under review

வடுவூர் கே.துரைசாமி ஐயங்காரின் சமய ஆராய்ச்சி

From Tamil Wiki
சமய ஆராய்ச்சி - முகப்புப் பக்கம்

நாவலாசிரியர் வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார், நாவல்கள் எழுதுவது மட்டுமின்றி சமயம் சார்ந்த ஆராய்ச்சி ஒன்றிலும் ஈடுபட்டிருந்தார். தனது மூன்றாண்டு கால ஆராய்ச்சியின் முடிவுகளைத் தொகுத்து, ஆங்கிலத்திலும் தமிழிலும் நூல்களாக எழுதி வெளியிட்டார். அவற்றுள் ஒன்று 'சமய ஆராய்ச்சி’ என்னும் நூல்.

எழுத்து, வெளியீடு

வடுவூர். கே. துரைசாமி ஐயங்காரின் சமயம் சார்ந்த ஆராய்ச்சியைப் பற்றி, தனது 'இலக்கியச் சாதனையாளர்கள்’ நூலில், க.நா.சுப்ரமணியம், "அவர் பேசிய விஷயங்களிலே முக்கியமானதாக ஒன்று நினைவுக்கு வருகிறது. எகிப்தில் தலைமுறை தலைமுறையாக ஃபாரோக்கள் என்கிற பெயருடன் அரசாண்ட மன்னர்கள் தென்னாட்டிலிருந்து எகிப்து என்ற மிசிர தேசத்துக்குச் சென்ற வடகலை ஐயங்கார்கள்தான் என்று அசைக்க முடியாத ருசு இருப்பதாகவும், அதையெல்லாம் சொல்லித் தான் ஒரு நூல் எழுதிக் கொண்டிருப்பதாகவும் சொன்னார்" என்கிறார்.

ஓரியண்டல் ஹோம் யுனிவர்சிடி பதிப்பகம்

வடுவூர். கே. துரைசாமி ஐயங்காரின் அந்த ஆராய்ச்சி நூல், ஆங்கிலத்தில் 'Long Missing Links Or The Marvelous Discoveries about the Aryans, Jesus Christ and Allah - Volume 1’ என்ற தலைப்பில் வெளியானது. அதில் உள்ள விவரங்களைத் தமிழில் சுருக்கமாக 'சமய ஆராய்ச்சி’ என்ற தலைப்பில் தனது சொந்தப் பதிப்பகமான ’ஓரியண்டல் ஹோம் யூனிவர்ஸிட்டி’ மூலம் வடுவூர். கே. துரைசாமி ஐயங்கார் வெளியிட்டார்.

வடுவூர் கே. துரைசாமி ஐயங்காரின் சமய ஆராய்ச்சி நூல்.

உள்ளடக்கம்

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் தனது 'சமய ஆராய்ச்சி’ என்னும் அந்த நூலில், "சில வருஷ காலத்திற்கு முன்னர், நான் தமிழ் நாவல்கள் எழுதுவதை நிறுத்திவிட்டு, தேச சரித்திரங்கள், சமய நூல்கள், பாஷைகள் முதலியவற்றை ஆராய்வதற்கென்றே 'ஓரியண்டல் ஹோம் யூனிவர்ஸிட்டி’ என்ற ஸ்தாபனத்தை அமைத்து, சுமார் மூன்று வருஷம் உழைத்து, நான் தெரிந்துகொண்ட புதிய விஷயங்களில் சிலவற்றைத் திரட்டி, 'லாங் மிஸ்ஸிங் லிங்ஸ்’ அல்லது 'ஆரியர்கள், கிறிஸ்து, அல்லாஹ் என்பனவற்றைப் பற்றிய ஆச்சரியகரமான புதுமை வெளியீடுகள் (முதல் பாகம்)’ என்னும் பெயரில் ஒரு பெரிய நூலை வெளியிட்டேன்" என்கிறார்.

