under review

சங்கரதாஸ் சுவாமிகள்

From Tamil Wiki
சங்கரதாஸ் சுவாமிகள்
சங்கரதாஸ் சுவாமிகள்
சங்கரதாஸ் சுவாமிகள் சிலை, மதுரை
மதுரை சங்கரதாஸ் சுவாமிகள் சிலைதிறப்பு.ஔவை டி.கே.சண்முகம் பேசுகிறார். மேடையில் ஆர்.வெங்கட்ராமன்

சங்கரதாஸ் சுவாமிகள் (தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள் / சங்கரன்) (செப்டம்பர் 7, 1867 - நவம்பர் 13, 1922) பத்தொன்பதாம் நூற்றாண்டு தமிழ் நாடக உலகில் முதன்மையான ஆளுமை. 'நாடகத் தமிழின் தலைமையாசிரியர்’ என்று குறிப்பிடப்படுபவர். கூத்து மரபிலிருந்து உருவாகி வந்த நாடகக் கலையில் அரங்க மரபிற்கு ஏற்ப முறைமைகளை உருவாக்கியதில் சங்கரதாஸ் சுவாமிகள் முக்கியமானவர். தமிழ் நாடக வரலாற்றில், ஐம்பதுக்கும் மேற்பட்ட நாடகங்களை இயற்றிய நாடக ஆசிரியர், ஏராளமான கலைஞர்களை உருவாக்கி நாடகப் பயிற்சி அளித்த நாடகப் பயிற்சியாளர் என்ற இரண்டு கூறுகளில் இவரது முக்கிய பங்களிப்பு குறிப்பிடப்படுக்கிறது.

பிறப்பு, இளமை

சங்கரதாஸ் சுவாமிகள் தூத்துக்குடிக்கு அருகிலுள்ள காட்டுநாய்க்கன்பட்டி என்னும் சிற்றூரில் செப்டம்பர் 7, 1867 (ஆவணி 22) அன்று பிறந்தார். தந்தை இராமாயணப் புலவர் என அழைக்கப்பட்ட தாமோதரக் கணக்கப் பிள்ளை, தாய் பேச்சியம்மாள். இவரது இயற்பெயர் சங்கரன். இவர் பெருங்குடி மறவர் குடும்பத்தைச் சேர்ந்தவர், ஆகவே தனக்கு இணையானவரான மறவர்குலத்து ராமநாதபுரம் சேதுபதியை புகழ்ந்து பாடமாட்டேன் என்று சொன்னதாகச் சொல்லப்படுகிறது.

தொடக்கக் கல்வியை தமிழ்ப் புலவராகிய தந்தை தாமோதரனாரிடம் பயின்றார். பின்னர் பழனியில் வாழ்ந்த தண்டபாணி சுவாமிகளிடம் தமிழ்க்கல்வி பயின்று சங்க இலக்கியங்கள், நீதிநூல்கள், புராணங்கள், இதிகாசங்கள் போன்றவற்றைக் கற்றார். வண்ணம் பாடுவதில் புலமை பெற்ற வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகளிடம் பாடம் பயின்று இசைப்பாடல்களான வண்ணம், சந்தம் ஆகியவற்றைப் பாடும் திறனையும் இசைப்பாடல்கள் இயற்றும் புலமையையும் பெற்றார்.

தனிவாழ்க்கை

தூத்துக்குடி உப்புப் பண்டகசாலையில் சில காலம் கணக்கராக வேலை பார்த்தார். அந்த பணியை துறந்து நாடகத்துறையில் ஈடுபட்டார். சாமி நாயுடு அவர்களின் நாடக சபையில் சிலகாலம் சங்கரதாஸ் ஆசிரியராக இருந்தார்.

சாமி நாயுடு நாடகக் குழுவில் பணியாற்றும்பொழுது உலகியலில் வெறுப்புற்ற சங்கரதாஸ் முருகனின் அருள்வேண்டி தீர்த்த யாத்திரை மேற்கொண்டார். இடுப்பில் மட்டும் உடையுடுத்தி யாத்திரை மேற்கொண்ட சங்கரதாஸரை சுவாமிகள் என அழைக்கத் தொடங்கினர். தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள் என்று அறியப்படலானார். இறுதிவரை திருமணம் செய்து கொள்ளவில்லை.

