under review

பரணி

From Tamil Wiki

பரணி தமிழ்ச் சிற்றிலக்கியங்கள் என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். போரிலே ஆயிரம் யானைகளைக் கொன்று வெற்றிபெறும் வீரர்கள் மேல் பாடப்படுவது பரணி[1] .எழுநூறு யானைகள படுகளத்திட்டால் பரணி பாடலாம் என பன்னிரு பாட்டியல் கூறுகிறது[2]. பெரும்போர் புரிந்து வெற்றி பெற்ற வீரனைச் சிறப்பித்துப் பாடுவது பரணி இலக்கியம்[3]. தோற்றவர்கள் பெயரை வைத்தே பரணி நூல் பெயர் பெறுவது மரபு.[4] கிடைக்கின்ற பரணி நூல்களில் காலத்தால் முந்தையது கலிங்கத்துப்பரணி.

பரணி இலக்கணம்

பரணியின் இலக்கணம் பற்றித் தொல்காப்பியம் குறிப்பிடவில்லை. இருந்தாலும் 'யானை மறம்' என்ற துறை உள்ளது. சங்க இலக்கியங்களில் போர்க்களத்து வீர நிகழ்ச்சிகள், பேய்களின் செய்கைகள் போன்ற பரணி இலக்கியக் கூறுகள் பாடப்பட்டிருக்கின்றன.

பரணி, வீரத்தைப் பற்றிப் பாடினாலும் காதலையும் பாடுவது. மகளிரை அழைத்து தலைவன் புகழைக் கேட்கக் கதவைத் திறவுங்கள் என்று கூறிப் போர் பற்றிய செய்திகளைக் கூறும் பகுதி 'கடைதிறப்பு'.

சமயத் தத்துவங்களையும், சமயம் தொடர்பான புராணக்கதைகளையும் அடிப்படையாகக் கொண்டு பிற்காலத்தில் சில பரணி நூல்கள் வந்தன.[5]

பரணியின் பகுதிகள்

பரணி இலக்கியம் பத்து உறுப்புகளைக் கொண்டது. இவை அனைத்து பரணி நூல்களுக்கும் உரியன. பொதுவாகப் பரணி பின்வரும் பகுதிகளைக் கொண்டிருக்கும்.

  1. கடவுள் வாழ்த்து
  2. கடை திறப்பு
  3. காடு பாடியது
  4. கோயில் பாடியது
  5. தேவியைப் பாடியது
  6. பேய்ப்பாடியது
  7. பேய் முறைப்பாடு
  8. காளிக்குக் கூளி கூறியது
  9. களம் பாடியது
  10. கூழ் அடுதல்

ஒரு சில பரணிகளில் இந்தப்பத்து உறுப்புகள் அல்லாது வேறு சில உறுப்புகள் கூடுதலாகவும் உள்ளன.

  • இந்திரசாலம்
  • இராச பாரம்பரியம்
  • அவதாரம்
  • போர் பாடியது

இவை கலிங்கத்துப்பரணியில் கூடுதலாக இடம் பெற்றுள்ளன.

பரணி நூல்கள்

எண் நூல் ஆசிரியர் காலம்
1 கொப்பத்துப் பரணி[6] முதல் இராசேந்திரசோழன் மேலை சாளுக்கிய வேந்தன் ஆகவமல்லனுடன் கொப்பம் என்ற இடத்தில் போர் நடத்திப் பெற்ற வெற்றியைப் பாடுவது - 1054
2 கூடல் சங்கமத்துப் பரணி வீரராசேந்திரசோழன் கூடல் சங்கமம் என்ற இடத்தில் ஆகவமல்லனை வென்றதைப் பாடுவது - 1064
3 கலிங்கத்துப்பரணி முதலாம் குலோத்துங்க சோழனின் கலிங்கப் போர் வெற்றி குறித்துப் பாடுவது செயங்கொண்டார் 1118
4 தக்கயாகப் பரணி சிவன் தக்கனின்(தட்சன்) யாகத்தை அழிப்பது குறித்த பாடல் ஒட்டக்கூத்தர் 1155
5 இரணியவதைப் பரணி [6] இரணியனை வதம் செய்த நரசிம்ம அவதாரம் குறித்த பாடல் - 1210
6 அஞ்ஞானவதைப் பரணி அஞ்ஞானத்தினை (அறியாமை) ஓர் அரசனாக்கி, அகங்காரம் (ஆணவம்) முதலிய தீய பண்புகளைப் படைகள் ஆக்கி இவற்றை ஞானமாகிய இறைவன் அழித்ததாகப் பாடப்பட்டது தத்துவராயர் 1450
7 மோகவதைப் பரணி மோகத்தை எப்படி வதைத்தார் என்று இது விளக்குகிறது. மோகத்தை மோகன் என இது உருவகம் செய்துகொள்கிறது. தத்துவராயர் 1450
8 பாசவதைப் பரணி பாசத்தை வதம் செய்து சிவஞானம் அருளப்பட்டதைப் பாடியது வைத்தியநாத தேசிகர் 1640
9 திருச்செந்தூர்ப் பரணி முருகன் சூரனை அழித்த புராணத்தைப் பாடுவது சீனிப்புலவர் 18-ம் நூற்றாண்டு
10 கஞ்சவதைப் பரணி கம்சனை கண்ணன் வதம் செய்தது குறித்தது -

இதர இணைப்புகள்

உசாத்துணை

  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பன்னிரண்டாம் நூற்றாண்டு, பாகம் 1, 2005

அடிக்குறிப்புகள்

  1. ஆனை ஆயிரம் அமரிடை வென்ற
    மானவனுக்கு வகுப்பது பரணி

    - இலக்கண விளக்கம் - பாடல் 839

  2. ஏழ்தலை பெய்த நூறுஉடை இபமே
    அடுகளத்து அட்டால் பாடுதல் கடனே

    - பன்னிரு பாட்டியல் - பாடல் 243

  3. வஞ்சி மலைந்த உழிஞை முற்றி
    தும்பையிற் சென்ற தொடுகழல் மன்னனை
    வெம்புசின மாற்றான் தானை வெங்களத்தில்
    குருதிப் பேராறு பெருகும் செங்களத்து
    ஒருதனி ஏத்தும் பரணியது பண்பே

    - பன்னிரு பாட்டியல் - பாடல் 240
  4. தமிழ் இலக்கிய வரலாறு - பதினோராம் நூற்றாண்டு - மு. அருணாசலம்
  5. பரணி
  6. 6.0 6.1 இந்நூல் கிடைக்கவில்லை


✅Finalised Page