under review

சிபில் கார்த்திகேசு

From Tamil Wiki
சிபில் கார்த்திகேசு

சிபில் கார்த்திகேசு (Sybil Kathigasu) (செப்டம்பர் 3, 1899 - ஜூன் 12, 1948) இரண்டாம் உலகப் போரின்போது பல நூறு சீனர்களின் உயிர்களைக் காப்பாற்றியவர். ஜப்பானியப் படையினரை எதிர்த்துப் போராடியவர். இங்கிலாந்து மற்றும் காமன்வெல்த் நாடுகளின் இரண்டாவது உயரிய விருதான 'ஜார்ஜ் பதக்கம்' பெற்றவர். ஈப்போ மாநகரின் முக்கிய சாலைக்கு இவருடைய பெயர் சூட்டப்பட்டு உள்ளது.

பிறப்பு, கல்வி

சிபில் கார்த்திகேசு

சிபில் கார்த்திகேசுவின் முழுமையான பெயர் சிபில் டெலி. தோட்ட நிர்வாகியான இவர் அப்பாவின் பெயர் ஜோசப் டெலி. இவர் ஓர் ஐரிஷ் ஈரோஷியன். அம்மாவின் பெயர் பிட்ரைஸ் மெதில்டா டெலி. அவர் ஓர் இந்திய வம்சாவளியினர். சிபில் கார்த்திகேசு இந்தோனேசியா சுமத்திராவில் இருக்கும் மேடானில் 1899-ம் ஆண்டு பிறந்தவர். ஐந்து உடன் பிறப்புகளில் இவர் ஒருவரே பெண்.

சிபில் கார்த்திகேசு தன் கணவர் ஏ சி கார்த்திகேசுவுடன்

சிபில் கார்த்திகேசு தேர்ச்சி பெற்ற ஒரு தாதி. சீன மொழியில் சரளமாகப் பேசக் கூடியவர்.

தனிவாழ்க்கை

திருமணம்

சிபில் கார்த்திகேசு ஜனவரி 7, 1919-ம் ஆண்டு டாக்டர் ஆறுமுகம் கணபதி பிள்ளை என்பவரை கோலாலம்பூர், புக்கிட் நானாஸ் செயிண்ட் ஜான் தேவாலயத்தில் திருமணம் செய்து கொண்டார். தைப்பிங்கில் ஜூன் 17, 1892ல் பிறந்த ஆறுமுகம் கணபதி பிள்ளை ஒரு யாழ்ப்பாண தமிழர். மதம் மாறி திருமணம் செய்ததால் இவர் பெயர் அப்டன் கிலேமேன் கார்த்திகேசு (Abdon Clement Karthigesu) என மாற்றம் கண்டது. பின்னர் இவர் ஏ சி கார்த்திகேசு என்றே பரவலாக அறியப்பட்டார். அவர் சிங்கப்பூர் காலாங் மருத்துவக் கல்லூரியில் படித்த மருத்துவர் ஆவார்.

குடும்பம்

சிபில் - கார்த்திகேசு இணையருக்கு முதலில் பிறந்த குழந்தை ஆகஸ்டு 26, 1919-ல் பிறந்து 19 மணி நேரத்தில் நோயால் இறந்தது. இந்தக் குழந்தைக்கு முதலாம் உலகப்போரில் மரணமடைந்த மைக்கல் எனும் தன் அண்ணனின் பெயரை வைத்தார் சிபில். அதன் பின்னர் இவர்கள் ஒரு குழந்தையைத் தத்தெடுத்து வளர்த்தனர். அக்குழந்தைக்கு வில்லியம் பிள்ளை (அக்டோபர் 25, 1918) எனப் பெயரிட்டனர். அதன் பின்னர் இவர்களுக்கு ஒல்கா கார்த்திகேசு (பிப்ரவரி 26, 1921), தவம் கார்த்திகேசு (செப்டம்பர் 21, 1936) என இரு பெண் குழந்தைகள் பிறந்தனர்.

