under review

பி.கே. சம்பந்தன்

From Tamil Wiki
சம்பந்தன் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: சம்பந்தன் (பெயர் பட்டியல்)
பி.கே. சம்பந்தன்
பி.கே. சம்பந்தன்

பி.கே. சம்பந்தன் (P.K. Sambandan) (புரிசை கண்ணப்ப சம்பந்தன்) (Purisai Kannappa Sambandan) (பிறப்பு: அக்டோபர் 16, 1953) தமிழ் தெருக்கூத்துக் கலைஞர், நவீன நாடக நடிகர், கூத்து வாத்தியார். ஐந்தாவது தலைமுறை கூத்துக் கலைஞர். புரிசை துரைசாமி கண்ணப்பத்தம்பிரான் பரம்பரை தெருக்கூத்து மன்றத்தின் ஆசிரியர். வடக்கத்தி பாணியைப் பின்பற்றுபவர்கள். ஆனாலும் பாடல், அடவுகள் பொறுத்து இக்குழுவின் கதாசிரியர்கள் வடக்கத்தி பாணியிலிருந்து தமக்கான தனி பாணியைக் கைக் கொண்டனர். தெருக்கூத்துக் கலையை தேசிய அங்கீகாரத்துக்கு எடுத்துச் சென்றவர்களில் முக்கியமானவர்.

பிறப்பு, கல்வி

பி.கே. சம்பந்தன் திருவண்ணாமலையில் கண்ணப்ப தம்பிரான், கண்ணம்மாள் இணையருக்கு 1954-ல் பிறந்தார். அப்பா புகழ்பெற்ற தெருக்கூத்து கலைஞரான புரிசை கண்ணப்ப தம்பிரான். எட்டாவது வரை பள்ளிக் கல்வி பயின்றார். உடன்பிறந்தவர்கள் நான்கு சகோதரிகள், ஒரு சகோதரர். பரசுராம தம்பிரான், வீரசாமித்தம்பிரான், துரைசாமி தம்பிரான், ராகவதம்பிரான், நடேசதம்பிரான் ஆகியோர் அவரது முந்தைய தலைமுறை கூத்துக் கலைஞர்கள். ஒரே சகோதரர் கண்ணப்ப காசியும் தெருக்கூத்து கலைஞர்.

தனி வாழ்க்கை

பி.கே. சம்பந்தன் 1971 முதல் சென்னையில் அஞ்சல் துறையில் போஸ்ட்மேன்கள் விடுமுறைக்கு செல்லும் போது அவர்களின் பணியை ஏற்கும் துணை போஸ்மேனாக தற்காலிக பணியில் இருந்தார். 1975-ல் மீண்டும் கூத்துக் கலைக்கு வந்தார். பி.கே. சம்பந்தன் சரஸ்வதியை மணந்தார். ஐந்து பெண் குழந்தைகள். பாரதி, சவிதா, கெளரி, ரேவதி, பல்லவி. மூத்த மகள் பாரதியின் கணவர் பழனி முருகன் புரிசையின் ஆறாவது தலைமுறை கூத்துக் கலைஞராக உள்ளார். மூன்றாவது மகள் கௌரியும் கூத்துக் கலைஞர், கர்நாடக சங்கீதம் கற்றவர். முனைவர் பட்ட ஆய்வில் 'இரண்ய சம்ஹாரம்' கூத்தை ஆய்வு செய்தார்.

அமைப்புச் செயல்பாடுகள்

  • புரிசை துரைசாமி கண்ணப்ப தம்பிரான் கூத்து மன்றத்தை தன் தந்தை கண்ணப்ப தம்பிரானுக்குப் பிறகு வெற்றிகரமாக நடத்தி வருகிறார்.
  • 2003-ல் தந்தையின் மறைவுக்குப் பின் புரிசையில் 'தெருக்கூத்து பயிற்சி பள்ளி'-ஐ ஆரம்பித்து நடத்தி வருகிறார்.

