மெலிவொடு வைகல்(கைக்கிளை)
மெலிவொடு வைகல் புறப்பொருளில் உள்ளகைக்கிளைத் திணையின் துறைகளில் ஒன்று. பெண்பால் கூற்றாக அமைந்தது. தலைவன் மீது காதல் கொண்ட பெண்ணின் வாட்டத்தினால் ஏற்படும் தளர்ச்சியின் மிகுதியைக் கூறுவது.
விளக்கம்
புறப்பொருள் வெண்பாமாலை
புறப்பொருள் வெண்பாமாலையின் கொளுப்பாடல் அணிகள் அணிந்த பெண்ணின் 'மாணிக்க வளையல்கள் கழல, நல்ல அழகு கெட வாடுகின்ற பெண்ணின் தளர்ச்சியின் மிகுதியைக் கூறுதல் என்று இதன் இலக்கணத்தை வகுக்கிறது.
மணிவளை நெகிழ மாநலம் தொலைய
அணிஇழை மெலிவின் ஆற்றல் கூறின்று(கொளு 15.5)
வெண்பா
பிறைபுரை வாள்நுதல் பீர் அரும்ப மென்தோள்
இறைபுனை எல்வளை ஏக - நிறைபுணையாய்
யாம நெடுங்கடல் நீந்துவேன்
காம ஒள்எரி கனன்று அகம் சுடுமே (298)
பொருள்: பிறை நிலவை ஒத்த நெற்றியானது பீர்க்கம்பூப் போல் பசலை நிறம் கொள்ள, கைகளிலுள்ள வளையல் கழன்று ஓட, கட்டுப்பாடு என்னும் தெப்பத்தால் காமம் என்கிற பெரிய கடலைக் கடந்தேன்; ஆயினும், ஆசை என்னும் நெருப்பு என் நெஞ்சை எரிக்கிறதே!
உசாத்துணை
கைக்கிளைத் திணை(புறவியல்), தமிழ் இணைய கல்விக் கழகம்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 28-Jul-2025, 18:27:41 IST