தொழில்
சிபில் கார்த்திகேசு வாழ்ந்த -ல்லம்

சிபில் கார்த்திகேசு மற்றும் ஏ.சி.கார்த்திகேசு இருவரும் சேர்ந்து ஈப்போ பிரவுஸ்டர் சாலையில் (இப்போது ஜாலான் சுல்தான் இட்ரிஸ் ஷா) ஒரு சிறிய மருத்துவ விடுதியைத் திறந்து நடத்தி வந்தனர். அந்த மருத்துவ விடுதியில் ஏ.சி.கார்த்திகேசு மருத்துவராகவும் சிபில் தாதியாகவும் 15 ஆண்டுகள் பணியாற்றினர்.

போர்க்காலச் சேவை

ஜப்பானியர் படையெடுப்பு

1941-ம் ஆண்டு ஜப்பானியர்கள் மலாயா மீது படை எடுத்தனர். ஜப்பானியர்கள் ஈப்போ நகரைக் கைப்பற்றுவதற்கு முன்னர் சிபில் மற்றும் ஏ.சி.கார்த்திகேசு 'பாப்பான்' எனும் சிறு நகருக்குப் புலம் பெயர்ந்து அங்கே புதிதாக ஒரு மருத்துவ விடுதியைத் திறந்தனர். இந்தப் 'பாப்பான்' சிறு நகரம் ஈப்போ மாநகரத்தில் இருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. சீனர்கள் அதிகமாக வாழும் இடமான இந்நகரத்தில் ஈயச் சுரங்கத் தொழில் பிரதானமானது.

ஜப்பானியர்கள் மலாயாவிற்கு வந்த சில காலத்தில் டாக்டர் கார்த்திகேசு மறுபடியும் ஈப்போவிற்கு வந்து பழைய ஈப்போ மருத்துவ விடுதியை திறந்து நடத்தினார். சிபில் கார்த்திகேசு பாப்பான் பட்டணத்திலேயே தங்கி பாப்பான் மருத்துவ விடுதியைப் பார்த்துக் கொண்டார். இதனால் சீனர்கள் மத்தியில் இவருக்கு நற்பெயர் இருந்தது.

இலவச மருத்துவம்
சிகிழ்ச்சை மையம்

ஜப்பானியர் ஆட்சியில் சீனர்கள் அதிகம் துன்பத்துக்கு உள்ளாகினர். ஜப்பானிய ஆதிக்க எதிர்ப்புப் போராளிகளாக, சீனர்கள் மறைந்து இருந்து ஜப்பானியர்களைத் தாக்கி வந்தனர். பல போராளிகள் காயம் அடைந்தனர். காயம் அடைந்த போராளிகளுக்கு சிபில் கார்த்திகேசு மருத்துவ விடுதியில் ரகசியமாக இலவச கிகிழ்ச்சை வழங்கப்பட்டது. மருத்துவ விடுதிக்கு பின்புறம் இருந்த காய்கறித் தோட்டம் போராளிகளுக்கு மருத்துவம் பார்க்க நல்ல மறைவிடமாக அமைந்தது. பேராக் வட்டாரத்தில் உள்ள ஏறக்குறைய 6000 போராளிகளுக்கு அவர் அவசர சிகிச்சை செய்து இருக்கிறார். மேலும் தன்னுடைய விடுதியில் இருந்த ஒரு சின்ன சிற்றலை வானொலி வழியாக பி.பி.சி வானொலிச் செய்திகளைக் கேட்டு அதன் செய்திகளை பாப்பான் மக்களுக்கு ரகசியமாகத் தெரிவித்தும் வந்தார் சிபில் கார்த்திகேசு.

கைதும் விசாரணையும்

அது ஜப்பானிய அரசுக்கு எதிரானது என்பதால் ஆகஸ்டு 1943-ம் ஆண்டு சிபில் கார்த்திகேசு ஜப்பான் இராணுவத்தால் கைது செய்யப்பட்டார்.

ஜப்பானியர்களின் போலீஸ் தலைமையகமாக விளங்கிய ஈப்போ செயிண்ட் மைக்கல் பள்ளியில் சிபில் கார்த்திகேசு விசாரிக்கப்பட்டார். போராளிகளின் பெயர்களை வெளியிடும் அடையாளம் காட்டும் கட்டளைக்கு அவர் ஒத்துழைக்கவில்லை. விசாரணையில் சித்திரவதைகளை அனுபவித்தாலும் பலநூறு சீனர்களின் நன்மையைக் கருதி அவர் உண்மையைக் கூறவில்லை. மூன்று மாதங்களுக்குப் பிறகு பத்து காஜா சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டார். 1943லிருந்து 1945 வரை சிபில் கார்த்திகேசு அந்தச் சிறைச்சாலையில் சித்திரவதைக்கு உள்ளானார்.

