பழிச்சினர் பணிதல்
பழிச்சினர் பணிதல் பாடாண் திணையின் துறைகளில் ஒன்று. இறைவனிடம் பயன் பெறுவதற்காக வாழ்த்திப் பணிதலைப் பாடும் துறை.
விளக்கம்
புறப்பொருள் வெண்பாமாலை
புறப்பொருள் வெண்பாமாலையின் கொளுப்பாடல் புகழையுடைய இறைவனை உலகைப்பேறுகளைப் பெறுவதற்காக வாழ்த்திப் பாடுதல் என்று இதன் இலக்கணத்தை வகுக்கிறது.
வயங்கியபுகழ் வானவனைப்
பயன்கருதப் பழிச்சினர் பணிந்தன்று(கொளு 44)
வெண்பா
ஆடல் அமர்ந்தான் அடி அடைந்தார் என்பெறார்
ஓடுஅரிஉண்கண் உமை ஒருபால் - கூடிய
சீர்சால் அகலத்தைச் செங்கண் அழல் நாகம்
தாராய் தழுவப் பெறும் (231)
பொருள் : வீடுபேறு பெறக் கருதி வணங்காமல் உலகியல் பயன் கருதி வணங்குதல். ஈசனை வணங்கினால் எல்லாம் பெறலாம் என வெண்பா சுட்டுகிறது. 'உமையவளை ஒருபக்கத்தே கொண்ட கூத்தாடும் பெருமானின் கழுத்தில் மாலையாகத் தவழும் பாம்பு அவனைத் தழுவும் பேறு பெற்றுள்ளது; ஆதலால் அவனுடைய அடியைப் பணிந்தவர்கள் என்னதான் பெற முடியாது?' என்று வெண்பா காட்டுகிறது.
உசாத்துணை
பாடாண் திணை, தமிழ் இணைய கல்விக் கழகம்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 29-Mar-2025, 11:47:19 IST