under review

க.சீ.சிவகுமார்

From Tamil Wiki

To read the article in English: Ka.See. Sivakumar. ‎

க.சீ.சிவகுமார்

க.சீ.சிவகுமார் (கன்னிவாடி சீரங்கராயன் சிவகுமார்) (1971 - பிப்ரவரி 3, 2017) எழுத்தாளர், பத்திரிகையாளர். தமிழில் சிறுகதை மற்றும் நாவல்கள் எழுதியுள்ளார்.

பிறப்பு, கல்வி

க.சீ. சிவகுமார் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகேயுள்ள கன்னிவாடி கிராமத்தில் 1971-ல் பிறந்தார். இவருடைய பெற்றோர் சீரங்கராயன் – செல்லாத்தாள். சொந்த ஊரிலேயே கல்வி கற்றார்.

தனிவாழ்க்கை

க. சீ. சிவகுமாரின் தந்தை அவருடைய ஊரில் 'சிவகுமார் காபி கடை' என்ற சிற்றுண்டிச்சாலையை நடத்துகிறார்.

முழு நேர எழுத்தாளராகும் பொருட்டு சென்னைக்கு குடிபெயர்ந்த சிவகுமார் ஆனந்த விகடன், தினமலர், கவுண்டர் சங்கப் பத்திரிகையான காராளர் என ஒரு சில பத்திரிகை நிறுவனங்களிலும், டைல்ஸ் கடையில் மேற்பார்வையாளர், வட்டி வசூலிப்பவர் என இன்னும் பல வேலைகளையும் செய்திருக்கிறார். மனைவி சாந்தி ராணியின் பணி காரணமாக பெங்களூருவிற்கு குடிபெயர்ந்தார்.

சிவகுமாருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். மூத்த மகள் பெயர் மகாஸ்வேதா தேவி. வங்காளத்தின் புகழ்பெற்ற எழுத்தாளரின் பெயரை மகளுக்குச் சூட்டி யுள்ளார். சிவகுமாரின் மூத்த மகள் ஆங்கிலத்தில் ஒரு நாவல் எழுதியுள்ளார்.

க.சீ.சிவகுமார் (நன்றி - nisaptham.com)

இலக்கியவாழ்க்கை

க. சீ. சிவகுமார் 1995-ல் இந்தியா டுடே நடத்திய சிறுகதை பரிசு போட்டியில் 'காற்றாடை’ எனும் சிறுகதைக்காக முதல் பரிசை வென்றார்.

சிவகுமாரின் முதல் சிறுகதைத் தொகுப்பு 'கன்னிவாடி'. குறுநாவல்கள் மற்றும் 150-க்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியுள்ளார்.

திருப்பூர் பகுதியில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கத்துடன் இணைந்து இலக்கிய நிகழ்வுகளை நடத்தியுள்ளார்.

அமைப்புச்செயல்பாடுகள்

சிவகுமார் எழுத்தாளர் தேவிபாரதியுடன் இணைந்து கொங்கு மண்டல மரபுக்கலைஞர்களைப் பற்றிய நீண்ட ஆய்வு ஒன்றை தொடங்கி அது முடிவுறவில்லை.

'பாதம்’ என்னும் கலை, இலக்கிய அமைப்பு அவரால் தொடங்கி நடத்தப்பட்டது.

2002-ல் ஈரோடு அருகே உள்ள கிராமமொன்றில் கொங்கு மண்டலக் கூத்துக் கலைகளுக்கான பயிலரங்கு ஒன்றையும் ஒழுங்கு செய்திருக்கிறார்.

மறைவு

பிப்ரவரி 3, 2017 அன்று தனது 46-ஆவது வயதில் பெங்களூருவில் மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தார்.

விருதுகள்

சிறந்த சிறுகதைக்கான 'இலக்கிய சிந்தனை விருது' - (நாற்று’சிறுகதைக்காக - 2000-ல்)

இலக்கிய இடம்

"கொங்கு வட்டார வாழ்வையும் மொழியையும் அவற்றின் கொண்டாட்டங்களோடும் சிக்கல்களோடும் தன் சிறுகதைகளில் பதிவுசெய்த சிவகுமார், அதில் கவனிக்கத்தக்க வெற்றிகளையும் பெற்றார். எள்ளல் நிறைந்த அவரது மொழி கொங்கு மண்டலத்தின் தனித்த சிறுகதைக் கலைஞராக அவரை அடையாளம் காட்டியது. அவரது பூர்வீகக் கிராமமான கன்னிவாடி வானம் பார்த்த பூமி. அந்த மனிதர்களின் உழலும் வாழ்வை சிவகுமாரின் பகடியும் எள்ளலும் கொண்ட மொழி, துல்லியமான கோட்டுச் சித்திரங்களாக மாற்றியது" என்று சிவகுமாரின் படைப்புகளை பற்றி எழுத்தாளர் தேவிபாரதி குறிப்பிடுகிறார்.

நூல்பட்டியல்

  • கன்னிவாடி- சிறுகதைத் தொகுப்பு
  • ஆதிமங்கலத்து விசேஷங்கள்(ஜுவியில் தொடராக வந்தது)
  • என்றும் நன்மைகள் - சிறுகதைத் தொகுப்பு
  • குணச்சித்தர்கள்
  • கானல் தெரு - குறுநாவல்
  • உப்புக்கடலை குடிக்கும் பூனை சிறுகதைகள்
  • க. சீ. சிவகுமாரின் குறு நாவல்கள்
  • நீல வானம் இல்லாத ஊரே இல்லை - கட்டுரைகள்
  • குமாரசம்பவம் (விகடன் தொடர்)

உசாத்துணை


✅Finalised Page