under review

வேம்பத்தூர் கிருஷ்ணன்

From Tamil Wiki
நன்றி: தினமணி

வேம்பத்தூர் கிருஷ்ணன் (செப்டெம்பர் 28, 1934 - டிசம்பர் 24,2018) எழுத்தாளர், பாடலாசிரியர், பத்திரிகையாளர், பதிப்பாசிரியர், திரைக்கதை ஆசிரியர், உதவி இயக்குனர், ஔவைத் தமிழ்ச் சங்கத்தை நிறுவியவர்.

பிறப்பு, கல்வி

வேம்பத்தூர் கிருஷ்ணன் செப்டெம்பர் 28, 1934 அன்று வேம்பத்தூரில் பிறந்தார். குடும்பச் சூழலால், அவரால் பள்ளி செல்ல முடியவில்லை. வள்ளியப்ப செட்டியாரிடம் ஆத்திசூடியைக் கற்றார். தானே எழுத்துக்கூட்டி படிக்கக் கற்றார்.

பர்மாவில் சுபாஷ் சந்திர போஸைச் சந்தித்து, அவர் நடத்திய 'பால சேனாவில்' இணைந்து ராணுவப் பயிற்சி பெற்றார்.

தனி வாழ்க்கை

வேம்பத்தூர் கிருஷ்ணனின் மனைவி கே. பாப்பா. மகன் முத்தையா வாசுதேவன், மகள் தேவி.

இலக்கிய வாழ்க்கை

Auvai kalanjyam.jpg

வேம்பத்தூர் கிருஷ்ணன் கவிதை, பாடல், கட்டுரைகள் எழுதினார். நாட்டுப்பற்று, ஆன்மிகம், ஔவையார், பெண்பாற் புலவர்கள், குழந்தைகளுக்கான சிந்தனைகள் பற்றிய நூல்களை எழுதினார். பல பக்திப் பாடல்களும் எழுதினார்.

ஒளவையின் மேல் கொண்ட ஈர்ப்பினால் ஔவைத் தமிழ் சங்கத்தைத் தொடங்கினார். ஔவையின் அனைத்து நூல்களையும் தொகுத்து வெளியிட்டதுடன் அவரைப் பற்றி இலக்கியங்களில் உள்ள செய்திகள், அவரைப் பற்றி பிற பிரமுகர்கள் வெளியிட்ட கருத்துக்கள், கட்டுரைகள் என அனைத்தையும் தொகுத்து 'ஒளவை தமிழ் களஞ்சியம் 2015 'என்ற பெயரில் வெளியிட்டார். 'ஔவை தமிழ் களஞ்சியம்' ஜனவரி 27, 2015 அன்று ஒளவை மூவேந்தர்களுக்குள் இருந்த பகையை நீக்கி தமிழால் ஒருங்கிணைத்த குமரி மாவட்டத்தில் உள்ள முப்பந்தல் என்ற இடத்தில் வெளியிடப்பட்டது.

வேம்பத்தூர் கிருஷ்ணன் சுத்தானந்த பாரதியால் 'சுடர்மணிக் கவிஞர்' எனப் பாராட்டப்பட்டார்.

பதிப்பியல்

வேம்பத்தூர் கிருஷ்ணன் சுடர்மணிப் பதிப்பகத்தைத் துவங்கி ஏறத்தாழ நூறு நூல்களைப் பதிப்பித்தார்.

இதழியல்

வேம்பத்தூர் கிருஷ்ணன் 'இந்து மித்ரன்', 'சனாதன தர்ம பீடம்' ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தார். தினமணி கதிர் ஆனந்த விகடன், கல்கி உள்ளிட்ட இதழ்களில் கதை கட்டுரை கவிதைகள் எழுதினார்

திரைத்துறை

வேம்பத்தூர் கிருஷ்ணன் 1953-லிருந்து 30 வருடங்களுக்கும் மேலாக திரைப்படத் துறையில், பாடலாசிரியர், வசன உதவியாளர், உதவி இயக்குநர் எனப் பல பொறுப்புக்களை மேற்கொண்டார். இயக்குநர் கே.சங்கரிடம் இணை இயக்குநராக இருந்தார். தேவகி போஸ் இயக்கிய ‘ரத்தின தீபம்’ படத்தின் தமிழ் வடிவத்திற்கு முழுப் பொறுப்பேற்றார்.

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, எம்.ஆர். ராதா உள்ளிட்டவர்களின் திரைப்படங்களில் உதவி இயக்குனர், நடிகராகப் பணியாற்றினார் 'அகத்தியர் பெருமை' 'தியானம்', 'அருமை', 'திருவரங்க மகிமை' உள்ளிட்ட பல தொலைக்காட்சித் தொடர்களுக்கு கதை எழுதினார்.

மறைவு

வேம்பத்தூர் கிருஷ்ணன் டிசம்பர் 24, 2018 அன்று காலமானார்.

விருதுகள், பரிசுகள்

  • சுத்தானந்த பாரதி 'சுடர்மணிக் கவிஞர்' என்ற பட்டத்தை வழங்கினார்
  • கார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸ் வழங்கும் சீர்காழி கோவிந்தராஜன் நினைவு விருது
  • அருட்சோதி காந்திய விருது
  • தமிழ்ச் செம்மல் விருது (2015)

நூல்கள்

  • தேசத்தை நேசிப்போம்
  • காஞ்சி மகாத்மா வாழ்வும் வாக்கும்'
  • தமிழர் வாழ்வின் தாயான அமைச்சர்
  • ஆலய மணிகள்
  • ஒளவை தமிழ் களஞ்சியம்

மற்றும் பல

வேம்பத்தூர் கிருஷ்ணனின் பாடல்கள் சில

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 09-Jun-2024, 18:41:54 IST