கலை வாழ்க்கை

பி.கே. சம்பந்தன்

பி.கே. சம்பந்தனின் வாத்தியார் புரிசை கண்ணப்பத்தம்பிரான். சம்பந்தன் தனஞ்சயனிடம் பரதநாட்டியம் பயின்றார். கூத்தில் ஆர்வம் கொண்டு தந்தையிடம் சொல்லாமலே புரிசை குழுவில் உள்ள இன்னொருவரிடம் கூத்து நாடகங்களை கற்று கொள்ள துவங்கினார். கூத்து குடும்ப மரபில் இருப்பதால் கூத்து பாடல்கள் அவருக்கு ஏற்கனவே மனப்பாடமாகியிருந்தது. பி.கே. சம்பந்தன் புரிசை துரைசாமி கண்ணப்பத்தம்பிரான் பரம்பரை தெருக்கூத்து மன்றத்தில் கூத்து பழகினார். கண்ணப்பத்தம்பிரான் பரம்பரை தெருக்கூத்து மன்றத்தில் கூத்துக்களில் நடித்தார். திருவண்ணாமலை, வேலூர், பாண்டிச்சேரி, காஞ்சிபுரம், சென்னை, செய்யாறு, மதுரை ஆகிய இடங்களுக்குச் சென்று கூத்து ஆடியுள்ளார். பிரான்ஸ், சிங்கப்பூர், கொலம்பியா, சிக்காகோ, ரீயூனியன் தீவுகள் போன்ற வெளிநாடுகளிலும் கூத்துகள் ஆடியுள்ளார்.

இவரின் குழுவினர் வடக்கத்தி பாணியைப் பின்பற்றுபவர்கள். ஆனாலும் பாடல், அடவுகள் பொறுத்து இக்குழுவின் கதாசிரியர்கள் வடக்கத்தி பாணியிலிருந்து தமக்கான தனி பாணியைக் கைக் கொண்டனர். சில அம்சங்களை யக்ஷகானத்திலிருந்தும், நாட்டியத்திலிருந்தும் எடுத்ததாக சம்பந்தன் நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார். கோவில் விழாக்கள், குடும்பச் சடங்குகள், இறந்தவர்களின் காரியச் சடங்களிலும் இம்மன்றத்தினர் கூத்து ஆடுகின்றனர்.

நவீன நாடகம்

காந்தி கிராமம் ரூரல் யுனிவர்சிட்டியும் நேஷனல் ஸ்கூல் ஆஃப் டிராமாவும் கூட்டாக ஏற்பாடு செய்து 1979-ல் நடத்திய எழுபது நாள் நாடகப் பட்டறையில் நவீன நாடகத்தில் பயிற்சி எடுத்துக் கொண்டார். அவர்கள் பாரதியின் பாஞ்சாலி சபதத்தை 'பிணம் தின்னும் சாத்திரங்கள்' என்ற நாடகமாக தயாரித்திருந்தனர். அதில் முக்கிய பாத்திரமாக சம்பந்தன் நடித்தார்.

ஓவியரும், கலையியக்குநருமான பி.கிருஷ்ணமூர்த்தியின் இயக்கத்தில் முதன் முதலில் 'சுவரொட்டிகள்' என்ற நவீன நாடகத்தில் நடித்தார். ந.முத்துசாமி எழுதிய நாடகம் அது. 'காளி' என்ற பெரியாரிய இடதுசாரி சிந்தனை உள்ள மற்றொரு நாடகத்திற்கான கதை, பாடல், வசனம் ஆகியவற்றை சம்பந்தனின் அப்பா கண்ணப்ப தம்பிரான் எழுதினார். அதையும் பி.கிருஷ்ணமூர்த்தி இயக்கினார். அந்த நாடகத்திலும் சம்பந்தன் நடித்தார். கிருஷ்ணமூர்த்தி தெருக்கூத்தின் பாதிப்பில் கூத்து ஓவியங்களை வரையும் போது உடன் இருந்திருக்கிறார்.

