under review

இராய கோபுரம் (மதுரை)

From Tamil Wiki

To read the article in English: Raya Gopuram. ‎

இராய கோபுரம் - கட்டி முடிக்கப்படாத முதல் தளம்
இராய கோபுரம்2
இராயகோபுரம்

இராயகோபுரம் மதுரை (பொ.யு. 1654- 1659) மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்திற்கு அருகே உள்ள கட்டி முழுமை செய்யப்படாத கோபுரத்தின் அடித்தளம். மதுரையை ஆட்சி செய்த திருமலை நாயக்கர் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வெளியே அமைந்துள்ள ஆவணி மூல வீதியில் கட்டத் தொடங்கிய கோபுரம் இராய கோபுரம் எனப்படுக்கிறது. இந்த கோபுரத்தின் முதல் தளம் 18 மீட்டர் உயரமுள்ளது. இந்த கோபுரம் மதுரை கோவில் வளாகத்தில் உள்ள மற்ற கோபுரத்தின் முதல் தளத்தை விட இரண்டு மடங்கு பெரியது. இந்த கோபுரம் கட்டப்பட்டிருந்தால் தென் இந்திய அளவில் மிக பெரிய கோபுரமாக இருந்திருக்கும். இது மீனாட்சி கோவிலின் கிழக்கே ஏழுகடல் வீதி தொடங்கும் இடத்தில் அமைந்துள்ளது.

பெயர்

"ராய" என்றால் தெலுங்கு மொழியில் கல் எனப் பொருள். கல்லாலான கோபுரம் என்பதால் இராய கோபுரம் எனப் பெயர் வந்தது. திருமலை நாயக்கர் ராயர் என்று சொல்லப்பட்டார். அவருடைய கோபுரம் என்னும் பொருளும் இருந்திருக்கலாம்.

பதிவுகள்

மதுரையின் புகைப்படக் காட்சிகள் (Photographic Views in Madurai (Madras,1858) ) என்னும் நூலில் புகைப்பட நிபுணர் லினாயஸ் டிரிப்பெ (Linnaeus Tripe) 1858-ல் எடுத்த புகைப்படம் மதுரையின் முழுமையடையாத கோபுரம் பற்றி இன்று கிடைக்கும் மிகப்பழமையான காட்சிப்பதிவாகும்.

வரலாறு

திருமலை நாயக்கர் 1654-ம் ஆண்டு மதுரை மீனாட்சி கோவில் வளாகத்தில் உள்ள புது மண்டபத்தை கட்டி முடித்ததும் கீழ ஆவணி மூல வீதியில் இராய கோபுரத்தை கட்டத் தொடங்கினார். மதுரை மீனாட்சியம்மன் ஆலய வளாகத்தின் ஒரு பகுதியாகவே புதுமண்டபமும் ராயகோபுரமும் கட்டப்பட்டன.

மதுரை நாயக்கர் அரசின் ஆளுகைக்கு உட்பட்ட ஊட்டத்தூர் முதல் கன்னியாகுமரி வரை உள்ள 64 சைவ வைணவ தளங்களிலும் இதேபோன்ற பெரும் கோபுரங்களைக் கட்ட திருமலைநாயக்கர் எண்ணினார் என்று கூறப்படுகிறது. பல கோபுரங்களுக்கு அடித்தளமிடப்பட்டன என்றும், அவற்றில் பல பின்னர் வந்தவர்களால் கட்டி முடிக்கப்பட்டன என்றும் சொல்லப்படுகிறது. ஆனால் இதற்கு திட்டவட்டமான வரலாற்று ஆதாரமேதுமில்லை.