புதுக்கோட்டை மகாவித்துவான் கஞ்சிரா மான்பூண்டியா பிள்ளையிடம் இசை கற்கத் தொடங்கினார். அவர் சங்கரதாஸை தன்னுடைய மகனாக தத்து எடுத்துக்கொண்டார்.

நாடகக் கலை

சங்கரதாஸ் இருபத்து நான்காவது வயதில்,1891ல் நாடக உலகில் நுழைந்தார். நடிகராகவும், நாடக ஆசிரியராகவும், நாடகப் பயிற்றுநராகவும், நாடகக்குழு உரிமையாளராகவும் இருந்தார்.

நாடக நடிகர்

முதன் முதலில் சங்கரதாஸ் ராமுடு அய்யர், கல்யாணராமய்யர் என்னும் இருவர் நடத்திய நாடக சபையில் நடிகராக சேர்ந்தார். எமதர்மன், இரணியன், ராவணன், சனீஸ்வரன், கடோத்கஜன் போன்ற கதாபாத்திரங்களில் அங்கு நடித்தார். பின்னர் சாமி நாயுடு அவர்களின் நாடக சபையில் சிலகாலம் சங்கரதாஸ் ஆசிரியராக இருந்தார். அப்பொழுது நாடகத்தின் சூத்திரதாராகவும் நடித்தார்.

சங்கரதாஸ் நடிப்பைக் கைவிட்டதற்கு காரணமாக சில சம்பவங்கள் கூறப்படுகின்றன. சாவித்திரி நாடகத்தில் அவர் எமனாக நடித்தபோது அந்நாடகத்தைப் பார்த்துக்கொண்டிருந்த பெண் ஒருவருக்கு கர்ப்பம் கலைந்ததும் நளதமயந்தி நாடகத்தில் சனீஸ்வரன் வேடமிட்டிருந்த சங்கரதாஸ் அவ்வேடத்தைக் கலைக்கச் சென்றபொழுது அவரைக் கண்ட பெண்ணொருவர் மாரடைப்பால் மரணமடைந்ததும் என தொடர்ந்து நடந்ததால், அவர் நாடகத்தில் நடிப்பதைக் கைவிட்டார். நாடகம் எழுதுகிற, கற்றுத்தருகிற ஆசிரியப் பணியை மட்டும் தொடர்ந்தார் என்று சொல்லப்படுகிறது.

நாடக ஆசிரியர்
சங்கரதாஸ் சுவாமிகள்

சிறிதுகாலம் நாடகத்தில் இருந்து ஒதுங்கியிருந்த சங்கரதாஸ் மான்பூண்டியா பிள்ளையின் வேண்டுகோளுக்கு இணங்கி மீண்டும் நாடகங்களில் ஈடுபட்டார். வள்ளி வைத்தியநாதய்யரின் நாடக சபை, அல்லி பரமேசுவர ஐயரின் நாடக சபை, பி.எஸ். வேலு நாயரின் ஷண்முகானந்த சபை ஆகியவற்றில் ஆசிரியராகப் பணிபுரிந்தார்.

ஒரே இரவில் ஒரு நாடகத்தை முழுமையாக எழுதி முடிக்கும் திறன் இவருக்கு இருந்தது. அவ்வை சண்முகம் கதாநாயகனாக நடிக்கவிருந்த அபிமன்யு சுந்தரி நாடகத்தை ஒரே நாளிரவில் விளக்கை வைத்துக்கொண்டு எழுதி முடித்துவிட்டார். நான்கு மணிநேரம் நடிக்க வேண்டிய நாடகத்துக்குத் தேவையான நூற்றுக்கும் அதிகமான பாடல்கள், உரையாடல்கள் அனைத்தையும் முழுவதுமாக கற்பனையில் இருந்து எந்தத் திருத்தங்களும் இல்லாமல் மங்களப் பாடல் வரை எழுதி முடித்துவிட்டிருந்தார் என்று அவ்வை சண்முகம் குறிப்பிடுகிறார்.[1]

நாடகங்களில் நடித்த நடிகர்கள் சங்கரதாஸ் சுவாமிகளின் பாடல்களை மட்டும் பயன்படுத்திக்கொண்டு வசனங்களை அவர்கள் விருப்பத்துக்கு ஏற்ப சொல்லத் தொடங்கினர். இவ்வுரையாடல்கள் நடிகர்கள் தனிப்பட்ட முறையில் குத்திக்காட்டும் சிலேடைக் கூற்றுகளாக தரம் குறையத் தொடங்கின. இதனால் சிறுவர்களை மட்டும் நடிகர்களாகக் கொண்ட பாலர் நாடக சபையை முதன்முதலாக 1910-ம் ஆண்டில் சமரச சன்மார்க்க நாடக சபை என்னும் பெயரில் சங்கரதாஸ் தொடங்கினார்.

