under review

கிருஷிகன் (இதழ்)

From Tamil Wiki
கிருஷிகன் இதழ்

கிருஷிகன் (1909) விவசாயிகளுக்காக வெளிவந்த இதழ், துப்பறியும் நாவலாசிரியர் ஜெ.ஆர். ரங்கராஜு, தனது சகோதரர் ராவ்பகதூர் செல்வரங்கராஜுவுடன் இணைந்து சென்னையிலிருந்து இவ்விதழை அச்சிட்டு வெளியிட்டார். விவசாயச் செய்திகளை, விவசாயம் சார்ந்த கருவிகள் பற்றிய தகவல்களை, விவசாயம் சார்ந்து வெளிவந்த புத்தகங்களைப் பற்றிய விவரங்களைத் தாங்கி இவ்விதழ் வெளிவந்தது.

பிரசுரம்/வெளியீடு

விவசாயம் சார்ந்த செய்திகளை வெளியிடுவதற்காக எழுத்தாளர் ஜெ.ஆர். ரங்கராஜு தனது சகோதரர் ராவ்பகதூர் செல்வரங்கராஜுவுடன் இணைந்து தொடங்கிய இதழ் கிருஷிகன். ஏப்ரல் 1909 (சித்திரை) முதல் இவ்விதழ் வெளிவந்தது. இதன் வருட சந்தா 12 அணா. தனிப்பிரதி விலை இரண்டணா. 28 பக்கங்களில் வெளிவந்தது. இதழில், “விவசாயமும் அதைச் சார்ந்த விஷயங்களும் தவிர இதர விஷயங்கள் இப்பத்திரிகையில் வெளிவரா. அதிலும் எவ்வித நிந்தனையுள்ள விஷயங்களும் அங்கீகரிக்கப்பட மாட்டா” என்ற குறிப்பு இடம் பெற்றது.

1920-களில், செல்வரங்கராஜு இதழின் ஆசிரியராகப் பணியாற்றினார். அக்காலகட்டத்தில் 32 பக்கங்களுடன், ஆண்டு சந்தா ஒரு ரூபாய் விலைக்கு இவ்விதழ் விற்பனையானது.

உள்ளடக்கம்

நூலின் முகப்பில்,

”உழுதுண்டு வாழ்வதற் கொப்பில்லை கண்டீர்

பழுதுண்டு வேறோர் பணிக்கு.”

- என்ற திருக்குறள் இடம் பெற்றது. தமிழில் 'கிருஷிகன் - ஒரு மாதாந்தர விவசாயப்பத்திரிகை' என்றும், ஆங்கிலத்தில், 'THE AGRICULTURIST - A Monthly Journal devoted to Agriculture and its allied Subjects' என்றும், இதழின் தலைப்பு இடம் பெற்றது. இதழில் தலையங்கம் இடம்பெற்றது. அதில் விவசாயம் சார்ந்த செய்திகள் இடம் பெற்றன. மண்ணின் தரம், மண்ணின் வளத்தை மேம்படுத்துதல், எருவிடுதல், தோட்டப் பராமரிப்பு, கால்நடை வளர்ப்பு, ஒவ்வொரு மாவட்டத்திலும் எந்தெந்த மாதங்களில் எந்தெந்தப் பயிர்களைப் பயிரிடலாம் என்னும் தகவல்கள், பண்ணைகளின் பரமாரிப்பு, உரங்களைப் பயன்படுத்துதல் பற்றிய குறிப்புகள், விவசாயம் சார்ந்த அரசின் அறிவிப்புகள் போன்ற செய்திகள் இடம் பெற்றன. விவசாய சந்தேகங்களுக்கு, கடிதங்களுக்கு விளக்கமான பதில்கள் இடம் பெற்றன.

விவசாயக் கருவிகள், அவற்றின் தன்மை, கிடைக்குமிடம், பராமரிப்பு போன்ற செய்திகளும், விவசாயம் சார்ந்து வெளிவந்த நூல்கள் பற்றிய குறிப்புகளும் இவ்விதழில் இடம் பெற்றன. இவற்றோடு புதிய இதழ்கள் அறிமுகம், புத்தக விமர்சனம், புத்தக விளம்பரங்கள், ஜெ.ஆர். ரங்கராஜுவின் நூல் விளம்பரங்கள் போன்றவையும் இடம் பெற்றன. இவை தவிர்த்து பொதுவான பல்வேறு விளம்பரங்கள் இதழ்தோறும் இடம்பெற்றன. பிற்காலத்து இதழ்களில் பஞ்சாங்கக் குறிப்புகளும் இடம் பெற்றன.

இதழ் நிறுத்தம்

கிருஷிகன் இதழ் எப்போது நின்றுபோனது என்ற குறிப்புகள் கிடைக்கவில்லை. தமிழிணையக் கல்விக்கழக மின்னூலகத்தில் அக்டோபர் 1909 இதழ் தொடங்கி, டிசம்பர் 1929 வரையிலான சில இதழ்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. அதிலிருந்து 20 ஆண்டுகளுக்கும் மேலாக கிருஷிகன் இதழ் வெளிவந்ததை அறிய முடிகிறது.

மதிப்பீடு

கிருஷிகன், விவசாயம் சார்ந்து வெளிவந்த தமிழின் முன்னோடி இதழ்களுள் ஒன்று. விவசாயம் குறித்த செய்திகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டது. புதிய விவசாய முறைகள், கருவிகள், உரங்கள் பற்றிய தகவல்களைப் பலரும் அறியச் செய்த இதழாக கிருஷிகன் மதிப்பிடப்படுகிறது.

உசாத்துணை




✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 10-Aug-2023, 18:08:11 IST