எஸ்.ஏ பெருமாள்
எஸ்.ஏ.பெருமாள் மார்க்ஸிஸ் கம்யூனிஸ்ட் கட்சியில் 18 வருடம் மாவட்ட செயலாளராகவும் (District Secretary) போக்குவரத்து தொழிற்சங்கத்தில் 20 வருடமும் பணியாற்றியவர்.
இதழ் பணியுடன் நுல்களும் வெளியிட்டிருக்கிறார். மொழிபெயர்ப்புக் கவிதைகள், தத்துவார்த்த கட்டுரைத் தொகுப்புகள், மொழிபெயர்ப்புச் சிறுகதைகள், நூல் விமர்சங்கள்[1] என இதுவரை 27 நூல்கள் வெளியிட்டிருக்கிறார்.
40 ஆண்டுகளுக்கும் மேலாக வெளிவரும் செம்மலர் எனும் இடதுசாரி சிற்றிதழின் மூத்த ஆசிரியர் இவர்.
பிறப்பு, கல்வி & குடும்பம்
ஒருங்கிணைந்த இராாமநாாதபுரம் மாவட்டத்தின் விருதுநகர் சத்திரரெட்டியப்பட்டியில் பிப்ரவரி 13, 1944 ஆம் ஆண்டு விவசாாயி சங்கரப்பன் - இராமலட்சுமி தம்பதியருக்கு மகனாக எஸ்.ஏ. பெருமாள் பிறந்தார்.
செந்தில் குமார் நாடார் கல்லூரியில் பட்டப் படிப்பை நிறைவு செய்தார். மனைவி பெயர் வசந்தா. ஒரு மகள் சுகாஷினி தேவி.
கம்யூனிஸ்ட் கட்சி
உயர்நிலைப் பள்ளியில் படிக்கும்போது தோழர் ஜீவா அவர்களின் உரையால் ஈர்க்கப்பட்டு கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார். அதன் பின்னர் இளைஞர் இயக்கத்தில் சேர்ந்து படிப்படியாக தன்னை ஒரு கம்யூனிஸ்டாக உயர்த்திக் கொண்டார்.
1967 முதல் கட்சியின் முழுநேர ஊழியராக பணியாற்றி வருகிறார். 1968 இல் சாத்தூர் தாலுகா செயலாளராகவும், 1973 இல் மதுரை மோட்டார் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளராகவும் பணியாற்றினார். 1977 இல் மதுரை மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டு முகவை மாவட்டம் உருவானபோது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளராக 11 ஆண்டுகளும், பின்னர் விருதுநகர் மாவட்ட செயலாளராக 7 ஆண்டுகளும் பணியாற்றியுள்ளார்.
அவசர நிலை காலத்தின்போது 19 மாத காலம் தலைமறைவாக இருந்து பணியாற்றினார். கட்சி நடத்திய பல்வேறு போராட்டங்களில் பங்கேற்று சிறை சென்றவர், 1994-ல் மதுரை தீக்கதிர் நாளிதழில் பொது மேலாளராக பொறுப்பேற்று பணியாற்றினார். கே.முத்தையா மறைவுக்கு பிறகு செம்மலர் ஆசிரியராக 12 வருடங்கள் பணியாற்றி தற்போது ஆசிரியர் குழுவின் மூத்த ஆசிரியராக உள்ளார்.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தை உருவாக்கிய தலைவர்களில் இவரும் ஒருவர்.
எழுத்துலகம்
இலக்கியம், நாட்டார் கலைகள், பண்பாட்டு ஆய்வுகள், பொதுவுடைமை சித்தாந்தம் என்ற பரந்த தளத்தில் எழுதியும் இயங்கியும் வரும் தீவிரமான இடதுசாரி சிந்தனையாளர், இலக்கியத் திறனாய்வாளர், அரசியல் தத்துவ வகுப்பாசிரியர், சிறந்த பேச்சாளர் மற்றும் சிறந்த மொழிபெயர்ப்பாளர்.
பாப்லோ நெருடா, கலீல் ஜிப்ரான், ரசூல் கம்சதேவ் மற்றும் பல தலைசிறந்த கவிஞர்களின் 100க்கும் மேலான கவிதைகளைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். ஸ்ரீஸ்ரீ, தகழி, ராஜாராவ் ஆகியோரின் சிறுகதைகளில் பலவற்றையும் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.
படைப்புகள்
- 2001 - மனிதகுல வரலாறு
- 2004 - பகத்சிங்-கடிதங்கள்-கட்டுரைகள்
- 2004 - மார்க்சீய தத்துவம் ஒர் அறிமுகம்
- 2005 - தேசமென்பது மண்ணல்ல…
- 2005 - ஆதி பொதுவுடைமைச் சமூகம்
- 2005 - காவிப்படை
- 2005 - சுதந்திரப் போரில் கலை ஆயுதமேந்திய கம்யூனிஸ்டுகள்
- 2005 - அடிமைச் சமூகம்
- 2005 - கடவுள் பிறந்த கதை
- 2007 - தத்துவங்களின் தேரோட்டம்
- 2008 - உலக நாடோடிக் கதைகள்
- 2009 - பழங்குடி மக்களின் வீரப் போராட்டங்கள்
- 2011 - உலகைக் குலுக்கிய விஞ்ஞானிகள்
- 2012 - எஸ்.ராமகிருஷ்ணனின் எழுத்துலகம்
- 2012 - மாக்சிம் கார்க்கி வாழ்வும் இலக்கியமும்
- 2015 - பகத்சிங் மற்றும் தோழர்கள்
- 2016 - வாஸ்து சாஸ்திரமும் வளர்ந்து வரும் மூடநம்பிக்கைகளும்
- கலீல் ஜிப்ரானின் கண்ணீரும் சிரிப்பும் (தமிழில்)
- ரஷ்யப் புரட்சிகள்