being created

ஜா. தீபா

From Tamil Wiki
ஜா. தீபா

ஜா.தீபா (பிறப்பு: நவம்பர் 14, 1982) சிறுகதையாசிரியர், கட்டுரையாளர், ஆவணப்பட இயக்குநர், திரைப்பட உதவி இயக்குனர், திரைப்பட விமர்சகர், மேடைப் பேச்சாளர், ஊடகத்துறை சார்ந்த எழுத்தாளர்.

பிறப்பு, கல்வி

திருநெல்வேலி மாவட்டத்தில் நவம்பர் 14, 1982-ல் ஜானகிராமனுக்கும், பிரேமா நாகலட்சுமிக்கும் இரண்டாவது மகளாகப் பிறந்தார். உடன்பிறந்தவர்கள் ஒரு அக்காள் மற்றும் ஒரு அண்ணன். இவருடைய அண்ணன் ஜா. ராஜகோபாலன் எழுத்தாளர், இலக்கியச் செயல்பாட்டாளர். மீனாட்சிபுரம் அரசு மேல் நிலைப்பள்ளியிலும், பாளையங்கோட்டை சாரா தக்கர் பள்ளியில் பள்ளிக்கல்வி பயின்றார். சதகத்துல்லா அப்பா கல்லூரியில் பி.ஏ ஆங்கில இலக்கியமும், மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ தொடர்பியல் துறை பட்ட மேற்படிப்பும் பயின்றார்.

தனி வாழ்க்கை

செப்டம்பர் 16, 2013-ல் ஊடகவியலாளரான அய்யப்பன் மகாராஜனைத் திருமணம் செய்து கொண்டார். குழந்தைகள் பால மயூரா, ராஜ மித்ரா. தற்போது சென்னையில் வசித்து வருகிறார்.

ஜா. தீபா

இலக்கிய வாழ்க்கை

கல்லூரி காலம் தொடங்கி எழுதுவதில் விருப்பம் கொண்ட ஜா. தீபா பத்திரிகைகளில் எழுதத் தொடங்கினார். இவரின் முதல் சிறுகதைத் தொகுப்பான "நீலம் பூக்கும் திருமடம்" யாவரும் பதிப்பகம் மூலமாக 2018-ல் வெளிவந்தது. பயணக்கட்டுரைகள், விமர்சனக் கட்டுரைகள் எழுதி வருகிறார். துறை சார்ந்த எழுத்தாளர். ஊடகத்துறை சார்ந்து பல புத்தகங்கள் எழுதியுள்ளார்.

ஊடகத்துறை

தமிழில் உலக சினிமாகளுக்காக வெளிவந்த முதல் இதழான ’அயல் சினிமா’ வின் பொறுப்பாசிரியராக (2017-2019) இருந்தார். திரைப்படத்துறையில் உதவி இயக்குனர். தொலைகாட்சிகளில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு, தொடர்களுக்கு திரைக்கதை வசனங்கள் எழுதி வருகிறார். திரைப்படங்கள் பார்ப்பதில் உள்ள ஆர்வத்தினால் திரைப்படங்கள் குறித்து முதலில் எழுதத் தொடங்கினார். அதன் பிறகு சமூகம், கலை, அரசியல், சிறுகதைகள் என எழுத்து விரிந்துள்ளது. தமிழ் ஒளிப்பதிவாளர்கள், திரைமேதைகள் பற்றிய இவருடைய அறிமுகக்கட்டுரைகள் நூல்களாகியிருக்கின்றன. பெண் இயக்குனர்கள் பற்றிய ஆவணப்படுத்தல், சிறந்த தமிழ் இயக்குனர்கள் பற்றிய ஆவணப்படுத்தல், உலக சினிமா பற்றிய கட்டுரைகளை புத்தகங்களாக வெளியிட்டுள்ளார்.

ஆவணப்படம்

ஜா.தீபா முதன்மையாக ஆவணப்பட இயக்குநர். மரபணு மாற்றக் கத்தரிக்காய் பற்றிய ஆவணப்படம் குறிப்பிடத்தக்கது. திருப்புடைமருதூர் சுவரோவியங்கள் பற்றிய ஆவணப்படம் இயக்கியுள்ளார்.

இலக்கிய இடம்

மயூ பதிப்பகம் துவக்க விழா (நவ. 2023)

ஜா.தீபா பெண்களின் பிரச்சினைகளைப் பற்றி மேடைகளில் பேசுபவர். சிறுகதைகள் வழியாக பரவலாக இலக்கியக் கவனம் பெற்று வருகிறார். 'சமகால பெரு நகர வாழ்க்கையில் இவர் காட்டும் பெண் பாத்திரங்கள் ஏற்கனவே பொதுப் பார்வைக்கு பரிச்சயமானவையாக இருக்கலாம். ஆனால் கதையுலகிற்குள் அப்பாத்திரங்கள் உயிர்ப்புடன் உள்நுழையும் போது, வரலாற்றில் சமகாலத்தின் சரியான பிரதிபலிப்பாக பதிவாகின்றன. உயிர்ப்புடனும் நேர்மையாகவும் இவர் படைக்கும் கதாபாத்திரங்களின் மூலம், இவ்வகையில் மிகச் சிறந்த பங்களிப்பை இவர் செய்கிறார்' என்று கல்பனா ஜெயகாந்த் ஜா.தீபாவின் கதைகள் பற்றி சொல்கிறார்.

நவம்பர் 25, 2023-ல் ஜா.தீபா தனது மகள் மயூரா பெயரில் 'மயூ பதிப்பகம்’ என்ற பதிப்பகத்தை துவங்கினார். எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன்[1] மற்றும் தாயம்மாள் அறவாணன் இருவரும் பதிப்பகத்தை துவங்கி வைத்தனர். அதன் துவக்க விழா வெளியீடுகளாக 'மறைமுகம்’ என்ற சிறுகதைத்தொகுப்பும், 'மாபெரும் சபை (பாகம் 1)’ என்ற கட்டுரைத்தொகுப்பும் வெளியானது.

நூல்கள் பட்டியல்

சிறுகதைத் தொகுப்புகள்

  • நீலம் பூக்கும் திருமடம் (2018, யாவரும் பதிப்பகம்)
  • மறைமுகம் (2023, மயூ வெளியீடு)

கட்டுரை தொகுப்புகள்

  • பெண்ணென்று சொல்வேன் (2014, அந்திமழை பதிப்பகம்)
  • மேதைகளின் குரல்கள் (2016, யாவரும் பதிப்பகம்)
  • ஒளி வித்தகர்கள் - பாகம் 1 (2017, டிஸ்கவரி பதிப்பகம்)
  • மாதர் திரையுலகு (2018, யாவரும் பதிப்பகம்)
  • கதை to திரைக்கதை (2019, யாவரும் பதிப்பகம்)
  • ஒளி வித்தகர்கள் - பாகம் 2 (யாவரும் பதிப்பகம்)
  • மாபெரும் சபை - பாகம் 1 (2023, மயூ வெளியீடு)
  • கறுப்புத்திரை (2024, நீலம் பதிப்பகம்)

அடிக்குறிப்புகள்

உசாத்துணை


🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.