under review

பாசவதைப் பரணி: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
No edit summary
 
Line 1: Line 1:
பாசவதைப்பரணி (பொ.யு. 18-ம் நூற்றாண்டு)  பகிதி இலக்கியமாக அமைந்த பரணி நூல். சிவஞான பாலையை தேசிகரைப் பாட்டுடைத்தலைவனாகக் கொண்டது. உலகப்பற்றுடனும், பாசத்துடனும் போரிட்டு வென்று சிவஞானம் பெறுவதைக் கூறுவது. திருவாரூர் வைத்தியநாத தேசிகரால் இயற்றப்பட்டது.   
பாசவதைப்பரணி (பொ.யு. 18-ம் நூற்றாண்டு)  பக்தி இலக்கியமாக அமைந்த பரணி நூல். சிவஞான பாலையை தேசிகரைப் பாட்டுடைத்தலைவனாகக் கொண்டது. உலகப்பற்றுடனும், பாசத்துடனும் போரிட்டு வென்று சிவஞானம் பெறுவதைக் கூறுவது. திருவாரூர் வைத்தியநாத தேசிகரால் இயற்றப்பட்டது.   


== பதிப்பு,வரலாறு ==
== பதிப்பு,வரலாறு ==

Latest revision as of 08:59, 20 May 2024

பாசவதைப்பரணி (பொ.யு. 18-ம் நூற்றாண்டு) பக்தி இலக்கியமாக அமைந்த பரணி நூல். சிவஞான பாலையை தேசிகரைப் பாட்டுடைத்தலைவனாகக் கொண்டது. உலகப்பற்றுடனும், பாசத்துடனும் போரிட்டு வென்று சிவஞானம் பெறுவதைக் கூறுவது. திருவாரூர் வைத்தியநாத தேசிகரால் இயற்றப்பட்டது.

பதிப்பு,வரலாறு

உ.வே. சாமிநாதையர் திருச்சிராப்பள்ளியில் தென்னிந்திய ரெயில்வேயில் பணிபுரிந்த காஞ்சீபுரம் கங்காதர முதலியாரிடமிர்ந்தும் மற்றும் வேறு இரு இடங்களிலிருந்து கிடைத்த பிரதிகளை ஆராய்ந்து இன்றியமையாத இடங்களில் சுருக்கமாகக் குறிப்புரை எழுதி 1933-ல் பாசவதைபரணி நூலை வெளியிட்டார்.

பெயர்க்காரணம்

பாசவதைப்பரணி பரணி என்னும் சிற்றிலக்கிய வகைமையச் சார்ந்தது. பகைவருடன் போரிடுவதைப் பாடாமல் ஆன்மசாதனைக்குப் பகைவர்களான பாசம், கன்மம், போன்றவற்றின்மீது போரிட்டு வெல்வதைப் பாடுவதால் பாசவதைப்பரணி எனப் பெயர் பெற்றது.

சிவஞான பாலைய தேசிகர்

நூலின் பாட்டுடைத் தலைவர் சிவஞான பாலைய தேசிகர் அடியார்களின் பாசத்தைப் போக்கிச் சிவஞானம் அருளிய செயலை உருவகமாக பாசமன்னனுடன் போரிட்டு வென்றதாகப் பாடப்பெற்றது.

தேசம் பரித்த சிவஞான தேசி கன்பார் வந்தெமது
பாசம் பறித்த திறம்பாடப் பைம்பொற் கபாடந் திறமினோ”

(தாழிசை, 57)

சிவஞான பாலைய தேசிகர் அம்மவையம்மையார் என்பவரின் மகன். மயிலம் பாலசித்தரின் மாணவர். மயிலம் அருகே பொம்மையபாளையமெனப்படும் பொம்மபுரம் மடத்தில் வீரசைவஞானாசிரியராக இருந்தவர். அவருக்குரிய மடங்கள், பொம்மபுரம், மயிலம், காஞ்சீபுரம், செய்யூர், சிதம்பரம் போன்ற இடங்களில் உள்ளன. துறைமங்கலம் சிவப்பிரகாச ஸ்வாமிகள் அவர்மீது தாலாட்டு, நெஞ்சுவிடுதூது, பிள்ளைத்தமிழ், திருப்பள்ளியெழுச்சி, கலம்பகம் போன்ற பிரபந்தங்களைப் பாடியிருக்கிறார்.

