின் மைந்தர்’ விருது
- சென்னை என். தங்கமுத்து சீதாலட்சுமி நினைவு அறக்கட்டளையின் ‘கவிச்சுடர்’ விருது
- தமிழ்மொழிப் பண்பாட்டுக் கழகத்தின் பாரதியார் விருது
- கவிமுகில் அறக்கட்டளை வழங்கிய ‘கவிப் பேரரருவி ஈரோடு தமிழன்பன் விருது’
- வல்லமை.காம் அமைப்பின் வல்லமையாளர் விருது
- தி.மு.க. இலக்கிய அணி வழங்கிய தமிழவேள் கலைஞர் இலக்கியப் பொற்கிழி விருது
- கவிஞர் தாராபாரதி அறக்கட்டளை விருது
- இலக்குவனார் விருது
- ஜெயந்தன் படைப்பிலக்கிய விருது
- சிங்கப்பூர் மக்கள் கவிஞர் மன்றம் வழங்கிய மக்கள் கவிஞர் விருது
- சிங்கப்பூர் கவிமாலையின் சிறந்த கவிதை நூலுக்கான பரிசு
- சிங்கப்பூர் அரசின் தங்கப் பேனா முனை - ஊக்கப் பரிசு
- சிங்கப்பூர் தேசிய சுற்றுப்புற வாரியத்தின் சுற்றுச் சூழல் இசைப்பாடல் போட்டியில் நான்கு மொழிப்பாடல்களில் சிறப்புப் பரிசு
- சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம், ஆனந்தபவன் உணவகம் இணைந்து வழங்கிய மு.கு. இராமச்சந்திரா புத்தகப் பரிசு - ‘அங்குசம் காணா யானை’ கவிதை நூலுக்கு.
இலக்கிய இடம்
பிச்சினிக்காடு இளங்கோ மரபில் தேர்ச்சி பெற்ற கவிஞர். கிராமியம் சார்ந்தும் உழவுத் தொழில் சார்ந்தும் பல கவிதைகளை எழுதினார். திருக்குறளின் காமத்துப்பாலை அடிப்படையாக வைத்து இவர் எழுதிய கவிதைகள் வரவேற்பைப் பெற்றன. தன் மன உணர்வுகளையும் வாழ்வியல் அனுபவங்களையும் கவிதையாக்கினார்.
நூல்கள்
கவிதை நூல்கள்
- நானும் நானும்
- காதல் தீ
- அரிநெல்
- பூமகன்
- என்னோடு வந்த கவிதைகள்
- வியர்வைத் தாவரங்கள்
- காதல் வங்கி
- அங்குசம் காணா யானை
- வியர்வையூர்
- உயிர்க் குடை
- மழை சிந்தும் குடை
- இரவின் நரை
- பூ மகன்
- வெளிச்ச தேவதை
- கிளி மொழிகள்
- தூரிகைச் சிற்பங்கள்
- அந்த நான் இல்லை நான்
- முதல் ஓசை (மரபுக்கவிதை)
- வீரமும் ஈரமும் (கவிதை நாடகம்)
- அதிகாலைப் பல்லவன் (கவிதைப் புதினம்)
கட்டுரை நூல்கள்
- ஆதலினால் கவிதை செய்தேன் (கவிதை நூல்களுக்கு வழங்கிய முன்னுரைகளின் தொகுப்பு)
- அதன்பேர் அழகு (கவிதைகள் பற்றிய கட்டுரை)
- மழை விழுந்த நேரம் (கவிதை நூல்கள் பற்றிய கட்டுரை)
- சிங்கைச் சுடரின் தலைமனம் (தலையங்கங்களின் தொகுப்பு)
- எப்போதும் எங்கும் எதிலும் முதலில்
உசாத்துணை
- பிச்சினிக்காடு இளங்கோவின் 'என்னோடு வந்த கவிதைகள்' நூல் விமர்சனம்: கீற்று தளம்
- பிச்சினிக்காடு இளங்கோ வாழ்க்கைக் குறிப்புகள்
- பிச்சினிக்காடு இளங்கோ கவிதைகள்: வல்லமை
- பிச்சினிக்காடு இளங்கோ கவிதைகள்: சொல்வனம்
- பிச்சினிக்காடு இளங்கோ வலைத்தளம்
- பிச்சினிக்காடு இளங்கோ நூல்கள்: மெரீனா புக்ஸ் தளம்
- கவிமாலை
🖒 First review completed
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.