under review

சமஸ்

From Tamil Wiki
சமஸ்
சமஸ்

சமஸ் (பிறப்பு: டிசம்பர் 4, 1979) தமிழில் எழுதிவரும் எழுத்தாளர், கட்டுரையாளர், பத்திரிக்கையாளர், உரையாளர். ‘தினமணி’, ‘ஆனந்த விகடன்’, ‘தி இந்து’ தமிழ் ஆகியவற்றின் ஆசிரியர் குழுக்களில் முக்கியமான பொறுப்புகளில் பணியாற்றியவர். ’அருஞ்சொல்’ இணைய இதழின் ஆசிரியர்.

சமஸ்

பிறப்பு, கல்வி

சமஸ் மன்னார்குடியில் மு. சந்திரசேகரன், மு.இரா. மலர்க்கொடி இணையருக்கு டிசம்பர் 4, 1979-ல் பிறந்தார். சிறுவயதிலேயே தந்தை காலமானார். தாய்வழித் தாத்தா சு. ராஜகோபாலனின் ஆதரவில் சமஸ் வளர்ந்தார். தொடக்கக் கல்வியை மன்னார்குடி சேவியர் ஜீசஸ் பொதுப் பள்ளி, இலக்கணாம்பேட்டை ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி, மன்னார்குடி பின்லே தொடக்கப் பள்ளியில் பயின்றார். மேல்நிலைக் கல்வியை பின்லே மேல்நிலைப் பள்ளியில் பயின்றார். மன்னார்குடி இராஜகோபாலசாமி அரசினர் கலைக் கல்லூரியில் ஆங்கில இலக்கியம் பயின்றார்.

தனி வாழ்க்கை

பள்ளி நாட்களில் ‘இந்தியன்’, கல்லூரி நாட்களில் ‘இந்தியன் இனி’ இதழ்களை நடத்தினார். ‘தினமலர்’, ‘தினமணி’, ‘ஆனந்த விகடன்’, ‘ புதிய தலைமுறை’, ‘தி இந்து தமிழ் திசை’ நாளிதழில் பணியாற்றினார். மனைவி ரா. ரேகா. அக்குபஞ்சர் மருத்துவர். இரு குழந்தைகள். தற்போது சென்னையில் வசிக்கிறார்.

இதழியல்

கருணாநிதியுடன் சமஸ்

சமஸ், மாணவப் பத்திரிகையாளராக தன் இதழியல் பயணத்தை ஆரம்பித்தார். செய்தியாளர், உதவி ஆசிரியர், பொறுப்பாசிரியர் என பல்வேறு படிநிலைகளிலும் பணியாற்றி ஆசிரியர் பணியிடத்தை வந்தடைந்தார். நாளிதழ், வார இதழ், தொலைக்காட்சி என இதழியலின் பல்வேறு வடிவங்களிலும் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.

தினமணி
சமஸ்

தினமணி நாளிதழில் 2005-ல் சமஸ் செய்தியாளராகப் பணியாற்றத் தொடங்கினார். விரைவில் உதவி ஆசிரியரானார்.‘தினமணி’யின் தலையங்கப் பக்கக் கட்டுரையாளர்களில் ஒருவரானார். ‘தினமணி’ இணைப்பிதழ்களிலும் கட்டுரைகள் எழுதினார். ‘தினமணி’யின் வரலாற்றில் இளம் வயதில் தலையங்கம் எழுதியவர் சமஸ்.

