under review

ரொனால்ட் சியர்ல்

From Tamil Wiki
ரொனால்ட் சியர்ல்
ரொனால்ட் சியர்ல்
சியர்ல் ஓவியம், மரணரயில்
சியர்ல் தன்னோவியம் 1943
சியர்ல் ஓவியம்
சியர்ல் ஓவியம்

ரொனால்ட் சியர்ல் (Ronald William Fordham Searle), (மார்ச் 3, 1920 – டிசம்பர் 30, 2011) இங்கிலாந்தைச் சேர்ந்த ஓவியக்கலைஞர், கேலிச்சித்திரக்காரர், பதக்க வடிவமைப்பாளர், சிற்பி மற்றும் கதை ஓவியர். சயாம் மரணரயில் பாதையின் சித்திரங்களை வரைந்தவர்.

பார்க்க சயாம் மரண ரயில்பாதை

பிறப்பு, கல்வி

ரொனால்ட் சியர்ல் இங்கிலாந்தில் கேம்பிரிட்ஜ் நகரில் தபால் தந்தி ஊழியரான தந்தைக்கு பிறந்தார். சிறுவயதிலேயே ஓவிய ஈடுபாடு கொண்டிருந்த ரொனால்ட் சியர்ல் மத்தியப் பள்ளி ( பின்னர் பார்க்சைட் பள்ளி)க் கல்வியை 15 வயதில் நிறுத்திவிட்டு கேம்ப்ரிட்ஜ் கவின்கலைக் கல்லூரியில் இரண்டு ஆண்டுகள் கலையும் தொழில்நுட்பமும் பயின்றார். (இப்போதைய ஆங்க்லியா ரஸ்கின் பல்கலை. Anglia Ruskin University) .

1939-ம் ஆண்டு ஏப்ரலில் ராணுவப்பொறியாளராகச் சேர்ந்தார். 1942-ல் 287-வது களப்படைப்பிரிவு ( Field Company) படைவீரராக சிங்கப்பூர் சென்றார். மலேசியாவில் போரிடுகையில் ஜப்பானியரிடம் சிறைக்கைதியாகப் பிடிபட்டார். சாங்கி சிறையிலும் க்வாய் காட்டிலும் போர்க்கைதியாக இருந்தார். சயாம் பர்மா ரயில்பாதை திட்டத்தில் பணியாற்றினார். பெரிபெரி, மலேரியா இரண்டுநோய்களுமே அவருக்கு வந்தன. பலமுறை அடித்து சித்திரவதை செய்யப்பட்ட ரொனால்ட் சியர்ல் அங்கிருக்கையில் நாற்பது கிலோ எடையை இழந்தார்.

1945-ல் சிங்கப்பூர் பிரிட்டிஷாரால் கைப்பற்றப்பட்டபோது ரொனால்ட் சியர்ல் விடுதலையானார். அவருடைய ஓவியங்கள் போர்க்கொடுமைகளுக்கான ஆவணங்களாக போர்க்குற்ற விசாரணைகளின்போது பயன்படுத்தப்பட்டன. ரொனால்ட் சியர்ல் நியூரம்பர்க் விசாரணைகளிலும் , 1961-ல் அடால்ஃப் ஐச்மான் விசாரணையிலும் பங்கெடுத்தார்.

தனிவாழ்க்கை

1947-ல் ரொனால்ட் சியர்ல் இதழாளரான கயே வெப் (Kaye Webb) ஐ மணந்து இரட்டைக்குழந்தைகளுக்கு தந்தையானார். 1961-ல் அவர்கள் பாரீஸுக்குச் சென்று வாழ்ந்தனர். 1967-ல் அவர்கள் மணமுறிவுசெய்துகொண்டனர். அரங்க வடிவமைப்பாளரும் நகை வடிவமைப்பாளருமான மோனிக்கா கோனேக்-ஐ ரொனால்ட் சியர்ல் மணந்துகொண்டார். ஆல்ப்ஸ் மலைப்பகுதிகளில் அவர்கள் வாழ்ந்தனர். மோனிகா 2011 ஜூலையில் மறைந்தார்.

