பெருங்கோப்பெண்டு
பெருங்கோப்பெண்டு (பூதபாண்டியன் தேவி பெருங்கோப்பெண்டு) சங்ககாலப் பெண்பாற் புலவர்களில் ஒருவர். இவரது ஒருபாடல் சங்கத் தொகை நூலான புறநானூற்றில் உள்ளது.
வாழ்க்கைக் குறிப்பு
பெருங்கோப்பெண்டு ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன் என்பவரின் மனைவி. இருவரும் புலவர்கள்.
இலக்கிய வாழ்க்கை
பெருங்கோப்பெண்டின் ஒரு பாடல் புறநானூற்றில் 246-ஆவது பாடலாக இடம் பெற்றுள்ளது.
பாடல்வழி அறியவரும் செய்திகள்
- பூதப்பாண்டியன் போரில் மாண்ட செய்தியைக் கேட்டு பெருங்கோப்பெண்டு தீயில் தானும் விழுந்து உயிர் துறப்பேன் எனுமாறு பாடல் அமைந்துள்ளது.
பாடல் நடை
- புறநானூறு 246 (திணை: பொதுவியல்)
துறை: ஆனந்தப் பையுள்
பல்சான் றீரே; பல்சான் றீரே
செல்கெனச் சொல்லாது, ஒழிகென விலக்கும்,
பொல்லாச் சூழ்ச்சிப் பல்சான் றீரே;
துணிவரிக் கொடுங்காய் வாள்போழ்ந் தட்ட
காழ்போல் நல்விளர் நறுநெய் தீண்டாது,
அடைஇடைக் கிடந்த கைபிழி பிண்டம்
வெள்என் சாந்தொடு புளிப்பெய்து அட்ட
வேளை வெந்தை, வல்சி ஆகப்,
பரற்பெய் பள்ளிப் பாயின்று வதியும்
உயவற் பெண்டிரேம் அல்லேம் மாதோ;
பெருங்காட்டுப் பண்ணிய கருங்கோட்டு ஈமம்
நுமக்குஅரிது ஆகுக தில்ல; எமக்குஎம்
பெருந்தோள் கணவன் மாய்ந்தென அரும்புஅற
வள்இதழ் அவிழ்ந்த தாமரை
நள்இரும் பொய்கையும் தீயும் ஓரற்றே!
உசாத்துணை
✅Finalised Page