under review

ஜி.ஏ. வைத்தியராமன்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
(Added First published date)
 
(One intermediate revision by one other user not shown)
Line 47: Line 47:


[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
{{Second review completed}}
 
 
{{Finalised}}
 
{{Fndt|11-Jun-2024, 09:08:21 IST}}

Latest revision as of 14:09, 13 June 2024

ஜி.ஏ. வைத்தியராமன் (கணபதி அக்ரஹாரம் அண்ணாதுரை ஐயர் வைத்தியநாதன்) (1865 – 1930). எழுத்தாளர், இதழாளர், பதிப்பாளர், புத்தக விற்பனையாளர். தமிழில் இதழ்களைத் தொடங்கி நடத்தினார். விவசாயம் சார்ந்த முன்னோடி இதழான 'பிழைக்கும் வழி', பொதுமக்களின் குரலாக ஒலித்த 'ஜனாபிமானி' போன்ற இதழ்களின் ஆசிரியர்.

பிறப்பு, கல்வி

கணபதி அக்ரஹாரம் அண்ணாதுரை ஐயர் வைத்தியநாதன் என்னும் ஜி.ஏ. வைத்தியராமன், திருவையாறு அருகே உள்ள கணபதி அக்ரஹாரத்தில், 1865-ல், அண்ணாதுரை ஐயர் – அன்னபூரணி அம்மாள் இணையருக்குப் பிறந்தார். திருவையாறில் பள்ளிக் கல்வி பயின்றார். இளம் வயதிலேயே தந்தையை இழந்தார். தாய்மாமாவின் ஆதரவுடன் கல்வி கற்றார். திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரியில் பயின்று பி.ஏ. பட்டம் பெற்றார்.

தனி வாழ்க்கை

ஜி.ஏ. வைத்தியராமன் அரசாங்க நிதித்துறைச் செயலகத்தில் பணியாற்றினார். பின் அரசுப் பணியில் இருந்து விலகி இதழ்களைத் தொடங்கி நடத்தினார். மணமானவர். மகன்: ஜி.வி. கல்யாணம். மகள்கள்: ராஜலட்சுமி, சுந்தராம்பாள்.

இலக்கிய வாழ்க்கை

ஜி.ஏ. வைத்தியராமன், வி.எஸ். ஸ்ரீனிவாஸ சாஸ்திரி தொடங்கி நடத்திய செர்வண்ட் ஆஃப் இந்தியா (Servant of India) இதழில் சில கட்டுரைகள் எழுதினார். தனது இதழ்களில் தலையங்கங்களையும், பத்திராதிபர் குறிப்புகளையும், கட்டுரைகளையும் எழுதினார்.

ஜனாபிமானி இதழ்
பிழைக்கும் வழி இதழ்

இதழியல்

ஜனாபிமானி

ஜி.ஏ. வைத்தியராமன், 1908-ல், ஜனாபிமானி என்ற இதழைத் தொடங்கினார். இவ்விதழில் விவசாயம், கல்வி, போர் பற்றிய செய்திகள், கைத்தொழில், சுகாதாரம், சிறுகதைகள், நாவல் தொடர்கள், பெண்களுக்கான செய்திகள், தேசத் தலைவர்களின் வரலாறுகள் போன்றவை வெளியாகின. இதழின் உள்நாட்டு சந்தா: நான்கு ரூபாய்; வெளிநாட்டுச் சந்தா: ஆறு ரூபாய்.

தி வெல்த் ஆஃப் இந்தியா (The Wealth of India)

ஜி.ஏ. வைத்தியராமன், தனது சகோதரர் ஜி.ஏ. நடேசன் நடத்திய ஆங்கில இதழ்களால் ஊக்கம் பெற்றார். 'The Wealth of India' என்ற பெயரில் ஆங்கில மாத இதழ் ஒன்றைத் தொடங்கினார். அதில் விவசாயம், வர்த்தகம், தொழில், பொருளாதாரம், கூட்டுறவு, வங்கியியல், காப்புரிமை, ‘இன்ஷ்யூரன்ஸ்’ வியாபார வழிமுறைகள், விஞ்ஞான-தொழில்நுட்பக் கல்வி போன்ற செய்திகள் வெளிவந்தன. இதழின் ஆண்டு சந்தா மூன்று ரூபாய். இதழில் வெளியான கட்டுரைகளுக்குச் சன்மானம் அளிக்கப்பட்டது.

பிழைக்கும் வழி

ஜி.ஏ. வைத்தியராமன், விவசாயம் சார்ந்த செய்திகளுக்கு முக்கியத்துவம் அளிப்பதற்காக, 1909-ல், பிழைக்கும் வழி என்ற மாத இதழைத் தொடங்கி நடத்தினார். இவ்விதழில் விவசாயம், கைத்தொழில், வர்த்தகம், கல்வி, சுகாதாரம் தொடர்பான செய்திகள் வெளிவந்தன. தேசியத் தலைவர்கள் வரலாறு, காங்கிரஸ் செய்திகள், சிறுகதைகள் போன்றவற்றிற்கும் பிழைக்கும் வழி முக்கியத்துவம் அளித்தது

வளையல் உடன்பாடு - நாவல்

பதிப்பு

ஜி.ஏ. வைத்தியராமன், தனது சகோதரர் நடேசன் நடத்திய ஜி.ஏ. நடேசன் & கோவை முன் மாதிரியாகக் கொண்டு, 1908-ல், ஜி.ஏ. வைத்தியராமன் அண்ட் கம்பெனி என்ற பதிப்பகத்தைத் தொடங்கினார். தன் பதிப்பகம் மூலம், 'காதல் வெற்றி', 'அன்புக்கும் அழிவோ', 'பெற்ற மனம் பித்து', 'ஸஸேமிரா', 'வளையல் உடன்பாடு' போன்ற நாவல்களையும், 'தாதாபாய் நௌரோஜியின் வாழ்க்கை வரலாறு', 'ஹாஸ்ய மஞ்சரி', 'ஐரோப்பிய யுத்தம்' போன்ற நூல்களையும் வெளியிட்டார்.

ஜி.ஏ. வைத்தியராமன் பல்வேறு இதழ்கள், பதிப்பகங்களின் முகவராகவும், புத்தக விற்பனையாளராகவும் செயல்பட்டார்.

பொறுப்புகள்

  • ஜி.ஏ. வைத்தியராமன், ராயல் புள்ளியியல் சங்கத்தின் உறுப்பினர்.
  • லண்டன் ராயல் எகனாமிக் சொசைட்டியின் உறுப்பினர்

மறைவு

ஜி.ஏ. வைத்தியராமன், 1930-ல், காலமானார்.

மதிப்பீடு

ஜி.ஏ. வைத்தியராமன் விவசாயம் சார்ந்த செய்திகளை, தொழில்நுட்பங்களை, புதிய முயற்சிகளை ஏழை கிராம மக்கள் அறிய உழைத்தவராகவும், இந்தியாவின் பொருளாதார மேம்பாடு பற்றிய பல அரிய தகவல்களைத் தனது இதழ்களில் பதிப்பித்த முன்னோடி இதழாளராகவும் அறியப்படுகிறார்.

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 11-Jun-2024, 09:08:21 IST