under review

பிழைக்கும் வழி

From Tamil Wiki
பிழைக்கும் வழி இதழ் - டிசம்பர், 1918

பிழைக்கும் வழி (1909) விவசாயம் தொடர்பாக வெளிவந்த தமிழின் முன்னோடி இதழ்களுள் ஒன்று. இதன் ஆசிரியர் ஜி.ஏ. வைத்தியராமன்.

(’பிழைக்கும் வழி’ என்ற தலைப்பில், 1948-ல் தமிழ்த் திரைப்படம் ஒன்றும் வெளியாகியுள்ளது)

பிரசுரம், வெளியீடு

விவசாயம் சார்ந்த செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில், பதிப்பாளர் ஜி.ஏ. நடேசனின் சகோதரரான ஜி.ஏ. வைத்தியராமன், பிழைக்கும் வழி என்ற இதழை, ஜனவரி 1909-ல் தொடங்கினார். இவர், 1908-ல் ஜனாபிமானி என்ற இதழையும் தொடங்கி நடத்தினார்.

60 பக்கங்களுடன் வெளிவந்த பிழைக்கும் வழி இதழின் தனிப்பிரதி விலை: உள்நாடு - ஆறணா; வெளிநாடு - எட்டணா. ஆண்டுச் சந்தா: உள்நாடு - நான்கு ரூபாய்; வெளிநாடு - ஆறு ரூபாய்.

உள்ளடக்கம்

இதழின் முகப்புப் பக்கத்தில், “விவஸாயம், வியாபாரம், கைத்தொழில், பிரஜாலக்ஷணம், வித்தியா விஷயங்கள் அடங்கிய சகலருக்கும் உபயோகமான ஒரு மாதாந்தத் தமிழ்ப் பத்திரிகை” என்ற குறிப்பு இடம் பெற்றது. இதழின் பெயரான ‘பிழைக்கும் வழி’ என்பதன் கீழ் PRACTICAL LIFE என்ற ஆங்கில வாசகம் இடம்பெற்றது.

’பத்திராதிபர் குறிப்புகள்’ என்ற பத்தியில், இதழில் வெளியான சிறப்புப் பகுதிகள் குறித்த சுருக்க அறிமுகமும், ஆசிரியரின் குறிப்புகளும் இடம் பெற்றன. விவசாயம், கைத்தொழில், வர்த்தகம், கல்வி, சுகாதாரம் தொடர்பான செய்திகள் வெளிவந்தன. தேசியத் தலைவர்கள் வரலாறு, காங்கிரஸ் செய்திகள், இலக்கியம் போன்றவற்றிற்கும் இவ்விதழ் முக்கியத்துவம் அளித்தது.

சிறார்களுக்கான பகுதிகள், பொது வணிகம் தொடர்பான செய்திகள், வர்த்தமானக் குறிப்புகள், ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கான பக்கங்கள், மாவட்டச் செய்திக் குறிப்புகள் போன்றவற்றுக்கும் இவ்விதழ் இடமளித்தது. மாதப் பஞ்சாங்கம் தவறாது இடம் பெற்றது. விளம்பரங்களும் இவ்விதழில் வெளியாகின. பிற இதழ்களிலிருந்தும் செய்திக் குறிப்புகள் இவ்விதழில் எடுத்தாளப்பட்டன. சிறுகதைகளும், புத்தக விமர்சனங்களும் வெளியாகின.

கட்டுரை எழுதுபவர்களுக்கான கோரிக்கையாக, “வியாஸம் எழுதுகிறவர்கள் கவனிக்க வேண்டியது: எழுதியவர்களுக்குத் தக்க மரியாதை செய்யப்படும். பேசும் தமிழ்தான் தேவை. கடினமான தமிழ் உதவாது.” என்ற குறிப்பு இடம்பெற்றது. கட்டுரை எழுதுபவர்களுக்கு சன்மானம் அளிக்கப்பட்டது. 1909 முதல் கோவையிலிருந்து வெளிவந்துகொண்டிருந்த ‘வித்யா விஹாரிணி இதழ், செப்டம்பர் 1912 முதல் ‘பிழைக்கும் வழி’ இதழுடன் இணைக்கப்பட்டு வெளியானது.

பங்களிப்பாளர்கள்

  • நா. ராமபத்திர தீக்ஷிதர்
  • எம்.சி.எஸ். அநந்தபத்மநாப ராவ்
  • டி.ஸி.வி. ரமணய்யர்
  • வெங்கட்ராம சர்மா
  • ஆர்.என். முகர்ஜி
  • ரகுநந்த சாஸ்திரி
  • தி.தே. ஸ்ரீ மூர்த்தி
  • எச்.ஸி. ஸாம்ப்ஸன்ட்
  • வி. கிருஷ்ணசாமி ஐயர்
  • ராவ்பஹதூர் நாகோஜி ராயர்
  • ரோமே சந்திரதத்

மற்றும் பலர்

இதழ் நிறுத்தம்

பிழைக்கும் வழி, ஜி.ஏ. வைத்தியராமன் 1930-ல் காலமான பின்னரும் சில ஆண்டுகாலம் தொடர்ந்து நடந்தது. 1936-ல், ‘ஞானாபிமானி’ என்று பெயர் மாற்றம் பெற்று வெளியானது. பின்னர் நின்று போனது.

மதிப்பீடு

'பிழைக்கும் வழி' எழுதப் படிக்கத் தெரிந்த குறுகிய தமிழ் வாசகர் தளத்தை ஆதாரமாகக் கொண்டு வெளியானது. அதனால் இதழ் விற்பனையில் சரிவைச் சந்தித்தது. அக்காலத்தில் வெளியான பொது வாசிப்புக்குரிய முன்னோடி இதழ்களுள் ஒன்றாக பிழைக்கும் வழி இதழ் மதிப்பிடப்படுகிறது.

உசாத்துணை


✅Finalised Page