அதற்காகவும், அவருடைய அந்த முயற்சியைப் பாராட்டியும் ஜெர்மனி, அமெரிக்காவிலிருந்தெல்லாம் அவருக்குப் பாராட்டுக் கடிதங்கள் வந்ததாகவும், கிறிஸ்துவர்கள், முஸ்லிம் கனவான்கள் எனப் பலரும் பாராட்டிச் சன்மானம் அனுப்பி ஊக்குவித்தனர் என்றும் நூலில் அவர் குறிப்பிடுகிறார்.

மேலும் அவர், "இந்நூலைப் பெரும்பாலோர் வாங்கிப் படிக்காது அசட்டையாய் இருந்து விட்டதனால், இந்த ஆராய்ச்சியினாலும், இந்நூலை வெளியிட்டு, இதுபற்றி பத்திரிகைகளில் விளம்பரங்கள் வெளியிட்டதனாலும் எனக்கு சுமார் பதினைந்தாயிரம் ரூபாய் வரையில் கடன் ஏற்பட, அதைத் தீர்க்கும் பொருட்டு சகலவிதமான நாவல் காப்பிரைட்டுகளையும், புஸ்தகங்களையும், சுமார் இருபதாயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட மூன்றடுக்கு மாடி வீட்டையும் விற்று நான் மாத்திரம் மீள வேண்டியவனானேன். ஆயினும் நான் எடுத்துக்கொண்ட விஷயம் உலகத்திலுள்ள எல்லாச் சமயங்களுக்கும் உள்ள நெருங்கிய சம்பந்தங்களைக் காட்டி சமரஸத் தன்மையை உண்டாக்க வேண்டுமென்னும் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டதாகையால் எப்பாடுபட்டாயினும் என்னாலியன்ற வரையில் என் கருத்தை நிறைவேற்றியே தீரவேண்டுமென்ற உறுதியான தீர்மானம் என்னைவிட்டு அகலாமல் இன்னமும் இருப்பதனால், நான் நாவல் வெளியீட்டோடு இந்தத் தொண்டையும் சிறிதளவு கலந்து செய்ய வேண்டுமென்பதே என் கருத்து" என்று சொல்லியிருக்கிறார்.

சமய ஆராய்ச்சியைத் தொடர்ந்து 'ஜோதிட ஆராய்ச்சி’ என்ற நூலையும் துரைசாமி ஐயங்கார் வெளியிட்டிருக்கிறார். இவை இரண்டுமே நீண்டகாலமாக அச்சில் இல்லை. 'லாங் மிஸ்ஸிங் லிங்க்ஸ்’ நூலும் பல ஆண்டு காலமாகவே அச்சில் இல்லை. கிட்டத்தட்ட. 800 பக்கங்கள் கொண்ட அந்த நூலிலிருந்து ஒரு சில படங்கள் மட்டுமே இணையத்தில் காணக்கிடக்கின்றன.

ஆராய்ச்சி முடிவுகள்

அப்பரகா, ஈகைப்பட்டு

சமய ஆராய்ச்சி நூலில் துரைசாமி ஐயங்கார், தனது ஆராய்ச்சியின் முடிவாகப் பல்வேறு செய்திகளை முன் வைக்கிறார்.