சயாம் மரணரயில் ஓவியங்கள்

1941-ல் லில்லிபுட் என்னும் இதழில் ரொனால்ட் சியர்ல் தன் முதல் ஓவியத்தை வெளியிட்டிருந்தாலும் அவருடைய தொடக்க கால ஓவியங்கள் என்பவை சயாம் மரணரயில் பாதையின் முகாம்களில் அவர் அங்கிருந்த கொடுமைகளைப் பற்றி வரைந்தவைதான். அவை கரியாலும் பென்சிலாலும் வரையப்பட்டு படுக்கைகளுக்கு அடியில் வைத்து பாதுகாக்கப்பட்டன. ரொனால்ட் சியர்ல் சொன்னார் "நான் திட்டமிட்டேதான் அவற்றை வரைந்தேன். அங்கே நடந்த அனைத்தையும் பதிவுசெய்யவேண்டும் என்று துடித்தேன். ஓர் ஆவணப்பதிவு இருந்தால் நான் மறைந்தாலும் கூட அவற்றை எவராவது கண்டடைவார்கள், என்ன நடந்தது என்று தெரிந்துகொள்வார்கள் என்று நம்பினேன்" ரொனால்ட் சியர்ல் ஏறத்தாழ 300 ஓவியங்களை வரைந்தார்.

1945-ல் விடுதலைபெற்று இங்கிலாந்துக்குச் சென்றபின் ரொனால்ட் சியர்ல் தன்னுடன் சிறையில் இருந்த ரஸ்ஸல் பிராட்டன் ( Russell Braddon ) எழுதிய The Naked Island என்னும் நினைவுக்குறிப்புகளில் வெளியிட்டார். 1986-ல் வெளிவந்த Ronald Searle: To the Kwai and Back, War Drawings 1939–1945. ஆகிய நூல்களில் ரொனால்ட் சியர்ல் வரைந்த பெரும்பாலான ஓவியங்கள் வெளியாகியிருக்கின்றன.ரொனால்ட் சியர்ல் தன் நினைவுகளையும் நூல் வடிவில் பதிவுசெய்திருக்கிறார்.

ரொனால்ட் சியர்ல் வரைந்த பெரும்பாலான மரண ரயில்பாதை ஓவியங்கள் இம்பீரியல் போர் அருங்காட்சியகம் லண்டன் ( Imperial War Museum, London) ல் வைக்கப்பட்டுள்ளன. ஜாக் பிரிட்ஜர் சாக்கர், பிலிப் மெனின்ஸ்கி, ஆஷ்லி ஜார்ஜ் ஓல்ட், ஜான் மென்னீ ஆகியோரின் ஓவியங்களும் அங்குள்ளன

கலைவாழ்க்கை

ரொனால்ட் சியர்ல் தீவிரமாக வரைந்த கலைஞர். 1950 முதல் அவர் கேலிச்சித்திரங்களும் கோட்டோவியங்களும் வரைந்தார். அவை ஓவியநூல்களாக வெளிவந்தன. பதக்கங்கள் வடிவமைப்பதிலும் நிபுணராக திகழ்ந்தார். 2010-ல் ரொனால்ட் சியர்ல் தன்னுடைய 2200 ஓவியங்களை ஜெர்மனியின் வில்ஹெல்ம் புஷ் Wilhelm Busch Museum அருங்காட்சியகத்துக்கு அளித்தார் (இப்போது அது Deutsches Museum für Karikatur und Zeichenkunst என அழைக்கப்படுகிறது

மறைவு

ரொனால்ட் சியர்ல் டிசம்பர் 30, 2011-ல் தன் 91-வது வயதில் மறைந்தார்.

உசாத்துணை


✅Finalised Page