under review

ஆர். பி. எஸ். ராஜு

From Tamil Wiki
ஆர்.பி.எஸ்.ராஜு.png

ஆர். பி. எஸ். ராஜு (பிறப்பு: ஜூலை 26, 1953) மலேசியாவில் வாழும் பாடகர், இசைக்கலைஞர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர், இயக்குனர், உரையாசிரியர். ஸ்ரீ அங்காசா விருது பெற்றவர்.

பிறப்பு, கல்வி

ஆர். பி. எஸ். ராஜு ஜூலை 26, 1953-ல் தைப்பிங்கில் பிறந்தார். இவரின் பெற்றோர் ஆர். பி. எஸ். மணியம் - தணிகவதி இணையர். நான்கு சகோதரர்களும் நான்கு சகோதரிகளும் கொண்ட குடும்பத்தில் ஆர். பி. எஸ். ராஜு மூன்றாவது பிள்ளை. இவரின் தந்தை ஆர். பி. எஸ். மணியம் 1950-களிலிருந்து 1970 வரை தைப்பிங் வட்டாரத்தில் நாடகாசிரியராக, நாடக இயக்குனராக, இசைக்கலைஞராகத் திகழ்ந்தவர். பி. சுப்பையா, மலேசியா வாசுதேவன், மனு ராமலிங்கம், ந. மாரியப்பன், ரெ. சண்முகம் ஆகியோர் ஆர். பி. எஸ். மணியத்தின் இசையிலும் நாடகத்திலும் பங்குபெற்றவர்கள்.

ஆர். பி. எஸ். ராஜு தைப்பிங்கிலுள்ள கிங் எட்வர்ட் VII பள்ளியில் ஐந்தாம் படிவம்வரை பயின்றார்.

ஆர். பி. எஸ். ராஜு தன் தந்தையின் வழிகாட்டலில் கர்நாடக இசைப்பயிற்சி பெற்றார். இவரின் தந்தையின் கலைமகள் நாடகக்குழுவிலிருந்த ஹார்மோனியக் கலைஞர் எம். ஆர். வி கோவிந்தனிடம் இவர் இசைப்பயிற்சி பெற்றார்.

தனி வாழ்க்கை

ஆர். பி. எஸ். ராஜு பள்ளிப்படிப்பை முடித்தவுடன் 1973-ல் வேலை தேடி கோலாலம்பூர் வந்தார். வானொலி அறிவிப்பாளரும் பாடகருமான பி. சுப்பையாவின் உதவியால் வானொலிப்பிரிவில் பகுதி நேர ஊழியராக இணைந்தார். முதலில் இசைக்கலைஞர்களுடன் பணியாற்றிய இவரைக் குரல் தேர்வு செய்து 'இவ்வார இசைக்கலைஞர்' நிகழ்ச்சியில் பாடும் வாய்ப்பை என். மாரியப்பன் வழங்கினார்.

ஆர். பி. எஸ். ராஜுவுக்கு ஜீவன் எனும் மகன் இருக்கிறார்.

திரை, நாடகத்துறை

ஆர்.பி.எஸ்.ராஜு 2.png

ஆர். பி. எஸ். ராஜுவுக்கு புனே திரைப்படக்கல்லூரியில் பயிற்சி பெற்ற இயக்குநர் குமார் தங்கையாவின் அறிமுகம் ஏற்பட்டது. ஆர். பி. எஸ். ராஜு அவரிடம் துணை இயக்குநராகப் பணியாற்றி நாடகம், திரைக்கதைகள் உருவாக்கும் முறைகளைக் கற்றுக்கொண்டார்.

ஆர். பி. எஸ். ராஜுவின் இயக்கத்தில் ஒளிபரப்பான 'வரதட்சணை' எனும் பதின்முன்று வாரத் தொடர் ஆர்.டி.எம் 1 அலைவரிசையில் ஒளியேறிய முதல் தமிழ்த் தொடர்நாடகம். இதனைத் தொடர்ந்து ஆர். பி. எஸ். ராஜு 52 வார மலாய்த் தொடரை இயக்கும் வாய்ப்பினைப் பெற்றார்.

ஆர். பி. எஸ். ராஜு தொலைக்காட்சிக்கென மூன்று படங்களை இயக்கியுள்ளார். அவற்றில் 'கு டெக்காட் படாமு' விருதுக்காகப் பரிந்துரைக்கப்பட்டது.

இசைத்துறை

ஆர். பி. எஸ். ராஜு பணி செய்துகொண்டே ஹார்மோனியம், பியானோவுடன் பள்ளி நாட்களிலேயே கற்ற கித்தார் இசையையும் தொடர்ந்து பயின்றார். கோலாலம்பூரில் இயங்கிய உதயசூரியன் இசைக்குழுவில் கித்தார் கலைஞராகவும் பாடகராகவும் சேர்த்துக் கொள்ளப்பட்டார். கர்நாடக இசையையும் மேலையிசையையும் இணைத்து இவர் முதலில் உருவாக்கிய அறிமுக இசை குழுவின் மூத்த உறுப்பினர்களைக் கவரவில்லை. இக்குழுவின் சித்தார் இசைக்கலைஞர் சாமுவேல்தாஸின் அறிமுகம் கர்நாடக இசைநுட்பங்களை மேலும் அறிவதற்குப் பெரிதும் துணைபுரிந்தது. ஆர். பி. எஸ். ராஜு ஒலிச்சேர்க்கை தொழில்நுட்பத் துறையிலும் பயிற்சி பெற்றார்.

