under review

கீர்த்தி

From Tamil Wiki
கீர்த்தி

கீர்த்தி (இயற்பெயர்: ரமேஷ்) (Keerthi) ( (பிறப்பு:ஜூன் 22, 1971) கவிஞர், சிறுகதை ஆசிரியர், சிறார் எழுத்தாளர். பொதுவாசிப்புக்குரிய படைப்புகளை எழுதி வருகிறார்.

பிறப்பு, கல்வி

கீர்த்தி ஜூன் 22,1971-ல் நாகலிங்கம் - பார்வதி இணையருக்கு நாகர்கோவிலில் பிறந்தார். இவருக்கு இரண்டு மூத்த சகோதரிகள், மூன்று மூத்த சகோதரர்கள். கீர்த்தியின் இயற்பெயர் ரமேஷ்.

நாகர்கோவிலிலுள்ள அரசு தொடக்கப்பள்ளி, சேது இலக்குமி பாய் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பள்ளிக்கல்வியைப் படித்தார். நாகர்கோவிலிலுள்ள தென் திருவிதாங்கூர் இந்துக் கல்லூரியில் வேதியியல் பிரிவில் இளம் அறிவியல் பட்டம் பெற்றார். மதுரைக் காமராசர் பல்கலைக் கழகத்தில் இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியலில் முதுகலைப் பட்டம் பெற்றார்.

தனிவாழ்க்கை

கீர்த்தி 2002-ம் ஆண்டு ரமாவை மணந்தார்.

ஐந்து ஆண்டு காலம் மருந்து நிறுவனத்தில் பணியாற்றிய பின், இதழியல் ஆர்வத்தில் பத்திரிகையாளரானார். குங்குமம், இன்தாம் இணைய இதழ், சிஃபி இணைய இதழ்களில் உதவி ஆசிரியராகப் பணியாற்றினார். கல்கி, இதயம் பேசுகிறது உள்ளிட்ட பல இதழ்களில் பகுதிநேர நிருபராகப் பணியாற்றினார். கணினி வரைகலை பயிற்சி பெற்று பதிப்பகங்களுக்காகப் புத்தக வடிவமைப்புகளில் ஈடுபட்டார்.

கீர்த்தி சென்னையில் வசித்து வருகிறார்.

இலக்கிய வாழ்க்கை

கீர்த்தி கல்லூரியில் படிக்கும்போதே கவிதைகளும் குறுங்கதைகளும் எழுதத் தொடங்கிவிட்டார். 1990-ம் ஆண்டு இவரது முதல் கவிதை பத்திரிகையில் வெளியானது. ஆனந்த விகடன், கல்கி, குமுதம், கணையாழி, இனிய உதயம், வடக்கு வாசல் உள்ளிட்ட அச்சு இதழ்களிலும், சில இணைய இதழ்களிலும் இவரது கவிதைகளும் சிறுகதைகளும் வெளியாகியுள்ளன. குறுநாவல்களும் எழுதியுள்ளார்.

2000-த்துக்குப்பின் சிறார்களுக்கான கதைகள், பாடல்கள், நாவல்கள் எழுதுவதில் ஈடுபட்டார். சுட்டி விகடன், சிறுவர்மணி, சிறுவர் மலர், தங்கமலர், தினமலர் பட்டம் இணைப்பிதழ், தி இந்து தமிழ்திசை இணைப்பான மாயாபஜார் இதழ்களில் ஏறக்குறைய 200 சிறார் கதைகளும், 50-க்கும் மேற்பட்ட சிறார் பாடல்களும் பிரசுரமாகியுள்ளன.

இதுவரை 3 சிறுகதை தொகுப்புகள், 4 கவிதைத் தொகுப்புகள், 16 சிறார் கதை நூல்கள், 2 சிறார் நாவல்கள், 2 சிறார் பாடல் நூல்கள் வெளியாகியுள்ளன. இவை தவிர ஆன்மிகம், வாழ்க்கை வரலாறு, சுயமுன்னேற்றம், மாணவர்களுக்கான வழிகாட்டி நூல் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட நூல்களை கீர்த்தி எழுதியுள்ளார்.

விருதுகள்

  • ஈரோடு தமிழன்பன் தேர்வில், கவிதை உறவு இலக்கிய அமைப்பு சிறந்த கவிதைக்காக வழங்கிய விக்ரமன் விருது (1997)
  • சென்னை ஸ்ரீ வைணவ மடம் வழங்கிய சிறந்த சிறார் எழுத்தாளர் விருது (2007)
  • தேநீர் பதிப்பகம் நடத்திய குறுங்கதை போட்டியில் (2021) முதல் பரிசு.
  • குவிகம் இதழ் நடத்திய குறும் புதினப் போட்டியில் (2022) சிறப்புப் பரிசு.
  • படைப்புக் குழுமம் நடத்திய கவிதைப் போட்டியில் (2024) சிறப்புப் பரிசு
  • SRM பல்கலைக் கழக தமிழ்ப் பேராயம் வழங்கிய அழ.வள்ளியப்பா குழந்தை இலக்கிய விருது. (2024)

இலக்கிய இடம்

கீர்த்தி பொதுவாசிப்புக்குரிய கதைகளையும் கட்டுரைகளையும் கவிதைகளையும் எழுதிவருகிறார். சிறார் இலக்கியத்திற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பாற்றியவராக அறியப்படுகிறார்.

நூல்கள்

சிறுகதை நூல்கள்
  • மின்கம்பிக் குருவிகள்
  • வட்டப்பாதை
  • இறவாத காலம்
கவிதை நூல்கள்
  • பெயரிடுதல்
  • தாண்டவம்
  • எதுவாகவும் இருப்பதில்லை அது
  • விதி என்பது வினைச்சொல்
  • கண்ணாடிக்குள் சிரித்த காலம்
சிறார் நூல்கள்
  • பறக்க விரும்பிய குருவி
  • நவீன நீதிக் கதைகள்
  • புத்திசாலிக் கதைகள்
  • நீதி சொல்லும் கதைகள்
  • வெற்றிக்கு வழிகாட்டும் குட்டிக் கதைகள்
  • அஞ்சு தந்த உறவு (நாவல்)
  • கரடியும் தேன்கூடும்
  • வடை காய்க்கும் மரம்
  • காட்டுக்குள்ளே நூலகம்
  • ஆர்யாவின் பயணம் (நாவல்)
  • பாதையில் கவனம்
  • ஒளிந்து கொண்ட பானை
  • மான்குட்டியின் மிமிக்ரி
  • தேவதை காட்டிய சொர்க்கம்
  • வைஷ்ணவியின் சாதுர்யம்
  • மீசை முளைத்த விவேக்
  • உலகக் கிராமியக் கதைகள் (மொழிபெயர்ப்பு)
  • உலக நாடோடிக் கதைகள் (மொழிபெயர்ப்பு)
  • அப்பா கட்டிய ஊஞ்சல் (சிறார் பாடல்கள்)
  • செல்லக் கோழி (சிறார் பாடல்கள்)

இணைப்புகள்


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 16-Feb-2026, 20:08:40 IST