under review

மகரம்

From Tamil Wiki
மகரம்
மகரம்

மகரம் (கே.ஆர். கல்யாணராமன்) (ஜூலை 1, 1919 - ஏப்ரல் 4, 2001) தமிழ் எழுத்தாளர். நகைச்சுவைக் கட்டுரைகள் எழுதினார். தமிழ் இலக்கியம் சார்ந்த தொகுப்பு நூல்களை வெளியிட்டார். 'எழுதுவது எப்படி' என்ற இவருடைய தொகைநூல் புகழ்பெற்றது.

வாழ்க்கைக் குறிப்பு

மகரத்தின் இயற்பெயர் கே.ஆர்.கல்யாணராமன். மகரம் சென்னையில் ஜூலை 1, 1919 அன்று பிறந்தார். இவர் மனைவி சங்கரி. சென்னை அக்கவுண்டண்ட் ஜெனரல் அலுவலகத்தில் பணியாற்றினார். காந்தியவாதி. ஆர்.சூடாமணி குடும்பத்துக்கு அணுக்கமானவர். சூடாமணி எழுதுவதற்கு காரணமாக அமைந்தார்.

இலக்கியவாழ்க்கை

மகரம் 1944-ல் எழுத ஆரம்பித்தார் க. ரா என்ற புனைபெயரில் கல்கி இதழ்களில் மூன்று கட்டுரைகளை எழுதினார். அதே ஆண்டில் ஆனந்த விகடன் இதழில் கே. ஆர். கே என்ற பெயரில் 'சங்கீத அகராதி' என்ற கட்டுரையை எழுதினார். விகடன் ஆசிரியர் தேவன் இவர் பிறந்த ராசியான 'மகரம்' என்ற புனைபெயரை சூட்டினார். அப்பெயரிலேயே தொடர்ந்து பல நகைச்சுவைக் கட்டுரைகளை எழுதினார்.

இவரது நகைச்சுவைக் கட்டுரைகள் பத்து நூல்களாகவும், சிறுகதைகள் இரண்டு தொகுப்புகளாகவும் வெளிவந்துள்ளன. இவரது கட்டுரைகள் சந்திரோதயம், பாரிஜாதம், மணிக்கொடி போன்ற இதழ்களிலும், இலங்கை தினகரன் பத்திரிகையிலும் வெளிவந்துள்ளன. எழுதுவது எப்படி என்ற கட்டுரைகளைத் தொகுத்து புத்தகங்களாக பழனியப்பா பிரதர்ஸ் நிறுவனம் வெளியிட்டது. இதில் ‘விமர்சனம் எழுதுவது எப்படி’, ‘சிறுகதை எழுதுவது எப்படி’, ’கவிதை எழுதுவது எப்படி’, ‘நாவல் எழுதுவது எப்படி’, ‘திறனாய்வு எழுதுவது எப்படி’ போன்ற கட்டுரைகள் தொகுக்கப்பட்டது. புகழ்பெற்ற 101 எழுத்தாளர்களின் சிறுகதைகளைத் தொகுத்து, வானதி பதிப்பகத்தின் மூலம் நான்கு தொகுதிகளாக வெளியிட்டார். ராஜாஜி, புதுமைப்பித்தன், கல்கி, அநுத்தமா, மாயாவி, தொ.மு.சி. ரகுநாதன் உள்ளிட்டோரின் ஐம்பது எழுத்தாளர்களின் காந்தியக் கதைகளைத் தொகுத்து வெளியிட்டார்.

மறைவு

2001-ல் அநுத்தமா எழுதிய 'கேட்டவரம்' என்னும் நாவலில் வரும் கேட்டவரம்பாளையம் ராமர் கோயிலின் ராமநவமி விழாவுக்குச் செல்லும்போது பேருந்திலேயே மறைந்தார்.

நூல் பட்டியல்

தொகுப்பு நூல்கள்
  • எழுதுவது எப்படி
  • சிறப்புச் சிறுகதைகள்
  • காந்திவழிக் கதைகள்

உசாத்துணை

இணைப்புகள்


✅Finalised Page