பின்னர் சமரச சன்மார்க்க நாடக சபையைக் கலைத்துவிட்டு, ஜெகந்நாத ஐயரின் பால மீன ரஞ்சனி சபையில் ஆசிரியராக சிலகாலம் இருந்தார்.

நாடகம் பயிற்றுவிக்கும் ஆசிரியர்

1918-ம் ஆண்டில் கருத்து வேறுபாட்டால் பால மீன ரஞ்சனி சபையிலிருந்து விலகி மதுரைக்கு வந்தார். அங்கே தன் நண்பர்களான சின்னையாபிள்ளை, கருப்பையாபிள்ளை, பழனியாபிள்ளை, சுப்பிரமணியபிள்ளை ஆகிய நால்வரையும் உரிமையாளராகக் கொண்ட தத்துவ மீனலோசனி சபையை உருவாக்கி அதன் ஆசிரியராக இறுதி வரை இருந்தார். இந்தக் குழுவில் நாடகத்தின் அனைத்துப் பொறுப்புகளையும் ஏற்று நாடகக் கலைஞர்களை பயிற்றுவிப்பவராகவும் பணிபுரிந்தார்.

அன்று பாலர் சபைகளில் பயிற்சி பெற்றவர்களே பின்னர் புகழ் பெற்ற நாடக நடிகர்களாகவும், நாடக ஆசிரியர்களாகவும், திரைப்பட நடிகர்களாகவும் பரிணமித்தார்கள். டிகேஎஸ் சகோதரர்கள் எனப் புகழ்பெற்ற அவ்வை சண்முகம், டி.கே. பகவதி சகோதரர்கள் இந்தக் குழுவில் பயின்று வந்தவர்கள்.

நாடகக் கலை வளர்ச்சி

தமிழ் நாடகங்கள் தெருக்கூத்துக்களாக நடந்து வந்த அக்காலத்தில் சரியான மேடை அமைப்பு இல்லாமல் இருந்தது. சங்கரதாஸ் சுவாமிகள் காட்சியமைப்பு முறைகளையும் திரை, ஒளி அமைப்பு முதலியவற்றையும் மேடை நாடகங்களுக்கு உரிய வகையில் அமைத்த முன்னோடி.

தனது நாடகங்களில் வெண்பா, விருத்தம், கலித்துறை, அகவல், எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம், கண்ணிகள், நொண்டிச் சிந்து, காவடிச் சிந்து, சந்தப்பாட்டு, சித்தர் பாடல், நாட்டுப்புறப் பாட்டு, தாலாட்டுப் பாட்டு, கஜல் என பலவகையான பாடல்களை சேர்த்து இயற்றினார். இதுபோன்ற பாடல்களே பின்னர் திரையிசையாக வளர்ந்தது என நாடக வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.

மாணவர்கள்

சங்கரதாஸ் சுவாமிகள் 31 ஆண்டுகால நாடகப்பணி வாழ்க்கையில் ஏராளமான நாடகக் கலைஞர்களை உருவாக்கினார். அவர்களுள் புகழ்பெற்ற சிலர்:

வேலு நாயர், ஜி.எஸ். முனுசாமி நாயுடு, ஜெகந்நாத நாயுடு, சாமிநாத முதலியார், சீனிவாச ஆழ்வார், நடேச பத்தர், ராஜா வி.எம். கோவிந்தசாமிபிள்ளை, எம்.ஆர். கோவிந்தசாமிபிள்ளை, சி. கன்னையா, சி.எஸ். சாமண்ணா ஐயர், மகாதேவய்யர், சூரிய நாராயண பாகவதர், சுந்தரராவ், கே.எஸ். அனந்தநாராயண ஐயர், கே.எஸ். செல்லப்ப ஐயர், பைரவ சுந்தரம் பிள்ளை, சீனிவாச பிள்ளை, பி.யு. சின்னப்பா, டி.எஸ். துரைராஜ், தி.ச. கண்ணுசாமிபிள்ளை, டி.கே. சங்கரன், டி.கே. முத்துசாமி, டி.கே. சண்முகம், டி.கே. பகவதி, பாலாம்மாள், பாலாமணி, அரங்கநாயகி, வி.பி. ஜானகி, கோரங்கி மாணிக்கம், டி.டி. தாயம்மாள்.