ஆசிரியர்

பாசவதைப்பரணியை இயற்றியவர் திருவாரூர் வைத்தியநாத தேசிகர்.

நூல் அமைப்பு

பாசவதைப்பரணியின் நூலமைப்பு தத்துவராயர் இயற்றிய அஞ்ஞவதைப் பரணி, மோகவதைப் பரணி மற்றும் வேங்கடநாதர் எழுதிய தமிழ்ப் பிரபோத சந்திரோதயம் போன்ற நூல்களைப் பின்பற்றியதாகக் காணப்படுகின்றது. அஞ்ஞவதைப்பரணியிலுள்ள சொல்லும் பொருளும் பெரும்பாலும் அப்படி அப்படியே பாசவதைப் பரணியில் எடுத்தாளப்பட்டுள்ளதாக நூலின் முன்னுரையில் உ.வே. சாமிநாதையர் குறிப்பிடுகிறார்.

பாசவதைப்பரணி, காப்புச் செய்யுளுடன், கடவுள் வாழ்த்து முதலிய பத்து உறுப்புக்களையும் 737 தாழிசைகளையும் உடையது.

இந்நூல், பாசத்தைப் பாசமன்னனாகவும் புல்லறிவைத் துன்மதி என்னும் மந்திரியாகவும், காமம், கோபம், லோபம், மோகம், அகங்காரம், மாச்சரியம் என்னும் உட்பகைகள் ஆறையும் பாசமன்னனின் படைத்தலைவர்களாகவும், ஞானத்தைச் சிவஞானதேசிகருடைய தண்டநாயகராகவும், நிருபகம், பொறை, மகிழ்ச்சி, பற்றின்மை, சாந்தம், சீலம் முதலியவற்றை அந்தத் தண்டநாயகருக்கு அடங்கிய படைத்தலைவர்களாகவும், ஞானத்தால் பாசம் நீங்கியதை ஞானவிநோதன் சேனைகளால் பாசமன்னன் அழிந்ததாகவும் உருவகம் செய்து அதற்கேற்ப வரலாற்றைத் தொடர்புபடுத்தி அமைக்கப்பட்டுள்ளது.

கடைதிறப்பு

கடை திறப்பில் மகளிர் பக்குவமடைந்த ஞானிகளுக்கு உருவகமாகின்றனர். ஏனைப் பரணிநூல்களில் பல நாட்டு மகளிரைக் கடைதிறக்கும்படி கூறும் மரபைத்தழுவி இப்பகுதியில் சிலநாட்டின் பெயர்கள் தொனிக்கும்படி ஆசிரியர் அமைத்திருக்கின்றனர் ; அங்கம், வங்கம், கொல்லம், சிந்து, சோனகம், சாவகம், கன்னடமென்னும் நாட்டின்பெயர்கள் அவ்வகையில் அமைந்துள்ளன. மகளிர் இயல்புக்கும் ஞானிகள் இயல்புக்கும் ஒப்புமை அமையும்படி சிலேடையாகச் சில தாழிசைகள் இப்பகுதியில் உள்ளன.

காடுபாடியது

அஞ்ஞானிகள் வாழும் இடமே சுடுகாடாகவும், அவர்கள் விலங்குகளாகவும், கோபம் முதலிய தீய குணங்கள் முள் முதலியனவாகவும் சொல்லப்படுகின்றன.

பேய்களைப்பாடியது

பேய்கள் அறிவற்றவர்களுக்கு உருவகமாகக் கூறப்படுகின்றனர். பலவகைச் சமயக்கொள்கைகள் இதிற் காணப்படுகின்றனம. உலகத்தில் உள்ள பலவகை வஞ்சகச்செயல்கள் கூறப்படுகின்றன.

கோயிலைப்பாடியது

தேவியின் கோயிலுள்ள சோலை, திருக்கோயில் முதலியவற்றின் சிறப்பு கூறப்படுகிறது.

தேவியைப்பாடியது

தேவியின் பெருமையும் அவளது பரிவார தேவதைகளின் இயல்பும் காணப்படுகின்றன. ஞானமடைந்தவர்கள் டாகினி முதலிய பரிவாரதேவதைகளாக அமைக்கப்படுகின்றனர். இப்பகுதியில் ஞானியர்களுடைய தன்மை கூறப்படுகிறது.

கலிங்கத்துப் பரணி முதலிய பரணிகளில் கூறப்படும் 'இந்திர சாலம்’ பேய் முறைப்பாட்டின் தொடக்கத்தில் கூறப்படுகிறது.