ஆனந்தவிகடன்

சமஸ் 2011-ல் ‘ஆனந்த விகடன்’ வார இதழில் இணைந்தார். தொடர் கட்டுரைகள், பேட்டிகள் இவற்றினூடாக இதழின் செம்மையாக்குநராகப் பணியாற்றினார். ‘ஆனந்த விகடன்’, ‘சுட்டி விகடன்’, ‘ஜூனியர் விகடன்’ ஆகிய இதழ்களின் செம்மையாக்கத்தில் ஈடுபட்டார். ‘என் விகடன்’, ‘டாக்டர் விகடன்’ இதழ்களின் பொறுப்பாசிரியர் பணியையும் ஏற்றார். ஆஸ்கர் விருது பெற்ற இயக்குநர் ஆங் லீ, இலங்கையின் இறுதிப் போரைக் கையாண்ட ராணுவத் தளபதி பொன்சேகா உள்ளிட்டவர்களை இக்காலகட்டத்தில் இவர் எடுத்த பிரத்யேகப் பேட்டிகள், ஜனரஞ்சகப் பின்னணியைக் கொண்ட இதழில் பத்துப் பக்கங்கள் அளவுக்கு எழுதிய தீவிரமான அரசியல் கட்டுரைகள் ஆகியன குறிப்பிடத்தக்க பங்களிப்புகள்.

புதிய தலைமுறை

சமஸ் 2013-ல் ‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சி நிறுவனத்தில் இணைந்தார். அந்நிறுவனம் பால.கைலாசம் தலைமையில் விரைவில் தொடங்கவிருந்த ‘புது யுகம்’ தொலைக்காட்சி நிர்மாணக் குழுவில் நிர்வாகத் தயாரிப்பாளராகப் பணியாற்றினார். இந்தக் காலகட்டத்திலும் ‘தினமணி’, ‘காலச்சுவடு’ உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து அரசியல் கட்டுரைகளை எழுதிவந்தார்.

இந்து தமிழ்
சமஸ் கலைஞர் பொற்கிழி

2013-ல் ‘தி இந்து’ குழுமம் தமிழில் நாளிதழைத் தொடங்கியபோது அதன் உருவாக்க அணியில் பங்கேற்க அழைக்கப்பட்டதன்பேரில் ‘தி இந்து’ தமிழ் நாளிதழில் இணைந்தார். அந்நாளிதழின் ஆசிரியருக்கு அடுத்த நிலையில், நடுப்பக்க ஆசிரியர் பொறுப்பில் பணியாற்றினார்.

தமிழ் இதழியலில் முக்கியமான பல முன்னெடுப்புகளை ‘தி இந்து’ தமிழ் நாளிதழின் நடுப்பக்கங்கள் மேற்கொண்டன. அன்றாடம் மக்களிடம் பயணித்தபடி எழுதப்படும் தொடர் கட்டுரைகள், ஒரு குறித்த பொருளில் பல தரப்பினரின் கருத்துகளையும் முன்வைக்கும் தொடர் பேட்டிகள், முழுப் பக்கக் கட்டுரைகள், சர்வதேச பத்திரிகைகளில் வெளியாகும் கட்டுரைகளின் மொழிபெயர்ப்புகள், அறிவியல் முன்னகர்வுகள் – கலை இலக்கியப் போக்குகள் தொடர்பான உடனடி எதிர்வினைகள் என நடுப்பக்கங்களில் எடுக்கப்பட்ட முன்னெடுப்புகள், சாதியை மையப் பொருளாகக் கொண்டு ஒரு வாரத்துக்குத் தொடர்ந்து வெளியான அரசியல் தலைவர் தொல்.திருமாவளவன் பேட்டி ஆகிய முன்னெடுப்புகளின் பின்விசையாக இருந்தார்.

தொடர்ந்து எழுதியும்வந்தார் சமஸ். இக்காலகட்டத்தில் அவர் எழுதிய கட்டுரைகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவையே ‘யாருடைய எலிகள் நாம்’, ‘கடல்’, ‘அரசியல் பழகு’, ‘லண்டன்’ ஆகிய நூல்களாகப் பிற்பாடு வெளிவந்தன.

