under review

கிருத்திகா: Difference between revisions

From Tamil Wiki
(Added First published date)
Line 30: Line 30:
====== வாழ்க்கை வரலாறு ======
====== வாழ்க்கை வரலாறு ======
[[சி.சுப்ரமணிய பாரதியார்|பாரதி]]யின் வாழ்க்கை வரலாற்றை ''The finger on the lute'' என்ற பெயரில் ஆங்கிலத்தில் எழுதியுள்ளார். ''யாழில் தவழும் விரல்'' என்ற தலைப்பு பாரதியாரின் ''வீணையடி நீ எனக்கு, மேவும் விரல் நானுனக்கு'' என்ற வரியிலிருந்து பெறப்பட்டது. முக்கியமான பல பாரதியார் பாடல்களை இந்நூலுக்காக கிருத்திகா தமிழாக்கம் செய்துள்ளார்.  
[[சி.சுப்ரமணிய பாரதியார்|பாரதி]]யின் வாழ்க்கை வரலாற்றை ''The finger on the lute'' என்ற பெயரில் ஆங்கிலத்தில் எழுதியுள்ளார். ''யாழில் தவழும் விரல்'' என்ற தலைப்பு பாரதியாரின் ''வீணையடி நீ எனக்கு, மேவும் விரல் நானுனக்கு'' என்ற வரியிலிருந்து பெறப்பட்டது. முக்கியமான பல பாரதியார் பாடல்களை இந்நூலுக்காக கிருத்திகா தமிழாக்கம் செய்துள்ளார்.  
==இறப்பு==
==மறைவு==
எழுத்தாளர் கிருத்திகா தனது 93-வது அகவையில் பிப்ரவரி 13, 2009-ல் சென்னையில் காலமானார்
எழுத்தாளர் கிருத்திகா தனது 93-வது அகவையில் பிப்ரவரி 13, 2009-ல் சென்னையில் காலமானார்
== இலக்கிய இடம் ==
== இலக்கிய இடம் ==
கிருத்திகா தமிழின் பெண் எழுத்தாளர்களில் தனித்தன்மை கொண்டவர். அவரது படைப்புகள் குறியீட்டுத் தன்மையுடன், அங்கதச்சுவையுடன் சமகால உயர்மட்ட அதிகார அரசியலை, ஆண்பெண் உறவை விவாதிப்பவை. "''அங்கதத்தைக் கையாண்ட ஒரே தமிழ்ப்பெண்ணெழுத்தாளர் அவரே"'' என்று எழுத்தாளர் ஜெயமோகன் குறிப்பிடுகிறார்.
கிருத்திகா தமிழின் பெண் எழுத்தாளர்களில் தனித்தன்மை கொண்டவர். அவரது படைப்புகள் குறியீட்டுத் தன்மையுடன், அங்கதச்சுவையுடன் சமகால உயர்மட்ட அதிகார அரசியலை, ஆண்பெண் உறவை விவாதிப்பவை. "''அங்கதத்தைக் கையாண்ட ஒரே தமிழ்ப்பெண்ணெழுத்தாளர் அவரே"'' என்று எழுத்தாளர் ஜெயமோகன் குறிப்பிடுகிறார்.

Revision as of 11:45, 18 June 2024

To read the article in English: Kiruthika. ‎

எழுத்தாளர் கிருத்திகா நன்றி : பசுபதிவுகள்
கிருத்திகா
கிருத்திகா
கிருத்திகா

கிருத்திகா(இயற்பெயர்: மதுரம் பூதலிங்கம், (1915 - பிப்ரவரி 13, 2009) தன் காலத்தை மீறிய வித்தியாசமான கதைக்களம் மற்றும் பாத்திரப்படைப்புகளைத் தந்த, குறிப்பிடத்தக்க பெண் எழுத்தாளர். அதிகார வர்க்கத்தின் செயல்பாடுகளை அங்கதச் சுவையுடன் புதினமாக எழுதியதில் முன்னோடி. தமிழிலும் ஆங்கிலத்திலும் பல நூல்களை எழுதினார். கிருத்திகா எழுதிய வாஸவேச்வரம் தமிழில் வெளிவந்த சிறந்த நாவல்களில் ஒன்றாக இலக்கிய உலகில் அங்கீகாரம் பெற்றது. தமிழில் கிருத்திகா என்ற புனைபெயரிலும் ஆங்கிலத்தில் மதுரம் பூதலிங்கம் என்ற பெயரிலும் எழுதினார்.