நாடகக்கலை மதிப்பீடு

சங்கரதாஸ் சுவாமிகளின் நாடக செயல்பாடு புதுமையை முன்னிறுத்தியது அல்ல. ஆங்கிலேயர் ஆட்சி நடந்து கொண்டிருந்த அன்றைய காலகட்டத்தில் வங்காளம் போன்ற மொழிகளில் வாழ்க்கை முறையின் மாறுதல்கள் நாடகத்திலும் இடம்பெற்றன. ஆனால் சங்கரதாஸ் சுவாமிகளின் நாடகங்கள் இந்திய மற்றும் தமிழ் தொன்மங்களை, மரபான கதைகளை ஒட்டியவை; பொழுதுபோக்கோடு நீதிகளை பேசுபவை என்று வரையறுக்கலாம்.[2]

சங்கரதாஸ் நாடகத்தில் இடம்பெறும் செய்யுள்கள் எல்லாம் இலக்கணம் பிறழாது இருக்கும். உரைநடைகள் நீண்ட வாக்கியங்களால் ஆனவை. [3]

மறைவு

1921-ம் ஆண்டில் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு சங்கரதாஸ் சுவாமிகளுக்கு வலதுகையும் இடதுகாலும் முடங்கி வாய்திறந்து பேச இயலாது போய்விட்டது. இந்நிலையிலேயே நவம்பர் 13, 1922 திங்கட்கிழமை அன்று இரவு புதுச்சேரியில் மரணமடைந்தார். இவரது சமாதி புதுச்சேரியில் அமைந்துள்ளது.

நினைவுகள், நூல்கள்

நூல்கள்
தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர் - டி.கே. சண்முகம்
தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர் - டி.கே. சண்முகம்
சங்கரதாஸ் சுவாமிகள்- அ.ராமசாமி
  • 1955 ல் சங்கரதாஸ் சுவாமிகளின் வாழ்க்கைக் குறிப்பை ’தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர்’ என்னும் பெயரில் டி.கே. சண்முகம் எழுதி வெளியிட்டுள்ளார். (இணைய நூலகம்)
  • 2001ல் சங்கரதாஸ் சுவாமிகள் வாழ்க்கை வரலாறு அ.ராமசாமி. இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசை
  • 2020ல் கி.பார்த்திப ராஜா எழுதிய சங்கரதாஸ் சுவாமிகள் வாழ்க்கை வரலாறு சாமீ என்னும் பெயரில் வெளிவந்துள்ளது
நினைவுகள்
  • 1967; மதுரையில் ஔவை.டி.கெ.சண்முகம் முன்முயற்சியில் சங்கரதாஸ் சுவாமிகளுக்ள் நூற்றாண்டுவிழா கொண்டாடப்பட்டது
  • 1968 ல் மதுரையில் சங்கரதாஸ் சுவாமிகளுக்குச் சிலை வைக்கப்பட்டது.
  • மதுரை தமுக்கம் மைதானத்திலுள்ள நாடக அரங்குக்கு சங்கரதாஸ் சுவாமிகள் அரங்கு என பெயரிடப்பட்டது
  • பாண்டிச்சேரி பல்கலை நாடகத்துறைக்கு சங்கரதாஸ் சுவாமிகள் நாடக பயிலரங்கு என பெயரிடப்பட்டுள்ளது

படைப்புகள்

தமிழ் நாடகத் தலைமையாசிரியர் என அழைக்கப்படும் சங்கரதாஸ் சுமார் 50 நாடகங்களை எழுதியுள்ளார். அவற்றில் இப்போது 18 நாடகங்களுக்கான பிரதிகளே கிடைத்துள்ளன.