  • ஹிந்துக்கள் என்று அழைக்கப்படும் நம்மவர்களின் முன்னோர் பண்டைய 'அப்பரகா’ தேசத்திலிருந்து வந்தவர்கள். (ஆப்பிரிகாவைத் தான் வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் இவ்வாறு 'அப்பரகா’ என்று குறிப்பிட்டுள்ளார்.
  • நம் முன்னோர்களுக்கும், கிறிஸ்துவ, இஸ்லாமிய மதங்களை ஸ்தாபித்தவர்களின் முன்னோருக்கும் நெருங்கிய சம்பந்தமுண்டு.
  • 'வட அப்பரகா’வில் வசிக்கும் ஜனங்களின் நடை, உடை, பாவனைகள் அனைத்தும் நம்முடைய ஜனங்களைப் போலவே இருக்கின்றன.
  • பண்டைய 'ஈகைப்பட்டு’ மன்னர்களுக்கும் நமது தென்னாட்டிற்கும் நெருங்கிய தொடர்பிருந்திருக்கிறது. (எகிப்தைத் - Egypt - தான் 'ஈகைப்பட்டு’ என்று வடுவூர் துரைசாமி ஐயங்கார் குறித்துள்ளார்)
  • வடகலை ஐயங்கார்கள் அணிவது போன்ற நாமக் குறிகளை எகிப்தியர்கள் நெற்றியிலும், தோள் போன்ற பிற இடங்களிலும் அணிவதை வழக்கமாக வைத்திருந்தனர்.
  • அவர்களுடைய வழிபாட்டுமுறை நம்முடைய ஹிந்துக்களின் வழிபாட்டு முறையை ஒத்ததாகவே இருந்தது.
  • அவர்களும் நம்மைப் போலவே விலங்கு (நந்தி), பறவை (கருடன்) போன்றவற்றை வழிபட்டனர்.
  • அங்கே இருக்கும் நைல் நதி என்பதன் சரியான பெயர் 'நீல நதி’ என்பதே.
  • பெயரிலும் கூட நமது இந்தியப் பாரம்பரியப் பெயர்களோடு அவர்களது பெயருக்கு ஒப்புமை இருந்தது
  • ரோம ரிஷி என்பவர் ரோமில் வாழ்ந்த ராஜ ரிஷி.
  • தேரையர் என்னும் சித்தர் பாரஸீகத்திலிருந்த சக்கரவர்த்தி.
  • மயன் என்பவர் கிரீத் அல்லது கண்டியர் என்று குறிக்கப்படுவதும், மத்திய தரைக்கடலில் இருப்பதும், ஆதி காலத்தில் அதலம் என்று குறிக்கப்பட்டதுமான தேசத்தின் அரசர்.

- இப்படிப் பல கருத்துக்களை துரைசாமி ஐயங்கார் அந்த நூலில் சொல்லியிருக்கிறார்.

காளையை வணங்கும் எகிப்திய மன்னர் சாஸ்திரியீசர்

எகிப்தியர்கள் வழிபட்ட தெய்வத்திற்கும், ஹிந்துக்களின் தெய்வத்திற்கும் வழிபாட்டில் ஒப்புமை இருந்தது என்று சொல்கிறார் துரைசாமி ஐயங்கார். 'கணேசர்’ என்ற பெயரில் நாம் வழிபடும் தெய்வத்தைப் போன்றே அவர்களும் 'கண்சா’ என்ற பெயரில் ஒரு தெய்வத்தை வழிபட்டிருக்கின்றனர் என்கிறார். அதற்காகச் சில ஆங்கில நூல்களையும் அவர் அந்த நூலில் உதாரணம் காட்டியிருக்கிறார்.

சமயம் மட்டுமில்லாமல், வழிபாடு, வான சாஸ்திரம், ஜோதிடம், தமிழ் இலக்கியங்கள், மொழி அமைப்பு, சொற்கள் பயின்றுவரும் விதம் என்றெல்லாம் பல களங்களில் அவரது ஆராய்ச்சி விரிகிறது.

"தென்கலை நாமம் சனி பகவானைக் குறிக்கிறது. வடகலை நாமம் வியாழன் என்னும் தேவேந்திரனைக் குறிக்கிறது. மாத்வ பிராமணர்கள் நெற்றியில் கரிக்கோடிட்டுக் கொள்வது ராகுவைக் குறிக்கிறது. 'ராகுகாலம்’ என்பதை நாம் பழக்கத்தில் 'ராவு காலம்’ என்றே சொல்கிறோம். 'ராவு’ என்ற பட்டப்பெயரை அவர்கள் தங்கள் பெயரோடு சேர்த்து வைத்துக் கொள்வது இதற்கு இன்னொரு சான்றாகும்" என்றெல்லாம் அவர் தனது நூலில் கூறிச் செல்கிறார்.