கூத்து வாத்தியார்

பி.கே. சம்பந்தன் புரிசை துரைசாமி கண்ணப்பத்தம்பிரான் பரம்பரை தெருக்கூத்து மன்றத்தின் ஆசிரியரானார். பாண்டிச்சேரி பல்கலைக்கழகம், நேஷனல் ஸ்கூல் ஆஃப் டிராமா, சிங்கப்பூர் ஆகிய இடங்களுக்குச் சென்று கூத்துப் பயிற்சி அளித்தார். காப்ரியேல் கார்சியா மார்க்குவேஸின் (Gabriel García Márquez) (Un señor muy viejo con unas alas enormes -The old man with huge wings) என்ற கதையை 'பெரிய சிறகுடைய ஒரு வயோதிக மனிதன்' எனத் தமிழில் கூத்தாக நடத்தினார். ஜெர்மானிய எழுத்தாளர் ப்ரெக்ட்டின் (Bertolt) 'Caucasian chalk circle' சிறுகதையை தமிழில் 'வெள்ளை வட்டம்' என்ற பெயரில் கூத்தாக நிகழ்த்தினார். இந்த இரண்டு கூத்துகளுக்கும் புரிசை கண்ணப்பத் தம்பிரான் பாடல்கள் எழுதினார். தன் அப்பா கண்ணப்ப தம்பிரான் பாரதியின் பாஞ்சாலி சபதத்தை கூத்தாக தயாரிப்பதற்கு மூல காரணமாக இருந்தவர் சம்பந்தன்.

விருதுகள்

  • இந்திய அரசின் பத்மஸ்ரீ விருது - 2025
  • தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது - 1995
  • சங்கீத நாடக அகாடமி விருது - 2013
  • கொங்கு தமிழ் வளர்ச்சி "தமிழ் வளர்த்த சான்றோர்" விருது
  • சென்னை தட்சிணசித்ரா விருது
  • பொதிகைத் தொலைக்காட்சி விருது

மதிப்பீடு

தெருக்கூத்துக் கலையை தேசிய அங்கீகாரத்துக்கு எடுத்துச் சென்றவர்களில் ஒருவர். தெருக்கூத்துப் பள்ளி, புரிசை துரைசாமி கண்ணப்ப தம்பிரான் கூத்து மன்றம் ஆகிய அமைப்புகளின் வழியாக இளைய தலைமுறைக்கு கூத்தின் முக்கியத்துவத்தை எடுத்துச் சென்றவர். 2000-களுக்கு முன்னால் பெண்கள் தெருக்கூத்தில் பங்கு பெறுவது குறைவு. சிலம்புச் செல்வி என்ற தெருக்கூத்தில் தன் மகள் கெளரியை நடிக்க வைத்தார். பெண்கள் கூத்தில் பங்கு பெறுவதற்கான வாயிலை ஏற்படுத்தித் தந்தார்.

பங்கேற்ற கூத்துகள்

  • மகாபாரதக் கூத்துக்கள்
  • ராமாயணக் கூத்துக்கள்
  • தெனாலிராமன் கதைக் கூத்து
  • அர்ஜுனன் தபசு
  • பாஞ்சாலி சபதம்
  • கர்ண மோட்சம்
  • இரணிய மோட்சம்
  • பெரிய இறகுடைய வயோதிக மனிதன் (ஜெர்மன் சிறுகதை)

பங்கேற்ற நவீன நாடகங்கள்

  • லட்சுமணன் கனவுகள் (Laxman Dreams)
  • Land of Ashes
  • சுவரொட்டிகள்
  • காளி
  • கட்டியக்காரன்
  • வெள்ளை வட்டம்
  • சண்டாள

உசாத்துணை

இணைப்புகள்


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 29-Oct-2024, 23:31:02 IST