under review

திருவேங்கடம் (தெருக்கூத்து): Difference between revisions

From Tamil Wiki
No edit summary
(; Added info on Finalised date)
 
Line 49: Line 49:


{{Finalised}}
{{Finalised}}
{{Fndt|21-Jan-2025, 18:39:52 IST}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Latest revision as of 01:04, 22 January 2025

திருவேங்கடம் (நன்றி: மின்னம்பலம்)

திருவேங்கடம் (பிறப்பு: அக்டோபர் 10, 1941) தமிழ் தெருக்கூத்துக் கலைஞர்களில் ஒருவர். தெருக்கூத்து மற்றும் நாடகப் பிரதி உருவாக்குனர். கூத்துப்பாடல்களின் ராக, தாளம், பாத்திரப் பொருத்ததிற்கேற்ப பாடல்கள் எழுதுவதில் புலமை உடையவர். நாடகம், சினிமா ஆகியவற்றிற்கும் பாடல்கள் எழுதினார். புரிசை துரைசாமி கண்ணப்ப தம்பிரான் கூத்து மன்றத்தின் முதன்மை பிரதி உருவாக்குனர். பிற குழுக்களுக்கும் எழுதுவார்.

வாழ்க்கைக் குறிப்பு

திருவேங்கடம் தமிழ்நாட்டின் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் அக்டோபர் 10, 1941-ல் பிறந்தார். தந்தை முனுசாமி கூத்துக் கலைஞர். பத்தாம் வகுப்பு வரை பயின்றார். புலவர் படிப்பைத் தொலைதூரக் கல்வி மூலம் பயின்றார். திருவேங்கடம் ஐந்தாம் தலைமுறையாக கூத்தில் ஈடுபாடு கொண்டவர். முன்னோர் மாசிலாமணி கவிராயர், தங்கவேலு வாத்தியார், தாத்தா லட்சுமணதாசர் ஆகியோர் பிரதி உருவாக்குனர்கள். மாசிலாமணி பாரதக்கூத்து பிரதி உருவாக்குனர்களில் முக்கியமானவர்.

கலை வாழ்க்கை

கூத்து

திருவேங்கடம் மூன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோதே தந்தை முனுசாமியுடன் கூத்து நடக்கும் இடங்களில் பிரதி உருவாக்க உதவுவதில் ஈடுபட்டார். ஆரணி பக்கத்தில் வாழ்ந்த குப்புசாமிப் புலவர் இவரின் ஞான ஆசிரியர். இவர் மூலம் வீரமாமுனிவரின் சதுரகராதி, நிகண்டுகளை வாசித்தார். முன்னோர்கள் மூலம் தெருக்கூத்திற்கு பிரதி எழுதவும், தனிப்பட்ட ஆர்வத்தால் நாடகத்திற்கு (நாவல்ஸ்) பிரதி எழுதவும் கற்றுக் கொண்டார். ராமாயணம், மகாபாரதம், புராணம் முதலியவற்றின் கதைகளுக்கு இயல்பாக கூத்துப் பிரதிகளை எழுதினார். தெருக்கூத்தில் தெரு, விருத்தம், தபதை, கந்தார்த்தம், கொச்சகம், சீசபத்தியம் என பல்வேறு வகையிலான பாடல்கள் வரும் ராக தாளத்திற்கு ஏற்ப எழுத வேண்டியது இன்றியமையாததால் தெருக்கூத்துப் பிரதியாக்கம் நாடகத்திற்கு எழுதுவதை விட முக்கியத்துவம் வாய்ந்தது; உழைப்பைக் கோருவது.

