under review

சுந்தரமூர்த்தி நாயனார் யட்ச கானம்

From Tamil Wiki
யட்ச என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: யட்ச (பெயர் பட்டியல்)
சுந்தரமூர்த்தி என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: சுந்தரமூர்த்தி (பெயர் பட்டியல்)
சுந்தரமூர்த்தி நாயனார் யட்ச கானம்

தெருக்கூத்தின் ஒரு வடிவமாக யட்சகானம் அறியப்படுகிறது. சுந்தரமூர்த்தி நாயனார் யட்ச கானம் (சுந்தரர் விலாசம்) (பதிப்பு: 1995), 63 நாயன்மார்களில் ஒருவரான சுந்தரரின் வாழ்க்கையைக் கூறும் நாடக நூல். இந்நூலை அரசினர் கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம் வெளியிட்டது. டாக்டர். எஸ். செளந்தரபாண்டியன் இந்நூலின் பதிப்பாசிரியர்.

வெளியீடு

அரசினர் கீழ்த்திசைச் சுவடிகள் நூலகத்திலிருந்த ஓலைச்சுவடியிலிருந்து நேரடியாகப் பதிப்பிக்கப்பட்ட நூல் சுந்தரமூர்த்தி நாயனார் யட்ச கானம். ஓலைச்சுவடியில், 'சுந்தரர் விலாசம்' என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இந்நூலின் ஆசிரியர் பெயர் அறியப்படவில்லை. இதன் காலம் பொ.யு. 1848 என அறியப்படுகிறது.

சுந்தரமூர்த்தி நாயனார் யட்ச கானம் நூலை, அரசினர் கீழ்த்திசைச் சுவடிகள் நூலகக் காப்பாட்சியர் டாக்டர். எஸ். செளந்தரபாண்டியன் பதிப்பித்தார். தொல்பொருள் ஆய்வுத்துறை இயக்குநர் நடன. காசிநாதன் இந்நூலின் பொதுப் பதிப்பாசிரியராகச் செயல்பட்டார்.

ஆசிரியர்

சுந்தரமூர்த்தி நாயனார் யட்ச கானம் நூலின் ஆசிரியர் யார் என்று அறியவரவில்லை.

நூல் அமைப்பு

சுந்தரமூர்த்தி நாயனார் யட்ச கானம் நூலின் தொடக்கத்தில் காப்புச் செய்யுள் இடம்பெற்றது. அகவல் பகுதியில் இறை வணக்கம் அமைந்துள்ளது. தொடர்ந்து 146 பாடல்களில் நூல் அமைந்துள்ளது. நூலின் இறுதியில் வாழ்த்தும், மங்களச் செய்யுளும் இடம்பெற்றன.

உள்ளடக்கம்

சுந்தரமூர்த்தி நாயனார் யட்ச கானம் நூல், 63 நாயன்மார்களுள் ஒருவரான சுந்தரமூர்த்தி நாயனாரின் வரலாற்றை இசைநாடக வடிவில் கூறுகிறது. அகவல், நாடகத்தரு, திபதை யாப்பு, வசனம், விருத்தம், தரு, தாடிப் பதம் எனப் பல்வேறு இலக்கிய வடிவங்களில் பாடலும், வசனமும் விரவியதாக நூல் அமைந்துள்ளது.

பேச்சு வழக்குச் சொற்களும், கிராமத்துக் கொச்சைச் சொற்களும் நூலில் ஆங்காங்கே இடம்பெற்றுள்ளன.

மதிப்பீடு

சுந்தரமூர்த்தி நாயனார் யட்ச கானம், 63 நாயன்மார்களில் ஒருவரான சுந்தரின் வாழ்க்கையை இசை நாடக வடிவில் கூறுகிறது. இசை நாடகமாகவும், கூத்தாகவும் நடிக்கத் தக்க வகையில் அமைந்துள்ளது. நாடக வழக்கிற்கேற்ற எளிய நடையில், பொருட்சிறப்பும், இலக்கியச் சிறப்பும் கொண்ட நூலாக அறியப்படுகிறது.

பாடல் நடை

ஏசல் தரு

சிவன்:

நீ யென்னடா சுந்தரா - உந்தன்
பாட்டன் இசவெழு திருக்கையிலே
இந்தக் காய்ப்பேச் சென்னமோ?
கையிற் புண்ணுக்கு கண்ணாடி வேணுமோடா?

சுந்தரமூர்த்தி நாயனார்:

வேண்டின தெல்லாஞ் சொல்லுறாய் - உந்தன்
வார்த்தை மெய்படுமோ கிழவா?

சிவன்:

சில்லித் தொண்டிக்குள் ளாயிரஞ் சாலோடு
தண்ணி சொரிந்தாலும் நிற்குமோமா?
நில்லாத மொழியல்லடா - சொல்வதெல்லாம்
நிசவார்த்தை காண் சுந்தரா.

சுந்தரமூர்த்தி நாயனார்:

என்றுங் கல்லாத மூடனைப் போலவே
கோணக்கழி வெட்டுறா யென்னமா?
என்னடா நீ கிழவா அடிக்கடி
எனக்குநீ அடிமை யென்றே - எந்தன்
முன்னிலே சொல்லுறாய்
சொன்ன வாய்க்கினி முத்திரை போடுவேண்டா

சிவன்:

முத்திரை போடுவையோ சுந்தரா? - இந்த
மொழி பதனம் பண்றடா
இந்தப் பந்த மேதுலகில்? வளர்த்தகடா
வந்து பாயலாச்சுதடா

சுந்தரமூர்த்தி நாயனார்:

அல்லடா போகிழவா இதினாலே ஆவதுண்டோ?
சொல்லடா இனி நில்லடா வெளியே
பிடித்துக் காளியாட்டம் நீ செய்ய வந்தாயோமா?

சிவன்:

வந்தது மெய்யடா
அல்லவென்று வந்தாக்கால் விடுவேனாடா? - இனி
சுந்தரா பேச்சினால் பந்தலிட வேண்டாம்
சும்மாயென் பிறகே வாடா

சுந்தரமூர்த்தி நாயனார்:

வாடா போடா யென்குறாய் - இந்த
வார்த்தை மன்னித்தேன் காண்கிழவா
இனிக் கூடாது கொக்குப்பிடிக்கிற மந்திரம்
கூறினாலே தரமோடா?

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 07-Jul-2024, 21:40:24 IST