under review

பாலூர் கண்ணப்ப முதலியார்

From Tamil Wiki
பாலூர் கண்ணப்பர்
பாலூர்
கண்ணப்ப முதலியார் பி.ஓ.எல்.பட்டம் பெற்றபோது
பாலூர் கண்ணப்ப முதலியார் வித்வான் பட்டம்

பாலூர் கண்ணப்ப முதலியார்(பாலூர் துரைச்சாமி கண்ணப்பர்; Balur D. Kannappar) ( டிசம்பர் 14 டிசம்பர்1908 – 29 மார்ச்1971) தமிழ்ப் பேராசிரியர், எழுத்தாளர், உரையாசிரியர்.

பிறப்பு, கல்வி

பாலூர் கண்ணப்ப முதலியார், செங்கற்பட்டு மாவட்டத்தில் உள்ள பாலூரில் டிசம்பர் 14 , 1908 அன்று துரைச்சாமி – மாணிக்கம்மாள் இணையருக்கு பிறந்தார்.

கண்ணப்பர் பள்ளிக் கல்வியைக் கற்ற பின்னர் டி.என். சேஷாசலம் அவர்களிடம் ஆங்கிலமும் மே.வீ. வேணுகோபாலப் பிள்ளை, கோ. வடிவேலு செட்டியார், சூளை வைத்தியலிங்கனார் ஆகிய தமிழறிஞர்களிடம் தமிழ் இலக்கண, இலக்கியங்களையும் கற்று வித்வான் பட்டம் பெற்றார். 1956-ல் கீழ்த்திசை மொழியியலில் இளவர் (பி.ஓ.எல்) பட்டமும் 1964-ல் முதுகலைப் பட்டமும் பெற்றார்.

தனிவாழ்க்கை

பாலூர் கண்ணப்ப முதலியார் தெய்வானையம்மை என்பவரை மணந்தார். இவர்களுக்கு ஏழு பெண்மக்கள்.

கல்விப்பணி

பாலூர் கண்ணப்பர் ஆசிரியர் பயிற்சி பெற்று பின்வரும் பள்ளிகளில் தமிழாசிரியராகப் பணியாற்றினார்.

  • லூதரன் மிஷன் உயர்நிலைப் பள்ளி- ஜூன் 1926 -மே 1934
  • முத்தியால்பேட்டை உயர்நிலைப் பள்ளி, ஜூன்1934-மே 1938
  • திருவல்லிக்கேணி கெல்லட் உயர்நிலைப் பள்ளி, ஜூன் 1938 - மே 1952

பின்னர் சென்னை இராயப்பேட்டையில் அமைந்துள்ள புதுக்கல்லூரியில் 1952-ல் தமிழ் துணை விரிவுரையாளராகப் பணியேற்று. தமிழ் விரிவுரையாளராகவும் , தமிழ்ப் பேராசிரியராகவும் , தமிழ்த் துறைத் தலைவராகவும் பதவி உயர்வு பெற்று ஜூன் மாதம் 1968-ல் ஓய்வுபெற்றார்.

அமைப்புப் பணிகள்

பாலூர் கண்ணப்ப முதலியார் கீழ்க்கண்ட அமைப்புகளில் பணியாற்றினார்

  • சென்னை சைவ சித்தாந்த சமாஜம்
  • சென்னை எழுத்தாளர் சங்கம்
  • செங்கை மாவட்ட எழுத்தாளர் சங்கம்
  • சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ்ப் பாடத் திட்டக்குழு

இலக்கியப் பணிகள்

பாலூர் கண்ணப்ப முதலியார் பெரும்பாலும் பள்ளி, கல்லூரிகளுக்கான பாடநூல்களையே எழுதியிருக்கிறார். தமிழ் இலக்கிய அகராதி, தமிழ் நூல் வரலாறு ஆகிய இரு நூல்களும் ஆய்வுத்தளத்தில் முக்கியமானவையாகக் கருதப்படுகின்றன.

விருதுகள், பரிசுகள்

செந்தமிழ்ச் செல்வர், சைவ சமய சிரோமணி பட்டங்கள்.