தாத்து எனும் எகிப்தியரின் கடவுள்

"கிறிஸ்தவர்களின் பழைய ஆகமத்தில் கந்தபுராணத்தில் குறிக்கப்படும் சூரன் முதலியோர் வருகின்றனர்" என்று சொல்லும் ஐயங்கார், "கருங்கடலுக்கு அருகில் இருந்த கிரௌஞ்சம் அல்லது கௌஞ்சத்தை ஆண்ட அசுரனை சுப்பிரமணியர் சம்மாரம் செய்ததாகக் கந்தபுராணம் கூறுகிறது. அராபியா, பர்ஸியா ஆகியவற்றிற்கு அப்பாலுள்ள கருங்கடலுக்கு அருகில் அசிரியா என்று ஒரு தேசமிருந்து அழிந்துபோய் விட்டது. அதன் கல்வெட்டு சிலா சாசனங்களில் 'கௌஞ்சகம்’ என்ற பெயர் காணப்படுகிறது. அவ்விடத்தில் அசூர் என்ற அரசர்கள் ஆண்டு இதர தேசங்களை நாசப்படுத்தி இருக்கிறார்கள். அவர்கள் பாலஸ்தானத்தை அழித்து அங்கிருந்த சமரத்தன் குருக்கள்மார்களை சிறைப்படுத்திக் கொண்டுபோய் தங்கள் ஜனங்களுக்கு கடவுள் வழிபாடு கற்றுக்கொடுக்கும்படி அமர்த்தியதாக கிறிஸ்தவருடைய பழைய ஆகமம் கூறுகிறது" என்று தனது ஆராய்ச்சிக் கருத்துக்களை முன் வைக்கிறார்.

சர்ச்சைக்குரிய கருத்துக்கள்

சர்ச்சைக்குரிய கருத்துக்கள் பலவும் வடுவூர் கே.துரைசாமி ஐயங்காரின் 'சமய ஆராய்ச்சி’ நூலில் காணப்படுகின்றன.

  • 'மேரி’ என்பதைச் சிலர் 'மாரி’ என்று மாற்றி அதை மாரியம்மனாக்குவது வழக்கம். அது தவறு. மேரி என்பது 'மேரு’ பர்வதத்திலிருந்து உதித்தவள் என்பதைக் காட்டுகிறது.
  • 'மீனாஷி’ என்றால் மீனத்தில் ஆக்ஷியாக உள்ள வியாழ பகவானைக் குறிக்கும்.
சிவன், பார்வதி, விஷ்ணு, கிருஷ்ணன் என்போர் யார்?
  • ’பார்வதி’ என்று எழுதுவது தவறு. 'பாற்வதி’ என்று எழுதுவதுதான் சரி. பரமசிவனின் பக்கத்தில் உள்ளவள் என்பது இதற்குப் பொருள். பாற்வதி மகாவிஷ்ணுவின் தங்கை என்று சைவ புராணங்கள் சுட்டுகின்றன. ஆனால் எப்படித் தங்கை என்பதுதான் எங்கும் விளக்கப்படவில்லை. பார்வதி ஆதியில் தக்ஷனுக்கு மகளாகப் பிறந்ததாகவும் பின்னர் அந்தப் பாவம் தீர மறுபடி இமவானுடைய மகளாகப் பிறந்ததாகவும் சைவ புராணங்கள் சுட்டுகின்றன. அப்படியானால் மகாவிஷ்ணு தக்ஷனுடைய பிள்ளையா, அல்லது இமவானுடையா பிள்ளையா?
  • 'சரஸ்வதி’ என்பது சுக்கிரனைக் குறிக்கும்.
  • இராமன் என்பதை இரா+மன் எனப் பிரித்துப் பொருள் கொள்ள வேண்டும். அதற்கு இரவின் தந்தை என்பது பொருள். இரவின் தந்தை 'சனி.’ மகாவிஷ்ணுக்கு உகந்த கிழமை சனி என்பதை இங்கே கருத்தில் கொள்ள வேண்டும்
  • நாராயணன் என்றால் நாக்கிற்கு ராஜனாகிய வியாழ பகவானுக்கு அணன், அண்மையில் இருப்பவன் அதாவது சமீபத்தில் இருப்பவன் என்பது பொருள்.
  • வியாழனே நாராயணன். நாராயணனே இந்திரன்; அவனே இமவான்.

தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு

ஆங்கிலத்தில் புழங்கும் சொற்கள் பலவும் தமிழிலிருந்தே சென்றன என்ற கருத்தையும் வடுவூர் கே.துரைசாமி ஐயங்கார் முன் வைக்கிறார்.

  • கல் பலகை, சிலை ஏடு என்பதே சிலேட் (slate) ஆகி இருக்கிறது.
  • பாம்பு போல் நீண்டிருக்கும் மூங்கில், பாம்பு மரம் (Bamboo Tree) என்று இங்கிலீஷில் குறிக்கப்படுகிறது.
  • கடவுளுக்குச் சொல்லும் துதியான 'பறைதல்’ என்பதே ப்ரேயர் (Prayer) ஆகி இருக்கிறது.
  • கள்ளாகிய பாலைக் கொடுக்கும் பனை மரம் பால் மா (Palmyra) என்று குறிக்கப்படுகிறது.
  • பெண்ணினமாகிய அம்மாவைக்குக் குறிக்கும் ’மாதர்’ என்பதே மதர் (Mother) ஆயிற்று.
  • அப்பா என்பதே ஃபாதர் (Father) ஆகி, பின்னர் 'பாதிரி’ ஆகியிருக்கிறது.
  • புட்டு’ என்பதே Food ஆகியிருக்கிறது.
  • உண்பதாகிய 'தின்னல்’ என்பதே 'டின்னர்’ (Dinner) ஆகியுள்ளது

வரலாற்று இடம்

மூன்றாண்டு காலம் ஆராய்ச்சி செய்து தனது நூல்களை எழுதியதாக வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் குறிப்பிடுகிறார். ஆனால், 'சமய ஆராய்ச்சி’ நூலை ஆய்வு நூல் என்பதை விட, ஐயங்காரின் பல்வேறு யூக முடிவுகளையும், அவராக உருவாக்கிக் கொண்ட சொந்தக் கருத்துக்களையும் கொண்ட நூல் என்பதாகவே ஆய்வாளர்கள் மதிப்பிடுவர். மேலும், எகிப்தை ஆண்ட பாரோக்கள், தென்னாட்டிலிருந்து எகிப்து என்ற மிசிர தேசத்துக்குச் சென்ற வடகலை ஐயங்கார்கள்தான் என்று அவர் க.நா.சுப்ரமண்யத்திடம் தெரிவித்திருக்கிறார்.

ஆனால், வைணவத்தில் வடகலை, தென்கலை பிரிவும், அடையாளமும் ஏற்பட்டதே ராமானுஜரின் காலத்திற்குப் பிறகு தான். சுமார் ஆயிரம் வருடங்களுக்கு முன்பு தான். ஆனால், பாரோக்களின் காலமோ பொது யுகம் 3000த்திற்கும் முற்பட்டது.

ஐயங்காரின் ஆராய்ச்சியைப் பற்றியும், அது பற்றிய அவரது முழுமையான கருத்துக்கள் பற்றியும் அறிய 'Long Missing Links Or The Marvellous Discoveries about the Aryans, Jesus Christ and Allah என்ற நூல் கிடைத்து, அதனை முழுமையாக வாசித்தால் மட்டுமே சரியான முடிவிற்கு வர முடியும்.

உசாத்துணை

  • சமய ஆராய்ச்சி, வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார், ஓரியண்டல் ஹோம் யுனிவர்சிடி, சென்னை
  • அந்தக் காலப் பக்கங்கள்: பாகம் - 1, அரவிந்த் சுவாமிநாதன், வலம் பதிப்பகம்
  • வலம் இதழ்க் கட்டுரை


✅Finalised Page