அகராதி நிகண்டு (1983 நூல்)
- நிகண்டு என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: நிகண்டு (பெயர் பட்டியல்)
அகராதி நிகண்டு (முதல் பதிப்பு: 1983) பிற்காலத்து நிகண்டு நூல்களுள் ஒன்று. உ.வே.சா. நூலகம் இதனைப் பதிப்பித்தது. இதன் பதிப்பாசிரியர் டாக்டர் இரா. நாகசாமி.
வெளியீடு
அகராதி நிகண்டு நூல், உ.வே. சாமிநாத ஐயரால், ஆழ்வார் திருநகரியிலிருந்து பெறப்பட்ட சுவடியிலிருந்து, உ.வே.சா நூலகத்தால், 1983-ல் பதிப்பிக்கப்பட்டது. டாக்டர் இரா. நாகசாமி இந்நூலின் பதிப்பாசிரியர்.
சுவடிக் குறிப்பிலிருந்து இந்நூலின் காலம் பொ.யு. 19-ம் நூற்றாண்டாக அறியப்படுகிறது. இந்நூலை இயற்றியவர் பெயரை அறிய இயலவில்லை. உ.வே.சா., நூல் பற்றிய குறிப்பில், "ஆழ்வார்திருநகரி தாயவலம் தீர்த்த கவிராயர் அவர்களது வீட்டு ஏட்டுப் புத்தகம் இது" என்று குறிப்பிட்டுள்ளார்.
நூல் அமைப்பு
அகராதி நிகண்டு நூலில் 7500-க்கு மேற்பட்ட மூலச் சொற்களும், 22,500-க்கு மேற்பட்ட சொற்களும் இடம்பெற்றன. சுவடியில் நகர வர்க்கம் இல்லாததாலும், பகர வர்க்கத்தில் ககரம் முதலாக டகர வருக்கம் வரையிலும் இல்லாததாலும் நூலும் அவ்வாறே பதிப்பிக்கப்பட்டுள்ளது.
சொற்கள் தனித் தனியாக எழுதப்பட்டுப் பொருள்கள் கொடுக்கப்பட்டுள்ளன. குற்றெழுத்து அகராதி முடிவுற்றபின் நெட்டெழுத்து அகராதி அமைக்கப்பட்டுள்ளது. சொல்லையும் பொரையும் வேறுபடுத்த இடையில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளது. சொற்களை எழுதும்போது முதல் எழுத்து மட்டுமல்லாமல் இரண்டாம் எழுத்திலும் அகர வரிசை பின்பற்றப்பட்டுள்ளது.
சிவன் என்ற சொல்லுக்கு விட்டுணு என்ற பொருள் இந்த நிகண்டில் இடம்பெற்றுள்ளது. புத்தன் என்ற சொல்லுக்கு நெடுமால் என்று பொருள் கூறப்பட்டுள்ளது.
சில சொற்கள்
ஒகர வர்க்க வரிசை
- ஒக்கல் - உற்றார்
- ஒக்கலை - பக்கம்
- ஒக்கம் - உயர்ச்சி, வழி
- ஒகரம் - மயில்
- ஒசை - பிண்ணாக்கு
- ஒசித்தல் - வளைத்தல், முறித்தல், துவளல்
- ஒசிதல் - உய்தல், ஒடிதல்
- ஒட்டு - படைவகுத்தல், உயர்திணை, தாலம், உலவைமரம்
- ஒட்டார் - சத்துரு
- ஒட்டுனர் - மேவினர்
- ஒட்பம் - அறிவு
- ஒடிசில் - கல்லெ.றி, கவண்
- ஒடித்தல் - வளைத்தல், ஒளி, முறித்தல்
- ஒட்டல் - உடன்படல்
- ஒடு - உடனிகழ்தலான சொல், மூன்றாம் வேற்றுமை உருபு
- ஒடுவை - மரம்
- ஒடுக்கம் - கூம்புதல், மடங்கல்
- ஒண்மை - அறிவு, அழகு, உத்தமம்
- ஒண் - அழகு.
- ஒண்டன் - நரி, ஒத்த தொழிலோர், செட்டியள்
- ஒத்து - ஒதடுதான்
- ஒத்தல் - நடுத்தலம், தட்டல் .
- ஒத்தர் - சாரணர் .
- ஒதுக்கம் - நடக்கிறது.
- ஒதுங்கல் - பாச்சல்
- ஒருசார்பு - பொறை.
- ஒருவில் - ஒப்பற்றது
- ஒருடி - உரோகணி, ஒருகட்பறை, வாச்சியம்
- ஒருவுதல் - நீங்குதல்
- ஒருபலம் -தொடி.
- ஒருமை - ஒற்றுமை, இப்பிறவி, உண்மை, ஒன்று
- ஒருசிறை - வேறிடம்
- ஒருவந்தம் - வேறிடம்
- ஒருவேன் - போகேன்
மதிப்பீடு
அகராதி நிகண்டு நூல், சொற்களை எழுதும்போது முதல் எழுத்து மட்டுமல்லாமல் இரண்டாம் எழுத்திலும் அகர வரிசையைப் பின்பற்றியது. குற்றெழுத்து அகராதி, நெட்டெழுத்து அகராதி எனத் தனித்தனியாக இந்நூலில் அமைந்துள்ளது குறிப்பிடத்தகுந்தது. அகராதி நிகண்டு நூல், வீரமாமுனிவர் காலத்திற்குப் பின்னர் தோன்றிய அகராதி நூலாக அறியப்படுகிறது
உசாத்துணை
- அகராதி நிகண்டு, பதிப்பாசிரியர்: டாக்டர் இரா. நாகசாமி, முதல் பதிப்பு: 1983) தமிழ் இணைய மின்னூலகம்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 19-Jul-2024, 18:22:38 IST