நாட்டுடைமை

பாலூர் கண்ணப்ப முதலியாரின் நூல்கள் 2009-ல் தமிழக அரசால் நாட்டுடமை ஆக்கப்பட்டன

இறப்பு

சென்னைப் பல்கலைக் கழகத்தில் அப்பர் தேவாரம் பற்றிய ஆராய்ச்சிப்பணியில் ஈடுபட்டிருந்த கண்ணப்பர், அப்பணிநிறைவுறும் முன்னரே மார்ச் 29, 1971 அன்று காலமானார்.

இலக்கிய இடம்

பாலூர் கண்ணப்ப முதலியார் பல தமிழ்ப்பாடநூல்களை எழுதினார். அவர் உருவாக்கிய தமிழ் இலக்கிய அகராதியில் தொகை அகராதி முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது. ஆலயங்கள் பற்றிய நூல்களும், திருமுறைகளுக்கான உரைகளும் தொடக்க கால முக்கியத்துவம் கொண்டவை.

படைப்புகள்

  • அதிகமான்
  • அமலநாதன்
  • அறுசுவைக் கட்டுரைகள்
  • அன்புக் கதைகள்
  • இங்கிதமாலை உரை
  • இலக்கிய வாழ்வு
  • இலக்கியத் தூதர்கள்
  • இன்பக் கதைகள்
  • கட்டுரைக் கதம்பம்
  • கட்டுரைக் கொத்து
  • கந்தர் சஷ்டிச் சொற்பொழிவுகள்
  • கலை வல்லார்
  • கவி பாடிய காவலர்கள்
  • சங்க கால வள்ளல்கள்
  • சமரச சன்மார்க்க சத்திய சங்க விளக்கம்
  • சிறுவர் கதைக் களஞ்சியம்
  • சீவகன் வரலாறு
  • சேக்கிழார் பிள்ளைத் தமிழ் உரை
  • தமிழ் இலக்கிய அகராதி
  • தமிழ் நூல் வரலாறு
  • தமிழ் மந்திர உரை
  • தமிழ்த் தொண்டர்
  • தமிழ்ப் புதையல்
  • தமிழ்ப் புலவர் அறுவர்
  • தமிழர் போர் முறை
  • திருஈங்கோய் மலை எழுபது உரை
  • திருக்குறள் அறத்துப்பால் உரை நடை
  • திருமணம்
  • திருவருள் முறையீடு உரை
  • திருவெம்பாவை உரை
  • தொண்டை நாட்டுப் பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்
  • தொழிலும் புலமையும்
  • நகைச்சுவையும் கவிச்சுவையும்
  • நானே படிக்கும் புத்தகம்
  • நீதி போதனைகள்
  • பல்சுவைப் பாமாலை குறிப்புரை
  • பழமை பாராட்டல்
  • பாண்டிய நாட்டுப் பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்
  • புதுமை கண்ட பேரறிஞர்
  • பொய்யடிமையில்லாத புலவர் யார்?
  • மாண்புடைய மங்கையர்
  • வையம் போற்றும் வனிதையர்
  • வள்ளுவர் கண்ட அரசியல்
  • ஜான்சன் வாழ்க்கை வரலாறு
  • மாணவர் தமிழ்க் கட்டுரை
  • மாணவர் திருக்குறள் விளக்கம்
  • தொடக்கப் பள்ளி மாணவர் இலக்கண விளக்கம்
  • நடுநிலைப் பள்ளி மாணவர் இலக்கண விளக்கம்
  • உயர்நிலைப் பள்ளி மாணவர் இலக்கண விளக்கம்
  • பூந்தமிழ் இலக்கணம்
  • புதுமுறை இலக்கணமும் கட்டுரைகளும்
  • நடுநிலை வகுப்பு குமுத வாசகங்கள்
  • உயர்நிலை வகுப்பு செந்தமிழ்ச் சிலம்பு
  • உயர்நிலை வகுப்பு தமிழ்ப் புதையல்

உசாத்துணை


✅Finalised Page