கூளிகூறியது

பாசமன்னனை ஞானவிநோதர் வென்ற வரலாறு சொல்லப்படுகிறது. சங்கற்பமாகிய மதில் முதலியவைகளால் சூழப்பெற்ற மாயாபுரத்தில் பாசனென்றும் அஞ்ஞனென்றும் வழங்கப்படும் மன்னன் ஒருவன் பலவகைத் தீய குணங்களுக்கு இருப்பிடமாகித் துன்மதியென்பவனை மந்திரியாகக் கொண்டு நீதியற்ற அரசாட்சியை நடத்தி வந்தான். அவனை அழிக்கும் பொருட்டு சிவபெருமான் சிவஞான தேசிகராக மயிலத்தில் அவதரித்தார்.

நற்குணமும் ஞானமும் கொண்டவர்களைத் துணை கொண்டு ஞானவிநோதர் போர் செய்தார். பின்னர், காமன்முதலியோர் நிருபகன் முதலியவர்களால் அழிக்கப்பட்டனர். பாசமன்னன் ஒருவனைத்தவிர மற்றவர்கள் அழிந்தபிறகு அவனை நோக்கி ஞானவிநோதர் படையிலுள்ள ஞானவீரர்கள், “ஞானவிநோதரை வணங்கு” என்று சொல்ல, அவன் அப்பொழுதும் பணியாமல் நின்றான். ஞானவிநோதர் அவன்முன்பு வந்து அவன்தலையின்மீது தம் திருவடியை வைக்க, பாசன் தனது பழைய நிலைமாறி ஞானரூபம் பெற்றான். அவனுடைய படைகளும் ஞான நிலையை அடைந்தன. அதனை அறிந்த யாவரும் ஞானவிநோதரைப் புகழ்ந்தனர்.

இப்பகுதியில் உண்மைஞானிகளுடைய இயல்புகளும் அறிவற்றவர்களுடைய இயல்புகளும் சொல்லப்படுகின்றன. காமன்முதலியவர்கள் கூற்றுக்களில் புராண இதிகாசங்களிலுள்ள செய்திகள் காணப்படுகின்றன. இருவகைப்படை வீரர்களுடைய கூற்றுக்களிலும், திருக்குறளிலுள்ள கருத்துக்களும் சொற்றொடர்களும் அமைந்திருக்கின்றன. இடையிடையே மடக்குக்கள் உள்ளன.

களங்காட்டல்

இப்பகுதியில் தேவி மோகினிகளுடன் களம் சென்று அஞ்ஞானிகள் ஞானம் பெற்ற வரலாற்றைக்கூறி அவர்களைக்காட்டுதல் சொல்லப்படுகிறது.

கூழ்

இப்பகுதியில் சாந்திமுதலிய மோகினிகள் கூழ் சமைத்துத் தேவிக்குப்படைத்துத் தாமும் உண்டு, அங்கே உணவு பெற வந்திருக்கும் பலபேய்களுக்கு இடுதலும் அவை உண்டு ஞானவிநோதரையும் பிறரையும் வாழ்த்துதலும் கூறப்படுகின்றன. பல சமயத்தினர் கொள்கைகள் இப்பகுதியால் தெரியவருகின்றன.

பாடல்நடை

கடை திறப்பு

அல்ல நாடிய ரறுபகை வளர்ப்பவர்
      ஆக லாலிக லப்பகை யாவையும்
கொல்ல நாடியர் பேரருட் சிந்துநற்
      கோல நாடியர் குளிர்கடை திறமினோ.

பேய்களைப் பாடியது

கொடியவே பிறவியெனக் குறிக்கின்ற வறிவற்று
முடியவே கெடுகின்ற மூடரே முழுப்பேய்கள்.

எக்காலங் களுமறியா விழுதையரே கழுதல்லால்
முக்காலங் களுமறிந்து மொழிவனவோ முழுப்பேய்கள்.

கூளி கூறியது

கூர்தரு மாங்கரிப் பாவியைக்
      குலைகுலை யும்படி கூடியே
ஏர்தரு சாந்த னழித்தனன்
      யானென தென்ப திறப்பவே.

உசாத்துணை

பாசவதைப்பரணி-குறிப்புரையுடன், தமிழ் இணைய கல்விக் கழகம்


✅Finalised Page