under review

வெள்ளைமாளர்

From Tamil Wiki

வெள்ளைமாளர் சங்க காலப் பெண்பாற் புலவர்களில் ஒருவர். இவரது ஒரு பாடல் சங்கத் தொகை நூலான புறநானூற்றில் உள்ளது.

வாழ்க்கைக் குறிப்பு

வெள்ளைமாளர் என்ற பெயரைத் தவிர இவரைப் பற்றிய தகவல்கள் கிடைக்கவில்லை. வெள்ளை மாளனார் அல்லது வெள்ளை மாறனார் என்றும் அழைக்கப்பட்டார். வெள்ளைமாளர் பாடிய புறநானூற்றுப் பாடலில் ஏறாண் முல்லைத்துறையும், பாடலில் இடம் பெற்றுள்ள காட்சிகளையும் கருத்துகளையும் கொண்டு இவர் பெண்பாற் புலவர் என்று அறிஞர்கள் கருதுகின்றனர்.

பெயர்க்காரணம்

தம் பாடலில் போரில் இறக்கவிருப்பவர்களை எண்ணி மக்கள் முன்கூட்டியே செய்யும் செயல்களைப் பாடினார். வெள்ளைச் சாவு அல்லது வெள்ளை மாளல் - மாண்டுபோதல் வெள்ளையாகத் தெரிவது. வெள்ளைமாளலைப் பற்றிப் பாடியதால் பாடற்பொருளின் அடிப்படையில் வெள்ளைமாளர் எனப் பெயர் பெற்றார்.

இலக்கிய வாழ்க்கை

வெள்ளைமாளர் பாடிய பாடல் ஒன்று புறநானூற்றில் 296-வது பாடலாக உள்ளது. திணை வாகை, துறை ஏறாண்முல்லை.

பாடல்வழி அறியவரும் செய்திகள்

  • பண்டைக்காலப் போர்முறை - காலையில் குறிப்பிட்ட காலத்தில் போர்த் தொடக்கப்பறை இரண்டு பக்கங்களிலும் முழங்கப்பட்ட பின்னர் போர் நிகழும். மாலையில் குறிப்பிட்ட காலத்தில் போர்நிறுத்தப் பறை ஒருபக்கத்தில் முழங்கியதும் நிறுத்தப்படும்.
  • மறவர் சேரி: போர் முடிந்தபின் இருக்கும் மறவர் சேரியின் சித்திரம் காட்டப்பட்டது. ஆரவாரம் மிகுந்து காணப்படும். காயம்பட்ட போர் வீரர்களின் மனைவிகள் வேப்பிலையை வீட்டு இறப்பில் செருகுவர். காயத்திற்கு இதமாக வெண்சிறுகடுகுப் புகை போடுவர். காயங்களின் மேல் வெண்சிறு கடுகு எண்ணைய் பூசினர்.
  • காயம் பட்டவர்களை பேய் முதலானவை அண்டி அச்சுறுத்தும் என்ற நம்பிக்கை இருந்தது.
  • மக்கள் காஞ்சிப்பண் பாடினர். காஞ்சிப்பண் விழுப்புண்பட்டவா்கள், பேய்ப்பிடி கொண்டவா்கள் ஆகியோரின் வருத்தம் தீரப் பாடப்பட்டது.

பாடல் நடை

திணை: வாகை; துறை: ஏறாண்முல்லை

வேம்புசினை ஒடிப்பவும், காஞ்சி பாடவும்,
நெய்யுடைக் கையர் ஐயவி புகைப்பவும்,
எல்லா மனையும் கல்லென் றவ்வே
வெந்துஉடன்று எறிவான் கொல்லோ
நெடிதுவந் தன்றால் நெடுந்தகை தேரே?
(திணை: வாகை)

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 14-Sep-2023, 05:31:03 IST