கட்டுமானப்பணி

மதுரை ராயகோபுரத்தைக் கட்டும்போது 217 அடி உயரமான திருவண்ணாமலை ராஜகோபுரம் தமிழகத்திலேயே உயரமான கோபுரமாக இருந்தது. அதைவிட உயரமாக இந்த கோபுரம் அமையவேண்டும் என்பது திருமலைநாயக்கரின் எண்ணமாக இருந்தது என்று கூறப்படுகிறது. மதுரை ராயகோபுரத்தின் அடித்தளமான கல்ஹாரத்தின் உயரம் மட்டும் 50 அடி. கல்ஹாரம் 170 அடி நீளமும், 110 அடி அகலமும் கொண்டது. கோபுரக்கலை வல்லுநர்கள் மதுரை ராயகோபுரம் கட்டிமுடிக்கப்பட்டிருந்தால் ஏறத்தாழ 300 அடி உயரமான கோபுரமாக இருந்திருக்கும் என கணிக்கிறார்கள். ராய கோபுரத்தை திருமலை நாயக்கர் 1654-ம் ஆண்டு கட்டத் தொடங்கினார். இக்கோபுரத்தைக் கட்டத்தொடங்கும்போது எழுபது வயதை கடந்திருந்த திருமலை நாயக்கரின் உடல் நலமின்மையாலும், மதுரையில் ஏற்பட்டிருந்த பொருளாதாரச் சிக்கலாலும் அவர் இறந்த 1659-ம் ஆண்டில் இந்த கோபுரம் கட்டும் பணியும் நின்றது.

கோபுர அமைப்பு

தற்போது கிடைக்கும் இந்த கோபுரத்தின் முதல் தளம் 18 மீட்டர் உயரம் கொண்டது. பூமிக்கு அடியில் பத்து அடி ஆழமும் மேலே முப்பத்தைந்து அடி உயரமும் கொண்டது. இராய கோபுரத்தின் முதல் தளம் மற்ற கோபுரங்களில் இல்லாத வகையில் பலவித சிற்ப அலங்காரத்துடன் அமைந்துள்ளது. இந்த கோபுரத்தின் அஸ்திவாரத் தூண்கள் ஒரே கல்லால் ஆனவை. ராய கோபுரம் திராவிட கட்டிடப் பாணியில் அமைந்துள்ளது. கல்லில் நுணுக்கமாகச் செதுக்கப்பட்ட பூதகணங்கள், மதனிகைகள், கந்தர்வர்களின் சிற்பங்கள் இதில் உள்ளன. மலர்சரச் செதுக்குகளும் வரிசையாக சிறிய சிவலிங்கங்கள் அமைந்த சரவரிசையும் இதில் உள்ளது.

இந்த கோபுரத்தின் நுழைவுவாயில் அருகில் திருமலை நாயக்கரின் ஆளுயரச் சிற்பமும், அவரது அமைச்சர் சொக்கப்பர் மற்றும் பொன்னையாள் என்ற கோவில் நடனப் பெண்ணின் சிற்பமும் உள்ளன.

இன்றையநிலை

மதுரை ராயகோபுரம் பல காலமாக கைவிடப்பட்ட நிலையில் உள்ளது. அதன்மேல் ஆணிகள் அறையப்பட்டு திரைகளும் மூங்கில்களும் கட்டப்பட்டு வணிகர்கள் கடைகளாக மாற்றியுள்ளனர். கோபுரத்தின் அடித்தளத்தை ஒட்டியே கட்டிடங்களும் கட்டப்பட்டுள்ளன. நெரிசல்மிக்க வணிகப்பகுதியாக இது ஆக்கப்பட்டிருப்பதனால் கோபுரத்தை நின்று பார்க்க முடியாத நிலை உள்ளது.

கோபுரம் பற்றி

"இந்த கோபுரம் கட்டப்பட்டிருந்தால் இந்தியாவிலிருக்கும் கட்டிடங்களுள் மிகச் சிறந்த ஒன்றாக இருக்கும்" என மதுரை நகர ஆளுநராக இருந்த ஜெ.பி.எல்.ஷெனாய் ஐ.ஏ.எஸ் தமது 'கோவில் நகரம் மதுரை’ என்னும் நூலில் குறிப்பிடுகிறார்.

அண்மையிலுள்ள தொல்லியல் இடங்கள்

இராயகோபுரத்தின் அருகிலேயே பத்துத் தூண், திருமலைநாயக்கர் மகால் ஆகியவை உள்ளன.

உசாத்துணை

இணைப்புகள்


✅Finalised Page