under review

சிரித்திரன்

From Tamil Wiki
சிரித்திரன்

சிரித்திரன் (1963-1995) இலங்கையில் வெளிவந்த நகைச்சுவை இதழ். அரசியல் கேலிச்சித்திரங்களுக்காகவும் சமூகவிமர்சனத்துக்காகவும் புகழ்பெற்றது

வரலாறு

சி.சிவஞானசுந்தரம் (சிரித்திரன் சுந்தர்) கொழும்பில் இருந்து வெளிவந்த தினகரனில் கேலிச்சித்திரக்காரராக பணிபுரிந்தார். அதில் வெளிவந்துகொண்டிருந்த சவாரித் தம்பர் கேலிச்சித்திரம் மிகவும் புகழ் பெற்றதால் சிரித்திரனை 1963-ல் ஆரம்பித்தார். 1970 வரை கொழும்பு பண்டாரநாயக வீதி சுதந்திரன் அச்சகத்திலும், 1970 முதல் 1971 வரை டாம் வீதியில் குமரன் அச்சகத்திலும் அச்சிடப்பட்டது. 1971 முதல் யாழ்ப்பாணம் பிரவுன் வீதியில் ஸ்ரீலங்கா அச்சகத்தில் இருந்து வெளிவரத் தொடங்கியது. 1971 நவம்பர் முதல் சிரித்திரன் அச்சகத்தில் இருந்து வெளியாகியது. 1995-ல் யாழ்ப்பாணத்தில் இருந்து இடம்பெயர்ந்தபோது சிரித்திரன் இதழ் நிறுத்தப்பட்டது. அடுத்த ஆண்டே சிவஞானசுந்தரம் மறைதார். மொத்தம் 32 ஆண்டு காலம் தொடர்ந்து சிரித்திரன் வெளிவந்தது. வடக்கில் 1995-ன் போர்க்கால மாபெரும் இடப்பெயர்வு வரையில் வெளிவந்த சிரித்திரனின் முழு ஆயுள் காலத்தை 28 ஆண்டுகள் எனக்கருதலாம் என்றும் மொத்தம் 318 இதழ்கள் வெளிவந்தன என்றும் கார்ட்டுன் ஓவிய உலகில் நான் - என்ற சிரித்திரன் சுந்தரின் சுயசரிதை நூலின் முன்னுரையில் பிரபல எழுத்தாளர் செங்கை ஆழியான் குறிப்பிடுகிறார். சிரித்திரன் ஆசிரியர் நினைவு மலரில் சிரித்திரன் வரலாற்றை எழுதும் செங்கை ஆழியான் தமிழில் முழுக்கமுழுக்க கேலிச்சித்திரத்துக்காக வெளிவந்த ஒரே இதழ் சிரித்திரன் என்று கூறுகிறார்.

சிரித்திரன் இதழ் Centre for Creativity and Innovation நிறுவனத்தால் மீள்பதிப்பிக்கப்பட்டு 2021 ஜனவரி முதல் யாழ்ப்பாணத்தில் இருந்து உலகெங்கும் கிடைக்க கூடிய வகையில் அச்சுப்பிரதியாக வெளியிடப்பட்டு வருகின்றது. siriththiran.com[1] எனும் இணைய விலாசத்திலிருந்து வெளிவருகிறது.

சிரித்திரன் எரிப்பு

சிரித்திரன்

சிரித்திரன் இதழ் அச்சகமும் அலுவலகமும் நூலகச்சேமிப்பும் 1987-ல் இந்திய அமைதிப்படையால் தீவைத்து எரிக்கப்பட்டன. சிரித்திரன் அலுவலகம் அமைதிப்படையினர் தங்குமிடமாக ஆக்ரமிக்கப்பட்டது. இச்செய்திகளை சிரித்திரன் இதழாசிரியரின் மகள் வாணி சுந்தர் பதிவுசெய்திருக்கிறார்[2].

உள்ளடக்கம்

கேலிச்சித்திரங்கள், பகடிக்கட்டுரைகள் மற்றும் நடைச்சித்திரங்கள் இதில் இடம்பெற்றன. சிரித்திரன் சுந்தரின் கேலிச்சித்திர நாயகர்களான சவாரித்தம்பர், சின்னக்குட்டி, மைனர் மச்சான், மயில்வாகனத்தார் போன்றவர்கள் புகழ்பெற்றவர்கள். 'மகுடி பதில்கள்' என்னும் தலைப்பில் சுந்தர் எழுதிய கேள்வி பதில்கள் புகழ்பெற்றது .

சிரித்திரன் புதுக்கவிதைகளையும் சிறுகதைகளையும் தொடர்கதைகளையும் வெளியிட்டது. பல எழுத்தாளர்களையும் அறிமுகம் செய்தது. திக்குவல்லை கமால், திக்கவயல் தர்மகுலசிங்கம் (சுவைத்திரள் ஆசிரியர்), காசி ஆனந்தன், யாழ் நங்கை ஆகியோர் சிரித்திரனில் எழுதிய ஆரம்பகால எழுத்தாளர்கள். எஸ். அகஸ்தியர், டானியல் அன்ரனி, சுதாராஜ், அமிர்தகழியான், நவாலியூர் சச்சிதானந்தன், தெளிவத்தை ஜோசப் என பலருக்கு களம் அமைத்துக் கொடுத்தார். மலையகப் படைப்பாளி ராகுலனின் "ஒய்யப்பங் கங்காணி" . செங்கை ஆழியானின் "ஆச்சி பயணம் போகிறாள்", "கொத்தியின் காதல்" ஆகிய புகழ்பெற்ற படைப்புகள் வெளியிடப்பட்டன.

சிரித்திரன் இதழ்கள் அனைத்தும் இணையநூலகச் சேகரிப்பாக உள்ளன (சிரித்திரன் இதழ்த்தொகுப்பு[3])

உசாத்துணை

அடிக்குறிப்புகள்

  1. [Siriththiran siriththiran.com/home]
  2. [வரலாற்றுச் சுவடுகள்  : எரிந்த 'சிரித்திரன்' சஞ்சிகை! யாழ் பொது நூலகம் ஜூன் 1,.. வரலாற்றுச் சுவடுகள் : எரிந்த 'சிரித்திரன்' சஞ்சிகை! யாழ் பொது நூலகம் ஜூன் 1,.. (siriththiran.com)]
  3. சிரித்திரன் - நூலகம் (noolaham.org)


✅Finalised Page