அருஞ்சொல்

இந்து தமிழ் திசை நாளிதழிருந்து விலகியபின் ஆகஸ்ட் 27, 2021-ல் அருஞ்சொல் என்ற இணைய பத்திரிக்கையைத் தொடங்கி அதன் ஆசிரியராக உள்ளார். அன்றாடம் தலையங்கம், கட்டுரைகள் என மூன்று பதிவுகளுக்கு மிகாமல் பதிவிட்டு வருகிறார். செப்டம்பர் 17, 2021-ல் ‘அருஞ்சொல்’ என்ற யுடியூப் பக்கத்தைத் தொடங்கி அதில் காணொளிகளையும் பதிவிட்டு வருகிறார் (பார்க்க, அருஞ்சொல்)

சமஸ் 2021-ல், ‘இந்து தமிழ்’ நாளிதழிருந்து விலகி இனி சுயாதீன பத்திரிகையாளராகப் பணியாற்றப்போவதாக அறிவித்தார். ஆகஸ்ட் 22, 2022-ல் ‘அருஞ்சொல்’ இணைய இதழின் பெயரை அறிவித்தார். தொடர்ந்து, செப்டம்பர் 22-ம் தேதி அன்று ஆசிரியப் பொறுப்பை ஏற்று ‘அருஞ்சொல்’ தளம் வெளியானது. ‘அன்றாடம் ஒரு கட்டுரை; அதிகபட்சம் போனாலும் மூன்று பதிவுகள்’ என்ற அறிவிப்புடன் வெளியான இந்தத் தளம் தீவிரமான விவாதங்களை முன்வைக்கும், தேசிய – சர்வதேச விவகாரங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் தளமாக வெளிவருகிறது. ராமச்சந்திர குஹா, ப.சிதம்பரம், கோபாலகிருஷ்ண காந்தி, கே.சந்துரு, கௌதம் பாட்டியா என்று பல அறிவாளுமைகளும் தொடர் பங்களிக்கும் தளமாக உள்ளது.

பதிப்பகம்

சமஸ் இதழியல் பணியின் ஓர் அங்கமாக ‘அருஞ்சொல் வெளியீடு’ எனும் பதிப்பகம் தொடங்கினார். மேனாள் நீதிபதி கே.சந்துருவின் சுயசரிதையான ‘நானும் நீதிபதி ஆனேன்’ நூல் இந்தப் பதிப்பகம் கொண்டுவந்த முதல் நூல்.

இலக்கிய வாழ்க்கை

இதழியல் கட்டுரைகள்
சமஸ் மருத்துவர் ஜீவா விருது

தமிழகத்தின் உணவு மரபைக் கொண்டாடும் விதமாக ‘தினமணி’யின் ‘ஞாயிறு கொண்டாட்டம்’ இணைப்பிதழின் ‘ஈட்டிங் கார்னர்’ பகுதியில் உணவு தொடர்பான கட்டுரைகளை எழுதினார் சமஸ். 2009-ல் ‘சாப்பாட்டுப் புராணம்’ என்ற பெயரில் அந்தக் கட்டுரைகள் தொகுக்கப்பட்டு, நூலாக வெளிவந்தது. இந்தியத் தேர்தலை நாட்டின் பல்வேறு தரப்பு மக்களும் எப்படிப் பார்க்கிறார்களென நாடெங்கும் பயணித்து ‘தி இந்து’ தமிழ் நாளிதழில் எழுதிய ‘இந்தியாவின் வண்ணங்கள்’ தொடர், கடலோடிகளின் வாழ்வை அவர்களுடனேயே களத்தில் தங்கி, பயணித்து எழுதிய ‘கடல்’ இரு தொடர்களும் சமஸுடைய முக்கியமான முன்னெடுப்புகள். 2016 தமிழகச் சட்டமன்றத் தேர்தலின்போது சமஸ் எழுதிய ‘அரசியல் பழகு’ தொடர் கட்டுரைகள் பிற்பாடு அவரால் விரித்து எழுதப்பட்டு, அரசியலை இளைய சமூகத்துக்கு அறிமுகப்படுத்தும் வகைமையிலான நூலாக வெளிவந்தது.