வானொலிப் பிரிவிலிருந்த தீனரட்சகி, சந்திரா சூர்யா சகோதரிகள் ஆர்.பி.எஸ். ராஜுவுக்கு இசையமைக்கும் வாய்ப்புகள் பெற்றுத் தந்தனர். அப்போதைய கல்வி ஒளிபரப்பில் இருந்த பவித்திரனின் இசைவோடு ஆர். பி. எஸ். ராஜு நூற்றுக்கும் மேற்பட்ட சிறுவர் பாடல்களுக்கு இசையமைத்தார்.

டி. என். மாரியப்பனுடன் ஆர். பி. எஸ். ராஜு
ஸ்ரீ அங்காசா விருது, 2005

ஆர். பி. எஸ். ராஜு 1983-ல் பாடகி சுசிலா மேனனின் 'சரிகம' இசைக்குழுவில் இணைந்தார். இக்குழுவினரின் நிகழ்ச்சிகள் மலேசியாவிலும், சிங்கப்பூரிலும் பெரும் வரவேற்பைப் பெற்றன. டாக்டர் வீ. பூபாலன் வானொலிப்பிரிவில் பொறுப்பேற்றபோது சுமார் 1000 உள்ளுர்ப் பாடல்களுக்கு இசையமைக்கும் வாய்ப்பினை ஆர். பி. எஸ். ராஜுவுக்கு வழங்கினார். 1990-களில் இருபத்துநான்கு மணிநேர வானொலி ஒலியலையாக மாற்றம் கண்டபோது வீ. ஆறுமுகத்தின் பொறுப்பில் 'தகவல் உல்லாச மையம், வானொலி ஆறு' என்ற வரிகளோடு புதிய அறிமுகஇசையை ஆர். பி. எஸ். ராஜு வடிவமைத்தார்.

செ. சீனி நைனா முகம்மது இயற்றிய மலேசிய தமிழ் வாழ்த்தான 'நிலை பெற நீ வாழியவே' பாடலுக்கு ஆர். பி. எஸ். ராஜு இசையமைத்தார். 2005-ல் டத்தோஸ்ரீ காதிர் ஷேக் பட்ஷிர் தகவலமைச்சராக பொறுப்பேற்றிருந்தபோது, மலேசிய வானொலி நிலையங்களுக்கிடையே அடையாள இசைக்கான போட்டியை அறிவித்தார். இப்போட்டியில் தமிழ்ப் பிரிவான மின்னல் பண்பலைக்கான ஆர். பி. எஸ். ராஜுவின் அறிமுக இசை தெரிவு செய்யப்பட்டு ஸ்ரீ அங்காசா விருதும் ஐயாயிரம் ரிங்கிட்டும் பெற்றது. அக்காலகட்டத்தில் பி. பார்த்தசாரதி மின்னல் பண்பலையின் தலைவராக இருந்தார்.

ஆர். பி. எஸ். ராஜு 1995 முதல் 2015 வரை ஐம்பதுக்கும் மேற்பட்ட நாதஸ்வர, நாட்டாரிய, தீபாவளி சிறப்பு இசை நிகழ்ச்சிகளுக்கு இசையமைத்துள்ளார்.

பிற பங்களிப்புகள்

  • ஆர். பி. எஸ். ராஜு ஆர்.டி.எம்., ஆஸ்ட்ரோ நிறுவனம் நடத்திய இசைப்போட்டிகளில் நடுவராகப் பணியாற்றியுள்ளார். ஸ்ரீ அங்காசா விருதுக்கான நீதிபதிகளின் குழுவில் உறுப்பினராகவும் இடம்பெற்றிருந்தார்.
  • மக்முர் மெகா புரொடக்சன் செண்டிரியான் பெர்ஹாட் நிறுவனத்தின் வடிவமைப்புப்பிரிவின் தலைவராகச் செயலாற்றினார்.
  • சுசிலா மேனன் வெளியிட்ட 'ஜீவநாடி' எனும் இசைத்தொகுப்புக்கும் ஆர். பி. எஸ். ராஜு இசையமைத்துள்ளார். இதில் பின்னணிப் பாடகர்கள் ஸ்ரீனிவாஸ் பி. உன்னிகிருஷ்ணன், புஷ்பவனம் குப்புசாமியோடு இவரின் மகன் ஜீவனும் பாடியிருந்தார்.
  • ஆஸ்ட்ரோ விண்மீன் ஒளியலையில் 'பயணம்' (2023) எனும் தீவுப் பயணச் சுற்றுலாத்தொடர் ஆர். பி. எஸ். ராஜுவின் தயாரிப்பு.
  • ஆர். பி. எஸ். ராஜு 2015-லிருந்து தொலைக்காட்சிகளுக்கான நிகழ்ச்சித் தயாரிப்பாளராகவும் ஆவணப்பட இயக்குனராகவும் உரையாசிரியராகவும் செயலாற்றிவருகிறார்.

விருதுகள்/பரிசுகள்

  • ஸ்ரீ அங்காசா விருது 2005
  • இசைக் கலை அரசன், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் & மலேசிய இந்தியர் கலை பண்பாட்டு சபா, 2014.

உசாத்துணை

நன்றி: ஆர். பி. எஸ். ராஜு



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 13-Sep-2023, 18:51:05 IST