  1. சதி அனுசூயா - நூல் கிடைத்திருக்கிறது
  2. சுலோசனா சதி - நூல் கிடைத்திருக்கிறது
  3. சத்தியவான் சாவித்திரி - நூல் கிடைத்திருக்கிறது
  4. இரணியன் அல்லது பிரகலாதன் நாடகம் - நூல் கிடைத்திருக்கிறது
  5. அல்லி சரித்திரம் - நூல் கிடைத்திருக்கிறது
  6. அபிமன்யு சுந்தரி அல்லது வத்ஸலா கல்யாணம் - நூல் கிடைத்திருக்கிறது
  7. பவளக்கொடி சரித்திரம் - நூல் கிடைத்திருக்கிறது
  8. வள்ளி திருமணம் - நூல் கிடைத்திருக்கிறது
  9. லவகுசா - நூல் கிடைத்திருக்கிறது
  10. அரிச்சந்திர மயான காண்டம் - நூல் கிடைத்திருக்கிறது
  11. கோவலன் சரித்திரம் - நூல் கிடைத்திருக்கிறது
  12. சீமந்தனி - நூல் கிடைத்திருக்கிறது
  13. நல்லதங்காள் - நூல் கிடைத்திருக்கிறது
  14. லலிதாங்கி - நூல் கிடைத்திருக்கிறது
  15. ஞான சௌந்தரி - நூல் கிடைத்திருக்கிறது
  16. சித்திராங்கி விலாசம் என்னும் சாரங்கதரன் - நூல் கிடைத்திருக்கிறது
  17. கர்வி பார்ஸ் - நூல் கிடைத்திருக்கிறது
  18. மார்க்கண்டேயர்
  19. இராம இராவண யுத்தம்
  20. நளதமயந்தி
  21. கந்தர்வதத்தை
  22. மணிமேகலை
  23. சிறுத்தொண்டர்
  24. மயில் ராவணன்
  25. பாதுகா பட்டாபிஷேகம்
  26. லங்கா தகனம்
  27. மன்மத தகனம்
  28. வாலி மோட்சம்
  29. பிரபுலிங்கலீலை
  30. புரோஜ்ஷா – நூர்ஜஹான்
  31. அலிபாதுஷா
  32. அலாவுதீன்
  33. தேசிங்கு ராஜன்
  34. மதுரை வீரன்
  35. வீரபாண்டிய கட்டபொம்மன்
  36. பூதத்தம்பி
  37. மணிமாளிகை
  38. தால்பீச்
  39. மாபாரா
  40. குலேபகாவலி
  41. சரச சல்லாப உல்லாச மனோரஞ்சனி
  42. சிங்கார லோசனா
  43. மிருச்சகடி
  44. லைலா மஜ்னு
  45. சிம்பலைன்
  46. ரோமியோ ஜூலியட்
  47. ஜூலியஸ் சீஸர்
  48. தந்திராலங்காரம்
  49. கமசல் ஜமான்
  50. தேவ மனோகரி

நாடகநூல் பதிப்புகள்

சங்கரதாஸ் சுவாமிகள் மறைந்து பல ஆண்டுகளுக்கு பின்னர் அவருடைய நாடக நூல்களைத் திரட்டி அச்சேற்றும் முயற்சிகள் தொடங்கின.

  • அபிமன்யு சுந்தரி, சுலோசனா சதி - தமிழ்நாடு சங்கீத நாடக சங்கம் (1959)
  • சங்கரதாஸ் சுவாமிகள் இன்கவித் திரட்டு - சீமந்தனி, பக்த பிரகலாதா, அபிமன்யு சுந்தரி, பவளக்கொடி, சுலோசனா சதி, சதி அனுசூயா, கோவலன் ஆகிய நாடக வரிவடிவங்கள் - டி.கே. சண்முகம்
  • சங்கரதாஸ் சுவாமிகள் நாடகத் திரட்டு - பதினெட்டுப் பனுவல்கள் (2009) - புதுச்சேரி வல்லினம் பதிப்பகம் - தொகுத்தவர் சென்னை பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராசிரியர் வீ. அரசு
  • சங்கரதாஸ் சுவாமிகளின் நாடகக் களஞ்சியம் - சென்னை காவ்யா வெளியீடு

அடிக்குறிப்புகள்


✅Finalised Page