சிறை கொடுமைகள்

பத்து காஜா சிறையில் தூங்க விடாமல் செய்தல், தண்ணீருக்குள் தலையை அழுத்திப் பிடித்து மூச்சு நின்று போகும் போது தலையை வெளியே எடுத்தல், ஐஸ் கட்டியில் கட்டிப் போட்டு உட்கார வைத்தல், காலைக் கட்டித் தொங்க விடுதல், படுக்க வைத்து அவர் மீது ஐந்து பேர் ஏறி மிதித்தல், பிறப்பு உறுப்பில் சவர்க்கார நீரைப் பாய்ச்சி மயக்கம் அடையச் செய்தல், நிர்வாணமாக்கப்படுதல், நகத்தைப் பிடுங்கி விரலில் ஊசி பாய்ச்சுதல், உள்ளங்கையில் சூடு வைத்தல், புகை மூட்டம் போட்டு மூச்சு திணறச் செய்தல், புகையிலையை வாயில் திணித்தல் எனக் கொடுமைகள் இருந்ததாக தன்னுடைய சுய சரிதையில் சிபில் கார்த்திகேசு பதிவு செய்துள்ளார்.

குடும்பத்தினர் கொடுமைக்குள்ளாதல்
வீர விருது

சிபில் கார்த்திகேசுவைப் போல அவருடைய கணவர் டாக்டர் கார்த்திகேசுவையும் கட்டி வைத்து ஜப்பானிய இராணுவம் அடித்தனர். அவர் வாய்வழியாக நீரை செலுத்தி வயிற்றில் உதைத்து துன்புறுத்தினர். அவர்களுடைய மகன் வில்லியம் பிள்ளையையும் ஒரு மரத்தில் கட்டித் தொங்க விட்டனர். தாயாரின் முன்னாலேயே பயங்கரமான சித்ரவதைகள் செய்தனர். கடைசியாக மகள் தவம் கார்த்திகேசுவையும் கொடுமை செய்தனர். ஏறக்குறைய இரண்டரை ஆண்டுகள் சிபில் கார்த்திகேசுவின் குடும்பமே ஜப்பானியரின் சித்ரவதைக்கு உள்ளாகி இருந்தது. தன் குடும்பம் பொருட்டு நூற்றுக்கணக்கான சீனர்கள் துன்பப்படக்கூடாது என சிபில் கார்த்திகேசு கடைசி வரை யாரையும் காட்டிக் கொடுக்கவில்லை.

மீட்பு

இரண்டாம் உலகப் போர் ஒரு முடிவுக்கு வந்தது. ஜப்பானியர்களின் ஆட்சியும் தோல்வி கண்டது. 1945-ம் ஆண்டு ஜப்பானியர்கள் மலாயாவில் இருந்து வெளியேறினர். ஆங்கிலேயர்கள் வந்தனர். கேப்டன் டேவிட் மெக்பர்லேன் என்பவர் சிபில் கார்த்திகேசுவைத் தேடும் முயற்சியில் இறங்கினார். அவர் பத்து காஜா சிறையில் இருப்பது கண்டுபிடிக்கப் பட்டது. உடனடியாக சிபில் கார்த்திகேசு பாப்பான் பட்டணத்திற்கு கொண்டு வரப்பட்டார். பாப்பான், பூசிங் நகர மக்கள் அனைவருமே திரண்டு நின்று அவரை வரவேற்றனர். பின்னர், ஆங்கிலேயர்கள் அவரை உடனடியாக இங்கிலாந்திற்கு விமானத்தின் மூலமாகக் கொண்டு சென்றனர். அங்கே அவருக்கு வாழ்நாள் முழுக்க மருத்துவம் வழங்கப் பட்டது.

சுயசரிதை

சுய சரிதை

லண்டனில் வாழ்கையில் சிபில் கார்த்திகேசு No Dram of Mercy எனும் தன் சுயசரிதையையும் மற்றவர் துணை கொண்டு எழுதினார். சிபில் கார்த்திகேசுவின் புத்தகம் 1954-ம் ஆண்டு வெளியிடப்பட்டது. அதன் மறுபதிப்பு 1983-ம் ஆண்டு Oxford University கொண்டு வந்தது.