(பார்க்க ஐ.கிருத்திகா)

பிறப்பு,கல்வி

கிருத்திகா கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோயில் அருகே உள்ள பூதப்பாண்டி என்ற ஊரில் 1915-ம் ஆண்டு பிறந்தார். பம்பாயில் படித்து வட மாநிலங்களிலேயே அதிகம் வசித்தார்.ஆங்கிலத்திலும் சமஸ்கிருதத்திலும் புலமை பெற்றிருந்தார்.

தனி வாழ்க்கை

கிருத்திகா திருப்பதிசாரத்தைச் சேர்ந்த இந்திய குடிமைப்பணி (I.C.S) அதிகாரியான பூதலிங்கத்தை மணம் செய்துகொண்டார். பூதலிங்கம் சுதந்திர இந்திய அரசாங்கத்தில் உயர்பதவிகள் வகித்தார். உருக்குத் துறையிலும், நிதித்துறையிலும் செயலாளராகப் பணியாற்றினார். பிலாய் உருக்காலை நிர்மாணத்தில் பெரும் பங்காற்றினார்.

கிருத்திகாவின் மகன் ரவி பூதலிங்கம் இந்திய அரசின் தொழில்துறை அமைச்சகத்தின் பல ஆணைக்குழுக்களில் பங்காற்றிய தொழில் முனைவோர் .கிருத்திகாவின் மகள் மீனா, வேளாண்மை அறிவியலாளர் எம்.எஸ்.சுவாமிநாதனை மணந்தார் .மீனா சுவாமிநாதன் தம்பதியரின் மகள் சௌம்யா சுவாமிநாதன் உலக சுகாதார மையத்தின் (WHO) தலைமை விஞ்ஞானியும் புகழ்பெற்ற குழந்தை நல மருத்துவருமாவார்.

இலக்கியப் பணி

நாவல்கள்

கிருத்திகா தமிழில் இதழ்களில் எழுதாமல் நேரடியாகவே நாவல்களை எழுதினார். கிருத்திகாவின் முதல் நாவல் புகைநடுவில் (1953). 1950-களின் சுதந்திரத்துக்குப் பின்னான டெல்லியைக் களமாகக் கொண்டது. வாஸவேச்வரம் அவர் கணவர் பிறந்து வளர்ந்த திருப்பதிசாரம் என்னும் சிற்றூரின் சாயலைக் கொண்ட கற்பனை ஊரைக் களமாகக் கொண்டது.

கிருத்திகாவின் சத்யமேவ, பொன்கூண்டு, வாஸவேஸ்வரம், தர்மக்ஷேத்திரே, புதிய கோணங்கி, நேற்றிருந்தோம் ஆகிய நாவல்கள் வெவ்வேறு கதைக் களங்களை கொண்டவை. தர்மக்ஷேத்ரே டெல்லியின் அதிகார விளையாட்டை மகாபாரத உருவங்களுடன் கூறும் நாவல்.

சிறுகதைகள்

கிருத்திகாவின் முதல் சிறுகதை தொகுதி 1976-ம் ஆண்டில் மீனாட்சி பதிப்பகத்தின் வழியாக வெளிவந்த போகமும் யோகமும் . அதிலிருந்த தீராத பிரச்சனை என்னும் நெடுங்கதை குறிப்பிடத்தக்கது.

நாடகங்கள்

கிருத்திகா மனதிலே ஒரு மறு, மா ஜானகி போன்ற நாடகங்களை எழுதியுள்ளார். மனதில் ஒரு மறு என்ற நாடகம் எழுத்தாளர்/விமரிசகர் சிட்டி சுந்தரராஜனால் 1960 ஜூன் மாதத்தில் சென்னை புரசவாக்கம் தாசப்பிரகாஷ் ஹோட்டல் வளாகத்தில் அரங்கேற்றப்பட்டது. சாவித்திரி, ஹரிச்சந்திரன், கண்ணகி போன்றவர்களின் வாழ்க்கையை ஒட்டி எழுதிய நாடகங்கள் வெளியாகியுள்ளன.

சிறுவர் இலக்கியம்

கிருத்திகா குழந்தைகளுக்காக, இராமாயணம், மகாபாரதம், பாகவதம் ஆகியவற்றின் கதைச்சுருக்கங்களை ஆங்கிலத்தில் எழுதினார்.