பயணக்கட்டுரை

சமஸ் 2018-ல் பிரிட்டன் அரசின் அழைப்பின் பெயரில் லண்டன் சென்றார். அந்தப் பயணத்தில் கல்வி, சுகாதாரம், பொருளாதாரம் என்று பல்வேறு துறைகளிலும் பிரிட்டன் அரசின் செயல்முறைகளை கள ஆய்வு செய்து, பிரிட்டன் சமூகச் சூழலையும் இந்தியச் சமூகச் சூழலையும் ஒப்பிட்டு, ‘ஒரு மக்கள் நல அரசுக்கான வரையறைகள் என்ன?’ என்று விவாதிக்கும் உரையாடலாக ‘தி இந்து’ தமிழ் நாளிதழில் தொடர் கட்டுரைகளை எழுதினார். இக்கட்டுரைகள் தொகுக்கப்பட்டு ‘லண்டன்’ நூலாக வெளிவந்தது.

தொகைநூல்கள்

‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்’ மு.கருணாநிதியின் வாழ்வை விவரிக்கும் தொகுப்பு நூல். ‘மாபெரும் தமிழ்க்கனவு’ அண்ணாவின் வாழ்க்கை வரலாறு, அவருடைய தேர்ந்தெடுக்கப்பட்ட பேச்சு, எழுத்து, பேட்டிகளின் தொகுப்பு நூல். ‘ஒரு பள்ளி வாழ்க்கை’ கல்வியாளர் வி.ஸ்ரீநிவாசன் வாழ்க்கை வரலாற்றைப் பேசும் தொகுப்பு நூல்.

விருதுகள்

  • எழுத்தாளர் சுஜாதா விருது
  • எழுத்தாளர் சுந்தர ராமசாமி விருது
  • பத்திரிகையாளர் சின்ன குத்தூசி விருது
  • சேக்கிழார் விருது
  • 2021-ல் மருத்துவர் ஜீவா பசுமை விருது சமஸுக்கு வழங்கப்பட்டது.
  • 2021-ல் கலைஞர் பொற்கிழி விருது வழங்கப்பட்டது.

இலக்கிய இடம்

சமஸ் தமிழின் மிகவும் கவனிக்கப்படும் இதழியலாளராக உள்ளார். 2018-ல் பிரிட்டன் அரசால் லண்டன் அழைக்கப்பட்டிருந்த காமன்வெல்த் பத்திரிகையாளர்களில், இந்தியாவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பத்து பேரில் ஒருவர் சமஸ். தமிழகம் முழுக்க பயணம் செய்து, ஒரு பொதுத்தலைப்பின் கீழ் அவர் எழுதிய இதழியல் ஆக்கங்கள் தமிழ் இதழியலெழுத்தில் முக்கியமானவை என கருதப்படுகின்றன. சமஸ் சுதந்திர ஜனநாயகப் பார்வை கொண்ட இதழாளராக அறியப்படுகிறார்.

நூல்கள்

கட்டுரை
  • சாப்பாட்டுப் புராணம் (2015, துளி வெளியீடு)
  • இந்தியாவின் வண்ணங்கள் 2011
  • கடல் (நீர், நிலம், வனம்) (2015, இந்து தமிழ் திசை)
  • ஒரு பள்ளி வாழ்க்கை (2022, அருஞ்சொல் வெளியீடு)
அரசியல்
  • அரசியல் பழகு (2015, துளி வெளியீடு)
  • ஊடகர் கலைஞர் (2011, மணற்கேணி பதிப்பகம்)
  • யாருடைய எலிகள் நாம்? (2017, துளி வெளியீடு)
தொகுப்புகள்
  • தெற்கிலிருந்து ஒரு சூரியன் (2017, இந்து தமிழ் திசை)
  • மாபெரும் தமிழ்க்கனவு (2020, இந்து தமிழ் திசை)
  • ஒரு பள்ளி வாழ்க்கை (2022, அருஞ்சொல் வெளியீடு)
பயணம்
  • லண்டன் (2022, அருஞ்சொல் வெளியீடு)

உரைகள்

உசாத்துணை


✅Finalised Page