கிங் ஜார்ஜ் வீர விருது

சிபில் கார்த்திகேசுவை ஆறாம் ஜார்ஜ் மன்னர் பார்க்க ஆசைப் பட்டமையால் பக்கிங்ஹாம் அரண்மனைக்குத் தள்ளு வண்டியில் கொண்டு வரப்பட்டார். அங்கே சிபில் கார்த்திகேசுவிற்கு இங்கிலாந்தின் ஆக உயரிய விருதான கிங் ஜார்ஜ் வீர விருது வழங்கிக் கௌரவிக்கப் பட்டது. மலேசியாவில் இதுவரை வேறு எந்தப் பெண்ணும் கிங் ஜார்ஜ் வீர விருதை பெற்றது -ல்லை. அரசின் சகல மரியாதைகளுடன் மிகச் சிறப்பான மருத்துவச் சேவைகள் சிபில் கார்த்திகேசுவிற்கு வழங்கப் பட்டன.

மரணம்

சிபில் கார்த்திகேசு மருத்துவம் முழுமையாகப் பலனளிக்காமல் 1948-ம் ஆண்டு ஜூன் மாதம் 12-ம் தேதி தன்னுடைய 49வது வயதில் இறந்து போனார். அவருடைய உடல் ஸ்காட்லாந்து லானார்க் எனும் இடத்தில் புதைக்கப் பட்டது. பின்னர் அந்தப் பூதவுடல் லானார்க் சமாதியில் இருந்து மார்ச் 20, 1949ல் தோண்டி எடுக்கப் பட்டு, பினாங்கிற்கு கப்பல் வழியாகக் கொண்டு வரப்பட்டு ஈப்போவில் உள்ள அவருடைய புருவ்ஸ்டர் சாலை -ல்லத்திற்கு மாபெரும் இறுதி ஊர்வலமாகக் கொண்டுச் செல்லப்பட்டது. ஈப்போ நகரத்தின் வழி நெடுகிலும் நின்று ஓர் இலட்சம் சீனர்கள், மலாய்க்காரர்கள், இந்தியர்கள் கண்ணீர் விட்டு மரியாதை செய்தனர். வெளியூர், வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களையும் சேர்த்து அந்தக் கணக்குச் சொல்லப் படுகிறது.

சமாதி

சமாதி

சிபில் கார்த்திகேசுவின் உடல் ஈப்போ செயிண்ட் மைக்கல் மாதா கோயில் அருகில் இருக்கும் சுடுகாட்டிற்கு எடுத்துச் செல்லப் பட்டது. அது கொனாலி சாலை கிறிஸ்துவ மயானம் என்று இப்போது அழைக்கப்படுகிறது.

நினைவுச் சின்னங்கள்

சிபில் கார்த்திகேசு பெயரில் சாலை

மலேசிய அரசினர் சிபில் கார்த்திகேசுவின் பெயரை ஈப்போ மாநகரத்தில் உள்ள ஒரு முக்கிய சாலைக்கு வைத்து பெருமையும் செய்து இருக்கிறார்கள். அவர் வாழ்ந்து மறைந்த பாப்பான் பட்டணத்து -ல்லம் ஓர் அருங்காட்சியகமாக இப்போது மாற்றப் பட்டுள்ளது. அவர் பயன்படுத்திய துணிமணிகள், பீங்கான் தட்டுகள், குவளைகள், படுக்கை விரிப்புகள், குடும்பப் படங்கள், அலுமினியப் பொருட்கள், மருந்துப் பெட்டிகள் அனைத்தும் சேகரிக்கப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

வரலாற்றுப் பதிவுகள்

  • No Dram of Mercy - சிபில் கார்த்திகேசுவில் சுயசரிதை
  • Faces of Courage: A Revealing Historical Appreciation of Colonial Malaya's Legendary Kathigasu Family by Norma Miraflor & Ian Ward
  • Apa Dosaku (என் பாவம் என்ன?) எனும் தொடர் 2010-ல் ஆஸ்ட்ரோ நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது

உசாத்துணை


✅Finalised Page