கடித இலக்கியம்

கிருத்திகாவுக்கு விமரிசகர் சிட்டி பெ. கோ. சுந்தரராஜனுடன் நீண்ட கால நட்பு இருந்தது. தில்லியிலும், பல்வேறு நகரங்களிலும் வசித்த கிருத்திகா சிட்டிக்கு எழுதிய கடிதங்களும், சிட்டி அவருக்கு எழுதிய பதில் கடிதங்களும் புகழ் பெற்றவை. சிட்டியின் மருமகன் நரசய்யாவின் முன்னுரையுடன் இக்கடிதங்கள் Lettered Dialogue என்ற நூலாக பழனியப்பா பதிப்பகத்தால் வெளியிடப்பட்டன. வெளியீட்டு விழா மேற்கு வங்க ஆளுநர் கோபால கிருஷ்ண காந்தியின் தலைமையில் நடைபெற்றது.

சிற்பக்கலை

கிருத்திகா இந்தியா முழுவதும் பயணம் செய்து, இந்தியக் கோயில்கள், கலைகள் போன்றவை குறித்துக் கலைமகளில் பல கட்டுரைகளை எழுதி வந்தார். கிருத்திகாவின் Movements in Stone- Early Chola architecture முற்காலச் சோழ கோயில்களின் கட்டிடக்கலையை ஆய்வு செய்து அவற்றில் பல்லவரின் கட்டிடக்கலையின் தாக்கத்தை ஆராய்ந்த நூல்

வாழ்க்கை வரலாறு

பாரதியின் வாழ்க்கை வரலாற்றை The finger on the lute என்ற பெயரில் ஆங்கிலத்தில் எழுதியுள்ளார். யாழில் தவழும் விரல் என்ற தலைப்பு பாரதியாரின் வீணையடி நீ எனக்கு, மேவும் விரல் நானுனக்கு என்ற வரியிலிருந்து பெறப்பட்டது. முக்கியமான பல பாரதியார் பாடல்களை இந்நூலுக்காக கிருத்திகா தமிழாக்கம் செய்துள்ளார்.

மறைவு

எழுத்தாளர் கிருத்திகா தனது 93-வது அகவையில் பிப்ரவரி 13, 2009-ல் சென்னையில் காலமானார்

இலக்கிய இடம்

கிருத்திகா தமிழின் பெண் எழுத்தாளர்களில் தனித்தன்மை கொண்டவர். அவரது படைப்புகள் குறியீட்டுத் தன்மையுடன், அங்கதச்சுவையுடன் சமகால உயர்மட்ட அதிகார அரசியலை, ஆண்பெண் உறவை விவாதிப்பவை. "அங்கதத்தைக் கையாண்ட ஒரே தமிழ்ப்பெண்ணெழுத்தாளர் அவரே" என்று எழுத்தாளர் ஜெயமோகன் குறிப்பிடுகிறார்.

புகை நடுவில், தர்மக்ஷேத்திரே மற்றும் புதிய கோணங்கி நாவல்களில் அதிகார வர்க்கத்தின் செயல்பாடுகளையும், நகரத்தின் பாசாங்கு வாழ்க்கையையும் பிரதிபலித்து, சுதந்திரத்தின் மதிப்பையும் அது சாதாரண மனிதனுக்குத் தரும் பயன்களையும் குறித்து கேள்விகளை எழுப்புகிறார். பின்னாளில் நகர வாழ்க்கையின் பாசாங்கை அங்கதத்துடன் எழுதிய எழுத்தாளர்கள் ஆதவன், இந்திரா பார்த்தசாரதி போன்றோருக்கு கிருத்திகாவே முன்னோடியாவார்.

"நவீன வாழ்க்கை தரும் தனிமனிதத் துயரும் அலைக்குறுதலும் முரண்பாடுகளும், இவற்றை தாண்டத் துடிக்கும் மனிதர்கள் சாரமற்ற சடங்கு சம்பிரதாயங்களைப் பிடித்துத் தொங்கும் வேடிக்கையும் இந்நாவலில் மட்டுமல்ல, "சத்ய மேவ" போன்ற கிருத்திகாவின் மற்ற நாவல்களிலும் பேசுபொருட்களாக இருக்கின்றன" என்று கவிஞர் பெருந்தேவி குறிப்பிடுகிறார்.

படைப்புகள்

நாவல்கள்
  • புகைநடுவினில்
  • தர்மக்ஷேத்திரே
  • வாஸவேச்வரம்
  • புதிய கோணங்கி
  • நேற்றிருந்தோம்
நாடகங்கள்
  • மனதில் ஒரு மறு
  • மா ஜானகி
சிறுகதைத் தொகுப்பு

போகமும் யோகமும்

ஆங்கில நூல்கள்
  • Movement in stone
  • Finger on the Lute
குழந்தைகளுக்கான நூல்கள்
  • Pandu's sons
  • Children's Ramayana
  • Temples of India-myths and Legends

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 15-Nov-2022, 13:32:13 IST