under review

எஸ். செந்தில்குமார்

From Tamil Wiki

To read the article in English: S. Senthilkumar. ‎

எஸ்.செந்தில்குமார்

எஸ். செந்தில்குமார் (நவம்பர் 20, 1973) தமிழில் கதைகளையும் நாவல்களையும் எழுதிவரும் எழுத்தாளர். தேனி மாவட்ட பின்னணியில் கதைகளை எழுதுகிறார். யதார்த்தவாத அழகியலுடன் வெவ்வேறு நுண்வரலாற்று நிகழ்வுகளையும் தொன்மங்களையும் குலக்கதைகளையும் இணைத்து புனைவுகளை உருவாக்குபவர். இதழாளர்.

பிறப்பு, கல்வி

எஸ். செந்தில்குமார், கா.சுப்பிரமணியன் - சு.முருகேஸ்வரி இணையருக்கு போடிநாயக்கனூரில் (தேனி மாவட்டம்) நவம்பர் 20,1973 ல் பிறந்தார். இளங்கலை வரலாறு பட்டப்படிப்பை போடிநாயக்கனூரிலுள்ள ஏல விவசாய சங்க கல்லூரியில் முடித்தார்.

தனிவாழ்க்கை

எஸ். செந்தில்குமார் போடிநாயக்கனூரில் வசித்து வருகிறார். பேசும் புதியசக்தி மற்றும் பொம்மி மாத இதழ்களின் பொறுப்பாசிரிராக திருவாரூரில் பணிபுரிந்து வருகிறார்

எஸ். செந்தில்குமாரின் மனைவியின் பெயர் மலர்விழி. திருமண நாள் நவம்பர் 16, 2005. ஒரே மகள், மஞ்சுளா காதம்பரி.

இலக்கிய வாழ்க்கை

எஸ். செந்தில்குமார் 1999 முதல் எழுதிவருகிறார். இலக்கியச் சிற்றிதழ்களில் இவருடைய கதைகள் தொடர்ந்து வெளியாகிக் கொண்டிருக்கின்றன. வெயில் உலர்த்திய வீடு என்னும் முதல் சிறுகதை தொகுதியை 2006ல் உயிர்மை பதிப்பகம் வெளியிட்டது. தன் ஆதர்ச எழுத்தாளராக அசோகமித்திரனைக் குறிப்பிடுகிறார். 'சமூகம் குறித்த அக்கறைகள் படைப்புகளில் பிரதிபலிக்காததற்குத் தனிமனிதன் குறித்து எழுத ஆரம்பித்ததும் அகவுலகைப் பிரதானமாக எழுதுவதும் முக்கியமான காரணங்கள். அப்படி எழுத ஆரம்பிக்கும்போது அவனது பிராந்தியம், சாதிதான் வெளிப்படுகிறது. பொதுக்குரல் என்பது சாதியத்திலிருந்து வராது’ என்று சொல்லும் எஸ்.செந்தில்குமார் சாதியப்பார்வை இல்லாத, குறுகிய எல்லைகளுக்குள் நின்றுவிடாத புனைவுகளை எழுதமுயல்வதாகச் சொல்கிறார்[1].

