under review

முத்துவேலழகன்

From Tamil Wiki
நாடகப் போராளி முத்துவேலழகன்
நாடகப் போராளி முத்துவேலழகன் எழுதிய புத்தகம்

முத்துவேலழகன் (டிசம்பர் 06, 1939 - மே 13, 2021) எழுத்தாளர், மேடை நாடக இயக்குநர், மேடை நாடக நடிகர், திரைப்பட இணை இயக்குநர். 33 நாடகங்களை எழுதியுள்ளார். காந்தாரி, ஜன்மா ஆகியன இவரின் முக்கியமான படைப்புகள். சி.சு. செல்லப்பா எழுதிய 'முறைப்பெண்’ நாடகத்தை இயக்கியவர். இதிகாசக் கதைகளை இக்காலச் சமூகத்துக்கு ஏற்ப மீட்டுருவாக்கம் செய்து, புதிய கோணத்தில் வெளிப்படுத்துவதே இவர் நாடகங்களின் சிறப்பு. 2010-ல் 'அமுதன் அடிகள் விருது’ பெற்றுள்ளார். இவர் 'நாடகப் போராளி’ என அறியப்படுகிறார்.

வாழ்க்கைக்குறிப்பு

பிறப்பு

முத்துவேலழகனின் இயற்பெயர் ஒண்டிமுத்து. இவர் ரெங்கசாமி-நாச்சியார் அம்மாள் தம்பதியருக்கு டிசம்பர் 06, 1939-ல் பிறந்தார். பூர்வீக ஊர் கூத்தப்பார் கிராமம்.

கல்வி

திருச்சி ஆர்.சி. உயர்நிலைப் பள்ளியில் பத்தாம்வகுப்பு வரை பயின்றார்.

பணி

1962-ல் ரயில்வே துறையில் பணிக்குச் சேர்ந்தார்.

குடும்பம்

முத்துவேலழகனின் மனைவி பெயர் மீனாம்பாள். இவருக்கு இரண்டு ஆண்குழந்தைகளும் நான்கு பெண்குழந்தைகளும் உள்ளனர்.

மகன்கள்

கார்முகில் - கீதா

முருகவேல் - தமிழரசி

மகள்கள்

சந்திரமணி - ஹரிக்கண்ணன்

சாராதாமணி - தனராஜ்

மரகதமணி - ரெங்கராஜ்

மனோன்மணி - அண்ணாதுரை

இறப்பு

முத்துவேலழகன் 86-ஆவது வயதில் மே 13, 2021 அன்று காலமானார்.

இலக்கிய வாழ்க்கை

நாடகப் பற்று

இவர் சிறுவயதில் கூத்தைப்பார் மந்தையில் கூத்துகளைப் பார்த்தும் திருவெறும்பூர் 'ஷோ’ கொட்டகையில் நாள்தோறும் 'பிரஹலாதா’, 'என் விதி’ ஆகிய நாடகங்களைப் பார்த்தும் ஈரோடு ஆற்றுப்படுகையில் வண்ணார்கள் கூத்து ஒத்திகையை நடத்தியதைப் பார்த்தும் நாடகத்தையே தன் வாழ்க்கையாக மாற்றிக்கொள்ள விரும்பினார்.

முதல் நாடகம்

முத்துவேலழகன் தன்னுடைய பதினாறாவது வயதில் நாடகத்துறையில் கால்பதித்தார். இவரின் முதல் நாடகம் 'வஞ்சகி’ 1955-ல் 'வஞ்சகி’ திருச்சி தேவர் மன்றத்தில் நாடக விவசாயி எதார்த்தம் பொன்னுச்சாமி பிள்ளையின் தலைமையில் நடத்தப்பட்டது.

நாடகப் பணி

1958-ல் கும்பகோணத்தில் முகாமிட்டிருந்த மதுரை ஸ்ரீதேவி தங்கம் நாடக சபாவில் நாடக ஆசிரியராக இருந்தார்.

இலக்கிய இடம்

இதிகாசக் கதைகளை இக்காலச் சமூகத்துக்கு ஏற்ப மீட்டுருவாக்கம் செய்து, புதிய கோணத்தில் வெளிப்படுத்துவதே இவர் நாடகங்களின் சிறப்பு. 'காந்தாரி’ நாடகத்தில் காந்தாரி தன் விழிகளைத் துணியால் மறைத்துக்கொண்டு வாழ்ந்தமைக்கு இவர்கொடுத்த விளக்கம் புதுமையானது. மகாபாரத மாந்தரான அம்பையைப் பற்றிய இவரின் 'ஜன்மா’ நாடகம் முக்கியமான இலக்கிய ஆக்கம். இவரின் நாடகங்களில் முற்போக்குச் சிந்தனை மிகுந்திருக்கும். குறிப்பாக, பெரியாரின் சுயமரியாதைக் கருத்துகளும் கம்யூனிசக் கருத்துகளும் மேலோங்கியிருக்கும்.

சிறப்புகள்

  • இவரின் 'ஜன்மா’ நாடகம் சேலம் பெரியார் பல்கலைக்கழகத்திலும் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்திலும் பாடப்புத்தகமாக ஏற்கப்பட்டுள்ளன. இவரின் 'பதினெட்டாம் போர்’ நாடகம் திருச்சி தேசியக் கல்லூரியில் பட்ட மேற்படிப்புக்குப் பாடநூலாக ஏற்கப்பட்டுள்ளது.
  • இவரின் நாடக வாழ்க்கையைப் பற்றிய முழுமையான குறிப்புகளைத் தொகுத்து 'பதிவும் பார்வையும்’ என்ற தலைப்பில் நூலாக வெளியிடுட்டுள்ளனர்.

விருதுகள், பட்டங்கள்

  • கலைச்செம்மல் விருது
  • சிந்தனைப் போராளி விருது
  • பேரறிஞர் அண்ணா விருது
  • நாடகக் கலையரசு பட்டம்
  • அமுதன் அடிகள் விருது - 2010

மேடை நாடகங்கள்

  • வஞ்சகி
  • இனமுரசு
  • இதயராணி
  • சிறைச்சாலை
  • கள்ளத்தோணி
  • தேசத்துரோகி
  • தாரமல்லதாய்
  • மாவீரன் சந்தா சாகிப்
  • வாழ்ந்து பார்ப்போம் வா
  • பாண்டியன் பெற்ற பைங்கிளி
  • படுகளத்தில் பாஞ்சை
  • காத்திருந்தவன் காதலி
  • பகல் கனவு
  • சிறையும் வீடும்
  • டாக்டர் ரமேஷ்
  • பத்தினித் தெய்வம்
  • நிலவில் ஒரு களங்கம்
  • தேவமலர்
  • பிரமை
  • வாடகை வீடு
  • கொம்ப்ராஷிகோ
  • ஓ... பாவிகளே!
  • பாலம்
  • பதினெட்டாம் போர்
  • ஜன்மா
  • முறைப்பெண்

நூல்கள்

  • பிரமை
  • வாடகை வீடு
  • ஜன்மா
  • காந்தாரி
  • படுகளம்
  • தங்கச் சிலுவை
  • ஓ... பாவிகளே!

உசாத்துணை


✅Finalised Page