திருவேங்கடம் பதினாறு கூத்துப் பிரதிகள் எழுதியுள்ளார். கண்ணப்ப தம்பிரான் கூத்து குழுவிற்காக பதினாறு கூத்துப் பிரதிகளை உருவாக்கினார். இந்திரஜித், தக்கயாகம், சூர்ப்பனகை சபதம், காண்டகாவனத் தகனம் ஆகியவை இவர் எழுதிய கூத்துப் பிரதிகளில் சில. இவருடைய கூத்துப் பிரதிகளைக் கொண்டு கண்ணப்ப தம்பிரான் பிரான்ஸ், நார்வே அகிய இடங்களில் கூத்து அரங்கேற்றம் செய்தார்.

நாடகம்

திருவேங்கடம் 162 நாடகப் பிரதிகள் எழுதினார். ஆன்மிகம், சமூகம் சார்ந்த கருத்துக்களை மையமாகக் கொண்டு நாடகங்களை எழுதினார். ராஜா என்பவர் நாடகப் பிரதிகளில் காட்சி, வசனம் சார்ந்து எழுதுவதற்கான் உத்திகளை இவருக்கு கற்றுக் கொடுத்தார். முதன்முதலில் எஸ்.ஆர். ராமகிருஷ்ணனுக்கு 'புத்தர் ஆசிய ஜோதி', 'நீதியின் கண்கள்' ஆகிய நாடகங்களை எழுதி அளித்தார். தோணிமோடு மார்க்கபந்து இவரை பிரபலமாக்கினார். இவருக்காக பல நாடகங்களை எழுதினார். 'பீஷ்மர்', 'இந்திரஜித்' ஆகிய நாடகங்கள் முக்கியமானவை. திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த புலவர் கோவிந்தனுக்காக 1967-ல் 'உதயசூரியன்' என்ற நாடகத்தை எழுதினார்.

விருது

  • காஞ்சி கலை இலக்கிய வளர்ச்சி மன்றத்தின் சார்பில் மாசிலாமணி வாத்தியார் விருது.

மதிப்பீடு

சங்கரதாஸ் சுவாமிகள் காலத்தில் பாடல்களுக்கு அதிக முக்கியத்துவமும், வசனத்திற்கு குறைந்த முக்கியத்துவமும் கொடுக்கப்பட்டது. ஒரு நாடகத்தில் 120 பாடல்கள் இருக்கும். ஆனால் இடையிடையே இரு வரிகளில் வசனங்கள் இருக்கும். காலமாற்றத்தின் வசனத்தின் முக்கியத்துவம் அதிகமானது. இந்தகாலகட்டத்தில் முக்கியமான நாடக, கூத்துப் பிரதி உருவாக்குனராக திருவேங்கடம் இருந்தார். நாடகத்தை விட கூத்துக்கான பாடல்களில் சொல் தேர்வு முக்கியமானது என்பது குறிப்பிடத்தக்கது.

எழுதிய கூத்துப் பிரதிகள்

  • இந்திரஜித்
  • தக்கயாகம்
  • சூர்ப்பனகை சபதம்
  • காண்டகாவனத் தகனம்

எழுதிய நாடகங்கள்

  • பீஷ்மர்
  • கன்னிகா
  • பரமேஸ்வரி
  • பத்தினி கோயில்
  • சீதா கல்யாணம்
  • அனுமன் தூது
  • வாலி மோட்சம்
  • சூர்ப்பனகை சபதம்
  • கண்ணன் காட்டிய வலி
  • வீரபாஞ்சாலி சபதம்
  • ஏமாலிக் கணவன்
  • அஸ்வத்தாமன்
  • படுகளம்
  • மனித தெய்வம்
  • அன்னைக்கு ஆராதனை
  • மனைவியின் மாங்கல்யம்
  • மாலையாகாத மலர்
  • நெருப்பில் பூத்த மலர்
  • இது யாரு கட்டிய தாலி
  • தாய்க்கு மகள் தந்த தாலி
  • நான் கட்டிய தாலி
  • கண் சிவந்தால் மண் சிவக்கும்
  • பாசம் தந்த பரிசு

உசாத்துணை


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 21-Jan-2025, 18:39:52 IST