இலக்கிய இடம்

எஸ்.செந்தில்குமாரின் கதைகள் மூன்று இயல்புகள் கொண்டவை. அ.நுண்வரலாறு. ஆ.யதார்த்தவாத சித்தரிப்பு இ.மிகையற்ற உணர்ச்சிப்பெருக்கற்ற நிகழ்வோட்டமாக அமைதல். அவருடைய காலகட்டம் பொற்கொல்லர்களின் வாழ்க்கையை களமாகக் கொண்டது.கழுதைப்பாதை கழுதைகளில் மலைகளில் பொதிகளை ஏற்றி இறக்குபவர்களின் வாழ்க்கையை பற்றிப் பேசுவது. அவ்வாழ்க்கைகளை துல்லியமான தகவல்களுடன் சித்தரிக்கிறார். அவற்றைக்கொண்டு ஒரு கதையை கட்டமைப்பதில்லை. மிகையில்லாத வாழ்க்கைச்சித்திரங்களாகவே காட்டுகிறார். 'வாய்மொழிக் கதைகள், நம்பிக்கைகள் என தொடங்கி அனுபவக்குறிப்புகள் வாழ்க்கை நிகழ்வுகள் என கோத்துக்கொண்டே சென்று ஒரு சமூகத்துளியின் வரலாற்றைச் சொல்லிவிடுகிறது இந்நாவல்’ என கழுதைப்பாதை நாவலைப் பற்றி ஜெயமோகன் குறிப்பிடுகிறார்[2].

விருதுகள்

  • 2009-ம் ஆண்டிற்கான இளம் படைப்பாளிக்களுக்கான 'சுந்தரராமசாமி விருது’
  • 2013-ம் ஆண்டிற்காக SRV பள்ளி நிறுவனத்திலிருந்து வழங்கிய படைப்பூக்கத்திற்கான தமிழ் விருது.
  • 2016-ம் ஆண்டிற்கான சுஜாதா அறக்கட்டளையிலிருந்து வழங்கிய சுஜாதா சிறுகதை விருது.
  • 2018-ம் ஆண்டிற்கான கோவை வாசகர் வட்டமும் விஜயா பதிப்பகமும் இணைந்து வழங்கிய கவிஞர் மீரா விருது.
  • 2018-ம் ஆண்டிற்கான Sparrow இலக்கிய விருது.

படைப்புகள்

சிறுகதைத் தொகுப்புகள்
  • வெயில் உலர்த்திய வீடு 2006 உயிர்மை பதிப்பகம்
  • சித்திரப்புலி 2008 உயிர்மை பதிப்பகம்
  • மஞ்சள் நிற பைத்தியங்கள் இரண்டாம் பதிப்பு ஜீரோ டிகிரி பதிப்பகம் 2021
  • விலகிச்செல்லும் பருவம் இரண்டாம் பதிப்பு ஜீரோ டிகிரி பதிப்பகம் 2021
  • மழைக்குப்பிறகு புறப்படும் ரயில் வண்டி இரண்டாம் பதிப்பு ஜீரோ டிகிரி பதிப்பகம் 2021
  • அலெக்ஸாண்டர் என்கிற கிளி 2015 உயிர்மை பதிப்பகம்
  • .அனார்கலியின் காதலர்கள் 2016 உயிர்மை பதிப்பகம்
  • சிவப்புக்கூடை திருடர்கள் 2019 உயிர்மை பதிப்பகம்
நாவல்கள்
  • ஜீ. சௌந்தரராஜனின் கதை 2007 உயிர்மை பதிப்பகம்
  • முறிமருந்து 2009 தோழமை பதிப்பகம்
  • நீங்கள் நான் மற்றும் மரணம் 2010 தோழமை பதிப்பகம்
  • காலகண்டம் 2013 உயிர்மை பதிப்பகம்
  • மருக்கை 2016 உயிர்மை பதிப்பகம்
  • கழுதைப்பாதை 2019 ஜீரோ டிகிரி பதிப்பகம்
கட்டுரைத் தொகுப்புகள்
  • சிறுகதை (தமிழ்கதைகள் குறித்த கட்டுரைகள்) 2019 ஜீரோ டிகிரி பதிப்பகம்
கவிதைத் தொகுப்புகள்
  • குழந்தைகள் இல்லாத வீட்டில் உடையும் ஜாடிகள்
  • சமீபத்திய காதலி
  • முன்சென்ற காலத்தின் சுவை (கவிதைத் தொகுப்பு காலச்சுவடு வெளியிடு)

உசாத்துணை

இணைப்புகள்

அடிக்குறிப்புகள்


✅Finalised Page